மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

29.9.17

Astrology: ஜோதிடம்: அவயோகம் - பகுதி 2

Astrology: ஜோதிடம்: அவயோகம் - பகுதி 2

அவயோகம் எண் 3

குஹு யோகம்: 4ஆம் வீட்டு அதிபதி 6,8,12ஆம் வீடுகள் ஒன்றில் அமர்ந்திருந்தால் அது இந்த யோகத்தைக் குறிக்கும்

பலன்: தாய் அல்லது தாயின் அரவணைப்பு, வாழ்க்கை வசதிகள், நட்புக்கள் மற்றும் உறவுகள், மகிழ்ச்சி என்று நான்காம் வீடு
சம்பந்தப்பட்ட பல நல்ல விஷயங்களை ஜாதகன் இழக்க நேரிடும். அல்லது பறிகொடுக்க நேரிடும்.

சிலர் நிரந்தரமாகத் தங்குவதற்கு ஒரு இடம் அல்லது ஒரு வீடு இன்றி அவதிப்பட நேரிடும். இருப்பதையும் இழந்து அவதிப்பட
நேரிடும். கீழ்த்தரமான பெண்களுடன் சிநேகம் வைத்துக் கொண்டு சிலர் தங்களுடைய மரியாதையை இழந்து அவதிப்பட நேரிடும்.

பொதுவாகச் சொன்னால் ஜாதகனுக்குத் தேவையானதும், அவன் எதிர்பார்ப்பதும் கிடைக்காமல் போய்விடும்
Lacking something needed or expected!
-----------------------------------------------------
அவயோகம் 4

துஷ்கிரிதியோகம்: 7ஆம் வீட்டு அதிபதி 6,8,12ஆம் வீடுகள் ஒன்றில் அமர்ந்திருந்தால் அது இந்த யோகத்தைக் குறிக்கும்.

பலன்: மனைவியை விட்டு பிரிந்து வாழ நேரிடும். சிலர் அடுத்தவருடைய மனைவியின் மேல் ஆசைவைத்து, தகாத செயல்களைச் செய்து கொண்டிருப்பார்கள். ஊர் சுற்றிகள் பலராலும் ஒதுக்கித் தள்ளப்படும் நிலைக்கு ஆளாக நேரிடும். பால்வினை நோய்கள் உண்டாகும்.
இவற்றின் விளைவாக உறவுகளின் வெறுப்பிற்கு ஆளாக நேரிடுவதுடன் வாழ்க்கை மகிழ்ச்சி இல்லாததாக மாறிவிடும்.
----------------------------------------------------------
அவயோகங்கள் தொடரும். நிறைய உள்ளன. ஒரேயடியாகக் கொடுத்தால் ஓவர் டோஸாகிவிடும். அதனால் இன்று இரண்டு தேக்கரண்டி அளவு மருந்தைக் கொடுத்துள்ளேன்.

மருந்து இனிப்பாக உள்ளதா அல்லது கசக்கிறதா? என்று நீங்கள்தான் சொல்ல வேண்டும்.

மிகவும் கசப்பாக இருந்தால் 337 டானிக்கில் ஒரு மடக்கைக் குடித்துவிட்டு, சாதனா சர்க்கத்தின் பாடல் ஒன்றைக் கேளுங்கள். கசப்பு நீங்கிவிடும்!:-))))

அன்புடன்
வாத்தியார்
=========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

28.9.17

5G உணவுகளைத் தெரியுமா உங்களுக்கு?


5G உணவுகளைத் தெரியுமா உங்களுக்கு?

👉 இது என்ன புது நெட்வொர்க் தொழில்நுட்பமா என்று தான் அனைவருக்கும் தோன்றும். ஆனால் இது நெட்வொர்க் சார்ந்த தொழில்நுட்பம் அன்று, உணவு சார்ந்த தொழில்நுட்பம் தான்.

👉 நாம் நலமுடன் இருக்க இந்த 5G உணவு முறையினை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அப்பொழுது தான் நம் உடலிற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

👉 சரி.... முதலில் 5G யில் வருகின்ற பொருட்கள் என்னவென்று பார்க்கலாம்.

5G உணவுகள் :

👉 *இஞ்சி (Ginger)*

👉 *பூண்டு (Garlic)*

👉 *நெல்லிக்காய்* (Gooseberry)

👉 *கிரீன் டீ (Green tea)*

👉 *பச்சை மிளகாய*் (Green chilly)

👉 அனைத்தும் எளிதாக கிடைக்கும் பொருட்கள் தான். இந்த பொருட்கள் உடலிற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை
தரவல்லது.

இந்த உணவுகளின் பெயர்கள் எல்லாம் ஜி என்ற எழுத்தில் துவங்குவதால்   5G உணவுகள் :என்ற பெயரைப் பெறுகின்றன!!!

1*இஞ்சி (Ginger)*

👉 இது ஒரு சிறந்த கிருமிநாசினி உணவாகும்.

👉 இதனை உணவுடன் சேர்த்துக்கொள்வதால் நோய் எதிர்ப்பு மண்டலம் ஊக்கம் பெறும்.

👉 உடலில் உள்ள செல்களின் வயதாகும் செயலினை குறைத்து இளமையாக, வைத்திருக்க உதவுகிறது.

👉 சட்னி மற்றும் தேநீரில் இதனை சேர்த்துக்கொள்ளலாம்.

2*பூண்டு (Garlic)*

👉 இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.

👉 நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது.

👉 நுரையீரலின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

👉 சூப், குழம்பு, சட்னி என அனைத்து வகையான சமையலிலும் இதனை சேர்த்துக்கொள்ளலாம்.

3*நெல்லிக்காய்* (Gooseberry)

👉 நெல்லிக்காயில் உள்ள ஆண்டி-ஆக்ஸிடன்ட்கள் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கும்.

👉 இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது.

👉 உடலின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.

👉 இதை பழச்சாறு, ஊறுகாய் செய்து சாப்பிடலாம்.

4*கிரீன் டீ (Green tea)*

👉 மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்க உதவுகிறது.

👉 சருமத்தின் ஆரோக்கியத்திற்கு வலுவூட்டும்.

👉 உடல் எடையை குறைக்க உதவுகிறது.

👉 தினம் ஒரு வேளை கிரீன் டீ அருந்துவது நல்லது.

5*பச்சை மிளகாய் (Green chilly)*

👉 நுரையீரலின் ஆரோக்கியத்திற்கு நல்லது.

👉 ஆண்டி-பாக்டீரியா தன்மை உடையது.

👉 சிறந்த வலிநிவாரணி உணவு பொருளாகும்.

👉 மசாலா சேர்க்கப்படும் அனைத்து வகையான உணவிலும் இதனை சேர்த்துக் கொள்ளலாம்.

👉 தவறாமல் இந்த பொருட்கள் உங்கள் உணவில் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். உங்கள் நல்வாழ்வு உங்களிடமே இருக்கும்..

படித்தேன்; பகிர்ந்தேன்!
அன்புடன்
வாத்தியார்
============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

27.9.17

நவீன நக்கீரன்!


நவீன நக்கீரன்!

நவீன நக்கீரனா? ஆமாம், காணொளி வடிவில் கடைசியில் உள்ளார்!. முதலில் வேறு இரண்டு காணொளிகள் உள்ளன. அவற்றைப் பாருங்கள்! பிறகு நக்கீரனைப் பார்க்கலாம்!!!

அன்புடன் 
வாத்தியார்
---------------------------------------------------------------------------------------------------------------
1. திருவாரூர் தியாகராஜர் ஆலயத்தின் சிறப்பு!

----------------------------------------------------------------------------------------------------------
2. செட்டிநாட்டுத் தேன்குழல்!


-------------------------------------------------------------------------------------------------------------
3. நவீன நக்கீரன்!!


===============================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

26.9.17

வாருங்கள் சவால்களை சமாளிப்போம்!!!!!


வாருங்கள் சவால்களை சமாளிப்போம்!!!!!

பூமியில் விதைக்கப்பட்ட விதை கூட எதிர்ப்பைச் சமாளித்து முளைத்துக் காட்டுகிறது !

ஒவ்வொரு நாளும் காட்டில் சிங்கத்தால் கொல்லப்படுகின்ற நிலையில் உயிர் வாழும் மான் கூட பிரச்சனைகளை சமாளிக்கின்றது !

பெரிய மீன்களால் ஆகாரத்திற்காக விழுங்கப்படும் நிலையிலிருக்கும் சிறிய மீன்களும் கடலில் புலம்பாமல் வாழ்கின்றன !

மனிதர்களால் எப்பொழுது வேண்டுமானாலும் வெட்டப்படுகின்ற வாழ்க்கையை அனுபவிக்கின்ற மரங்களும் நிமிர்ந்து நிற்கின்றன !

ஒவ்வொரு நாளும் ஆகாரத்திற்காக பல மைல்கள் தூரம் பறந்தாக வேண்டிய பறவைகளும் மனம் சலிப்படையாமல் முயற்சி செய்கின்றன !

சிறியதான உடலையும், பல கஷ்டங்களையும் சமாளிக்க வேண்டிய கட்டாயத்திலிருக்கும் எறும்புகள் கூட துவண்டு போகாமல் வாழ்ந்து காட்டுகின்றன !

தண்ணீரே இல்லாத பாலைவனத்தில் உயிர் தரிக்க வேண்டிய நிலையிலிருக்கும் ஒட்டகங்களும், எங்கும் ஓடிப்போகாமல் அதில் வாழ்ந்து காட்டுகின்றன !

ஒரு நாள் மட்டுமே வாழ்க்கை என்ற நிலையிலிருக்கும் பலவகை பூச்சிகளும், அந்த ஒரு நாளில் உருப்படியாக வாழ்கின்றன !

இப்படி பலகோடி உயிரினங்கள் உலகில் வாழ முடியுமென்றால் உன்னால் வாழ முடியாதோ ? ! ?

எப்படியும் வாழ்ந்தே ஆகவேண்டிய வாழ்க்கை . . .

அதை ஏன் புலம்பிக்கொண்டு வாழ்கின்றாய் !
அதை ஏன் நொந்துபோய் வாழ்கின்றாய் !
அதை ஏன் வெறுத்துக்கொண்டு வாழ்கின்றாய் !
அதை ஏன் தப்பிக்கப் பார்க்கிறாய் !
அதை ஏன் அழுதுகொண்டு வாழ்கின்றாய் !

சந்தோஷமாகத்தான் வாழ்ந்து பாரேன் !

எனது அஹம்பாவங்களை தவிடுபொடியாக்கி எனக்குப் பணிவைத் தந்த என் கஷ்டங்களுக்கு மனதார நன்றி !

என்னை அவமரியாதை செய்து எனக்கு வைராக்கியம் வரக்காரணமான என்னைத் தன் விரோதியாய் பார்ப்பவருக்கு மனதார நன்றி !

எனக்கு வலியைத்தந்து  அடுத்தவரின் வலியை எனக்குப் புரியவைத்த புரியாத நோய்களுக்கு மனதார நன்றி !

எனக்கு ஆரோக்கியத்தின் அவசியத்தை உள்ளபடிச் சொல்லிக்கொடுத்த, என் பலவீனத்திற்கும்,உடலுக்கும் மனதார நன்றி !

என்னை ஆழமாக சிந்திக்கவைக்க எனக்கு மிகுந்த துயரத்தைத் தந்த என்னுடைய பிரச்சனைகளுக்கு மனதார நன்றி !

என் பலத்தை நான் உணர்ந்து என் வாழ்வை நானே நடத்தக் காரணமான என்னை ஒதுக்கித் தள்ளியவர்களுக்கு மனதார நன்றி !

என் உடல் உறுப்புகளின் மதிப்பை எனக்கு தெளிவாய் சொல்லிக்கொடுத்த உடல் ஊனமுற்றோருக்கு என் மனதார நன்றி !

மனித வாழ்க்கை நிலையில்லாதது என்பதை எனக்குத் தெளிவாகப் புரியவைத்த மரணத்திற்கு மனதார நன்றி !

என் பெற்றோரின் பெருமையை, என் புத்தியில் அழுத்தமாய் பதித்த அனாதை இல்லங்களில் வாழ்வோருக்கு மனதார நன்றி !

ஒரு சிரிப்பினால் உலகையே வசப்படுத்தமுடியும் என்பதை எனக்குச் சுலபமாய் புரியவைத்த குழந்தைகளுக்கு மனதார நன்றி !

பணத்தினால் மட்டுமே வாழ்வில் எல்லா சுகமும் கிடைத்துவிடாது என்பதைக் காட்டிய நிம்மதியில்லாத பணக்காரர்களுக்கு மனதார நன்றி !

பக்தி என்பது வெளிவேஷமல்ல என்பதை எனக்குப் பயங்கரமாய் புரியவைத்த வெளிவேஷதாரிகளுக்கு எப்பொழுதும் மனதார நன்றி !

நாமஜபத்தின் அற்புத மஹிமையை எனக்குச் சரியாகப் புரியவைத்த என்னுடைய பாபங்களுக்கு என்றுமே மனதார நன்றி !

ஒவ்வொரு முறையும் மனிதரிடம் ஏமாந்துக் கொண்டிருந்த என்னை, அவர்களின் சுயரூபத்தை எனக்கு உணர்த்திய என் இறைவனுக்கு மனதார நன்றி !

இன்னும் பலருக்குச் சொல்லவேண்டும் ! இந்த வாழ்நாள் போதாது

ஆகவே வருகின்ற சவால்களை சமாளித்து நாம் வாழ வேண்டும்!!!

அன்புடன்
வாத்தியார்
===========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

25.9.17

Short Story: சிறுகதை: ஜி..எஸ்.டி ஜெயா ஆச்சி


மாணவக் கண்மணிகளே, அன்பர்களே,

அடியவன் எழுதி, இந்த மாதம், மாத இதழ் ஒன்றில் வெளியாகி பலரது பாராட்டையும் பெற்ற சிறுகதை ஒன்றை நீங்கள் படித்து மகிழ்வதற்காக இங்கே பதிவிட்டுள்ளேன். அனைவரும் படித்துப் பாருங்கள். உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்!

அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------------
கதையின் தலைப்பு: ஜி.எஸ்.டி ஜெயா ஆச்சி

        வந்ததும் வராததுமாக ராமஞ் செட்டியாரின் சின்ன மகள் கமலா, அன்னபூரணி ஆச்சியிடம் கேட்டாள்:

       “உங்கள் அண்ணமிண்டிக்கு ஜி.எஸ்.டி ஜெயா ஆச்சி என்ற பெயர் எதனால் வந்தது?”

       “அது ஒரு அடையாளப் பெயர். அவ்வளவுதான்”

       “ நானும் பல அடையாளப் பெயர்களைக் கேட்டிருக்கிறேன். சறுக்குப்படி சாலி ஆச்சி,  அரைப்படி அகிலா ஆச்சி, வங்கி வள்ளி  ஆச்சி. என்று ! அவைகள் எல்லாம் ஒரு காரணத்தை வைத்து உண்டான பெயர்கள். ஜி.எஸ்.டி என்ற பெயர் வித்தியாசமாக இருக்கிறதே - அதனால் தான் தெரிந்து கொள்ளும் ஆவலில் கேட்டேன். சரக்கு மற்றும் சேவை வரியின் சுருக்கம்தானே ஜி.எஸ்.டி”

        “ஆமாம்”

        “உங்கள் அண்ணமிண்டியின் பெயரோடு அது எப்படி இணந்தது?”

        “ஊருக்கு உதவி செய்யப்போக அப்படிப் பெயர் வந்துவிட்டது. அனாவசியமாகப் போகும் ஜி எஸ் டி வரியை தவிர்க்க வழிமுறைகள் என்று தெரிந்தவர்களிடமெல்லாம் அறிவுரை சொல்வார்.

        “வெளியில் செல்லும்போது குடிதண்ணீரை பாட்டிலில் எடுத்து செல்லுங்கள். பயணத்தின் போது புளி சாதம் , லெமன் சாதம் , வசதி இருந்தால்   வெஜ் பிரியாணி வீட்டில் செய்து கட்டி எடுத்து செல்லுங்கள். அண்ணாச்சி கடைக்கே போங்க , வயர்கூடை இல்லை என்றால் மஞ்சள் பையை எடுத்துக் கொண்டு போய் லூஸ்ல அரிசியோ, பருப்போ, இன்னபிற மளிகை சாமான்களை  வாங்குங்கள். வார இறுதி நாட்களில் வீட்டிலயே குடும்பத்தோட ஏதாவது ஸ்பெசல் உணவு தயார் செய்து சாப்பிடுங்கள். திரைப்படத்தை  multiplex  அல்லாத திரையரங்குகளில் பாருங்கள். விடுமுறை நாட்களில் மால் , ஷாப்பிங் னு போகாமல் ஆயா, அய்யா ஊருக்கோ, அல்லது சொந்த ஊருக்கோ போகலாம். காலையில் நடைப்பயிற்சி சென்று விட்டு பெருமைக்காக ஹோட்டலில் காபி குடிக்காமல் வீட்டுக்கு வந்து கருப்பட்டி காபி குடித்துப் பழகுங்கள். பழைய  பழக்கங்கள் போல , சுற்றுப் பயணம் சென்றால், நண்பர்கள் எவராவது ஒருவர் வீட்டில் தங்குங்கள். சேவை வரியை தவிர்க்க அடுத்தவரின் சேவையை தவிர்த்து, சொந்தமாக வேலைகளைச் செய்யுங்கள். அப்படிச் செய்தால் உடல் ஆரோக்கியமாகும். மிகப்பெரும் பணம் மிச்சமாகும். சொந்தம் பெருகும் மனைவி கணவன் பாசம் , அம்மா அப்பா பிள்ளைகள் பாசம் பெருகும் .நட்பு வட்டங்கள் உண்மையாகும்.உண்மையான பழைய இந்தியா மீண்டும் பிறக்கும் . என்றெல்லாம் சொல்வார்”

       “ நல்ல அறிவுரைதானே!”

        “எல்லோரும் கேட்டுக் கொள்வார்களா? அதுவும் இளவட்டக் குமரிகள் கேட்டுக் கொள்வார்களா? லெக்கின்ஸ், ஜீன்ஸ் ஆடைகளை அணியாதீர்கள்  அவற்றிற்கெல்லாம் 18% ஜி.எஸ்.டி. மேக்கப் சாமான்களுக்கெல்லாம் 28 சதவிகிதம் வரி, மாக்டொனால்ஸ், டோமினோ, சப்வே என்று உணவங்களுக்கெல்லாம் செல்லாதீர்கள். அங்கே 18 சதவிகிதம் ஜி.எஸ்.டி வரி ,ப்ரெளனி ஐஸ்கிரீம் முன்பு ஒரு கப் 120 ருபாய் விலை இப்போது. ஜி.எஸ்.டியுடன் 140 ரூபாய் விலை. வீட்டிலேயே ஐஸ் கிரீம் செய்து சாப்பிடுங்கள் என்பார்.  அதுதான் வினையாகிப் போய் விட்டது.”

          அந்த சமயத்தில் வீட்டு வாசலில் கார் ஒன்று வந்து நிற்கும் சத்தம் கேட்டவுடன், இருவரும் ஜன்னல் வழியாக எட்டிப் பார்க்க ஜெயா ஆச்சி காரை விட்டு இறங்கி அவர்கள் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார்.        

          இருவரின் பேச்சும் அத்துடன் தடைப் பட்டது. கமலா இருவரிடமும் சொல்லிக் கொண்டு புறப்பட்டுப் போய்விட்டாள்.

          பதினைந்து நாட்களுக்கு முன்புதான் ஜெயா ஆச்சியின் ஒரே மகனுக்குத் திருமணம் நடைபெற்றது. மருமகள் இல்லாமல் ஆச்சி மட்டும் தனியாக வருவதைப் பார்த்தவுடன் அன்னமாச்சி மெதுவாகக் கேட்டார்:

              "என்ன அண்ணமிண்டி, உங்கள் மருமகள் மீனா எங்கே?"

              "என்ன நான் மட்டும் தனியாக வரக்கூடாதா? தொடுக்கோடுதான் வர வேண்டுமா?"

              "அடடா, கோபப் படாதீர்கள்! நான் எதேச்சையாகத்தான் கேட்டேன்."

              "நானும் கோபமாகச் சொல்லவில்லை. சாதரணமாகத்தான் சொல்கிறேன். அவளையும் என் மகனையும் தனிக் குடித்தனம் பண்ணச் சொல்லி சரவணம்பட்டி ஸ்ரீவத்சா குடியிருப்பில் வீடு ஒன்றைப் பிடித்துக் கொடுத்து அனுப்பி விட்டேன்”

               "சின்னஞ்சிறிசுகள் - தனிக்குடித்தனம் என்பது நல்ல விஷயம்தான். ஆனால் உங்கள் வீடுதான் பெரிய வீடு ஆயிற்றே - ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் கழித்து நீங்கள் இதைச் செய்திருக்கலாம்."

               "இல்லை. திருமணமாகி வரும்போதே எனக்குக் கஷாயம் கொடுத்து விட்டாள். அதனால்தான் வந்தவுடன் முதல் வேலையாக அதைச் செய்தேன்"

              "கஷாயமா?"

              "உனக்குத்தான் தெரியுமே? எனக்கு முதுகு தெரியும்படி ரவிக்கை அணிவது, கவ்விப் பிடிக்கும்படி காலுக்கு லெக்கின்ஸ் அணிவது எல்லாம் பிடிக்காது என்று. திருமணத்திற்கு வாங்கிய பட்டுப் புடவைகள், காட்டன் புடைவைகள் ரவிக்கைத் துணிகள், சுடிதார் என்று எல்லாவற்றையும்  நீங்களே தைத்துக் கொள்ளுங்கள் என்று சம்பந்தி வீட்டில் கொடுத்திருந்தேன். கொடுத்தனுப்பும்போதே சொல்லியிருந்தேன். ரவிக்கையில் ஜன்னல் வைத்து, கவர்ச்சியாக எல்லாம் தைக்க வேண்டாம் என்று. ஆனால் அது நடக்கவில்லை. டிசைனர் வியர்ஸ் என்று எல்லாவற்றையும் அடாவடியாகத் தைத்து 45,000 ருபாய்க்கு தையற்கூலி பில் கொடுத்தார்கள். அத்துடன் வாசனைச் சாமான்கள் அலங்காரப் பொருட்கள் என்று 20,000 ருபாய்க்கு பில் கொடுத்தார்கள். நான் மொத்தமாக 15,000
ருபாய்தான் தருவேன். மீதியை உங்கள் கணக்கில் வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டேன். அவர்கள் ஒன்றும் சொல்லவில்லை. ஆனால் கசப்பாகிவிட்டது. அதைத்தான் கஷாயம் என்று சொன்னேன். ஆடை விஷயத்தில் ஒரு பெண்ணிற்கு அடக்கம் வேண்டாமா? உடல் வனப்பைப் பலரும் பார்க்கப் படம் போட்டா காட்டுவது?"

              "எல்லா இளம் பெண்களுமே அப்படித்தான் இருக்கின்றார்கள். காலத்தின் கோளாறு. நாகரீகம் ஏற்படுத்தும் தலைவலி!"

              "காசின் அருமை தெரியாததால் அப்படிச் செய்கிறார்கள். வீட்டில் உள்ள பெரியவர்கள் கண்டிக்க வேண்டும். அவ்வப்போது தட்டி வைக்க வேண்டும் சிக்கனத்தைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். நமது கலாச்சாரம் பாரம்பரியத்தை எடுத்துச் சொல்லிப் பாடம் நடத்த வேண்டும். நாம் சிறுகக்கட்டி பெருக வாழ்ந்த, வாழ்கின்ற சமூகம். அதைப் பிள்ளைகள் உணர வேண்டாமா?  என் மகன் பழனியப்பனுக்கு உடைகளுக்கென்று  அவர்கள் 30,000 ஆயிரம் ருபாய் கொடுத்தார்கள். அவன் 20,000 ஆயிரத்தோடு நிறுத்திக் கொண்டுவிட்டான். மிச்சம் பத்தாயிரத்தை அவர்களிடம் திருப்பிக் கொடுத்துவிட்டோம். அவன் என்னிடம்  வளர்ந்தவிதம் அப்படி!!!!"

             பேச்சின் போக்கை மாற்றுவதற்காக  அன்னமாச்சி “ இருங்கள், காப்பி போட்டு எடுத்துக் கொண்டு வருகிறேன்” என்று சமையல் அறைக்குச் சென்று விட்டார்

              இந்த இடத்தில் ஜெயா ஆச்சி அவர்களைப் பற்றிய சில செய்திகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

             ஜெயா ஆச்சி பிறந்தது, வளர்ந்தது  எல்லாம் கோவையில் தான். வாழ்க்கைப்பட்ட பிறகுதான் கணவரின் வேலை காரணமாக, கொச்சி, மும்பை,  நாசிக், ஹைதராபாத், பாண்டிச்சேரி என்று பல ஊர்களுக்கு பெட்டி தூக்கும்படி ஆயிற்று.

            ஆச்சியின் கணவருக்கு தேசிய வங்கி ஒன்றில் வேலை. சேரும்போதே அதிகாரியாகச் சேர்ந்தவர், இன்று வேலையில் பல நிலைகளைக் கடந்து பதவி உயர்ந்து வங்கியின் உதவிப் பொது மேலாளராக கோவையில் பணிபுரிகின்றார். வயது 58. இன்னும் இரண்டு ஆண்டுகள் சர்வீஸ் உள்ளது. அதற்குப் பிறகு ரிடையர்மெண்ட்- பணி ஓய்வு. இனிமேல் உங்களை எங்கும் மாற்ற மாட்டோம் கோவையிலேயே நீங்கள் பணி செய்யலாம். அதற்குள் அந்த வட்டத்தில் நிலுவையில் உள்ள, வராத கடன்களை எல்லாம் வசூல் செய்யுங்கள் என்று வங்கி மேலிடம் சொல்லிவிட்டது. இவர் அதில் திறமையானவர். ஆகவே  முழு மூச்சுடன் அந்தப் பணியைச் செய்து கொண்டிருந்தார்.

            ஆச்சியின் கல்யாணத்தின்போது அவருடைய தந்தையார் 14 சென்ட் இடத்துடன் பெரிய வீடு ஒன்றை கோவை ஆர்.எஸ் புரத்தில் வாங்கி ஆச்சிக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார். இதுவரை ஆச்சியின் கணவர் வேலை பார்த்த வங்கிக்கே குடியிருப்பாக வாடகைக்குக் கொடுத்திருந்தவர், தான் கோவை வந்தவுடன் அந்த வீட்டிற்கே குடி வந்து விட்டார்.

           வீட்டில் சமையல், மற்றும் மேல் வேலைக்கெல்லாம் எப்போதும் ஆள் வைத்திருப்பார். நிறைய புத்தகங்கள் படிப்பார். நன்றாக கார் ஓட்டுவார். உறவினர்கள், தோழிகள் என்று நிறைய வெளிவட்டாரத் தொடர்புகள். அவைகள்தான் ஆச்சியின் பொழுதுபோக்கும் கூட!

          ஆச்சி பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். வேலைக்குப் போவதில் விருப்பம் இல்லாததால் கணவரோடு வீட்டிலேயே இருந்து அவருக்குப் பணிவிடை செய்வதிலேயே 28 ஆண்டு காலத்தைக் கழித்துவிட்டார். நல்ல தாம்பத்தியத்திற்கு அடையாளமாக ஒரே ஒரு மகன். தில்லி பல்கலைக் கழகத்தில் மனிதவளம் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன்.

           பொறியியல் படி. உன்னை அமெரிக்காவிற்கு அனுப்பி எம்.எஸ் படிக்க வைக்கிறேன் என்ற ஆச்சியின் பரிந்துரைகளை எல்லாம் அவன் காது கொடுத்துக் கேட்கவில்லை.

            இப்போது, கோவை சரவணம்பட்டியில் உள்ள பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் வேலை. சம்பளம் குறைவுதான். இருந்தாலும் பரவாயில்லை உள்ளூர் வேலை என்று அதிலேயே ஒட்டிக் கொண்டிருந்தான்

            கல்யாணமான ஒரு வாரத்திலேயே தன் தாயார் தன்னைத் தனிகுடித்தனம் போ என்று சொன்னதுடன், சரவணம்பட்டியில் வீடு ஒன்றைப் பிடித்துக் கொடுத்தவுடன், அவன் அதிர்ச்சிக்கு ஆளாகி விட்டான். அடுக்குமாடிக் குடியிருப்பில் வாடகைக்கும் மெயிண்டனன்ஸ் செலவுக்குமாக பாதி சம்பளம் பறிபோய் விடுமே, மீதி சம்பளத்தில் எப்படிக் குடும்பம் நடத்துவது என்பது அவன் கவலை!

            அதெல்லாம் முடியும். சிக்கனமாக இருந்தால் எதுவும் சாத்தியமே என்று தாயார் சொல்லி அனுப்பியவுடன், வேறு வழியின்றி அவனும் சென்று விட்டான். தாயார் ஒருமுறை சொன்னால் அது நூறுமுறை சொன்னதற்குச்  சமம் என்பதும் அவனுக்குத் தெரியும்.

            ஜெயா ஆச்சி சிக்கனமானவர்கள்தான். ஆனால் கஞ்சத்தனம் இருக்காது. தேவைகளுக்குத் தயங்காமல் செலவழிப்பார்.
 
            கல்யாணத்திற்குப் பிறகு தன் மகன் பழநியப்பனுக்குப் புதுக் கார் ஒன்றை வாங்கிக் கொடுக்கலாம் என்றிருந்தார். ஆனால் மருமகளின் ஆட்டத்தைப் பார்த்தவுடன் கார் வாங்கிக் கொடுக்காமல் விட்டுவிட்டார். பல்சர் மோட்டார் சைக்கிள்தான். அதையே வைத்துக் கொள்ளட்டும் என்று விட்டு விட்டார்.

            தனிக்குடித்தனம் துவங்கியவுடன் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியன்று தன் மனைவி கையில் பத்தாயிரம் ரூபாய்களைக் கொடுத்து இதற்குள் வீட்டுச் செலவைச் செய்து கொள் என்று பழனியப்பன் சொல்லிவிடுவான்.

           அந்தக் குடியிருப்பில் மொத்தம் 96 வீடுகள். பக்கத்து வீடுகளில் இருக்கும் பெண்களெல்லாம் கார், டெபிட் கார்டு , வண்ண வண்ண ஆடைகள் என்று அசத்தலாக வலம் வந்து கொண்டிருந்த போது, மீனாட்சியால் வெளியே சுற்றாமல்  வீட்டிற்குள்ளேயே இருக்கும்படியாகிவிட்டது. மேல் வேலைக்கு ஆள் என்றால் இரண்டு மணி நேரம்தான் வருவாளாம் மாதம் மூவாயிரம் சம்பளமாம். ஆள் சேர்க்காமல் மீனாட்சியே எல்லா வேலைகளையும் பார்க்கத்  துவங்கிவிட்டாள். நாளைடைவில் அது பழகிவிட்டது.
                                            *************************************************************************

            காலதேவன் யாருக்காகவும் காத்திருக்காமல் ஒரே சீராக ஓடிக்கொண்டிருப்பான். அவனுடைய ஓட்டத்தில் நாட்களும், வாரங்களும், மாதங்களும் என எல்லாம் பறந்து சென்றதில் இரண்டாண்டுகள் ஓடி விட்டது.

            ஆறு மாதங்களுக்கு முன்பு ஜெயா ஆச்சிக்குப் பேரக்குழந்தை பிறந்தது. பிறந்த அன்றே திருச்சியில் இருந்த சம்பந்தி வீட்டிற்குத் தன் கணவர் மற்றும் மகனுடன் சென்றவர், தனியார் மருத்துவ மனையில் இருந்த தன் மருமகளையும் குழந்தையையும் பார்த்துவிட்டுத் திரும்பினார்.

             அதற்குப் பிறகு  ஒரு மாதம் கழித்து தங்கள் செட்டிநாட்டுக் கிராமத்தில் குழந்தையை வீட்டிற்கு அழைத்துக் கொள்ளும் நிகழ்வையும் சிறப்பாகச் செய்து முடித்தார்.  உன் ஆத்தா வீட்டிலேயே இரு. குழந்தைக்குத் தாய்ப்பாலைக் கொடு. குழந்தை ஊறிய பிறகு - கழுத்து நின்ற பிறகு நீ கோவைக்கு வரலாம் என்று  சொல்லி ஜெயா ஆச்சி அவளைத் திருச்சியிலேயே இருக்கும்படி செய்து விட்டார்கள்.

              மீனாட்சியின் பெற்றோர்கள் இருவருமே கல்லூரிப் பேராசிரியர்கள். இரண்டு தங்கைகளில் ஒருத்தி மட்டும்தான் துணைக்கு, இன்னொருத்தி கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தாள். குழந்தை மீனாட்சியைப் படாத பாடு படுத்திவிட்டது.  பல நேரங்களில் அழுகையில் பிடித்துக் கொண்டுவிடும். எதற்கு அழுகிறதென்றே தெரியாது. இரவில் கொட்டக் கொட்ட விழித்துக் கொண்டிருக்கும். பகலில் சில மணி நேரம் மட்டும் உறங்கும். தொட்டிலில் போட்டு கை வலிக்க ஒருமணி நேரம் ஆட்டினாலும் தூங்காது. மீனாவிற்கு பெரிய அவதியாகிப் போய்விட்டது.

             மீனாட்சி மெலிந்து போய் விட்டாள். சரியான உறக்கம் இல்லாவிட்டால், மெலியாமல் என்ன செய்வதாம். மனதால் நொறுங்கிப் போய் விட்டாள்.எதற்குடா சாமி கல்யாணம்,
குழந்தை என்று சமயங்களில் எண்ணக்கூடத் தோன்றியது,

             ஆறாவதும்  மாதத்தில் அவள் கணவன் காரில் வந்து அவளையும் குழந்தையையும்  கோவைக்கு அழைத்துக் கொண்டு வந்து விட்டான். முதலில் பெரிய வீட்டிற்குப் போய் சாமி கும்பிட்டுவிட்டு, பெற்றோர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு விட்டு, மதிய உணவையும் முடித்துக் கொண்டு அன்று மாலையே சரவணம்பட்டியில் உள்ள தன் வீட்டிற்கு வந்து விட்டான்.

              மீனாட்சிக்கு ஏமாற்றமாகி விட்டது. குழந்தை சற்றுப் பெரிதாகும் வரை மாமியார் வீட்டிலேயே இருக்கலாம் என்று ஆசைப் பட்டவளுக்கு, அந்த ஆசை நிறைவேறவில்லை. ஜெயா ஆச்சி அதற்கு இடம் கொடுக்காமல் கறாராக அவளை அனுப்பிவிட்டார்கள். அதை முன்பே தன் மகனிடமும் சொல்லியிருந்ததால், ஜெயா ஆச்சிக்கு  எந்த விதத் தயக்கமும் இல்லாமல் போய்விட்டது.

              “ நீ பச்சைக் குழந்தையாக இருக்கும்போது, உன்னைப் பம்பாய்க்குத் தூக்கிக் கொண்டு போய்த் தனியாளாக நின்றுதான் உன்னை நான் வளர்த்தேன். உதவிக்கு யாரும் வரவில்லை. என் தாயாரும் வரவில்லை. உன் அப்பத்தாவும் வரவில்லை. மன தைரியம் ஒன்றுதான் எனக்குத் துணையாக இருந்தது. ஆகவே குழந்தையை நீங்கள் இருவரும் வளர்ப்பதுதான் முறை” என்று விளக்கம் சொல்லி அனுப்பி வைத்து விட்டார்கள்.

               ******************************************************************************

                ஒரே மாதம்தான். ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை ஒன்பது மணிக்கு அந்த அதிசயம் நடந்தது.

                ஓலா டாக்ஸியில் வந்திறங்கிய மீனாட்சியும், பழநியப்பனும் வீட்டிற்குள் உள்ளே வர, நடு ஹாலில் ஷோபாவில் அமர்ந்திருந்த ஜெயா ஆச்சி இருவரையும், “வாங்க, வாங்க” என்று வரவேற்றார்

                ஜெயா ஆச்சியின் கையில் குழந்தையைக் கொடுத்த மீனாட்சி, தரையில் சாஷ்டாங்கமாக விழுந்து அவரை வணங்கினாள்.  “ அடடே.... எதற்கு இதெல்லாம்.... எழுந்திரு”  என்று ஆச்சி அவர்கள் சொன்னவுடன், எழுந்து தரையில் அவர்கள் எதிரிலேயே அமர்ந்தவள், தேம்பித் தேம்பி அழுக ஆரம்பித்து விட்டாள்.  ஜெயா ஆச்சி தன் மகனைப் பார்க்க அவன் கண்களும் கலங்கியிருந்தன!!!!

                “என்ன ஆச்சு உங்கள் இருவருக்கும்?” என்று ஜெயா ஆச்சி வினவ,  மீனாட்சி அழுது கொண்டே சொல்ல ஆரம்பித்தாள்.

                “அத்தை, என்னை மன்னித்து விடுங்கள். கல்யாண சமயத்தில் உங்கள் பேச்சைக் கேட்காமல் நான் செய்ததெல்லாம் தவறுதான்.  உங்களின் நல்ல குணம் தெரியாமல், உங்களுக்கு அனுசரனையாக நடக்காமல் இருந்ததும் தவறுதான். என்னை மன்னித்து ஏற்றுக்கொள்ளுங்கள். இனிமேல் நான் எந்தத் தவறையும் செய்ய மாட்டேன். இரண்டு வருடங்களாக பல அவதிகளுக்கு ஆளாகி விட்டேன். இப்போது திருந்தி விட்டேன். அடக்கமாக இருப்பேன். எனக்கு அனுபவமில்லை. தனியாளாக என்னால் குழந்தையை வளர்க்க முடியவில்லை. இந்த ஊரின் ஜில்லென்ற கிளைமேட் காரணமாக குழந்தைக்கு அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போய்விடுகிறது.  குழந்தைகளுக்கான டாக்டர் இங்கே நூறடி ரோட்டில் இருக்கிறார். சரவணம்பட்டி வீட்டிலிருந்து இவ்வளவு தூரம் தனியாகக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு என்னால் வரமுடியவில்லை. ஆபீஸிற்கு லீவு போட்டுவிட்டு உங்கள் மகனும் வரவேண்டியதாக உள்ளது. இருவருக்கும் மிகுந்த சிரமமாக உள்ளது. ஆகவே எங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டிற்கே நாங்களும் வந்து விடுகிறோம்.”

                தொடர்ந்து அவள் பேசியதைக் கேட்ட ஜெயா ஆச்சி, நான்கே வார்த்தைகளில் பதில் சொன்னார்.

                 "சரி, இங்கே வந்து விடுங்கள்!!!!!”

                 அப்படிச் சொன்னதோடு நிற்காமல், எழுந்து சென்று, தன்னுடைய கார் சாவியை மகனிடம் கொடுத்துவிட்டுச் சொன்னார்:
                 “குழந்தையை நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் உங்கள் வீட்டிற்குச் சென்று  எல்லா சாமான்களையும் எடுத்து வையுங்கள். நான் லாரி கம்பெனி மாணிக்கம் அண்ணனை ஒரு மினி லாரி மற்றும் நான்கு ஆட்களுடன் அனுப்பி வைக்கிறேன். அவர்கள் எல்லாச் சாமான்களையும் இங்கே எடுத்துக் கொண்டு வந்து விடுவார்கள். இங்கே மேல்வீட்டில் உள்ள ஹாலில் எல்லா வற்றையும் ஒரு பகுதியில் வைத்து  விடுங்கள். அந்த வீட்டைக் காலி செய்து வீட்டுக்காரரிடம் சாவியைக் கொடுத்து விடுங்கள். நீங்கள் இருவரும் கீழே உள்ள படுக்கை அறை ஒன்றை வைத்துக்கொள்ளுங்கள். குழந்தைக்கு உதவியாக நம் வேலைக்காரப் பெண் தாயம்மாவும், அவளுடைய மகளும் இருப்பார்கள். சமையல் மற்றும் மேல் வேலைகளையும் அவர்களே பார்த்துக் கொள்வார்கள். எல்லாம் சரிதானே? சரி, இப்போது புறப்படுங்கள்”

                அடுத்த ஐந்தாவது நிமிடம் ஆச்சியை வணங்கி விட்டு அவர்கள் இருவரும் புறப்பட்டுச் சென்றார்கள்.

                 எல்லாவற்றையும் தன் அறையில் இருந்து கேட்டுக் கொண்டிருந்த ஆச்சியின் கணவர் சண்முகம் செட்டியார் வெளியே வந்து புன்னகையுடன், ஆச்சியைப் பார்த்து மெல்லிய குரலில் சொன்னார்.

                 “ஹாட்ஸ் ஆஃப் ஜெயா! நல்ல முடிவு!

                 ஆச்சி ஒரே வார்த்தையில் “நன்றி” என்று சொன்னார்கள்

                  “ஜெயா ஊரில் எல்லோரும் உன்னை, ஜி.எஸ்.டி ஜெயா ஆச்சி என்று அடையாளப் படுத்திச் சொல்கிறார்களாம். என் தம்பி மூலம் தெரிந்தது. ஜி.எஸ்.டி என்பதற்கு வணிகத்தில் சரக்கு மற்றும் சேவை வரி என்று பொருள். ஆனால் மனித வளத்தில் என்ன பொருள் தெரியுமா?”

                  “சொல்லுங்கள்”

                   “Good, Smart and Talented  என்று பொருள். அதாவது நல்லவர், புத்திசாலித்தனமானவர், திறமைசாலி என்று பொருள்”. “இதை நம் ஊர் மக்களுக்கெலாம் தெரியப் படுத்த வேண்டும்!”

                    “அதெல்லாம் வேண்டாம். உங்கள் விளக்கத்தை என்னோடு வைத்துக் கொள்கிறேன். உங்களுடைய பென்சன் தொகை, இந்த மாதம் வரவாகவில்லை. வங்கியில் கேளுங்கள்”

                    செட்டியார் செல்போனை எடுத்துவர, தன் அறைக்குள் சென்றுவிட்டார்.

                    ஜெயா ஆச்சியின் மனம் தன் கணவர் தன் மீது வைத்திருக்கும், அன்பையும், பரிவையும், மதிப்பையும் நினைத்துப் பார்த்து வியந்தது. மனம் நெகிழ்ந்துவிட்டது. கண்கள் பனித்துவிட்டன

                    *******************************************************************
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

22.9.17

Astrology: ஜோதிடம் :அவயோகங்கள் - பகுதி 1


Astrology: ஜோதிடம் :அவயோகங்கள் - பகுதி 1

யோகங்களைப் பற்றிய பாடம்!!!

ஆங்கில வினைச்சொற்களின் முன்பாக ‘dis' என்னும் சொல்லைச் சேர்த்தால், அது, அந்த வினைச் சொல்லின் பொருளை எதிர் மறையாக மாற்றிவிடும்.

உதாரணம்:

appear - disappear,
allow - disallow,
arm - disarm,
connect - disconnect,
continue - discontinue

If you add the suffix 'dis' in front of a verb it will reverses the meaning of the verb! example: disappear, disallow, disarm, disconnect, discontinue

அதுபோல தமிழில் ‘அவ’ என்னும் குறியை ஒரு சொல்லின் முன் சேர்த்தால், அதுவும் பொருளை எதிர்மறையாக்கிவிடும்

உதாரணம்
லட்சணம் - அவலட்சணம்
மானம் - அவமானம்
மதிப்பு - அவமதிப்பு
யோகம் - அவயோகம்
-----------------------------------------------------------------
ஆகவே ஒருவரது ஜாதகத்தில் யோகங்கள் இருப்பதைப் போலவே அவயோகங்களும் இருக்கும்.

இனி வரப்போவது, அவயோகங்களைப் பற்றிய பாடம். சார்’ எனக்கு இல்லையே என்று யாரும் வருத்தப்பட வேண்டாம்.

அதுபோல தங்கள் ஜாதகத்தை வைத்து, 30 வரிகளில் மின்னஞ்சல் அனுப்பி, கிரகங்களின் நிலையை வர்ணித்து, சார்’ எனக்கு
இருக்கிறதா பார்த்துச் சொல்லுங்கள் என்று யாரும் கேட்க வேண்டாம்.

பாடங்கள் எளிமையாக இருக்கும். உங்களுக்கு நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்

4 வயதுக் குழந்தை என்றால் நாம் குளிக்க வைக்கலாம். 25 வயது ஆசாமி, அவனாகத்தானே குளிக்க வேண்டும்.
நீங்கள் படித்துக் கொண்டிருப்பது மேல் நிலைக் கல்வி. ஆகவே சோப்பு, துண்டோடு யாரும் வரவேண்டாம்:-))))
---------------------------------------------------------------
அவயோகம் 1

லக்கின அதிபதி 6, 8, 12ஆம் வீடுகளில் இருந்தால் அது அவயோகம்

பலன்: ஜாதகன் பலருக்கும் தெரியாதவனாக இருப்பான். அறியப்படாதவனாக இருப்பான். அவன் வீட்டிலேயே அவனுக்கு முக்கியத்துவம் இருக்காது. மற்றவர்கள் அவனை மதிக்க மாட்டார்கள். பல இடங்களில் அவமானப் பட நேரிடும். தீயவர்களின் கூட்டணியில் சேர நேரிடும். வாழ்க்கையில் ஒரு நிலையான தன்மை இருக்காது. அல்லது கிடைக்காது.

எச்சரிக்கை: இது பொதுப்பலன். சுப கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வையால் இந்தப் பலன்கள் சிலருக்கு இல்லாமல்
இருக்கலாம்.
--------------------------------------------------------------
அவயோகம் 2

மூன்றாம் வீட்டு அதிபதி 6, 8, 12 ஆம் வீடுகளில் குடியேறி இருந்தால் அது இந்த அவயோகத்தைக் குறிக்கும்

பலன்: ஜாதகனுக்கு அல்லது ஜாதகிக்கு ஏராளமான எதிரிகள் இருப்பார்கள். அவர்களால் எல்லாத் துன்பங்களையும் எதிர் கொள்ள நேரிடும். இளைய உடன்பிறப்புக்களை இழக்க நேரிடும் அல்லது அவர்களின் வெறுப்பை வாங்கிக் கட்டிக்கொள்ள நேரிடும்.
உடல்வலிமை, மனதைரியம், செல்வத்தை இழக்க நேரிடும். மறைமுக சேட்டைகளைச் செய்து அல்லது ரகசிய உறவுகளை
ஏற்படுத்திக் கொண்டு அவதிப்பட நேரிடும்
-------------------------------------------------------------
அவயோகங்கள் தொடரும். நிறைய உள்ளன. ஒரேயடியாகக் கொடுத்தால் ஓவர் டோஸாகிவிடும். அதனால் இன்று இரண்டு மாத்திரைகள்!

அன்புடன்
வாத்தியார்
============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

21.9.17

உங்களுக்குப் பயனுள்ள சில வீட்டுத் தகவல்கள்!!!


உங்களுக்குப் பயனுள்ள சில வீட்டுத் தகவல்கள்!!!

 1. வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கறுப்பாவதைத் தடுக்கலாம்.

2. வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது.

3. ஒரு டம்ளர் தண்ணீரில்  நான்கு ஸ்பூன் டேபிள் உப்பு கலந்து அதை அறையின் நான்கு பக்க ஓரங்களில் தெளித்துவிட்டால் எறும்பு நடமாட்டம்  இருக்காது.

4. குத்துவிளக்கு,  காமாட்சி அம்மன் விளக்கின் மேல் நுனியில் ரப்பர் பேண்டைச் சுற்றிப் பூ வைத்தால் கீழே விழாது.

5. துணிகளில் எண்ணெய் கறையோ, கிரீஸ் தாரோ பட்டு  விட்டால் அவற்றைத் துவைக்கும் போது சில சொட்டுக்கள் நீலகிரித் தைலம் விட்டுக் கழுவினால் கறைகள் போய்விடும்.

6. எவர்சில்வர் பாத்திரங்கள்  நாளடைவில் பளபளப்பு மங்கினால் வாரத்துக்கு ஒரு முறை விபூதியைக் கொண்டு நன்கு தேய்த்து வாருங்கள். வெள்ளிப் பாத்திரங்கள் போல் மின்னுவதைப்  பார்க்கலாம்.

7. கோடை காலத்தில் மதிய உணவில் வெஜிடபிள் சாலட் அவசியம் சேர்க்க வேண்டும். அதிக எண்ணெயில் பொரித்த உணவு வகைகளைத்  தவிர்க்க வேண்டும்.

8. உங்கள் பிளாஸ்டிக் பக்கெட் ஓட்டையாகி விட்டால் அதைக் கவிழ்த்து பழைய டூத் பிரஷைத் தீயில் காட்டி உருகும் திரவத்தை அந்த  ஓட்டை மீது படியச் செய்யவும். ஓட்டை அடைபடும்.

9. எப்பொழுதாவது உபயோகிக்கும் "ஷூ"க்களில் ரசகற்பூர உருண்டை ஒன்றை ஒவ்வொரு "ஷூ"விலும் போட்டு வைத்தால் பூச்சிகள் அணுகாது.

10. ஷாம்பு வரும் சிறு பிளாஸ்டிக் கவர்கள் காலியானதும்
அவற்றைத் துணிகளை ஊறவைக்கும் போது  அதனுடன் போட்டு ஊறவைத்தால் துணி வாசனையாக் இருக்கும்.

11. பிரஷர் குக்கரை உபயோகபடுத்தாத நேரங்களில் மூடி வைக்கக் கூடாது.

12. பிரிட்ஜ் இல்லாதவர்களுக்கு இட்லி மாவு, தோசை மாவு
புளித்துப் போகாமல் தடுக்க அரைத்த மாவை பிளாஸ்டிக் டப்பா அல்லது பக்கெட்டில் போட்டு மூடினால்  புளித்துப் போகாமல் இருக்கும்.

13. வீட்டில் குளிர்சாதனப் பெட்டி இல்லாதவர்கள் காய்கறிகளின் மீது ஈரத் துணியைப் போட்டு மூடி வையுங்கள். வாடாமல்  இருக்கும்.

14. பொருட்களை கறையான் அரிக்காமல் இருக்க கற்பூரத்தைப் பொடி செய்து தூவி வையுங்கள்.

15. வெள்ளி சாமான்களை பீரோவில்  வைக்கும்போது அதற்குள் கற்பூரத்தைப் போட்டு வைப்பது நல்லது.

16. அசைவம் சமைத்த பிறகு பாத்திரங்களில் வீசும் துர்நாற்றத்தை நீக்கப் பாத்திரங்களில்  சிறிதளவு புளியைத் தடவிப் பிறகு வழக்கம் போல் கிளீனிங் பவுடர் போட்டுத் தேய்க்க வேண்டும்.

17. இஞ்சியை ஈரத்துணியில் சுற்றித் தண்ணீர்க் குடத்தின்  மேல் வைத்திருந்தால் பத்து நாள் வரை புதிதாகவே இருக்கும்.

18. காய்ந்த எலுமிச்சை, ஆரஞ்சுத் தோல்களை அலுமாரியில் வைத்தால் பூச்சிகள் அணுகாது.

19. கடையில் மூக்குப் பொடி வாங்கித் தண்ணீரில் கரைத்து எறும்புப் புற்றின் மேல் தெளித்து விடுங்கள். எறும்புகள் மாயமாய் மறைந்து போகும்.

20. குழந்தைகளுக்கு வெஜிடபிள் சூப் தரும் போது அதில் துருவிய கசுக்கொட்டையை (முந்திரி) பொடியாக நறுக்கிய பிரெட்டை நெய்யில் வறுத்து சூப்பின்  மேல் தூவித் தந்தால் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவர்.

21. புளித்த பாலில் (மோரில்) வெள்ளிப் பாத்திரங்களையோ, வெள்ளி நகைகளையோ அரை மணிநேரம் ஊறப் போட்டுப் பின் துலக்கினால் அவை புதியவை போல் இருக்கும்.

22. வெள்ளை நிற வாஸ்பேஷன், பாத்ரூம், டைல்ஸ் மற்றும் சிங்ககை  க்ளீனிங் பவுடர்களைக் கொண்டு சுத்தம் செய்த பின், சொட்டு நீலம் கலந்த நீரால் அலம்பிவிட்டால் பளபளப்பு மேலும் கூடும்.

23. வீட்டில் ஹோமங்கள்  செய்யும் போது ஒரு டேபிள் பானை (Fan) ஜன்னல் ஓரமாக வெளிப்பக்கம் பார்த்து வைத்துவிட்டால் புகை உள்ளே பரவாது.

24. வெண்ணெயில் உப்பைத்  தூவி விட்டால் அது நாட்பட்டாலும் கெடாமல் இருக்கும்.

25. வெயில் காலத்தில் எங்கு நோக்கினும் ஈக்கள் மொய்த்துக் கொண்டிருக்கும். வீட்டைக் கழுவும்  போது நீரில் சிறிது உப்பைச் சேர்த்துப் பின்பு கழுவுங்கள்.காய்ந்த பின் அறையில் ஈக்கள் வராது.

26. காய்கறி மற்றும் பழங்களை சிறிதளவு வினிகர் கலந்த  குளிர்ந்த நீரில் ஒரு சில நிமிடங்கள் போட்டு வைத்தால் கிருமிகள் இறந்து விடும்.

27. பூண்டு, வெங்காயம் போன்றவைகளை நறுக்குவதால் கத்தியில் ஏற்படும் துர்நாற்றத்தை போக்க, சிறிதளவு உப்பை கத்தியில் தடவி குளிர்ந்த நீரில் கழுவவும்.

28. பால் பாத்திரத்தின் அடியில் ஒட்டிக் கொள்ளாமல் இருக்க  பாத்திரத்தை முதலில் குளிர்ந்த நீரால் நன்கு கழுவ வேண்டும்.

29. கோதுமை உள்ள பாத்திரத்தில் ஒரு கொத்து வெந்தயக் கீரையை போட்டு வைத்தால்  பூச்சிகள் வராது.

30. இரவில் படுப்பதற்கு முன் ப்ளீச்சிங் பவுடரைச் சிறிது எடுத்து கழிப்பறையிலும் குளியலறையிலும் தூவி விட்டு அப்படியே விட்டு விட வேண்டும். கரப்பான் பூச்சித் தொல்லை இருக்காது.

31. நறுக்கி வைத்த வெங்காயத்தில் சிறிதளவு  வெண்ணெய் கலந்து வைத்தால் நீண்ட நேரம் பிரஷ்ஷாக இருக்கும்.

32. தேங்காய் முடியை தண்ணீரில் வைத்தால் அல்லது முடியில் சிறிது உப்பை தடவி  வைத்தால் கெடாமல் இருக்கும்.

33. நகைகளை பஞ்சில் சுத்தி வைத்தால் புது பொலிவுடன் இருக்கும்.

34. வீட்டு ஜன்னல்களுக்கு கரும் பச்சை,  கருநீலத்தினால் ஆன திரைச் சீலைகளைப் பயன்படுத்தினால் வெயிலின் உஷ்ணம் உள்ளே வராது.

35. சமைக்கும் போது எரிபொருள் சிக்கனம் செய்ய  வேண்டும். கீரையைத் தவிர எது சமைத்தாலும் பாத்திரத்தை மூடி வையுங்கள்.

36. மொசைக் தரையில் அழுக்கு நீங்கி பளபளப்பாக இருக்க,  வெதுவெதுப்பான நீரில் கொஞ்சம் சாக்பீஸ் தூள் மற்றும் சலவை சோடா கலந்து ஸ்பாஞ்சை வைத்து துடைத்து, பிறகு நல்ல தண்ணீரில் மீண்டும் ஒரு முறை துடைக்க வேண்டும்.

37. சமையலறையிலுள்ள பாத்திரம் கழுவும் தொட்டியைச் சுத்தப்படுத்த, பழைய செய்தித்தாள்களைக் கொண்டு தேய்த்தால்  அழுக்கு நீங்கி சுத்தமாக இருக்கும்.

38. கத்தியைச் சூடாக்கி ரொட்டியை வெட்டினால் பிசிறு இல்லாமல் நினைத்த படி வெட்டலாம்.

39. மீன் பாத்திரத்தில்  மீன் வாடை இருந்தால் சீயக்காய்த் தூளையும், புளியையும் சேர்த்துப் பாத்திரத்தைத் துலக்கினால் மீன் வாடை போய்விடும்.

40. எலுமிச்சம்பழம் உலர்ந்து  விட்டால் கொதிநீரில் ஐந்து நிமிடம் போட்டு பிறகு சாறு பிழிந்தால் நிறையச் சாறு கிடைக்கும்.

41. மழை நீரில் பருப்பு வகைகளை வேக வைத்தால் ஒரு  கொதியில் வெந்து விடும். ருசியும் அதிகரிக்கும்.

42. ஊறுகாயைக் கிளறுவதற்கு மர அகப்பை உபயோகிக்க வேண்டும்.

43. தயிர், மோர் பாத்திரங்களைச்  சுத்தம் செய்து வெயிலில் காய வைத்தால் அந்த பாத்திரத்தில் உள்ள வாடை நீங்கி விடும்.

44. பிளாஸ்க்கில் உள்ள துர்நாற்றம் அகல வினிகர் போட்டு கழுவலாம்.

45. கறிவேப்பிலை காயாமல் இருக்க வேண்டுமானால் அதன் மீது ஓர் அலுமினியப் பாத்திரத்தை மூடி வைத்தால் அது காயாமல் இருக்கும்.

46.  சின்ன வெங்காயத்தை வாங்கி வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்திருந்தால் ஒரு மாதம் வரை கெடாமல் முளை வராமல் இருக்கும்.

47. எலுமிச்சம் பழத்தை  நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் தண்ணீரில் போட்டு எடுத்து வைத்திருந்தால் ஒரு வாரம் வரை வாடாமலும் கெட்டுப் போகாமலும் இருக்கும்.

48.  இஞ்சியை ஈர மணலில் புதைத்து வைக்க வேண்டும்.

49. வாழைக்காயை தண்ணீரில் போட்டு வைத்திருந்தால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

50. வெண்டைக்காயின் காம்பையும், தலைப்பாகத்தையும் நறுக்கி விட்டு வைத்தால் மறுநாள் சமைப்பதற்குள் முற்றிப் போகாமல் இருக்கும்.

51. கடலை  எண்ணெய் கெடாமல் இருக்க சிறிது புளியை போட்டு வைக்க வேண்டும்.

52. எரிந்து கொண்டிருக்கும் பல்பின் மேல் இரண்டு சொட்டு சென்டைத்  தெளியுங்கள். அறை முழுக்க கமகமவென்று வாசனை பரவும்.

53. நைலான் துணியை தைக்கும் போது ஊசி லேசில் இறங்காது ஊசியை அடிக்கடி சோப்பில்  குத்தி எடுத்து நைலானைத் தைத்தால் சுலபமாக ஊசி இறங்கும்.

54. டூத் பேஸ்டை கடைசி வரை எடுக்க அதனை வெந்நீரில் போட்டுச் சிறிது நேரம்  கழித்துப் பின் அழுத்த மிச்சம் மீதி பேஸ்டும் வந்துவிடும்.

55. உப்புக் கரைந்த குளிர்ந்த நீரில் ரத்தக்கறை பட்ட துணிகளைக் கொஞ்ச நேரம் ஊறவைத்து  பின் எடுத்துச் சுத்தம் செய்யுங்கள். கறை போய்விடும்.

56. மாவடு ஊறுகாயில் சிறிதளவு விளக்கெண்ணெய் விட்டால் பூச்சிகள் வராமல் நீண்ட நாள் இருக்கும். கெட்டுப் போகாது.

57. வெள்ளைத்துணி பளிச்சிட வெள்ளைத் துணிகளைத் துவைக்கும் போது தண்ணீரில் சிறிது டேபிள் சால்ட் சேர்த்துக்  கொண்டால் துணிகள் வெள்ளை வெளேர் என்று இருக்கும்.

58. முகம் பார்க்கும் கண்ணாடியின் மீது தேயிலையினால் துடைத்தால் அழுக்கு நீங்கிக்  கண்ணாடி பளபளவென்று இருக்கும்.

59. பச்சை கொத்தமல்லியையும் கறிவேப்பிலையையும் வதக்கக் கூடாது. பச்சையாக உணவில் சேர்த்தால் தான் சத்து  அதிகமாக இருக்கும்.

60. கிழங்கு வகைகளை கறி செய்யும் போது அதிகமாக எண்ணெய் விட்டு வறுக்கக் கூடாது. எளிதில் ஜீரணமாகாது.

61. மின்சாரம் தடைப்பட்டிருக்கும் போது மெழுகுவர்த்தியை ஏற்றுவோம். மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தை அதிகரிக்க   மெழுகுவர்த்திக்கு பின்புறம் முகம் பார்க்கும் கண்ணாடியை வைக்கவும். இரு மடங்கு வெளிச்சம் கிடைக்கும்.

62. வெல்லம் சேர்த்து செய்யும் பொருட்களுக்கு  நெய் ஊற்றுவதால் சுவையும் மணமும் கூடும்.

63. கேரட், பீட்ரூட் வாடி போனால் அதை நறுக்குவது கடினம். உப்பு கலந்த நீரில் சிறிது நேரம் போட்டு  வைத்தால் புதியது ஆகி விடும். வெட்டவும் எளிதாகிவிடும்.

64. சிறிது வெதுவெதுப்பான நீரில் அழுக்குத் துணிகளை ஊறவைத்து பிறகு சோப்பு போட்டு  துவைத்தால் சுலபமாக வெளுக்கும்.

65. ஒரு டப்பாவில் சிறிதளவு சர்க்கரையை தூவி அதனுள் பிஸ்கட்டை வையுங்கள். பிஸ்கட் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

66. அரிசி மற்றும் காய்கறிகள் கழுவிய தண்ணீரை வீணாக்காமல் அதனை செடிகளுக்கு கொட்டினால் செடிகள் செழிப்பாய் வளரும்.

67. மிளகாய்  நீண்ட நாட்கள் இருக்க வேண்டுமானால் அதன் காம்பை எடுத்துவிட்டு பேப்பரில் சுற்றி ப்ரிட்ஜில் வையுங்கள். நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும்.

68.  உருளைக்கிழங்கு வேக வைத்த தண்ணீரில் பாத்திரங்களை கழுவினால் பாத்திரங்கள் ஜொலிக்கும்.

69. வீட்டில் புகை அதிகமாக காணப்படுகிறதா?  அறையில் ஈரத் துணியை தொங்க விட்டால் புகை காணாமல் போய் விடும்.

70. அலுமினிய பாத்திரங்களில் அடிப்பிடிப்புக் கறையை நீக்க உப்பு காகிதத்தால்  தேய்த்தால் பாத்திரம் புதுப்பொலிவுடன் இருக்கும்.

71. சமையல் மேடையில் கேஸ் ஸ்டவ்வைத் துடைக்க தேங்காய் எண்ணெய், கெரசின் இரண்டையும் சம அளவு கலந்து பயன்படுத்தினால் கிச்சன் பளிச்சென்று இருக்கும்.

72. ப்ரிட்ஜ், ஸ்டோர் ரூம், பாத்ரூம் இவற்றில் கரப்பான் பூச்சி தொல்லை இருந்தால்  ஆஸ்பிரின் மாத்திரைகளை ஆங்காங்கே வைத்தால் கரப்பான் தொல்லை இருக்காது.

73. பச்சை வெங்காயம் சாப்பிட்ட நாற்றத்தை போக்க உப்பு கலந்த நீரில்  வெங்காயத்தை ஊற வைத்து எடுத்து சாப்பிட்டால் காரம், நாற்றம் இருக்காது.

74. மிதியடிக்கு அடியில் அதே சைசில் பழைய நியூஸ் பேப்பரை வெட்டி  வைத்துவிட்டால் மிதியடிகள் அழுக்கு எல்லாம் பேப்பரில் சேர்ந்திருக்கும்.

75. வாழைப்பழம் சீக்கிரம் கறுத்துவிடாமல் இருக்க ஈரத் துணியால் சுத்தி  வைத்தால் பிரஷ்ஷாக இருக்கும்.

76. ப்ரிட்ஜில் ஆப்பிள், கேரட் இரண்டையும் ஒரே கம்பார்ட்மெண்டில் வைக்காதீர்கள். ஆப்பிளில் இருந்து வெளிவரும் ஒரு வித வாயு கேரட்டைக் கசக்கச்  செய்துவிடும்.

77. பீன்ஸ், அவரை போன்ற காய்களை வேக வைக்கும் போது எலுமிச்சை, தக்காளி ஜூஸ் சிறிது பிழிந்தால் சீக்கிரம் வெந்துவிடும்.

78. லேசான வெந்நீரில் வெங்காயத்தை நனைத்து வெட்டினால் கண்கள் எரியாது.

79. உணவில் அதிக அளவு உப்பு சேர்ந்துவிட்டால்  உரித்த உருளைக்கிழங்கை அப்படியே உணவில் போட்டு விடுங்கள். உணவில் அதிகமாக இருந்த உப்பு குறைந்துவிடும்.

80. சாப்பிட்ட பிறகு, சிறிது  வினிகரும், பேரபின் எண்ணெயும் கலந்து மேஜையை துடைத்துவிட்டால் மேஜை பளபளப்பாக இருக்கும். நாற்றம் இருக்காது.

81. கொஞ்சம் நீரில் கடுகு எண்ணெய் கலந்து மிருதுவான துணியில் நனைத்து மரச் சாமான்களை துடைத்தால் வார்னீஷ் செய்தது போல் இருக்கும்.

82. பழைய புத்தகங்களை பூச்சி  அரிப்பில் இருந்து பாதுகாக்க புத்தக அலமாரியில் சிறிதளவு புகையிலையை தூவினால் பூச்சி அரிப்பு இருக்காது.

83. வேக வைத்த உருளைக்கிழங்கு  தோலை வீணாக்காமல் அந்த தோலைக் கொண்டு கண்ணாடிகளை துடைத்தால் பளிச்சென்று மின்னும்.

84. முட்டை நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்க முட்டை கூட்டின் மீது சிறிது அளவு ரீஃபைண்ட் ஆயில் தேய்த்தால் கெடாது.

85. உள்ளங்கையில் சில சொட்டு சமையல் எண்ணெய் ஊற்றி  தேய்த்துக் கொண்டு மீனை சுத்தம் செய்தால் கைகளில் மீன் நாற்றம் அடிக்காது.

86. சர்க்கரை வைத்திருக்கும் பாத்திரத்தில் எப்போதும் எறும்புத் தொல்லை  இருந்தால் அந்தப் பாத்திரத்தினுள் நான்கைந்து கிராம்பை போட்டால் எறும்பு வராது.

87. குழந்தைகள் போடும் சாக்ஸ் லூஸாகி விட்டால், சாக்ஸ்
ஓரத்தில்  அதன் சுற்றளவுக்கு ஏற்றபடி ரப்பர் பேண்டை வைத்து உருட்டி தைத்துவிட்டால் ஓரம் தொய்ந்து போகாமல் காலை அழுத்தமாக பிடித்துக் கொள்ளும்.

88.  வாசனை கம்மியான ஊதுவத்திகள் மீது சிறிது யூபிகோலனைத் தடவிய பின் ஏற்றி வைத்தால் வீடு முழுவதும் வாசனை தூக்கும்.

89. மிக்ஸியில் அரைக்கப்  போடும் பொருள்கள் ரொம்பக் கொஞ்சமாக இருந்தால், தட்டினால் மூடிவிட்டு அரைத்தால் நன்றாக அரைபடும்.

90. வெள்ளைக் கலர் டெலிபோன் அழுக்கு  ஏறி இருந்தால் நெயில் பாலீஷ் ரிமூவரால் அழுந்தத் துடைத்தால் பளிச்சென்று ஆகும்.

91. பிளாஸ்டிக் குடம் வீணாகிப் போனால் பாதிக்கு மேல் வெட்டி (மேல் பாகத்தை) விட்டு குப்பைக் கூடையாக  அல்லது செடி வளர்க்க உபயோகிக்கலாம்.

92. சோப்புத் தண்ணீர் கொண்டு கேஸ் அடுப்பைத் துடைக்கும் போது டியூபையும் துடையுங்கள். இதனால் டியூப்  நெடுநாள் உழைக்கும். சுத்தமாகவும் இருக்கும்.

93. வீட்டில் மரச் சாமான்களுக்கு உபயோகிக்கும் பெயிண்டை முறத்தில் தடவி காய வைத்தால் நீண்ட நாட்கள் முறம் புதுசு போல இருக்கும். பூச்சிகளும் அரிக்காது.

94. டூல் பாக்ஸில் ஒரு சாக்பீஸ் கட்டி அல்லது கரித் துண்டை போட்டால், அது ஈரப் பசையை  உறிஞ்சி டூல்ஸ் துருப்பிடிக்காமல் இருக்க உதவும்.

95. செருப்பின் மேல் பாகத்துத் தோலின் அடிப்பாகத்தில் மெழுகுவர்த்தியை நன்றாகத் தேய்த்து, பிறகு  அணிந்து கொண்டால் செருப்பு கடிக்கவே கடிக்காது.

96. துணி பீரோவை சுத்தம் செய்யும்போது முதலில் பீரோ தட்டுகளில், பயன்படுத்திய கொசுமேட்டை ஐந்தாறு பரப்பி அதன் மேல் பேப்பர் போட்டுத் துணியை அடுக்கினால் ஒரு வருடம் வரை பூச்சிகள் நெருங்காது.

97. கொசு தொல்லைக்காகப்  போடப்பட்டுள்ள நெட்லானில் சிறிய துளைகள் ஏற்பட்டு விட்டால், செலோடேப் கட் பண்ணி ஒட்டலாம்.

98. கருவேப்பிலைச் செடிக்குப் புளித்த தயிர்  அல்லது மோர் விட்டால் நன்கு செழிப்பாக வளரும். தயிர் பாத்திரத்தின் உள்ளே தண்ணீர் விட்டுக் குழப்பி அந்நீரையும் விட்டு வரலாம்.

99.  குழந்தைகளுக்கு உபயோகித்த சின்ன சைஸ் கொசுவலை துணியில், embroider கைவண்ணம் காட்டி டி.வி. கவராக பயன்படுத்தலாம்.

100. துணிகளில்  ஹேர்-டை பட்டால் அந்த கறையை நீக்க, நெயில்பாலிஷ் ரிமூவரால் டை படிந்த பகுதியைத் துடைத்தால் கறை போய்விடும்.

101. ரப்பர் ஸ்டாம்ப் பேட், இங்க்  காய்ந்து போய்விட்டால் நீலம் சில சொட்டுகள் விட்டால் அழகாக பதிய வரும்.

102. மாதுளம் பழத் தோல்களின் உள்பாகத்தை எடுத்து பல் தேய்த்தால்  பல்லுக்கும் உறுதி, பல்லும் பளிச்சென்று இருக்கும்.

103. தேங்காய் உடைத்த இளநீரை சுண்ணாம்பு பாட்டிலில் சிறிது ஊற்றி வைத்தால் சுண்ணாம்பு  சீக்கிரத்தில் காய்ந்து போகாமல் இருக்கும்.

104. மின்விசிறியில் தூசி படிந்து, கறை படிந்து விட்டதா? ஒரு துணியை மண்ணெண்ணையில் நனைத்து மின் விசிறியை அழுத்தித் துடையுங்கள். சிறிது நேரத்திற்குப் பிறகு நல்ல துணியால் துடைத்துப் பாருங்கள். பளிச்சென்றாகிவிடும்.

105. அரை வாளி தண்ணீரில்,  நான்கு மேஜைக்கரண்டி வினீகரை கலந்து ஜீன்ஸ் துணிகளை அலசினால் சாயம் போவதை தடுக்கலாம்.

106. புது வீட்டில் பெயிண்ட் அடித்த வாடை போக  மறுக்கிறதா? ஒரு பக்கெட் நிறைய தண்ணீரை நிரப்பி அறைகளில் வையுங்கள். வாடை போய்விடும்.

107. ஆணி அடிக்கும் போது நுனியில் தேங்காய்  எண்ணெய் தடவினால் சுவரில் சுலபமாக இறங்கும்.

108. சமையல் அறையில் எண்ணெய் பசையுள்ள இடத்தில் சுண்ணாம்புடன் மண்ணெண்ணெய் கலந்து  அடிக்கலாம்.

109. கூர்மையான கத்திகளில் தேங்காய் எண்ணெய் தடவி வந்தால் அதன் கூர்மை மழுங்காது.

110. பால் பாக்கெட் வாங்கி காய்ச்ச நேரமில்லாமல்  போனால் அதை தண்ணீருக்குள் போட்டு வைத்துவிட்டால் மூன்று மணி நேரம் கழித்துக் கூட காய்ச்சலாம்.

111. இனிப்பு பலகாரங்கள் உலர்ந்து கெட்டுப்  போகாமலிருக்க அதன் மீது சிறிது தேன் பூசி வைக்கலாம்.

112. பால் காய்ச்ச மறந்து போய் விட்டீர்களா? பால் திரிந்து போகுமோ என்ற பயம் ஏற்படுகிறதா? கவலை வேண்டாம். பாலைக் காய்ச்சும் முன் ஒரு சிட்டிகை சமையல் சோடா மாவு கலந்து காய்ச்சினால் பால் திரியாது.

113. காபி பொடியை போடுவதற்கு  முன் பில்டரின் அடிப்பாகத்தை தீயில் காட்டி விட்டு பின்பு உபயோகித்தால் டிகாஷன் கலகலவென்று இறங்கும்.

114. நெய் எவ்வளவு நாளானாலும்  பிரஷ்ஷாக இருக்க அதோடு ஒரு வெல்லத் துண்டைப் போட்டு வைக்கவும்.

115. தக்காளி, எலுமிச்சைப் பழம் சீக்கிரம் கெடாமலிருக்க உப்பு கலந்த நீரில்  போட்டு வைக்கவும்.

116. கோதுமை மாவை நன்கு சலித்து சிறிதளவு டேபிள் சால்ட்டை கலந்து வைத்தால் வண்டுகள் வராது.

117. தயிர் புளித்து விடுமோ என்ற பயம் வேண்டாம்.ஒரு துண்டு தேங்காயைப் போட்டு வைத்தால் தயிர் புளிக்காது.

118. ஆப்பிள் மிகவும் புளிப்பாக இருந்தால் தோல் சீவி நறுக்கி உப்பு,  மிளகாய்ப் பொடி, வெந்தயப் பொடி, பெருங்காயப் பொடி கலந்து தாளித்துக் கொட்டுங்கள். புதுமையான ஊறுகாய் தயார்.

119. தேங்காயை சரிபாதியாக  உடைக்க, தண்ணீரில் நனைத்து பின்னர் உடைக்க வேண்டும்.

120. கொத்தமல்லி இலைகளை நன்கு ஆய்ந்து சுத்தமாக தண்ணீரில் அலசி காய வைத்து  காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்தால், நிறைய நாட்கள் கெடாமல் இருக்கும்.

121. குளிர்ந்த  நீரில் சில சொட்டுகள் எலுமிச்சை சாற்றை விட்டு அதில் காய்கறிகளைப் போட்டு வைத்தால் காய்கறிகள் அப்போது பறித்தது போல் "பிரஷ்"ஷாக இருக்கும்.

122. உப்பு வைத்திருக்கும் பாத்திரத்தினுள்ளே ஒரு பிளாஸ்டிக் பேப்பரை போட்டு அதன் மீது உப்பைக் கொட்டி வையுங்கள். உப்புக்கல் கசியாமல் அப்படியே இருக்கும்.

123. குடிக்கும் தண்ணீர் மணமா இருக்கணுமா? வாட்டர் பில்டரில் சிறிதளவு துளசியை போட்டு வையுங்கள்.

124. முதல் நாள் சாதம் மீதி  இருந்தால் கவலை வேண்டாம். அதை மிக்ஸியில் நன்கு அரைத்து எடுத்து இரண்டு பிடி கடலை மாவு, பச்சை மிளகாய் துண்டுகள், உப்பு, கறிவேப்பிலை,  கொத்தமல்லி, ஒரு கரண்டி தயிர் விட்டு தண்ணீர் சேர்த்து தோசையாக வார்த்தால் மிகவும் சுவையாக இருக்கும்.

125. சப்பாத்தி எப்போதும் சூடாக இருக்க,  அதை சில்வர் பேப்பரில் சுற்றி வைக்கவும்.

126. மழைக்காலங்களில் தீப்பெட்டியிலுள்ள குச்சிகள் நமத்து போகாமல் இருக்க பெட்டியினுள் நான்கைந்து  அரிசியைப் போட்டு ஒரு டப்பாவில் போட்டு மூடிவிட்டால் குச்சிகள் எளிதில் தீப்பற்றும்.

127. உருளைக்கிழங்கு போண்டா செய்வது போல, எல்லா காய்கறிகளையும் ஒன்றாக வதக்கி உருட்டி கடலை மாவில் தேய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்க வெஜிடபிள் போண்டா செய்யலாம். குழந்தைகள்  காய்களையும் சாப்பிட ஒரு சந்தர்ப்பம்.

128. தானியம் மற்றும் பயறு வகைகளை எட்டு மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் வடித்து ஹாட் பேக்கில் போட்டு மூடி மறுநாள் திறந்து பார்த்தால் முளை கட்டிய தானியம் தயார். தானியங்களை முளை கட்டுவதற்கு ஒரு எளிய வழி.

129. கோதுமையை நன்கு கழுவி  நான்கு மணி நேரம் ஊற வைத்து உலர்த்தி பின் மிஷினில் அரைத்து சப்பாத்தி செய்தால் மிகவும் மிருதுவான சப்பாத்தி கிடைக்கும்.

130. சமையலில் உப்பு  சற்று கூடுதலா? கவலை வேண்டாம். பால், க்ரீம், தயிர் இவற்றில் ஏதோ ஒன்றினைச் சேருங்கள். சரியாகிவிடும்.

131. வாழைப்பூ, வாழைத்தண்டு ஆகியவற்றை நறுக்கினால் உடனே அவற்றை மோர் கலந்த தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும். இதனால் வாழைப்பூ, வாழைத்தண்டின் நிறம் மாறாது. பிடிக்காது. துவர்ப்பு நீங்கும்.

132. துவைத்த துணிகளுக்கு நீலம் போடும் போது நீலம் கரைத்த நீரில் சிறிது வாஷிங் சோடாவையும் கலந்து கொண்டால்  துணியில் நீலம்
திட்டுத்திட்டாக இல்லாமல் சமமாக இருக்கும்.

133. பாலேடு, தயிரேடுகளை பாட்டிலில் போட்டு குலுக்க வெண்ணெய், மோர் ஒரே சமயத்தில் கிடைக்கும்.

134. கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழையை வாங்கிய உடன் வாழைப் பட்டையில் சுற்றி வைக்க வாடாமல் இருக்கும்.

135. இட்லிக்கு மாவு  அரைக்க அரிசியை ஊறப் போட மறந்து விட்டீர்களா? இதோ ஒரு வழி உடனே சுடு தண்ணீரிலே அரிசியை ஊறப் போடுங்கள். பத்து நிமிடத்தில்  ஊறிவிடும்.

136. உங்கள் இஸ்த்திரி பெட்டி நைலான் துணி மீது தேய்த்தால் அடிப்பாகம் வீணாகிவிட்டதா? அப்பெட்டியினை சூடாக்கி பச்சை வாழை  இலையின் மீது தேயுங்கள். பெட்டியின் அடிப்பாகம் சரியாகிவிடும்.

137. காபி, டீ கொடுக்கும் பீங்கானில் கறை படிந்து உள்ளதா? ஒரு பெரிய வெங்காயத்தினை வெட்டி நன்கு தேயுங்கள். கறைகள் விட்டு விலகும்.

138. பிளாஸ்கில் உள்ள துர்நாற்றம் போக வினிகர் போட்டு கழுவலாம்.

படித்தேன். உங்களுக்கென பகிர்ந்தேன்
அன்புடன்
வாத்தியார்
=====================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

20.9.17

Cinema: கோட்டையில்லை, கொடியுமில்லை, அப்பவும் அவர் ராஜா!!!


Cinema: 
கோட்டையில்லை, கொடியுமில்லை, அப்பவும் அவர் ராஜா!!!

*கண்ணன் ஒரு கைக் குழந்தை*.., அப்படியே இதயத்தை கரைத்த பாடல்.

1976 இல் இளையராஜா அன்னக்கிளி படத்திற்கு இசை அமைத்த கையோடு சூட்டோடு சூடாக வெளிவந்த படங்களில் பத்ரகாளியும் ஒன்று ... இந்த பாடலை

ஒவ்வொருமுறை கேட்கும்போதும் நெஞ்சம் எதனாலோ நெகிழ்ந்துவிடுகிறது , தாய் பாடாத ஒரு தாலாட்டு , ஒரு தாலாட்டை காதல் பாடலாக இசை அமைத்த ராஜா....

முதன் முதலாக ஜேசுதாஸ் இளையராஜாவுக்கு பாடிய பாடலிது .. பி . சுசீலாவிற்கு ராஜாவிடம் இருந்து கிடைத்த இரண்டாவது பாடல். இந்த பாடலில் ஜேசுதாசும்

சுசீலாவும் கண்ணன் எனும் கைக்குழந்தையை மாறி மாறி தாலாட்டி சீராட்டி, கொஞ்சி குலவி அஹா என்ன ஒரு அற்புதமான பாடல். இந்த பாடலை கேட்டு கேட்டு

ரசித்தாலே போதும், அவ்வளவு வித்தியாசமான இசை

இப்பாடலுக்கு இழைந்து இழைந்து வரும் பேஸ் கிடாரை வாசித்தவர் கீ போர்டு புகழ் "விஜி மேனுவல்".  முதல் சரணத்தில் வீணையை கொஞ்சிக்கொண்டு ஓடும் அந்த

குழலை வாசித்தவர் ராதாகிருஷ்ணன். பேஸ் கிடாரையும், வீணையையும் தொட்டு தொட்டு விளையாடும் அந்த தபேலாவை வாசிப்பது கண்ணையா. எழுதியது வாலி .,.

ஆகமொத்தம் இளையராஜா, ஜேசுதாஸ், சுசீலா, வாலி , விஜி மேனுவல், கண்ணையா, ராதா கிருஷ்ணன், வீணை காயத்ரி  என்று அத்தனை சாதனையாளர்களையும்

கொண்டு வந்து ஒரு புள்ளியில் சேர்த்த பாடல் இது .

சரணத்தில் முதல் வரியை ,
*உன் மடியில்* *நானுறங்க கண்ணிரெண்டும் தான் மயங்க*
*என்ன தவம்* *செய்தேனோ என்னவென்று சொல்வேனோ*

ஒரு மெட்டில் பாடி ஜேசுதாஸ் முடித்தவுடன்,
அதே வரியை  மீண்டும் வேறு மெட்டில்

*உன் மடியில் நானுறங்ககண்ணிரெண்டும் தான் மயங்க*
*என்ன தவம் செய்தேனோ என்னவென்று சொல்வேனோ*
சுசீலா பிரித்து பிரித்து பாடியாகவேண்டும்.இரண்டுமே வேறு வேறு திசையில் இருப்பது போல இருக்கும் , ஆனால் இரண்டு மெட்டையுமே ஒரே தபேலாவின் சீரான

வாத்தியகட்டிலும், பாடகர்களின் திறமையான தேர்விலும், அவர்களை பாடவைத்ததில் ராஜாவின் சாதனை.

கவிஞர் வாலி வரிகளை பாருங்களேன் .. என்ன ஒரு கவிநடை *ஏழ் பிறப்பும்* *இணைந்திருக்கும் சொந்தமிந்த சொந்தமம்மா வாழ்விருக்கும் நாள் வரைக்கும்

தஞ்சமுந்தன் நெஞ்சமம்மா*

எந்த ஒரு மொழியிலும் இல்லாத தனி சிறப்பு நம் தமிழ் பாடலில்களுக்கு உண்டு, வார்தைகளால் விவரிக்க முடியாத அற்புதமான பாடல், கேட்கும்போது  நினைவுகள்

நாற்பது ஆண்டுகள் பின்னோக்கி சிறக்கிட்டு செல்கின்றது.

இசை மழையில் இதமான ராகம்-இதோ உங்களுக்காக!

பாடல்:கண்ணன் ஒரு
திரைப்படம்:பத்ரகாளி
இசை:- இளையராஜா;  இயற்றியவர்: வாலி; பாடியவர்:ஜேசுதாஸ், சுசிலா
~~~~~~~~~~~~~~~
பாடல் வரிகள்:
கண்ணன் ஒரு கை குழந்தை 
கண்கள் சொல்லும் பூங்கவிதை 
கன்னம் சிந்தும் தேனமுதை 
கொண்டு செல்லும் என் மனதை கையிரண்டில் நானெடுத்து 
பாடுகின்றேன் பாடுகின்றேன்
ஆராரோ மைவிழியே தாலேலோ 
மாதவனே தாலேலோ 
(கண்ணன் ஒரு கை குழந்தை) 

உன் மடியில் நானுறங்க கண்ணிரெண்டும் தான் மயங்க 
என்ன தவம் செய்தேனோ என்னவென்று சொல்வேனோ 

உன் மடியில் நானுறங்க
கண்ணிரெண்டும் தான் மயங்க 
என்ன தவம் செய்தேனோ 
என்னவென்று சொல்வேனோ 

ஏழ் பிறப்பும் இணைந்திருக்கும் சொந்தமிந்த சொந்தமம்மா 
வாழ்விருக்கும் நாள் வரைக்கும் தஞ்சமுந்தன் நெஞ்சமம்மா 
(கண்ணன் ஒரு கை குழந்தை )

கண்கள் சொல்லும் பூங்கவிதை 
கன்னம் சிந்தும் தேனமுதை 
கொண்டு செல்லும் என் மனதை கையிரண்டில் நானெடுத்து 
பாடுகின்றேன் பாடுகின்றேன் ஆராரோ மைவிழியே தாலேலோ மாதவனே தாலேலோ  

அன்னமிடும் கைகளிலே ஆடி வரும் பிள்ளையிது
உன் அருகில் நானிருந்தால் ஆனந்தத்தின் எல்லையது 
காயத்ரி மந்திரத்தை உச்சரிக்கும் பக்தனம்மா 

கேட்கும் வரம் கிடைக்கும் வரை கண்ணுறக்கம் மறந்ததம்மா 

மஞ்சள் கொண்டு நீராடி மைகுழலில் பூச்சூடி 
வஞ்சிமகள் வரும்போது ஆசை வரும் ஒரு கோடி 

மஞ்சள் கொண்டு நீராடி 
மைகுழலில் பூச்சூடி 
வஞ்சிமகள் வரும்போது 
ஆசை வரும் ஒரு கோடி 
கட்டழகன் கண்களுக்கு மை எடுத்து எழுதட்டுமா
கண்கள் பட கூடுமென்று பொட்டு ஒன்று வைக்கட்டுமா 
(கண்ணன் ஒரு கை குழந்தை) 

ஆராரியோ ஆராரியோ ஆராரியோ ஆராரியோ ஆராரிரோ..
*==================================================


படித்தேன் பகிர்ந்தேன்!!!!
இரசனையுடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

19.9.17

சிறப்பு மிகுந்த சிவ ஸ்தலங்கள்!


சிறப்பு மிகுந்த சிவ ஸ்தலங்கள்!

நாட்டில் சிவ ஸ்தலங்கள் நிறைய உள்ளன. ஒவ்வொரு ஸ்தலங்களிலும் ஒவ்வொரு அதிசய சிவ லிங்கங்கள் காணப்படுகின்றன. அந்த வகையில் அதிசய சிவ ஸ்தலங்கள் பற்றி பார்ப்போம்......!

🌻 சோழ மன்னர்களால் கட்டப்பட்ட தமிழ்நாட்டின் மிகப் பழமையான கோவில்களில் ஒன்றாக திகழ்ந்து வரும் தியாகராஜ சுவாமி கோவிலின் சன்னதியில் லிங்கத்திற்கு பதிலாக ஒரு புற்று நிறுவப்பட்டுள்ளது. இக்கோவிலில் புற்று வடிவில் சிவன் காட்சி தருகிறார்.

🌻 கரூரில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலில் 5 அடி உயரம் உடைய பசுபதீஸ்வரர் லிங்கம் உள்ளது. ஒரு பசுவின் காம்பில் இருந்து வடியும் பாலில் குளிப்பது போன்று லிங்கம் கர்ப்பகிரகத்தில் சிவபெருமானாக காட்சியளிக்கிறார்.

🌻 பஞ்சபு த ஸ்தலங்களில் திருவானைக்கால் ஸ்தலம் நீர்த்தலம் ஆகும். மூலஸ்தான லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்க்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும்.

🌻 சென்னை அம்பத்தூருக்கு அருகிலுள்ள திருமுல்லைவாயிலில் உள்ள மாசில்லாமணீஸ்வரர் கோவிலில் வழக்கத்திற்கு மாறாக நந்தி சிலை சிவபெருமானை நேராகப் பார்த்து இருக்காமல், கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

🌻 கேரளா மாநிலம் திருச்சூரில் அமைந்துள்ள வடக்கும்நாதர் சிவன் கோவிலில் எத்தனையோ தலை முறையாக, வருடங்களாக ஒரு சிவலிங்கத்திற்கு நெய் அபிஷேகம் செய்து வர, அந்த நெய் உறைந்து சிவலிங்கத்தை மூடிவிட்டது. உறைந்த நெய்யின் உயரமே நான்கு அடி உயரம் இருக்கும். எத்தனை விளக்குகள் ஏற்றி வைத்தாலும் கூட, அந்த விளக்குகளின் சு ட்டிலும் சரி, வெயில் காலத்தின் சு ட்டிலும் சரி, அந்த லிங்கத்தின் மேல் உறைந்த நெய்யானது உருகுவதில்லை. இன்றும் தொடர்ந்து நெய் அபிஷேகம் நடந்து கொண்டிருக்கிறது.

🌻 ஈரோடு மாவட்டம், காங்கேயத்துக்கு அருகில், மடவிளாகம் சிவன்கோவிலில் உள்ள குளத்தில், பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மண் பானை நிறைய விபு தி தோன்றுகிறது. இது இந்த காலத்திலும் நடக்கும் ஒரு அதிசயம் ஆகும். அந்த குளத்தை சிவபெருமான் தன் விரல் நகத்தால் மண்ணில் கிழித்து உருவாக்கினாராம். மிக உயரமான கல் விளக்கு இந்த கோவிலில் காணப்படுகிறது.

🌻 கர்நாடக மாநிலத்தில் உள்ள சால்மலா ஆற்றில் 1000த்திற்கும் மேற்பட்ட சிவலிங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இடம் சஹஸ்கர ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது. ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள இந்த லிங்களுக்கு அருவியிலிருந்து வழியும் நீரால் இயற்கையாகவே அபிஷேகம் செய்யப்படுகிறது.

🌻 கர்நாடக மாநிலத்தில் தங்க சுரங்கத்திற்கு புகழ்பெற்ற கோலார் மாவட்டத்தில் உள்ள கம்மசந்திரா என்ற ஊரில் கோடிலிங்கேஸ்வரர் கோவில் அமைந்திருக்கிறது. இக்கோவிலில் பல்வேறு அளவுகளிலான கிட்டத்தட்ட ஒரு கோடி சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இதனாலேயே இக்கோவிலுக்கு கோடிலிங்கேஸ்வரர் கோவில் என்ற பெயர் வந்துள்ளது.

https://en.wikipedia.org/wiki/Vadakkunnathan_Temple
https://en.wikipedia.org/wiki/Sahasralingaஅதிசய_சிவ_ஸ்தலங்கள்

எனக்கு whatsappல் வந்தது. உங்களுக்கு அறியத் தந்துள்ளேன்!!!!
அன்புடன்
வாத்தியார்
--------------------------------------
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

18.9.17

Humour: நகைச்சுவை: சினம் தவிர்த்தல்!!!!


Humour: நகைச்சுவை: சினம் தவிர்த்தல்!!!!

கோபம் என்ற பெண்ணை மணந்தால் கொடுமை என்ற குழந்தைதான் பிறக்கும் என்பது முதுமொழி. அதுபோல கோபத்துடன் எழுந்தவன் நஷ்டத்தோடுதான் உட்காருவான் என்பதும் ஒரு முதுமொழி.

ஆகவே எந்த சூழ்நிலையிலும் கோபம் கொள்ளலாகாது.
சினத்தைத் தவிர்க்க வேண்டும்.

சினத்தைத் தவிர்ப்பது பற்றி தனக்கே உரிய நகைச்சுவையுடன் தென்கச்சி கோ.சுவாமிநாதன் அவர்கள் ஒரு கதை சொல்கிறார். காணொளி வடிவில் உள்ளது. அனைவரும் பாருங்கள்



----------------------------------------------
2.
அவரே உடல் எடையைக் குறைப்பது பற்றி ஒரு சம்பவத்தை நகைசுவையுடன் விவரிக்கின்றார். அதுவும் காணொளி வடிவில் உள்ளது. அதையும் பார்க்க வேண்டுகிறேன்



இந்த இரண்டில் எது மிகவும் நன்றாக உள்ளது?
அதைச் சொல்லுங்கள்

அன்புடன்
வாத்தியார்
======================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

15.9.17

Astrology: ஜோதிடம்: அமரக் யோகம்!


Astrology: ஜோதிடம்: அமரக் யோகம்!

யோகங்களைப் பற்றிய பாடம்!

அமரக் என்றால் பானி பூரி, பேல் பூரி போல ஏதோ தின்பொருள் - சாட் அயிட்டம் என்று நினைக்கவேண்டாம். அமரக் என்னும் வடமொழிச்சொல் ஒரு வித அணிகலனைக் குறிக்கும். மயில்பதக்கம் போன்ற தோற்றமுடைய அணிகலனாம்.

பதிவை முழுதாகப் படித்தால், அதை நீங்களும் ஒத்துக்கொள்வீர்கள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஏழாம் வீட்டதிபதி ஒன்பதாம் வீட்டிலும், ஒன்பதாம் வீட்டதிபதி ஏழாம் வீட்டிலும், இடம் மாறி அமர்ந்திக்கும் நிலைமையே இந்த அமரக் யோகத்தைக் குறிக்கும். மாறி அமர்ந்ததோடு அல்லாமல் வலுவாக வேறு இருக்க வேண்டுமாம். அதாவது ஆட்சி, அல்லது உச்சம் அல்லது அஷடகவர்க் கத்தில் 5ம் அல்லது மேற்பட்ட பரல்களையும் பெற்றிருக்க வேண்டும்

பலன்: ஏழாம் வீட்டோடும் பாக்கிய ஸ்தானத்தோடும் சம்பந்தப்பட்ட யோகம் இது. இந்த யோகம் உள்ள ஜாதகனுக்கு, டக்கராக மனைவி கிடைப்பாள். சினிமாவை வைத்து உதாரணம் சொல்ல விருப்பமில்லை. இதற்கு உதாரணம் சொன்னால், ராமனுக்கு ஒரு சீதை கிடைத்ததைப்போல அல்லது லெட்சுமணனுக்கு ஒரு ஊர்மிளா கிடைத்ததைப் போல அற்புதமான மனைவி கிடைப்பாள்.

அவளைப் பார்த்துப் பார்த்து ஜாதகன் மகிழலாம். வயதானா பிறகும் அருகில் வைத்துக் கொஞ்சலாம். ’உனக்காக நான், எனக்காக நீ’ என்று வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். Made for each other என்று போடுகிறார்களே அப்படியொரு அம்சம் வாழ்க்கையில் இருக்கும்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சார், எனக்கு இந்த அமைப்பு இருக்கிறது. ஆனால் ஒரு கிரகம் ஊற்றிக்கொண்டு விட்டது அதாவது, நீசமாகிவிட்டது - வக்கிரமாகிவிட்டது - அஸ்தனமாகிவிட்டது - கிரகயுத்ததில் உள்ளது - ஆகவே இதில் பாதி அம்சத்தோடாவது ஒரு மனையாள் கிடைப்பாளா? என்று யாரும் கேட்க வேண்டாம். ஜோதிட விதிகளை நமக்காக நாம் மாற்றிக்கொள்ள முடியாது. அதை மனதில் வையுங்கள். இருந்தாலும் சந்தோஷம். இல்லையென்றாலும் சந்தோஷம். நம் முகத்தை ஒரு முறை கண்ணாடியில் பார்த்து மனதைத் தேர்த்திக்கொள்ள வேண்டியதுதான்.

அன்புடன்
வாத்தியார்
==================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

14.9.17

சிந்தியுங்கள்: செயல்படுங்கள்!!!


சிந்தியுங்கள்: செயல்படுங்கள்!!!

வயதானால் நோய்வரும் என்று எந்த இயற்கையின்  சட்டமும் கிடையாது.*

இயற்கை *உங்களை முழுமையாகப் படைத்திருக்கிறது*.

உங்கள் உடலில் இருக்கும் ஒவ்வொரு உறுப்பும் நீங்கள்
உயிருடன் இருக்கும் அத்தனை நாளும் பயன்படுத்தவே படைக்கப்பட்டிருக்கிறது.

அதனால் *எவனாவது வயதானால் அந்த நோய் வரும் வயதானால் இந்த நோய் வரும் என்று சொன்னால், தயவு செய்து நம்பாதீர்கள்*.

உங்கள் கூடவே வாழும் மிருகங்களைப் பாருங்கள். மரணம் வரும் வரை தன் வேலைகளைத் தானே செய்து கொள்கிறது.

எந்தச் சிங்கமும் தனக்கு வயதாகிவிட்டது என்று தன் குட்டியிடம் சாப்பாடு கேட்பதில்லை.

எந்த மாடும் படுத்து கொண்டு தன் கன்றிடம் தண்ணீரோ உணவோ கேட்பதில்லை.

எந்தப் பூனையோ, நாயோ படுத்த படுக்கையாக இருந்து கொண்டும் மலம் கழிப்பதில்லை.

மரணம் அடையும் நாள் வரை ஆரோக்கியமாக சுயமாக தன் வேலைகள் அனைத்தையும் செய்கின்றன.

மனிதர்கள் மட்டும் தான் வயதானால் நோய்வரும், இயலாமை வரும் என்று நம்பி, அடுத்தவர்களை எதிர்பார்த்து வாழ ஆரம்பிக்கிறார்கள்.

*நன்கு ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்*

முதுமை என்று எதுவும் இல்லை.

நோய் என்று எதுவும் இல்லை.

இயலாமை என்று எதுவுமில்லை.

எல்லாம் உங்கள் மனதிலும், அதன் நம்பிக்கையிலும்  தான் இருக்கிறது.

சிந்தனையை மாற்றுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்.

நீங்கள் எதை நம்புகிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள்.
=============================================
2
*நான்... நான்... நான்...*

*நான்* சம்பாதித்தேன்,

*நான்* காப்பாற்றினேன்,

*நான்* தான் வீடு கட்டினேன்,

*நான்* தான் உதவி  செய்தேன்,

*நான்* உதவி  செய்யலனா? அவர்  என்ன ஆகுறது!!!!!

*நான்* பெரியவன்,

*நான்* தான்  வேலை  வாங்கி  கொடுத்தேன்,

*நான்  நான்  நான்  நான்*  என்று  மார்தட்டி  கொள்ளும் மனிதர்களே!!!

*நான்* தான்  என் இதயத்தை இயக்குகிறேன்  என்று  உங்களால் சொல்ல முடியுமா?

*நான்* தான்  என் மூளையை  இயக்குகிறேன் என்று  உங்களால் சொல்ல முடியுமா?

*நான்* தான்  என் இரண்டு  கிட்னியையும்  இயக்குகிறேன்  என்று  உங்களால்  சொல்ல முடியுமா?

*நான்* தான் என் வயிற்றில்  சாப்பிட்ட உணவில்  இருந்து சத்துக்களை  தனியாக  பிரித்து  இரத்தத்தில்  கலக்குகிறேன் என்று  உங்களால்  சொல்ல முடியுமா??

*நான்* தான்  பூக்களை  மலர  வைக்கிறேன்  என்று  உங்களால்  சொல்ல முடியுமா ?

*நான்* தான்  காய்களை பழமாக மாற்றுகிறேன் என்று  உங்களால் சொல்ல முடியுமா ?

*நான்* தான் கடலில்  மீன்  பிடிக்கிறவனுடைய வலையில்  மீனை சிக்க  வைக்கிறேன்  என்று  உங்களால்  சொல்ல முடியுமா?

இவைகள் அனைத்தையும்  எவன்  செய்கிறானோ இயக்குகிறானோ அவன் ஒருவனுக்கே *"நான்"* என்று  சொல்வதற்கு அதிகாரமும்  உரிமையும்  உண்டு..

ஆகையால் *நான்* என்ற அகந்தையை விட்டு அனைவரிடமும் *அன்பாக* இருங்கள்.  *உலகைப்பற்றிக்கவலைப்படாதே ஏனெனில் அது இறைவனுக்குரியது.*

*உணவைப்பற்றி கவலைப்படாதே !அது இறைவனிடமிருந்தே கிடைக்கிறது.*

*எதிர்காலம் குறித்தும் கவலைப்படாதே! அதுவும் இறைவனின் கரத்தில் தான் உள்ளது*

*தாய் தந்தைக்கு..நல்ல பிள்ளை யாக,கணவனுக்கு நல்ல மனைவியாக,மனைவி க்கு நல்லகணவனாக,பிள்ளைகளுக்கு நல்ல தந்தையாக,வியாபார த்தில் நேர்மையாக...இதையெல்லாம் சரியான முறையில் செய்து... நம்மை படைத்த இறைவனை... எப்படி திருப்திப்படுத்துவது என்பது பற்றி மட்டும் கவலைப்படு*
==================================================
வாழ்க வளமுடன்
அன்புடன்
வாத்தியார்
==============================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

13.9.17

குட்டிக்கதை: எதிலும் பாதிக்கப் படாமல் இருப்பது எப்படி?


குட்டிக்கதை: எதிலும் பாதிக்கப் படாமல் இருப்பது எப்படி?

மஹாராஸ்டிர மாநிலத்தில் ஏகநாதர் என்ற ஞானி வாழ்ந்து வந்தார். அவர் முகத்தில் எப்போதும் அமைதியும்,  புன்னகையும் தவழும். அவரை நீண்ட நாட்களாகக் கவனித்து வந்த ஒரு மனிதருக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் பல ஆன்மிகவாதிகளைப்  பார்த்திருக்கிறார். ஆனால் இந்த அளவு தொடர்ந்து அமைதியாக இருக்க முடிந்த ஆட்களைப் பார்த்ததில்லை. ஒரு முறை அமைதியாக இருக்க முடிந்த நபர்  இன்னொரு முறை அமைதியாக இருப்பதில்லை. இப்படி எதிலேயும் பாதிக்கப்படாமல் தொடர்ந்து அமைதியாக இருக்க முடிவது என்றால் அதில் ஏதோ ரகசியம் அல்லது சூட்சுமம் இருக்க வேண்டும் என்று நினைத்தார்.

ஒரு நாள் அதை அவர் ஏகநாதரிடம் சென்று கேட்டே விட்டார். “சுவாமி உங்களால் எப்படி  இப்படி அமைதியாக, எதிலும் பாதிக்கப்படாமல் இருக்க முடிகிறது? இப்படி முடிவதன் ரகசியம் என்ன?”

ஏகநாதர் அவரையே உற்றுப் பார்த்து விட்டு ”நீ உன்  கையைக் காட்டு” என்றார்.

அந்த மனிதரும் தன் கையை நீட்டினார்.

அவரது ரேகைகளை ஆராய்ந்த ஏகநாதர் “உனக்கு இன்னும் ஏழு நாட்கள் ஆயுள் தான்  பாக்கி இருக்கிறது”

அந்த மனிதருக்கு அதிர்ச்சி. ஏதோ கேட்க வந்து ஏதோ கேட்க நேர்ந்ததே என்று மனம் நொந்தார். ஏகநாதரின் அமைதியின் ரகசியம்  தெரிந்து கொள்ளும் ஆர்வத்தை விட அதிகமாய் சுயபச்சாதாபம் அவருக்குள் வந்தது. ஞானிகள் எக்காலத்தையும் அறிய வல்லவர்கள் என்பதால் அவருக்கு  ஏகநாதர் சொன்னதில் எந்த சந்தேகமும் இல்லை. அவசரமாக வீட்டுக்குச் சென்றார். மனைவி மக்களிடம் தகவலைச் சொன்னார். குடும்பம் அழுதது.  அவரும் வருத்ததில் ஆழ்ந்தார். ஆனால் அழுது புலம்பி எந்தப் பயனும் இல்லை என்பதை உணர்ந்த அந்த மனிதர் வருத்தத்தை எல்லாம் சீக்கிரமே மூட்டை  கட்டி வைத்து விட்டு சாவதற்குள்
செய்து முடிக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்ய ஆரம்பித்தார்.

ஏகநாதர் சரியாக ஒரு வாரம்  கழித்து அந்த மனிதரை அவர் வீட்டில் சந்தித்தார். அந்த மனிதர் மிகுந்த அமைதியுடன் இருந்தார். ”நான் செய்ய வேண்டியதை எல்லாம் செய்து விட்டு  மரணத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்.”

ஏகநாதர் சொன்னார். “நீ இப்போது எந்த மனநிலையில் இருக்கிறாயோ அதே மனநிலையில் நான் என்றும்  இருக்கிறேன் மகனே. மரணம் வரும், எல்லாம் முடிந்து போகும் என்ற உண்மையை உணர்வதால் கிடைக்கும் அமைதியே அலாதியானது. அதற்குப் பிறகு  எதுவும் பெரிய விஷயமாகத் தோன்றுவதில்லை. எதுவும் அதிகமாக பாதிப்பதில்லை. இதைச் சொன்னால் புரியாது, அனுபவத்தில் மட்டுமே உணர முடியும்  என்பதற்காகத் தான் நான் உன் கேள்விக்குப் பதிலாக உன்னிடம் ஏழுநாட்கள் மட்டுமே ஆயுள் பாக்கி உள்ளது என்றேன். உண்மையில் உனக்கு தீர்க்காயுள்  இருக்கிறது. நீ நீண்ட காலம் வாழ்வாய்” என்று சொல்லி விட்டு வாழ்த்தி விட்டு சென்றார்.

ஏகநாதர் சொன்னது உண்மையே. மரணம் என்னேரமும் வரலாம் என்று தத்துவம் பேசுகிறோமே ஒழிய, அந்த உண்மை நம் அறிவிற்கு எட்டுகிறதே ஒழிய, அது நம் ஆழ்மனதிற்கு எட்டுவதில்லை.

வாழ்ந்த காலத்தில் எப்படி  உயர்ந்தோமோ, எப்படி தாழ்ந்தோமோ அதெல்லாம் மரணத்தின் கணக்கில் இல்லை. மரணம் போன்ற சமத்துவவாதியை யாராலும் காண்பதரிது.  இருப்பவன்-இல்லாதவன், உயர்ந்தவன்-தாழ்ந்தவன், ஆள்பவன்-ஆண்டி
போன்ற பேதங்கள் எல்லாம் மரணத்திடம் இல்லை. எல்லோரையும் அது பேதமின்றி  அது கண்டிப்பாக அணுகுகிறது.

அது போல மரணத்தைப் போல மிகப் பெரிய நண்பனையும் காணமுடியாது. நம் தீராத பிரச்னைகள் எல்லாவற்றையும் ஒரே  கணத்தில் தீர்த்து விடுகிறது.

ஆதி அந்தம் இல்லாத கால விஸ்தீரணத்தில் நாம் வாழும் காலம் ஒரு புள்ளியளவும் இல்லை. நம் காலமே ஒரு புள்ளியளவும் இல்லை என்கிற போது அந்தக் காலத்தில் வாழும் உயிரினங்கள் அடையாளமென்ன, அந்த கோடானு கோடி உயிரினங்களில் ஒரு இனமான மனித  இனத்தின் அடையாளமென்ன, அந்த பலகோடி மனிதர்களில் ஒரு தனி மனிதனின் அடையாளம் என்ன?

இப்படி இருக்கையில் வெற்றி என்ன, தோல்வி  என்ன? சாதனை என்ன? வேதனை என்ன? எல்லாம் முடிந்து போய் மிஞ்சுவதென்ன? எதுவும் எத்தனை நாள் நீடிக்க முடியும்? இதில் சாதித்தோம் என்று  பெருமைப்பட என்ன இருக்கிறது? நினைத்ததெதுவும் நடக்கவில்லை என்று வேதனைப்பட என்ன இருக்கிறது? இதை வேதாந்தம், தத்துவம் என்று  பெயரிட்டு அலட்சியப்படுத்த வேண்டாம். இது பாடங்களிலேயே மிகப்பெரிய பாடம்.

வாழ்க்கையில் உங்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் பாத்திரத்தை சிறப்பாக  வாழுங்கள். செய்வதை எல்லாம் கச்சிதமாகச் செய்யுங்கள். ஆனால் அந்த பாத்திரமாகவே மாறி என்றைக்கும் நிரந்தரமாக இருப்பது போல பாவித்து  விடாதீர்கள். நீங்களே நிரந்தரமல்ல என்கிற போது உங்கள் பிரச்சினைகளும் நிரந்தரமல்ல அல்லவா? இருந்த சுவடே இல்லாமல் போகப்போகும்  வாழ்க்கையில் வருத்தத்திற்கு என்ன அர்த்தம் இருக்கிறது? வெறுப்பிற்கும், கோபத்திற்கும், பேராசைக்கும், சண்டைகளுக்கும் என்ன அர்த்தம் இருக்கிறது?

நாம் வழிப்போக்கர்கள். அவ்வளவே. வந்தது போலவே இங்கிருந்து ஒருநாள் சென்றும் விடுவோம். அதனால் இங்கு இருக்கும் வரை, முடிந்த வரை  எல்லாவற்றையும் முழு மனதோடு செய்யுங்கள்.

இது வரை சொன்ன பாடங்களைப் படித்துணர்ந்து சரியாகவும் முறையாகவும் வாழும் போது வாழ்க்கை  சுலபமாகும், நாமாக விரித்துக் கொண்ட வலைகளில் சிக்கித் தவிக்க நேராது. அது முடிகிறதோ, இல்லையோ அதற்குப் பின் வருவதில் பெரிதாக மன
அமைதியிழந்து விடாதீர்கள். ஏனென்றால் எல்லாம் ஒரு நாள் முடியும்!

படித்ததில் மனதைக் கவர்ந்த்து.
அன்புடன்
வாத்தியார்
========================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

12.9.17

144 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் வருமா? என்னய்யா சொல்கிறீகள்!!!!


144 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் வருமா? என்னய்யா சொல்கிறீகள்!!!!

காவேரி புஷ்கரம்
================

Pushkaram is an Indian festival dedicated to worshiping of rivers. It is also known as Pushkaralu (in Telugu), Pushkara or Pushkar. It is celebrated at shrines along the banks of 12 major sacred rivers in India, in the form of ancestor worship, spiritual discourses, devotional music and cultural programmes.

இந்தியாவில் புஷ்கரம் மிகப் பெரிய திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அதற்காக ஒரு புராண கதையும் கூறப்படுகிறது.

நவக்கிரகங்களில் ஒன்றாக குரு பகவான் பிரம்மனை நோக்கி கடும் தவம் செய்தான். அவனின் தவத்தை மெச்சிய பிரம்மன் தோன்றினான். குரு பகவானை நோக்கி "உனக்கு என்ன வேண்டும" என்று கேட்டார். அதற்கு பதிலளித்த குருபகவான்," எனக்கு தங்களுடைய புஷ்கரம் தான் வேண்டும்" என்று கேட்டார்.

குரு பகவானின் விருப்பப்படியே தன்னிடமுள்ள புஷ்கரத்தை அவருக்கு அளிக்க ஒப்புக் கொண்டார் பிரம்மன். ஆனால் புஷ்கரம் பிரம்மனை விட்டுப் பிரிந்து குருவிடம் செல்ல மறுத்தது. இதனால் தர்ம சங்கடமான பிரம்மன் புஷ்கரத்திற்கும் குரு பகவானுக்கும் இடையே ஒரு சமாதான உடன்படிக்கையை ஏற்படுத்தினார். அதன்படி மேஷ ராசி முதல் மீன ராசி வரை 12 ராசிகளிலும் அந்தந்த ராசிக்கு உகந்த புண்ணிய நதிகளில் புஷ்கரம் இருக்க முடிவு
செய்யப்பட்டது.

அதன்படி புஷ்கரம் மேஷம் ராசியில் (கங்கை நதியிலும்), ரிஷபம் ராசியில் (நர்மதை நதியிலும்), மிதுனம் ராசியில் (சரஸ்வதி நதியிலும்), கடகம் ராசியில் (யமுனை நதியிலும்), சிம்மம் ராசியில் (கோதாவரி நதியிலும்) கன்னி ராசியின் போது (கிருஷ்ணா நதியிலும்), துலாம் ராசியில் (காவேரி நதியில்) விருச்சிக ராசியில் (தாமிரபரணி ஆற்றிலும்), தனுசு ராசியின் போது (சிந்து நதியிலும்), மகரம் ராசியில் (துங்கபத்திரா ஆற்றிலும்), கும்பம் ராசியில்
(பிரம்ம நதியிலும்), மீனம் ராசியில் (பிரணீதா ஆற்றிலும்) என குருபகவான் எந்தெந்த ராசியில் பெயர்ச்சி செய்கிறாரோ அந்தந்த நேரத்தில் புஷ்கரம் அங்கு தங்கி இருக்கும். அப்போது பிரம்மா, விஷ்ணு, சிவன், இந்திரன் முதலான முப்பது முக்கோடி  தேவர்கள் எல்லாம் இந்நதியில் தங்கியிருப்பார்கள் என்று உடன்படிக்கை செய்யப்பட்டது.

மேற்படி 12 நதிகளில் குரு பகவான் பிரவேசிக்கும் நேரத்தில் 12 நாட்கள் தொடர்ந்து நீராடுவது இந்தியாவில் உள்ள அனைத்து புனித நதிகளிலும் நீராடுவதற்கு சமம் என்று கூறப்படுகிறது.

இம்முறை குரு பகவான் துலா ராசியில் வரும் செப்டம்பர் 12 அன்று  பிரவேசிப்பதால் காவேரி ஆற்றில் புஷ்கரம் கொண்டாடப்படுகிறது. மேலும் இம்முறை கொண்டாடப்படும் காவேரி புஸ்கரம் என்பது
144 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் காவேரி மகா புஷ்கரம் ஆகும்.... அதனால் வரும் செப்டம்பர் 12 அன்று தொடங்கி செப்டம்பர்  24 அன்று காவேரி ஆதி புஷ்காரமாகவும். செப்டம்பர் 25 அன்று தொடங்கி அக்டோபர் 7 வரை  அந்திம புஸ்கரமாகவும் கொண்டப்படுகிறது.

ஒரு மாங்கம் என்பது பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை. 12 மாமாங்களுக்கு - அதாவது 144 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் மகா புஷ்கரம் வருமாம். கணக்கு சரியாகத்தான் உள்ளது!!!!

 கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் மாநிலத்தில் காவேரி புஷ்கரம் நடைபெறும் படித்துறைகள் வருமாறு:
-----------------------------------------------------------
தலைக்காவேரி (Talakaveri) - (கர்நாடகா)
பாகமண்டலா ( Bhagamandala) - (கர்நாடகா)
குஷால் நகர் (Kushalnagar) - (கர்நாடகா)
ஸ்ரீரங்கப்பட்டினம் (Srirangapatna) - (கர்நாடகா)
கிருஷ்ணராஜ் சாகர் அணை (Krishna Raj Sagar Dam) - (கர்நாடகா)
மாண்டியா (Mandya) - (கர்நாடகா)
ஷிவனசமுத்திரா (Shivanasamudra) - (கர்நாடகா)
பன்னூர் (Bannur) - (கர்நாடகா)
திருமாக்குடல் நரசிபுரா (Tirumakudal Narasipura) - (கர்நாடகா)
தலக்காடு (Talakadu)
முடுகுத்தூர் (Mudukuthore) - (கர்நாடகா)
கனகபுர் (Kanakapur) - (கர்நாடகா)
மேட்டூர் (Mettur) - (தமிழ்நாடு)
பவானி (Bhavani) - (தமிழ்நாடு)
பள்ளிப்பாளையம்- ஈரோடு (Pallipalayam-Erode) - (தமிழ்நாடு)
கொடுமுடி (Kodumudi) - (தமிழ்நாடு)
பரமத்தி வேலூர் (Paramati Velur)- (தமிழ்நாடு)
ஸ்ரீரங்கம் -திருச்சிராப்பள்ளி (Srirangam Tiruchirappalli)- (தமிழ்நாடு)
திருவையாறு (Thiruvaiyaru)- (தமிழ்நாடு)
தஞ்சாவூர் (Thanjavur)- (தமிழ்நாடு)
சுவாமிமலை (Swamimalai) - (தமிழ்நாடு)
கும்பகோணம் (Kumbakonam)- (தமிழ்நாடு)
மயிலாடுதுறை (Mayavaram) - (தமிழ்நாடு)
பூம்புகார் (Poompuhar) - (தமிழ்நாடு)

மேலுள்ள ஏதாவது இடங்களில் அல்லது காவேரி நதி பிரயோகிக்கும் ஏதாவது ஒரு இடத்தில், காவேரி புஸ்கரம் நடைபெறும் இந்த புண்ணிய தினங்களில் (செப்டம்பர் 12 முதல் அக்டோபர் 7 வரை) புனித நீராடி எல்லாம் வல்ல இறைவனின் அருளைப் பெறுங்கள்!!!!

கேள்வி கேட்காமல் நம்பிக்கையோடு சென்று நீராடிவிட்டு வாருங்கள்!!!!

அன்புடன்
வாத்தியார்
======================================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

11.9.17

புற்று நோயா? பயம் வேண்டாம்: இதைப் படியுங்கள்!


புற்று நோயா? பயம் வேண்டாம்: இதைப் படியுங்கள்!

தயவு செய்து அழிக்க வேண்டாம் முடிந்த வரை Forward செய்யவும்

இரத்தப் புற்றுநோய்
மூளைப் புற்றுநோய்
மார்பகப் புற்றுநோய்
பெருங்குடல் புற்றுநோய்
கல்லீரல் புற்றுநோய்
நுரையீரல் புற்றுநோய்
புரோஸ்டேட் புற்றுநோய்
கருப்பை புற்றுநோய்

அன்பிற்குறிய நண்பர்களே
மேற்கூரிய பல புற்றுநோயிற்கான மருந்து கண்டுபிடிக்கப் பட்டுள்ளது இந்த செய்தியை Forward செய்யாமல் அழிக்க வேண்டாம் நான் இதை
அதிக பச்சமாக Forward  செய்துள்ளேன் அனைத்து மக்களையும் இச்செய்தி சென்ற அடைய வேண்டும் கர் கூமினோயிட்ஸ்" என்னும் மருந்து பலவித புற்றுநோயை குணப்படுத்தும் மருந்தாகும் இது பெங்களூரில் உள்ள புற்றுநோய் மூலிகை மருத்துவ மனையில் நியாயமான விலையில்
கிடைக்கும், அனைவருக்கும் விழிப்புணர்வு உருவாக்க வேண்டும் இதனால் இச்செய்தி யாருக்காவது உதவலாம் எனவே கருனை கூர்ந்து Forward செய்யவும்

கேன்சர் ஹெர்பலிஸ்ட்
பெங்களுர்
முகவரி - 6, டி வி ஜி சாலை காந்தி பஜார்
பசவன குடி
பெங்களுர் - 560004
லேன்ட் மார்க் - வித்யார்தா பவன் ஹோட்டல் அருகில்
தொலைபேசி - 080 - 412 18877
080 - 266011 27
8884588835
Cancer herbalist@mail.com
===============================================
அன்புடன்
வாத்தியார்

வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

8.9.17

Astrology: ஜோதிடம்: அமலா யோகம்!

Astrology: ஜோதிடம்: அமலா யோகம்!

யோகங்களைப் பற்றிய பாடம்!

கோவையில் இருந்து சென்னைக்குப் பயணிக்கிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். கோவையிலிருந்து சேலம் வரை ஒரு பேருந்திலும், பிறகு சேலத்திலிருந்து கள்ளக்குறிச்சிவரை ஒரு பேருந்திலும், பிறகு கள்ளக்குறிச்சியிலிருந்து விழுப்புரம்வரை ஒரு பேருந்திலும், பிறகு விழுப்புரத்திலிருந்து செங்கல்பட்டுவரை ஒரு பேருந்திலும், அதற்குப்பிறகு அங்கேயிருந்து சென்னைவரை வேறு ஒரு பேருந்திலும் பயணித்தால் பயணம் எப்படியிருக்கும்? அலுத்துவிடாதா?

முறையான பயணம் எப்படி இருக்க வேண்டும்? ஒரு நவீன குளிரூட்டப்பெற்ற வோல்வோ பேருந்தில், இரவு ஒன்பது மணிக்குக் கோவையில் ஏறி, காலை 6 மணிக்குச் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குச் சென்று இறங்கினால் பயணம் சுகமாக இருக்கும்.

அதைப்போல ஏகப்பட்ட நிபந்தனைகளுடன் உள்ள யோகங்களைவிட, சுருக்கமாக ஒரு வரியில் உள்ள யோகங்கள், ஜோதிடத்தைக் கற்றுக் கொண்டிருப்பவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

இன்று, உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதற்காக ஒரு வரி விளக்கத்துடன் உள்ள யோகம் ஒன்றைக் கொடுத்துள்ளேன்.

அந்த யோகம் இருப்பவர்களுக்கு, இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைக்கும்
---------------------------------------------------------------------
யோகத்தின் பெயர்: அமலா யோகம். அமலா எனும் வடமொழிச்சொல்லிற்கு சுத்தமானது (pure) என்று பொருள்.

யோகத்தின் அமைப்பு: லக்கினத்திலிருந்து பத்தாம் வீட்டில் சுபக்கிரகம் இருக்க வேண்டும். சந்திரராசிக்குப் பத்தாம் வீட்டில் சுபக்கிரகம் இருந்தாலும் இந்த யோகம் உண்டு

பலன்: ஜாதகனின் வாழ்க்கை வளமாக இருக்கும். ஜாதகன் பெயர், புகழுடன் இருப்பான். நிறைய பொருள் ஈட்டுவான். நல்ல ஆண் வாரிசுகளை உடையவனாக இருப்பான்.

அன்புடன்
வாத்தியார்
==========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!

7.9.17

இளையராஜா என்னும் மாமேதை!


இளையராஜா என்னும் மாமேதை!

இசைஞானி இளையராஜா பற்றிய சில சுவாரசிய தகவல்கள்...

1. இயற்பெயர் : டேனியல் ராசைய்யா (எ) ஞானதேசிகன்.

2. பிறந்த தேதி : 2.6.1943

3. தந்தை : டேனியல் ராமசாமி

4. தாய் : சின்னத்தாய்

5. சொந்த ஊர் : பண்ணைபுரம், தேனி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா

6. கல்வி : எட்டாம் வகுப்பு

7. மனைவி : ஜீவா ( சொந்த சகோதரியின் மகள் )

8. குழந்தைகள் : கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா, பவதாரணி

9. சகோதரர்கள் : பாவலர் வரதராஜன், டேனியல் பாஸ்கர், அமர் சிங் (கங்கை அமரன்)

10. இளையராஜாவின் தந்தை தேயிலை தோட்டத்தில் கங்காணியராக பணியாற்றியவர். அவருக்கு 25 ஏக்கர் பரப்பு உள்ள எஸ்டேட் சொந்தமாக இருந்தது

11. 1958-ல் திருச்சியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பாவலர் வரதராஜனின் உடல்நிலை சரியில்லாததால் அம்மா சின்னத்தாய், இளையராஜாவை வேண்டுமானால் அழைத்துக் கொண்டு போ, இடையிடையே  ஒரு பாடலை அவன் பாடினால் உனக்குக் கொஞ்சம் ஓய்வாக இருக்குமே என்று கூறியிருக்கிறார்.

*என் அன்னையின் திருவாக்கில்தான் என் கலை வாழ்க்கை ஆரம்பமானது. அன்று பொன் மலையிலும், திருவெரும்பூரிலும் நடந்த அந்த இசை நிகழ்ச்சிகளில் என் பாட்டுக்கு அவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்ததாக இளையராஜா அடிக்கடி நினைவு கூறுவார்.

12. ஹார்மோனியத்தை தலையில் சுமந்தபடி பாவலர் வரதராஜன் போன பாதையில் தென்னிந்தியாவின் பல்வேறு கிராமங்களுக்கு கால்நடையாகவும், மாட்டு வண்டிகளிலும், பயணம் செய்து வாசித்துப்பாடி மிக இளம் வயதிலேயே லட்சோப லட்சம் மக்களை சந்தித்து இசையின் நாடித்துடிப்பை அறிந்தவர்.

13. கம்யூனிஸ்ட் கட்சிப் பிராச்சார பாடகராக அண்ணன் பாவலர் வரதராஜனுடன் இளையராஜா தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களில் ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகளில் பாடியுள்ளார்.

*இன்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் இவர்களது பாடல்கள் கம்யூனிஸ்ட் கட்சி வளர்வதற்கு உதவியாய் இருந்ததை அன்போடு சொல்லிக் கொண்டிருக்கிரார்கள்.

14. ஆரம்ப காலங்களில் இளையராஜா பெண்குரலில் மட்டுமே பாடி வந்திருக்கிறார்.

15. வானுயுர்ந்த சோலையிலே நீ நடந்த பாதையெல்லாம் நானிருந்து வாடுகின்றேன் நா வறண்டு பாடுகின்றேன் என்று சொத்து பத்துக்களை நாடகம் போட்டு இழந்திருந்தாலும் லட்சியத்தை இழக்காத அண்ணனின் பாதையில் நடந்தது ஒரு பாடமாக மட்டுமில்லாமல் ஒரு தவமாக பரிணமித்திருக்கிறது என்று கூறியிருக்கிறார் இளையராஜா.

16. பாட்டு கேட்பதற்காக வாங்கியிருந்த ரேடியோவை விற்றுவிட்டு இளையராஜா தன் சகோதரர்கள் ஆர்.டி.பாஸ்கர், கங்கை அமரன் ஆகியோரோடு இசையமைப்பாளராக வேண்டும் என்று சென்னைக்கு ரயில் ஏறினார்.

17. மேற்கத்திய இசைக்கு இளையராஜாவின் குருநாதர் மாஸ்டர் தன்ராஜ்

18. வருமானம் குறைவாக இருந்த இளையராஜாவிடம் பணமே வாங்காமல் இசையின் அடிப்படை நுணுக்கங்களைக் கற்றுத் தந்தார் தன்ராஜ் மாஸ்டர்.

19. பியானோ கற்று கொள்வதற்காக சென்ற இளையராஜாவின் ஆர்வத்தைப் பார்த்து அதைக் கற்றுக்கொள், இதைக் கற்றுக்கொள் என்று கொஞ்சம் கொஞ்மாக எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்தார் தன்ராஜ் மாஸ்டர்.

20. வாரத்தின் இரண்டுநாள் இரண்டு மணிநேரம் பயிற்சி பெற்று வந்த இளையராஜா தினமும் அங்கேயே பயிற்சி பெறலானார்.

21. ஹார்மோனியம், கிட்டார், பியானோ, கீபோர்ட், புல்லாங்குழல் என்று பல்வேறு இசைக்கருவிகளை வாசிப்பதில் தேர்ந்தவர்.

22. க்ளாசிக்கல் கிட்டார் இசையில் லண்டன் ட்ரினிட்டி இசைக்கல்லூரியின் பாடத்திட்டத்தில் 8வது கிரேட் வரை முடித்து அதில் தங்கப்பதக்கம் பெற்றவர்.

23. திரைப்படத்துறைக்கு வருவதற்கு முன் மேடை நாடகங்களுக்கு இசையமைத்து வந்தார். அதாவது 1961 ஆம் ஆண்டில் தனது சகோதரர்களுடன் நாடகக்குழுவில் சேர்ந்து, இந்தியாவில் உள்ள பல இடங்களுக்கு சென்று சுமார் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட கச்சேரிகளிலும், நாடகங்களிலும் கலந்து கொண்டார்.

24. சகோதரர்கள் மூவரும் இணைந்து ”பாவலர் பிரதர்ஸ்” என்ற இசைக்குழுவும் நடத்தி வந்துள்ளார்கள்.

25. இசையமைப்பதற்கு இசையை முறையாக கற்க வேண்டும் என்பதால் தங்களிடம் இருந்த ஆம்ப்ளிஃபயரை அடகு வைத்து வெஸ்டர்ன் க்ளாசிக்கல் இசை பயின்றார் இளையராஜா. ஆனால் அந்த ஆம்ப்ளிஃபயரை திரும்ப மீட்டெடுக்க சென்றபொழுது அந்த இடத்தில் வேறொரு கடை இருந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பி வந்துவிட்டார்.

26. ஆரம்ப காலங்களில் தான் பணியாற்றும் இசையமைப்பாளர் தயாரிப்பாளருடனும், இயக்குனருடனும் உட்கார்ந்து மெட்டு அமைக்கும் போது மெட்டுக்களை நோட்ஸ் எடுக்கும் கம்போசிங் அசிஸ்டென்ட்டாக இளையராஜா பணியாற்றினார்.

27. 1970 களில் பகுதிநேர வாத்தியக்கலைஞராக இசையமைப்பாளர் ”சலீல் சௌத்ரி”யிடம் பணியில் சேர்ந்தார்.

28. சலீல் சௌத்ரிக்கு பின்னர், கன்னட இசையமைப்பாளரான ஜி. கே. வெங்கடேஷ் அவர்களின் உதவியாளராக சேர்ந்த அவர், அவரது இசைக்குழுவில் 200க்கும் மேற்பட்ட படங்களில் பணிபுரிந்தார்.

29.. முதல் படம் “அன்னக்கிளி” தயாரிப்பாளர் மற்றும் பாடலாசிரியர் பஞ்சு அருணாச்சலத்தால் 1976 ல் அறிமுகம் செய்யப்பட்டார்.

30. அன்னக்கிளி படத்திற்காக அவர் தேர்வானபொழுது சற்றே புருவம் உயர்த்திய  அனைவருக்கும் பதிலடி தர இயக்குனர் பஞ்சு அருணாசலம் அன்னக்கிளி படப்பாடல்களை இசையமைத்துக் காட்டு எனக்கூற, அங்கிருந்த திருமண மண்டபத்திலேயே அத்தனை பாடல்களுக்கும் இசையமைத்துத் தனது திறமையை நிரூபித்தார் இளையராஜா.

31. இசைக்கருவி இல்லாமல் தாளம் போட்டு வாய்ப்பு பெற்ற ராசையாவினை என்ன பெயரில் அறிமுகம் செய்யலாம் எனக்கேட்க ”பாவலர் பிரதர்ஸ்” என்றார் இசைஞானி.. இது சற்று பழையதாய் உள்ளது என்று யோசித்த இயக்குனர் பஞ்சு அருணாச்சலம் வைத்த பெயரே ”இளையராஜா”.

32. சினிமாவிற்கு பின் ராசையா இளையராஜா ஆனது அனைவரும் அறிந்தது. ஆனால் சினிமாவில் சேருவதற்கு முன் டேனியல் ராசைய்யா என்றே அழைக்கப்பட்டார்.

33. கதை கவிதை கட்டுரை எழுதுவதும் , பென்சில் ட்ராயிங் வரைவதும், தான் எடுத்த புகைப்படங்களை ப்ரேம் செய்து தன் வீட்டில் மாட்டுவதும் இளையராஜாவுக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்கு.

34. சிபாரிசு சுத்தமாக பிடிக்காது. ஆனால் ஒரே முறை சிபாரிசு கருதி நடிகர் சங்கிலிமுருகனுக்கு கால்ஷீட் தந்தார். சிபாரிசு செய்தவர் இளையராஜாவின் தாயார் சின்னத்தாய் அம்மாள்.

35. அன்னையின் மீது அவர் பாசம் அதிகம். சின்னத்தாய் அம்மாள் சென்னை வந்தால் ராசய்யாவின் வீட்டிலே தான் தங்குவார். காரணம் கேட்டதற்கு "ராஜா இன்னும் குழந்தையாவே இருக்கான். அவன் காலையிலேயே வேலைக்குப் போகும்போது நான் போய் டாட்டா காட்டணும். சாயங்காலம் அவன் வரும்போது நான் இங்க இருக்கனும்" என நெகிழ்ச்சியாய் சொன்னார்.

36. எத்தனை பட்டங்கள் பெற்றாலும் எத்தனை விருதுகள் பெற்றாலும் மேஸ்ட்ரோ, இசைஞானி என்று புனைப்பெயரிட்டு அழைத்தாலும் பண்ணைபுரத்துக்காரர் என்பதே எனக்கு பெருமை என்பார்.  

37. கொஞ்சம் பரபரப்பு குறைந்திருந்த தாய் வழிப்பாட்டு பாடல்கள் இளையராஜா காலத்தில் தான் புத்துயிர் பெற்றன.

38. கவிஞர் கண்ணதாசனால் திரையுலகத்தில் இசையமைக்கத் தொடங்கிய இளையராஜா தான் கண்ணதாசன் அவர்களின் கடைசி பாடலுக்கும் இசையமைத்தார்.

39. பண்ணைபுரத்தில் ஒரு இடம் வாங்கி அதில் அவர் சின்னத்தாய் அம்மாளின் இறப்பிற்கு பிறகு அங்கு ஒரு கோவில் எழுப்பினார். அங்கு அமர்ந்து தியானம் செய்வது அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்று.

40. பின்னணி இசை சேர்ப்பின்போது இளையராஜா காட்சியை ஒருமுறை பார்த்ததுமே, தாளில் இசைக் குறிப்புகளை எழுதிக் கொடுத்து உடனடியாகவே ஒலிப்பதிவுக்குச் சென்றுவிடுவார் என்பதை ஒரு ஐதீகக்கதைப்போல சொல்லிக் கொள்கிறார்கள்.

*வாத்தியத்தில் வாசித்துப்பார்ப்பதோ இசைவரிசையை காதால்கேட்டு சரிசெய்வதோ இல்லை. இசைக்குழு அந்த இசைக்குறிப்புகளை வாசிக்கும்போது அவை மிகக் கச்சிதமாக இணைந்து ஒரே இசையோட்டமாக சிறப்பாக வெளிப்படும்.

*ஒத்திசைவிலும் காலக்கணக்கிலும் அவை கச்சிதமாக இருக்கும். பின்னணி இசை எங்கே தொடங்க வேண்டுமோ அங்கே தொடங்கி அக்காட்சிக்கு இசை எங்கே முடியவேண்டுமோ அங்கே கச்சிதமாக முடிந்துவிடும்.

*சரிபார்த்துக் கொள்வதற்காக ஒருமுறைகூட அவர் வாத்தியங்களை தொட்டுப்பார்க்க வேண்டியதில்லை. அனைத்துமே அவரது மனதில் மிகச்சரியாக உருக்கொண்டிருக்கும்.

41.காட்சியை ஒருமுறை பார்க்கும் போதே மனதிற்குள் இசைவடிவத்தை யோசித்து, அடுத்த விநாடியே கைகளால் இசைக்குறிப்பை வாசித்துப் பார்க்காமல் எழுதி முடித்து, மற்றவர்களை வாசிக்கச் செய்வார்.

*மிகத்துல்லியமாக வரும் அந்த இசை பார்ப்போரை வியக்க வைப்பதோடு கற்பனாசக்தியின் உச்சம் என்று பிரமித்து அவரது நண்பர் இயக்குநர் பாரதிராஜா அடிக்கடி சொல்வார்.

42. பஞ்சமுகி என்ற கர்நாடக செவ்வியலிசை ராகத்தினை இளையராஜா உருவாக்கினார்.

43. ஆதி சங்கரர் எழுதிய “மீனாக்ஷி ஸ்தோத்திரம்” என்ற பக்திப்பாடலுக்கு இசையமைத்தார்.

44. 2010 ல் இந்திய அரசின் மிக உயரிய விருதான ‘பத்ம பூஷண்’ வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

45. 2012 ல்‘சங்கீத நாடக அகாடமி விருது’ வென்றார்

46. இளையராஜா, இந்திய அரசின் இசைக்கான தேசிய விருதினை ஐந்து முறை பெற்றுள்ளார்.

1985  - சாகர சங்கமம் (தெலுங்கு)
1987  - சிந்து பைரவி (தமிழ்)
1989  - ருத்ர வீணை (தெலுங்கு)
2009  - பழஸிராஜா (மலையாளம்)
2016 - தாரை தப்பட்டை (பின்னணி இசை) (தமிழ்)

47. லண்டன் ராயல் ஃபில் ஹார்மோனிக் ஆர்கெஸ்டிராவினைக் கொண்டு, அவர் ‘சிம்பொனி’ ஒன்றை இசையமைத்தார். அந்த ஆர்கெஸ்டிராவில் இசையமைப்பவர்களை “மேஸ்ட்ரோ” என்று அழைப்பர். அந்த சாதனையை முதலில் நிகழ்த்தியுள்ள ஆசியக் கலைஞர் இவரே.

48. மகாத்மா காந்திஜி எழுதிய கவிதையை  ‘ஆதித்ய பிர்லா’ நிறுவனத்தினர்  ‘இளையராஜா இசையில்’ பாடலாக்க திட்டமிட்டனர்.
*பண்டிட் பீம்ஸென் ஜோஷி, பண்டிட் அஜய் சக்ரவர்த்தி, பேகம் பர்வீன் சுல்தானா ஆகிய மேதைகளைப் பாட வைத்து அப்பாடலை உருவாக்கினார். இந்திய இசை மேதை  ‘நவ்ஷத்’ அப்பாடலை மிகவும் பாராட்டிப் பேசினார்.

49. கோவையில்தான் எனது ஹார்மோனியத்தை 85 ரூபாய்க்கு இங்குள்ள சுப்பையா ஆசாரியாரிடம் வாங்கினேன்.அந்த ஹார்மோனியம்தான் இன்றும் என்னிடம் உள்ளது என்று அடிக்கடி சொல்வார்.

50. கமல்ஹாசன் குரலில் இருக்கும்  ‘பிட்ச்’ அபூர்வமானது.ஒரே நாளில் இரண்டு பாடல் கம்போஸ் செய்து அவரை பாட வைத்துள்ளார் ஒன்று... ‘சிகப்பு ரோஜாக்களில்’ வரும் ‘நினைவோ ஒரு பறவை’மற்றொன்று...அவள் அப்படித்தான் படத்தில் வரும் ‘பன்னீர் புஷ்பங்களே...ராகம் பாடுங்கள்’ என்ற பாடல்.

51. நான் இசையமைப்பாளராக இருந்து எனக்கு போட்டியாளராக இளையராஜா இருந்திருந்தால்பொறாமையால் என்ன செய்திருப்பேன் என்று எனக்கே தெரியாது என கமல்ஹாசன் குமுதம் புத்தக வெளியீட்டு விழாவில் பேசினார்.

*அப்படி ஒரு திறமை படைத்தவர் இளையராஜா அவரைப் பார்க்கும் போதெல்லாம் அவர் திறமையின் உயரம் கண்டு பிரமிக்கிறேன் என்று பெருமை கொள்வார்.

52."How to name it" என்ற இசைத்தொகுப்பினை முதலில் வெளியிட்டார் இளையராஜா.

*இசை ரசிகர்களுக்கு ஒரு புதிய பரிமாணத்தை அறிமுகம் செய்த இந்த இசைத் தொகுப்பினை இசை
மும்மூர்த்திகளில் ஒருவரான ” தியாகராஜ சுவாமிகள்” மற்றும் மேற்கத்திய இசைமேதை ஜே.எஸ்.பாஹ் ஆகிய இருவருக்கும் காணிக்கையாக்கினார்.

53. "Nothing But Wind" என்ற இரண்டாம் இசைத்தொகுப்பினை புல்லாங்குழல் கலைஞர் ஹரி பிரசாத் சௌராஸியாவுடன் இணைந்து வெளியிட்டார்.

54. "ராஜாவின் ரமண மாலை" என்ற இசைத் தொகுப்பினை எழுதி, இசையமைத்து வெளியிட்டார். இது ரமண மகரிஷிக்கு காணிக்கை செலுத்துவதாக அமைந்துள்ளது.

55. மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்திற்கு, தெய்வீக அருளிசையுடன் கூடிய சிம்பொனி வடிவில் இசையமைத்து வெளியிட்டுள்ளார்.

56. 1994ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தினாலும், 1996ஆம் ஆண்டு மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தினாலும் டாக்டர் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டவர் இளையராஜா.

57. இளையராஜா புகைப்படக்கலையில் மிகத்திறமை படைத்தவர்,

58. பாரதிராஜா போன்ற நெருங்கிய இயக்குனர்களுக்கு புதிய ட்யூன்களைக்கொடுத்து இதற்கு காட்சியமைப்பை உருவாக்கினால் சிறப்பாக இருக்கும் என்று சொல்லி பல பாடல்களை ஹிட்டாகக் கொடுத்திருக்கிறார்.

59.  பாடலாசிரியர் வைரமுத்து இளையராஜாவைப் பற்றி பேசும் போது இசையின் காட்டாற்று வெள்ளம் என்று வர்ணிப்பார்.

60.அரசியல் தலைவர்கள் முதல் அன்றாடக் கூலிதொழிலாளி வரை சமுதாயத்தின் எல்லா மட்டத்திலும் அவரின் ரசிகர்கள் பரந்து விரிந்து கிடக்கிறார்கள்.

61. இந்தி எதிர்ப்பு போராட்டம் உச்சத்தில் இருந்த போது, அதனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டும் கூட தமிழகத்தில் ஹிந்தி பாடல்களின் ஆதிக்கம் மறையவில்லை. *ஹிந்தி பாடல்களை கேட்பதையும் பாடுவதையும் பெருமையாக நினைத்துக் கொண்டிருந்த காலத்தில் அந்த அலையை ஓய வைத்து தமிழ் பாடல்களை தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலத்தவரும் விரும்பிக் கேட்கும்படியான சாதனையை செய்தவர் இளையராஜா.

62. முதல் படம் இசையமைக்கும் போது இளையராஜாவின் வயது 33.

63. பெல்பாட்டம், விதவிதமான கலர் சட்டைகள், கருப்பு கண்னாடிகள் என்றெல்லாம் இருந்த இளையராஜா திரையுலகமே தன் பக்கம் திரும்பிய போது எளிமையான தோற்றத்திற்கு மாறிவிட்டார்.

64. இளையராஜாவின் இசைக்குறிப்புகள் இன்னும் சில ஆண்டுகளில் இசைக்கல்லூரிகளின் பாடப் புத்தகங்களில் இடம்பெறும் என்று பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் கூறியுள்ளார்.

65. ஒரே ஆண்டில் இளையராஜா 56 படங்களுக்கு பாடல்கள், பின்னணி இசை உட்பட இசையமைத்து சாதனை படைதுள்ளார்.

66. ஆழ்ந்த ஞானம், நேரம் தவறாமை, இசைமேல் கொண்ட பற்று, கடின உழைப்பு, கவனம் சிதறாமை என்று பல்வேறு உயர் எண்ணங்களால் பல கோடி இதயங்களைக் கவர்ந்துள்ளார்.

67. திரையிசையில் இதுவரை தன்னுடைய இசையமைப்பு மற்றும் பிற இசையமைப்பளர்களின் இசையிலும் சேர்த்து 450 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.

68. திரைப்படம் தவிர பல்வேறு ஆல்பங்களில் 100 பாடல்களுக்கு மேல் இசையமைத்துப் பாடியுள்ளார்.

69. இசைஞானி என்ற பட்டம் டாக்டர் கலைஞர் அவர்களால் வழங்கப்பட்டது.

70. உலகின் தலைசிறந்த 25 இசையமைப்பளர்களை வரிசைப்படுத்திய மிகப் புகழ்பெற்ற அமெரிக்க இணையதளம் இளையராஜாவுக்கு 9 வது இடம் அளித்துள்ளது.

*அதே இணையதளம் இளையராஜாவை முதல் இடத்திற்கும் அவரே என்று அறிவிக்கும் நாள் வெகு சமீபத்திலிருக்கிறது.

71. சில வருடங்களுக்கு முன் லண்டன் பிபிசி வானொலி நடத்திய கருத்துக்கணிப்பில் கடந்த 75 ஆண்டுகளில் மிகச்சிறந்த பாடலாக இளையராஜா இசையமைத்த ’தளபதி’ திரைப்படத்தின் “ராக்கம்மா கையத்தட்டு”ப் பாடலை மிக சிறந்த பாடலாக அறிவித்துள்ளது.

72. இளையராஜா எழுதிய புத்தகங்கள் :

1. சங்கீதக் கனவுகள் (ஐரோப்பா பயண குறிப்புகள்)
2. வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது (புதுக்கவிதைகள் தொகுப்பு)
3. வழித்துணை
4. துளி கடல்
5. ஞான கங்கா
6. பால் நிலாப்பாதை
7. உண்மைக்குத் திரை ஏது?
8.யாருக்கு யார் எழுதுவது?
9. என் நரம்பு வீணை
10. நாத வெளியினிலே (வெட்ட வெளிதனில் கொட்டிக் கிடக்குது, சங்கீதக் கனவுகள், வழித்துணை,
இளையராஜாவின் சிந்தனைகள், துளி கடல் ஆகிய புத்தகங்களின் தொகுப்பு)
11. பள்ளி எழுச்சி பாவைப் பாடல்கள்
12. இளையராஜாவின் சிந்தனைகள்.

73. 1000 படங்களைத்தாண்டி தன் இசைப்பயணத்தை தொடரும் பெருமைக்குரிய இந்திய இசையமைப்பாளராக உலகை வலம் வரும் இமாலய மனிதர் ”இசைஞானி இளையராஜா.

படித்ததில் பிடித்தது
அன்புடன்
வாத்தியார்
========================================
வாழ்க வளமுடன்! வளர்க நலமுடன்!