மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

29.2.12

Astrology முருகப்பெருமானைத் தன் பிள்ளையாக்கிக் கொண்ட பெருமாட்டி!



Astrology முருகப்பெருமானைத் தன் பிள்ளையாக்கிக் கொண்ட பெருமாட்டி!

ஒரு காலத்தில தென்காசிக்கு அருகில் உள்ள திருமலைக் கோவில் என்னும் திருக்கோவிலில் ஒரு வேல் மட்டும்தான் இருந்ததாம்.. பூவன்பட்டர் என்ற பெயரை உடைய அர்ச்சகர் ஒருவர் அவ்வேலுக்கு நித்திய பூஜை செய்து வந்தாராம். ஒரு நாள் முருகப்பெருமான் அவருடைய கனவில் வந்து, "இந்த மலை எனக்குச் சொந்தமானது. நான் அருகில் உள்ள கோட்டைத் திரடு என்னும் கிராமத்தில் சிலை வடிவிலலுள்ளேன். எறும்புகள் சாரை சாரையாக செல்லும் ஒரு குழியைத் தோண்டினால் நான் கிடைப்பேன். அதை எடுத்து வந்து இந்த மலையில் பிரதிஷ்டை செய்து வழிபடுவாயாக" என்று உத்தரவிட்டாராம்.

அந்தப் பகுதியில் அப்போது இருந்த சிற்றரசனுக்குத் தகவலைச் சொல்லிவிட்டு, பூவன் பட்டர் முருகன் சிலையை எடுத்து வந்து பிரதிஷ்டை செய்தாராம்.

பிற்காலத்தில், பந்தளத்தை ஆண்ட ராஜாக்கள். கேரள எல்லையில் உள்ள திருமலைக் கோயிலையும் புதுப்பித்துக் கட்டினர்களாம். இக்கோவிலில் 623 படிகள் உள்ளன. அவை அனைத்தும், கந்த கோட்டப் பித்ருக்கள் உறையும் தேவ படிக்கட்டுக்கள் என்கிறார்கள். ஆகவே முன்னோருக்கு இங்கே சென்று தர்ப்பணம் செய்தால் நமது சந்ததி தழைக்கும் என்பது காலம் காலமாக நிலவி வரும் நம்பிக்கை. ஆகவே நம்பிக்கைகளைக் கேள்வி கேட்காமல் செய்தியை மட்டும் உள்வாங்கிக் கொள்ளுங்கள்.

இக்கோயிலின் அர்ச்சகர் பூவன்பட்டர், கோட்டைத்திரடு சென்று முருகப்பெருமான் சுட்டிக்காட்டிய இடத்தைத் தோண்டிப் பார்த்த போது, முருகன் சிலையில் மூக்கில் கடப்பாரை பட்டு, சிறு துளி உடைந்து விட்டது. அந்த உடைசலுக்குப் பிறகுகூட பார்ப்பதற்குச் சிலை அழகாக இருந்தது. கிராமத்து மக்கள் இதைப் பார்த்து முருகன் என்பதற்குப் பதிலாக மூக்கன் என்ற செல்லப்பெயரை சுவாமிக்கு வைத்து விட்டார்களாம். நெல்லை மாவட்ட கிராமங்களில் குழந்தைகளுக்கு மூக்கன், மூக்காயி, மூக்கம்மாள் என்ற பெயர்கள் சூட்டப்படுவது இன்றும் வழக்கத்தில் உள்ளது. அது திருமலை முருகனின் பெயர். மேலும், சிலருக்கு குழந்தை பிறந்து, தொடர்ந்து இறந்து கொண்டே இருந்தால் மூக்கு குத்தி, மூக்கன் என பெயரிடுவதாக வேண்டிக் கொண்டால் அந்தக் குழந்தை பிழைத்துக் கொள்ளும் என்பது நீண்டகால நம்பிக்கை. ஆண் குழந்தைகளும் பதினைந்து வயது வரைகூட மூக்கு குத்தியிருப்பதை இப்பகுதியில் நீங்கள் பார்க்க முடியும்.

பிரபல ஐயப்ப ஸ்தலங்களான ஆரியங்காவு, அச்சன் கோவில், குளத்துப்புழை ஆகியவைகள் இப்பகுதியில்தான் உள்ளன.

சிவகாமி பரதேசி என்ற அம்மையார் இங்கு மண்டபம் எழுப்ப கற்களை கீழிருந்தே வாழைமட்டையில் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றி அதை மலையில் இழுத்துக் கொண்டே சென்று சேர்த்தார் என்பது சிறப்புச் செய்தி!

இக்கோயிலில் திருப்பணி நடந்த காலத்தில், கல்தூண்களையும், உத்தரங்களையும் மலையின் மீது இழுத்து செல்ல யானைகள் பயன்படுத்த பட்டனவாம். கனமான பெரிய கயிறுகள் கிடைக்காத அக்காலத்தில், பனைநார் கயிறுகள் மூலம் உத்தரங்கள் மேலே இழுக்கப்பட்டனவாம். சில நேரங்களில் கட்டு அவிழ்ந்து தூண்கள் கீழே விழுவதுண்டாம். தூண்கள் பயங்கர வேகத்துடன் கீழ்நோக்கி உருண்டு வரும்போது, அப்பகுதியில் வசித்த துறவியான சிவகாமி அம்மையார் என்பவர் தன் உயிரையும் பொருட் படுத்தாது முருகா எனக்கூறிக்கொண்டு தன் தலையைக் கொடுத்து உருண்டு வரும் தூணைத் தடுத்து நிறுத்துவாராம்.  மறுபடியும் அந்த தூண்கள் மேலே இழுக்கப்படும்வரை தன் தலையால் தாங்கியபடி இருப்பாராம். அப்படி அற்புத சாதனைகளை நிகழ்த்தும் சக்தியை முருகப்பெருமான் அவருக்கு அருளியிருந்தார் என்பார்கள். மேலும், வாழைமட்டைகளில் கற்களை ஏற்றிக்கொண்டு, மலை உச்சிக்கு இழுத்துச் சென்று கொடுத்துத் திருப்பணிக்கு உதவியுள்ளார். அவருக்கு அக்கோவிலில் சிலை இருக்கிறது.

சிவகாமி அம்மையார், இக்கோவில் இருக்கும் பண்பொழி கிராமத்திற்கு அருகில் உள்ள அச்சன்புதூரில் வசித்து வந்தாராம். அவரது கணவரின் பெயர்
கங்கைமுத்து தேவர் அத் தம்பதியருக்குக் குழந்தை இல்லை. திருமலை முருகனை வணங்கி, குழந்தை வரம் வேண்டினார் சிவகாமி அம்மையார். கோயிலில் கல் மண்டபம் ஒன்றை அமைக்கவும் அவர் முடிவு செய்தார். அதற்கான கற்களை அடிவாரத்தில் இருந்து வாழை மட்டையில் ஏற்றி, மேலே இழுத்துச் செல்வார். அப்படிப்பட்ட வைராக்கியமான பக்தி அவருடையது.

அவ்வளவு சேவை செய்தும் அவருக்கு பிள்ளை பாக்கியம் கிடைக்கவில்லை. தான் கட்டிய கல்மண்டபத்தில் வந்து தங்கிய ஒரு மகானிடம் தன் குறையைத் தெரிவித்தார். அந்த மகான் அவரிடம், இந்த திருமலை முருகனையே உன் குழந்தையாக ஏற்றுக்கொள், என்றதும், அதை ஏற்றுக் கொண்டு, கோவிலுக்கு தன் சொத்துக்களை எழுதி வைத்தாராம்.

 மேலும், புளியரை என்ற கிராமத்தில் முருகனுக்கு சொந்தமாக இருந்த சொத்துக்களை அனுபவித்து வந்த சிலர் மீது, திருவனந்தபுரம நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, கல்வெட்டு ஆதாரங்களைக் காட்டி அவற்றை மீட்டு தன் பிள்ளையான முருகனுக்கே சேர்த்தாராம் அந்த கல்வெட்டின் நகல்படிவம் இப்போதும் உள்ளது. இந்த அம்மையார் முருகனுக்கே தொண்டு செய்து துறவு பூண்டதால் சிவகாமி பரதேசி அம்மையார் என்று அழைக்கப்பெற்றார்.
------------------------------------------------
நட்சத்திரக் கோவில்கள் - பகுதி 14
விசாக நட்சத்திரம். நட்சத்திர வரிசையில் 16ஆவ்து நட்சத்திரம்
வி என்றால் மேலான என்றும், சாகம் என்றால் ஜோதி என்றும் பொருள்படும். 
அருள்மிகு திருமலைக் கோவில்
விசாக நட்சத்திரக்காரர்களுக்கான கோவில்
-----------------------------
அருள்மிகு திருமலைக்குமாரசுவாமி திருக்கோயில்,
பண்பொழி கிராமம் - 627 807,
செங்கோட்டை தாலுகா,
திருநெல்வேலி மாவட்டம்.
கோவிலின் நடை திறந்திருக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 1 மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரை
திருவிழாக்கள்:  சித்திரை முதல் தேதி படித்திருவிழா, வைகாசி விசாகம், கந்தசஷ்டி, கார்த்திகையில் தெப்பம், தைப்பூசம்.
இறைவனின் பெயர்: முத்துக்குமாரசுவாமி
ஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட கோவில்
செங்கோட்டையில் இருந்து 7 கிலோமீட்டர் தூரத்திலும், தென்காசியில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்திலும் இத்திருத்தலம் உள்ளது.
 
விசாகம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு உள்ள ஜாதக தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்யலாம். கேட்பதைக் கொடுப்பார் முருகப்
பெருமான். அந்த நம்பிக்கையோடு சென்று வழிபடுங்கள்

அன்புடன்,
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

27.2.12

Astrology வாணிக்குக் கை கொடுத்த வாணியம்பாடி!




Astrology வாணிக்குக் கை கொடுத்த வாணியம்பாடி!

சென்னையில் இருந்து சேலம் செல்லும் ரயில் வழித்தடத்தில், ஜோலார் பேட்டைக்கு முன்னதாக இருக்கும் ஊர் வாணியம்பாடி. சென்னையில் இருந்து அந்த ஊரின் தூரம் சுமார் 200 கிலோமீட்டர்கள். அங்கிருந்து ஜோலார் பேட்டை சுமார் 15 கிலோமீட்டர் தூரம். ரம்மியமான ஊர். பாலாறு ஓடிக்கொண்டிருக்கிறது.

அருகில் ஏலகிரி மற்றும் ஜவ்வாது மலைகள் உள்ளன. கடல் மட்டத்தில் இருந்து 1,200 அடிகள் உயரத்தில் உள்ள ஊர். தோல் பதனிடுதல், மற்றும் தோலால் செய்யப்படும் ஆடைகள், கையுறைகள் போன்ற பொருட்களால் அறியப்படும் ஊர்.

பலருக்கும் தெரிந்த ஊர்தான். ஆனாலும் அந்த ஊரின் பெயர்க் காரணம் ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும்!

உங்களுக்குத் தெரியுமா?

வாருங்கள், இன்று அதைத் தெரிந்து கொள்வோம்!
------------------------------------------
நட்சத்திரக் கோவில்கள் - பகுதி 13
புனர்பூச நட்சத்திரம்
நட்சத்திர வரிசையில் ஏழாவது நட்சத்திரம். குரு பகவானுக்கு உரிய நட்சத்திரம். ஸ்ரீராமர் அவதரித்த நட்சத்திரம் இது.
அருள்மிகு அதிதீஸ்வரர் திருக்கோயில், வாணியம்பாடி,
----------------------------------
த்ற்பெருமை பேசலாமா? அதுவும் படைக்கும் தொழிலைக் கொண்ட பிரம்மா பேசலாமா? அவருக்குப் போதாத நேரம், பேசினார். யாருடன் பேசினார்? தன்
அன்பு மனைவி சரஸ்வதி தேவியாரிடம் பேசினார்.

"மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதைப்போல, மக்கள், பிரம்மா, விஷ்ணு, சிவன் எனறு எனது பெயரைத்தான் முதலில் கூறுவார்கள்.ஏனென்றால்
உயிர்களைப் படைக்கும் நான்தான் அவர்கள் இருவரையும் விடப் பெரியவன்"

அதைக்கேட்டு கலைமகள் சிரித்து விட்டார். அது அவருக்குப் போதாத நேரம்.

கோபம் கொண்ட பிரம்மா, தன் மனைவியை சபித்து, பேசும் சக்தியற்றவளாகி விட்டார்.

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பவளுக்கு, வீணை செய்யும் ஒலியில் இருப்பவளுக்கு, பேசும் சக்தியில்லை என்றால் என்ன ஆகும்? கொடுமையல்லவா?

வருத்தமடைந்த சரஸ்வதி, அவரைப் பிரிந்து பூலோகத்திற்கு வந்துவிட்டார். வந்தவர் சிருங்கேரியில் யாரும் அறியாத இடத்தில் இருந்து தவம் செய்யத் துவங்கி விட்டார்.

சரஸ்வதி தேவியார் தவமிருந்த சிருங்கேரியின் தற்போதைய தோற்றம்
சிருங்கேரி, கர்நாடக் மாநிலத்தில் சிக்மகளூர் மாவட்டத்தில் உள்ள மலை வாசக ஸ்தலம். துங்கபத்ரா நதி ஓடிக்கொண்டிருக்கும் ரம்மியமான இடம்.
பிற்காலத்தில் ஆதி சங்கரர் அந்த ஸ்தலத்தில் 12 ஆண்டுகள் தங்கி தன் சீடர்களுக்குப் போதனைகள் செய்த இடம்.

தேவியைப் பிரிந்த பிரம்மா, பல சிரமங்களுக்கிடையே தேடி கடைசியில் சிருங்கேரியில் அவரைக் கண்டுபிடித்தார். சமாதானம் செய்து தன்னுடன் அழைத்துச் சென்றார். அப்படிச் செல்கையில், வழியில், பாலாற்றின் வடகரையில் அமைந்துள்ள சிவாலயத்தில் ஒரு நாள் தங்கினார். அதனால் மகிழ்ந்த சிவபெருமானும், பார்வதியும் சரஸ்வதிக்கு அருள்செய்து, மீண்டும் பேசும் சக்தியைக் கொடுத்ததுடன், அவரைப் பாடும்படி கேட்டுக்கொண்டனர். வாணியும் பேசும் சக்தி பெற்று தன் இனிய குரலில் பாடினார். (கலை) வாணி பாடிய தலம் என்பதால், அந்த இடம் வாணியம்பாடி ஆனது. 
-----------------------------------------------------------------------------
இறைவனாரின் பெயர்: அதிதீஸ்வரர்
அம்பிகை: பெரியநாயகி,
தல விருட்சம் : வில்வ மரம்
தீர்த்தம் : சிவதீர்த்தம்
ஆயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட கோவில்
புராணப் பெயர் : வாணியம்மைபாடி 
தற்போதையப் பெயர்: வாணியம்பாடி
மாவட்டம் : வேலூர்
திருவிழாக்கள்: சித்திரை பிரமோற்சவம், மகா சிவராத்திரி, திருவாதிரை
கோவிலின் நடை திறந்திருக்கும் நேரம்:
காலை 6.30 மணி முதல் 10.30 மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை .

முகவரி:
அருள்மிகு அதிதீஸ்வரர்
வாணியம்பாடி,
வேலூர் மாவட்டம்.

புனர்பூசம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்யலாம். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும்,
திக்குவாய், ஊமைத்தன்மை நீங்கவும் மக்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.

ஒருமுறை சென்று வாருங்கள். வந்தபிறகு பலனைச் சொல்லுங்கள்.

அன்புடன்
வாத்தியார்  
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++=

வாழ்க வளமுடன்!

25.2.12

நாட்டின் பெருமையைச் சொல்லும் நாட்டிய அஞ்சலி!

மாணவர் மலர்

இன்றைய மாணவர் மலரை 10 பேர்களின் ஆக்கக்ங்கள் அலங்கரிக்கின்றன. அப்படியே கொடுத்துள்ளேன். படித்து மகிழுங்கள்

அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------------------------------
1


நாட்டின் பெருமையைச் சொல்லும் நாட்டிய அஞ்சலி!

திருவையாற்றில் நடைபெற்ற நாட்டியாஞ்சலி விழா பற்றிய சிறப்புக் கண்ணோட்டம்!
தொகுத்து வழங்கியவர்: ஐயாறப்பர் நாட்டியாஞ்சலி குழுவின் தலைவர் வெ.கோபாலன் அவர்கள், தஞ்சாவூர்

கடந்த இரண்டு மாதங்களாக திருவையாறு ஐயாறப்பர் நாட்டியாஞ்சலிக்கான ஏற்பாடுகளை செய்து வந்தோம். சுமார் ஐம்பது குழுக்கள் இந்த ஆண்டு
நாட்டியாஞ்சலியில் பங்குகொள்ள விருப்பம் தெரிவித்திருந்தனர். மூன்று நாட்கள் நடக்கும் இந்த விழாவுக்காக முதல் நாளான 19-2-2012 க்கு 11 குழுக்களும், இரண்டாம் நாள் 14 குழுக்களும், நிறைவு நாளுக்கு 13 குழுக்களும் தேர்வு செய்யப்பட்டு வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

ஐயாறப்பர் நாட்டியாஞ்சலி குழுவுக்கு மதிப்பியல் தலைவராக திருக்கயிலாய பரம்பரை திருத்தருமையாதீனம் திருவையாறு கட்டளை விசாரணை, மெளன மடம் முனைவர் குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள் இருக்கிறார். கெளரவ ஆலோசகராக பரிசுத்தம் பொறியியல் கல்லூரி நிறுவனர், பரிசுத்தம் ஓட்டல் அதிபர், வழக்கறிஞர் திரு எஸ்.பி.அந்தோணிசாமி இருக்கிறார். தஞ்சை வெ.கோபாலன் விழா குழுவின் தலைவராகவும், வழக்கறிஞர் நா.பிரேமசாயி, இரா.மோகன் ஆகியோர் துணைத் தலைவர்களாகவும், திரு தங்க. கலியமூர்த்தி செயலாளராகவும், திரு தி.ச.சந்திரசேகரன் பொருளாளராகவும், சின்னமனூர் சகோதரிகள் அ.சித்ரா, அ.சுஜாதா ஆகியோர் நாட்டியம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்குச் செயலாளர்களாகவும் இருந்து விழாவை நடத்துகின்றனர்.

முன்னாள் அமைச்சர் திரு சி.நா.மி.உபையதுல்லா, இந்து பத்திரிகை சிறப்பு நிருபர் திரு கோ.ஸ்ரீநிவாசன், திரைப்பட நட்சத்திரம் ஸ்வர்ணமால்யா உள்ளிட்டோர் அறங்காவலர்கள். திரு டி.கே.ரவி, திரு புனல் வை.சிவசங்கரன், எம்.ஆர்.பி. காஸ் சர்வீஸ் அதிபர் காருகுடி இராமகிருஷ்ணன், பிளாக் டியுலிப் அதிபர், எல்.ஐ.சி. திரு கே.முத்துராமகிருஷ்ணன், திரு டி.கே.குருநாதன், பாரதி இயக்கத் தலைவர் நீ.சீனிவாசன், தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி முதல்வர்
ப.உமாமகேஸ்வரி, இசைக்கல்லூரி ரோட்டராக்ட் சங்க உறுப்பினர்கள், தஞ்சை ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபர் திரு பாண்டுரங்கன் உள்ளிட்ட பலர் விழா குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, சிட்டி யூனியன் வங்கி, பரிசுத்தம் ஓட்டல், பிளாக் டியுலிப், டெக்கான் மூர்த்தி அவர்கள், எடப்பாடி சுப்பிரமணியம் அவர்கள்
போன்றவர்கள் விழாவுக்கு போஷகர்களாக இருக்கின்றனர். விழாவில் பங்குபெற வேண்டிய கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து அழைப்பிதழ் வெளியிடும் வேலை முடிந்து விழா நாளும் நெருங்கி வந்தது.

19-2-2012 ஞாயிறு அன்று பிரதோஷம். அன்று மாலை ஐயாறப்பர் ஆலயத்தில் நந்திக்குச் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து விழா
தொடங்கியது. முனைவர் குமாரசுவாமி தம்பிரான் அவர்கள் ஆடல்வல்லான் விக்கிரகத்துக்கு மாலை அணிவித்து விளக்கேற்றி விழாவைத் தொடங்கி
வைத்தார்.

19-2-2012 கோலாகல துவக்கம்

ஆண்டுதோறும் மகாசிவராத்திரியை முன்னிட்டு திருவையாறு ஐயாறப்பர் ஆலயத்தில் நடைபெறும் மூன்று நாட்கள் ஐயாறப்பர் நாட்டியாஞ்சலி விழா நேற்று மாலை சரியாக 6.05 மணிக்கு கோலாகலமாகத் தொடங்கியது. திருத்தருமையாதீனம் திருவையாறு கட்டளை தம்பிரான் முனைவர் குமாரசுவாமி தம்பிரான் துவக்கி வைத்தார். தஞ்சை தொழிலதிபர் எஸ்.பி.அந்தோணிசாமி, தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி முதல்வர் திருமதி ப.உமாமகேஸ்வரி, முன்னாள் முதல்வர் முனைவர் இராம. கெளசல்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருவையாறு இசைக் கல்லூரி மாணவர்களின் மங்கள இசையுடன் தொடங்கிய விழாவில் தொடர்ந்து ஆடல்வல்லான் நாட்டியக் குழுவினர் க.வஜ்ரவேலுவின் தலைமையிலும், திருச்சி சகோதரிகள் ஜெயசுஜிதாவின் மோகினி ஆட்டமும், பண்ருட்டி கலைச்சோலை டி.சுரேஷ் குழுவினரின் பரதம், சின்னமனூர் அ.சுஜாதா ரமேஷ், விஜய் கார்த்திகேயன் குழுவினரின் நாதலய நடனம், மும்பை தானே நிருத்யாஞ்சலி கலைக் குழுமத்தின் இயக்குனர் லதா ராஜேஷ் குழுவினரின் பரதம், சென்னை முகப்பேர் இரா.காசிராமன் குழுவினர், நாகை சிவாலயா நாட்டியப் பள்ளி ராஜமீனாட்சி குழுவினர், தஞ்சை ஓம்சக்தி நடனப் பள்ளி பரமேஸ்வரி குழுவினர், நாமக்கல் நிருத்திய நடேச கலாலயா ஜெயப்பிரகாஷ் நாராயணன் குழுவினர் ஆகியோரின் பரத நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மோஹினி ஆட்டம் மக்கள் அதிகமாகப் பார்த்திருக்க மாட்டார்கள். கேரள பாணி உடையணிந்து திருச்சி ஜெயசுஜிதா சகோதரிகள் மிகச் சிறப்பாக ஆடி
கூடியிருந்த வர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். வழக்கம் போல் சின்னமனூர் சுஜாதாவும் அவரது சகோதரர் விஜய் கார்த்திகேயனும் மிகச் சிறப்பாக
உருவாக்கிய இளம் கலைஞர்கள் சுறுசுறுப்பாகவும் அழகாகவும் ஆடி மக்கள் மனங்களைக் கவர்ந்தனர். மும்பை தாணேயிலிருந்து வந்திருந்த திருமதி லதா ராஜேஷ் குழுவினர் இந்தப் பகுதிக்கு முதன் முறையாக வருகை புரிந்தார்கள். அவர்களது சிறப்பான நடனத்தை மக்கள் மிகவும் ரசித்துப் பார்த்துப் பாராட்டினர்.

திருத்தருமையாதீனத்துக்குட்பட்ட ஆலயங்களில் இன்று மகாசிவராத்திரி என்பதால் பொதுமக்கள் கூட்டம் திரளாக இருந்து நிகழ்ச்சிகளை ரசித்தனர்.
ஸ்ரீ தியாகபிரம்ம ஆராதனைக் கமிட்டியின் இணைச் செயலாளர் வழக்கறிஞர் கணேசன், எம்.ஆர்.பஞ்சநதம், காருகுடி இராமகிருஷ்ணன் ஆகியோர்
கலைஞர்களுக்குப் பாராட்டு தெரிவித்து நினைவுப் பரிசுகளை வழங்கினர்.

வேம்பட்டி ரவிஷங்கர் குழுவினரின் குச்சிப்புடி நடனம்

'நாட்டியாஞ்சலி' விழாவின் இரண்டாவது நாள் நிகழ்ச்சிகள் மகா சிவராத்திரி தினமான 20-2-2012 திங்களன்று மிகச் சிறப்பாக நடைபெற்றன. இரண்டாம்
நாள் விழாவிற்கு திருவையாறு இசைக் கல்லூரி முதல்வர் ப.உமாமகேஸ்வரி தலைமை ஏற்றார். இசைக் கல்லூரி மாணவியரின் பரதநாட்டிய நிகழ்ச்சியுடன்
தொடங்கி தொடர்ந்து சென்னை வைஷ்ணவி கார்த்திகேயனின் நடனம், சென்னை சிறுமி பாலபிரியா, கும்பகோணம் ஸ்ரீ அபிநயாஸ் கலைக்குழுமம்
எஸ்.விஜயமாலதி குழுவினர், நெல்லை இன்னிசை நாட்டியமணி இந்திரா கிருஷ்ணமூர்த்தி, பெங்களூர் விஸ்வபாரதி நாட்டியசாலா அனுபமா ஜெயசிம்மா குழுவினர், சென்னை வேம்பட்டி ரவிஷங்கரின் மாணவியர் குச்சிப்புடி நடனம், சிதம்பரம் திரு அகிலனின் தகதிமிதா குழுவினர், குடந்தை ஸ்ரீ சிவசக்தி கவிதா விஜயகுமார், அவருடைய மாணவி அபிராமி ஜெயராமன், ஆர்.திவ்யா ஆகியோர் நடனமாடினர். சென்னை தமிழிசைச் சங்க இசை நாட்டியக் கல்லூரி முதல்வர் முனைவர் சுமதி சுந்தரின் மாணவியர் ஆகியோர் பங்கு பெற்றனர்.

இவ்வாண்டின் சிறப்பம்சமாக பெங்களூரிலிருந்து புகழ்பெற்ற நடனக் குழுவினர் அனுபமா ஜெயசிம்மா தலைமையில் வந்து சிறப்பாக நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். இன்றைய நிகழ்வுகளின் சிறப்பம்சமாக சென்னை வேம்பட்டி ரவிஷங்கர் குழுவினர் நடத்திய குச்சிப்புடி நடனம் பெரிதும் பாராட்டப்பட்டது. இந்தக் குழுவில் அனுபவமிக்க குச்சிப்புடி கலைஞர்கள் பங்குகொண்டு மக்களை மகிழ்வித்தனர்.

நாட்டியாஞ்சலி நிறைவு

மூன்றாம் நாள் விழா செவ்வாய்க்கிழமை நிறைவு பெற்றது. விழாவுக்கு முன்னாள் அமைச்சர் சீ.நா.மீ. உபையதுல்லா அவர்கள் தலைமை வகித்தார். முதல் நிகழ்ச்சியாக தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் கலந்துகொண்டு வீணையிசை நடந்தது. இதில் இருபத்தைந்து பேர் ஒருங்கிணைந்து வீணை வாசித்தனர். அதனைத் தொடர்ந்து கும்பகோணம் ஸ்ரீமதி நாட்டியாலயாவின் ஸ்ரீதரி குழுவினரின் பரதநாட்டிய நிகழ்ச்சியும், தொடர்ந்து குடந்தை ஆடல்வல்லான் நாட்டியாலயாவின் ஜென்சி லாரன்ஸ் மாணவியர் நடனமும் நடந்தது.

கரூர் ஆடல்வல்லான் நாட்டியாலயா மாணவியர் குரு ம.சுகந்தபிரியாவின் தலைமையில் நாட்டிய நாடகம் நடத்தினர். பராசக்தியின் பெருமைகளை விளக்கும் அந்த நாட்டிய நாடகம் மக்களின் அமோக ஆதரவைப் பெற்றது. திருவையாறு நாட்டியாஞ்சலியின் சார்பில் சுகந்தப்பிரியாவின் நாட்டியப் பணியைப் பாராட்டி பாராட்டு இதழை முன்னாள் அமைச்சர் சீ.நா.மீ.உபையதுல்லா வழங்கினார்.

சிதம்பரம் சிவசக்தி இசை நாடனப் பள்ளியின் குரு வி.என்.கனகாம்புஜம் அவர்களின் மாணவிகளின் பரதம் தொடர்ந்து நடைபெற்றது. மாயூரம் பழைய கூடலூர் டாக்டர் ஜி.எஸ்.கல்யாணசுந்தரம் மெட்.பள்ளி மாணவியரின் பரதம் குரு வி.எஸ்.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து சென்னை அக்ஷயா ஆர்ட்ஸ் மாணவியர் பினேஷ் மகாதேவன் தலைமையில் நிகழ்ச்சியை நடத்தினர். அமெரிக்காவிலிருந்து வந்திருந்த டாக்டர் காயத்ரி வைத்யநாதனின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. அதையடுத்து சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ கிருஷ்ண நாட்டியாலயாவின் மாணவியர் குரு கலா ஸ்ரீநிவாசன் தலைமையில் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். அதில் கிராமியக் கலைகளான கரகம், காவடி, மயிலாட்டம், பாம்பு நடனம் ஆகியவை மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது.

தொடர்ந்து குடந்தை நாட்டியக் கலாலயம் நடனப் பள்ளியின் கீதா அஷோக் மாணவியரின் பரதநாட்டியமும், தஞ்சை சக்தி நாட்டிய கலாலயம் மாணவியர் குரு அருணா சுப்பிரமணியம் தலைமையில் நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தினர். ஆஸ்திரேலியா சிட்னியிலிருந்து வந்திருந்த தமயந்தி பால்ராஜு குழுவினரின் பரத நாட்டியம் பரவசமூட்டுவதாக இருந்தது. நிறைவு நிகழ்ச்சியாக மும்பை காட்கோபரிலிருந்து வந்திருந்த பத்மினி ராதாகிருஷ்ணன் குழுவினரின் நாட்டியம் நடைபெற்றது. வேத மந்திரம், அர்த்தநாரீஸ்வரர், தில்லானா ஆகியவை மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது.

விழாவின் நிறைவில் ஐயாறப்பர் நாட்டியாஞ்சலி குழுவின் தலைவர் வெ.கோபாலன், விழாவில் பங்குகொண்ட நடனக் கலைஞர்களுக்கும், விழா சிறப்புற நடக்க ஒத்துழைத்த நிறுவனங்கள், இசைக்கல்லூரி ரோட்டராக்ட் சங்கத்துக்கும், கோயில் நிர்வாகத்துக்கும் நன்றி தெரிவித்தார். செயலர் தங்க கலியமூர்த்தி, தி.ச.சந்திரசேகரன், ப.இராஜராஜன், நா.பிரேமசாயி, இரா.மோகன், நீ.சீனிவாசன், முனைவர் இராம கெளசல்யா, பேராசிரியர் ப.உமாமகேஸ்வரி, டி.கே.ரவி, புனல் வை.சிவசங்கரன் ஆகியோர் விழாவின் வெற்றிக்கு இடைவிடாமல் உழைத்து வந்ததற்குப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. "வாழிய செந்தமிழ் வாழிய நற்றமிழர்" எனும் பாரதி பாடலை மும்பை திருமதி பத்மினி இராதாகிருஷ்ணன் பாடி விழாவை நிறைவு செய்தார்.

செய்தியைத் தொகுத்து வழங்கியவர்: ஐயாறப்பர் நாட்டியாஞ்சலி குழுவின் தலைவர் வெ.கோபாலன் அவர்கள், தஞ்சாவூர்
----------------------------------------------------------
இடைச் சேர்க்கை: திரு.வெ.கோபாலன் அவர்கள் அனுப்பிய புகைப்படங்கள் (மொத்தம் 12) உங்கள் பார்வைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளன. படங்கள் மற்றும் கட்டுரை குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்க்ள்






























+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2




குட்டிக் கதைகளுடன் கெட்டிப் பழமொழிகள்
ஆக்கம்: கே.முத்துராம கிருஷ்ணன், லால்குடி

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்'என்று சின்னம்மா பெங்களூர் கோர்ட்டில் ஒரு பழமொழியைச் சொல்லி இருக்கிறார்கள். வந்தது பாருங்கள் நீதிபதிக்குக் கோவம். 'நீதிமன்றத்தில் பழமொழியெல்லாம் சொல்லக்கூடாது. கேட்கும் கேள்விகளுக்கு நேரடியான பதில்தான் சொல்லணும்' என்று கண்டித்துள்ளார்.

நமது வகுப்பறையில் அப்படிப்பட்ட எந்த கண்டிப்பும் இலாததால் துணிந்து இந்த வாரமும் பழமொழிகள் பற்றி சிறிது சொல்கிறேன். ஏற்கனவே இரண்டுமுறை பழமொழிகள் பற்றி எழுதியுள்ளேன். சோதிடம் தவிர மேலதிகத் தகவல்கள் விரும்புவோர் ஒரு சிலராவது படித்திருக்காலாம் என்ற நம்பிக்கைதான், மீண்டும் எழுதத் தூண்டுகோலாக உள்ளது.

கதைகளைச் சொல்லி சில ப‌ழமொழிகளின் பயன்பாட்டை விளக்குகிறேன்.

ஒரு குரு இருந்தார்.குருகுலக் கல்வி முறை இருந்த காலம்.அவரிடம் அறிவுள்ள சில சீடர்களும், சுமாராகப் புரிதல் உள்ள சில சீடர்களும், சில
அறிவு சூன்யங்களும் சீடர்களாக இருந்தனர்.(முதல்,இடை,கடை)

ஒரு நாள் வகுப்பறையில் குரு,"எல்லா உயிர்களிலும் நாராயணனே உயிராக உள்ளார். மிருகங்களும் நாராயண வடிவமே. தாவரங்களும் அவ்வாறே.
தண்ணீரும் நாராயணனே!" என்றெல்லாம் பாடம் நடத்தினார்.

பாடம் முடிந்தவுடன் மாணவர்கள் குருகுலத் தேவைகளுக்கான பொருட்களைச் சேகரிக்க காட்டுக்குப் போனார்கள். சிலர் சுள்ளி பொறுக்கினர். சிலர் கிழங்கு முதலிய சாப்பிடும் தகுதியுள்ள பொருட்களைச் சேகரித்தனர்.

அப்போது ஒரு குரல் கேட்டது. அக்குரல் யானையின் மீது அமர்ந்து இருந்த பாகனின் குரல்."விலகுங்கள் விலகுங்கள் . யானைக்கு மதம் பிடித்துள்ள்து.வழியில் நிற்காதீர்கள்" என்று பாகன் எச்சரித்துக்கொண்டே வந்தான்.யானையும் தூரத்தில், ஒற்றையடிப் பாதையில் வேகமாக, ஆக்ரோஷமாக ஓடி வந்து கொண்டிருந்தது.

சீடர்களில் ஒருவனுக்கு குரு கூறியதில் "எல்லாவற்றிலும் இறைவனே இருக்கிறார் என்றால், யானையாகிய இறைவன் எனக்கு ஒரு தீங்கும் விளைவிக்க மாட்டார் அல்லவா? என‌வே அந்த யானை நாராயணனை வழிபட்டே வழிக்குக் கொண்டு வருகிறேன்" என்று கூறிக் கொண்டே கூப்பிய கைகளுடன் யானை வரும் வழியில் நின்று கைகூப்பிக் கொண்டு " ஓம் நமோ நாராயணாயா" என்று ஜபிக்கத் துவங்கினான்.

அருகில் வந்த மத யானை அந்த சீடனை துதிக்கையால் வ‌ளைத்துத் தூக்கிக்கடாசிவிட்டு விரைந்தது. படுகாயங்களுடன் ஆசிரமத்திற்கு தூக்கிவரப்பட்டான்.

குருவைப் பார்த்த‌வுடன்,"ஏன் யானை நாராயணன் என்னை இப்படி வதைத்தார்?" என்று கேட்டு அழுதான்.

அதற்கு குரு," அந்த நாராயணனே பாகனிலும் நாராயணனாக இருந்து விலகச் சொன்னாரே?! நீ பாகன் நாராயணன் சொன்னதைக் கேட்டு இருந்தால்
இந்த கதி வந்திருக்குமா?" என்றார்.

இது ஸ்ரீ ராமகிருஷ்ணரின் குட்டிக் கதை.

பழமொழி: "பாய்கிற மாட்டுக்கு முன்னே வேதம் சொன்னாற் போலே"
(கதையில் யானை, பழமொழியில் ஜல்லிக்கட்டு காளை ஆகிவிட்டது.)
===========================================================
திருதராஷ்டிரன் மனைவி காந்தாரி. அவளும் குந்திதேவியும் ஓர்படியாள்கள்.(ஓர்+படி, அதாவது ஒரே படித்தரம், சம உரிமை) அல்லது ஓரகத்திகள், அதாவது

ஓர் +அகம், ஒரே இல்லத்தை,குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

குந்திதேவி கருவுற்று இருக்கிறாள் என்று கேட்டதும் அதுவரை கருத்தரிக்காத காந்தாரி உலக்கையை எடுத்து தன் அடிவயிற்றில் அடித்துக்கொண்டாளாம்.

அவளே அறியாமல் அப்போது அவள் கருவுற்று இருந்தாள். அவள் கருவறையில் இருந்த பிண்டம் 100 ஆகச் சிதறியதாம் அவர்கள் தான் 100 பிள்ளைகளாக க‌வுரவர்களாகப் பிறந்து வளர்ந்தனராம்.

பழமொழி:"அண்டைவீட்டுக்காரி பிள்ளை பெற்றாள் என்று அசல் வீட்டுக்காரி
இடித்துக் கொண்டதுபோல"

"ஓர்ப்படியா பிள்ளைப்பெற்றாள் என்று ஒக்க‌ப்பிள்ளை பெறமுடியுமோ?"
 ==================================================
"திண்டுக்கல் சாரதி" என்று கருணாஸ் நடித்த ஒரு படம்.கருப்பாக உள்ளவன் நல்ல அழகான சிவப்புப் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு சந்தேகத்தால் அந்தப்பெண்ணைப் பாடாய்ப் படுத்துவான்.கோலம் போடும் போதுமற்றவர்கள் பார்த்துவிடக்கூடாது என்று வேட்டியால் மறைத்து ஆட்டம் போடுவார் பாருங்கள்

கருணாஸ், வசனம் ஏதும் இன்றியே நகைப்புக்கிடமாகும் அக்காட்சி.

பழமொழி: "மூக்கறையனுக்கு வாழ்க்கைப்பட்டால் முன்னயும் போகவிடமாட்டான், பின்னயும் போக விட மாட்டான்"   (மூக்கறையன்  என்பது சப்பை மூக்கன் என்று பொருள்படும்; பொதுவாக அழகற்றவன்)
==================================================
ஒரு ஊரில் ஒரு மாமா ஒரு மாமியிருந்தார்கள்.அந்த சமயத்திற்கு அந்த ஊரில் இருந்தார்களே தவிர அவர்கள் குணம் காரணமாக‌ அவர்களால் எந்த ஊரிலும்  நிரந்தரமாக இருக்க முடியவில்லை.அப்படி என்ன குணம்? மாமிக்கு எப்போதும் யாரிடமாவது சண்டையிட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.அதனால் அவர்கள் எப்போதும் வீடு, ஊரை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்.

இப்போது இருக்கும் தெருவிலும் எல்லோருடனும் வம்பு வளர்த்து விட்டார்கள்.எல்லோருமே பேசாமல் ஒதுங்கிவிட்டார்கள்.சண்டை போட யாருமே இல்லைஎன்று

ஆனவுடன் ஊரைக் காலி செய்துவிட்டு மாமா,மாமி கிளம்பினார்கள்.மாமா கட்டுச் சோற்று மூட்டையைத் தலையில் வைத்துக் கொண்டார்.மாமி தட்டுமுட்டு சாமான்களைத் தன் இடுப்பில் வைத்துக் கொண்டு தெருமுனைக்கு வந்துவிட்டார்கள்.

அப்போது அந்த ஊரின் போறாத காலமோ என்னவோ, கடைசி வீட்டுக்கார பாட்டியம்மா வாசல் திண்ணையில் அமர்ந்தவாறு,"அப்பாடி சண்டைக்காரி ஒருவழியா  கிளம்பிட்டாடி அம்மா "என்றாள்.மாமியின் காதில் இது விழுந்ததோ இல்லையோ,"சண்டை வந்தது பிராமணா, சோற்று மூட்டையைக்கீழ வையும்" என்று மூட்டையைக் கீழே வைத்து விட்டு பிலு பிலு என்று ஒரு பாட்டம் சண்டை போட்டுவிட்டுத்தான் போனாளாம்.

பழமொழி:"அஞ்சு ஊர் சண்டை சிம்மாளம் அங்கலம் அரிசி ஒரு காவாளம்"

இந்தக்கதை போதுமா?இன்னும்கொஞ்சம் வேணுமா?

வாழ்க வளமுடன்!!
ஆக்கியோன்:கே முத்துராமகிருஷ்ணன்(லால்குடி)
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

3


வம்ச விருத்திக்கு எது முக்கியம்?
கட்டுரையாக்கம்: பார்வதி இராமச்சந்திரன், பெங்க‌ளூரு

அன்பார்ந்த நண்பர்களே,

சமீபத்தில் என்னை மிகவும் பாதித்த ஒரு நிகழ்வையே இங்கு எழுதுகிறேன்.

சில நாட்களுக்கு முன்பு, அருகாமையில் உள்ள ஒரு வீட்டில், குடும்பத் தலைவர் இறைவனடி சேர்ந்தார். வாரிசு இல்லாத அவர்,தன் உடன் பிறந்தவர் மகனை எடுத்து வளர்த்து, நன்கு படிக்கவைத்து, ஆளாக்கினார் .பையன், தற்போது வெளிநாட்டில். செய்தி அறிந்ததும் அவன் ஓடி வந்து கொண்டிருந்தான்.
       
இங்கே பையனின் 'ஒரிஜினல்' தாயார், வளர்ப்புத் தாயிடம் கடும் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்.கணவனை இழந்த வளர்ப்புத் தாயோ மிகுந்த மனத்துயருக்கு ஆளாகி,கண்ணீர் வடித்த வண்ணம் இருந்தார். விஷயம் இதுதான். தன் மகன், வெளிநாட்டில் வசிப்பதால்,அவனை இனிமேல் அடிக்கடி அழைத்து தொல்லை தரக் கூடாதெனவும்,மற்ற மாதந்திர, ஆறாம் மாதச் சடங்குகளை எல்லாம் தன் மகனை செய்யக் கட்டாயப்படுத்தக் கூடா தெனவும் 'ஒரிஜினல்' தாயார் சொல்ல,(கொள்ளி மட்டும் வைக்கலாமாம். இல்லையின்னா சொத்து கிடைக்காதுல்ல)

வளர்ப்புத்தாயோ,'இதை எல்லாம் செய்யாததுனால நாளைக்கு வீடு வாசல தர மாட்டோம்னா சும்மாவிடுவீங்களா?' என,பெற்றவள் 'ஓஹோ, அப்படி ஒரு நினைப்பு இருக்குதா?, அப்ப, இப்பவே என் மகன் பேருக்கு எல்லா சொத்தையும் எழுதித் தரேன்னு வந்திருக்கிற சொந்த பந்தத்துக்கு முன்னாடி சொல்லுங்க, இல்லேன்னா என் மகன் கொள்ளி போட மாட்டான்' எனக் கூச்சலிட,சத்தமும் சண்டையுமாக அரங்கேறின காட்சிகள். வந்த உறவுக்கூட்டமோ வேடிக்கை பார்க்க, வளர்த்தவளின் உறவுகள்,'இப்பவே சொத்தக் குடுத்தா,நாளைக்கு நீ பிச்சை தான் எடுக்கணும்.இப்பவே இப்படிப் பேசுறவ,நாளைக்கு உனக்கு ஒண்ணுன்னா, அவன் வந்து பார்க்க விடுவாளா?.சொத்தை வாங்கின கையோட, உன்னை ஒரு முதியோர் இல்லத்துல சேர்க்கச் சொல்லுவா பாரேன்' என்று 'ஏற்றி'விட, மேடையில்லா நாடகம் ஒன்று அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தது.
   
பணம் பாசத்தை விலைக்கு வாங்கி உலையில் போட்டு பொங்கித் தின்று கொண்டிருந்த அந்த இடத்தில் நிற்கப் பிடிக்காமல் நான் விரைந்து வீடு வந்தேன்.

குளித்து விட்டு,கொதிக்கும் மனதை அமைதிப்படுத்த, தியானம் செய்ய உட்கார்ந்தேன். ஏனோ,எனக்கு என் தாத்தா சொன்ன, எங்கள் குடும்பத்தில் நடந்த நிகழ்வு ஒன்று நினைவிற்கு வந்தது.
       
இந்த நிகழ்வில் வரும் பெயர்கள்,சம்பவங்கள் யாவும் உண்மையே. இதை,என் தாத்தா சொன்னபடி தொகுத்துக் கொடுத்திருக்கிறேன். இந்த நிகழ்வு கி.பி.1890 களில் துவங்குகிறது.

நாட்டரசன் கோட்டை எனும் ஊர், சிவகங்கை அருகே உள்ளது.அங்கே கிருஷ்ண தீக்ஷிதர் என்ற‌ புகழ் பெற்ற ஜோசியர் ஒருவர் இருந்தார். அவருடைய கடைசி மகள் பெயர் பூரணி. பெயருக்கேற்றார் போல் அழகும் அறிவும் பூரணமாக நிரம்பியவள்.ஆனால் தலையெழுத்து?. குழந்தையின் ஜாதகம் பார்த்த தந்தை மனம் உருகினார்.அவர் பாவம், என்ன செய்வார்? 'வகுத்தான் வகுத்த வகையில்'எல்லாம் நடக்கும் என திடம் கொண்டார். இறைவன் மேல் பாரத்தைப் போட்டு, குழந்தைக்கு மணம் செய்து வைத்தார். ஆனால் விதி வலியது. அவருடைய செல்ல மகள் மிகச்சிறு வயதிலேயே, வாழ்விழந்தாள்

பூரணியின் கணவன் வீட்டார்,'கன்னிகாதானம் ஆகி விட்டதால் அவள் எங்கள் வீட்டுப் பெண்,ஆகவே அவள் இங்கேயே இருக்கலாம்' எனக் கூறியும் கேட்காமல், தந்தை அவளைப் பிறந்தகம் அழைத்து வந்தார்.சில  வருடங்கள் கழிந்தபின், மதுரை,திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தலைமை அர்ச்சகராகத் தொண்டுபுரிந்து வந்த தீக்ஷிதரின் மூத்த மகனின் மனைவி,முருகனடி சேர்ந்தார்.  மறு மணத்திற்கு மறுத்துவிட்ட, ஐந்து குழந்தைகளுக்குத் தந்தையான அவர்,தன் தங்கையை தனக்கு உதவியாக தன்னோடு அனுப்புமாறு தந்தையை வேண்டினார். தீக்ஷிதரும் சம்மதித்தார்.

இதற்கிடையில்,வறுமையில் வாடிய தீக்ஷிதரின் மற்றொரு பெண்ணின் குழந்தைகளை,தீக்ஷிதரின் மகன்கள் ஆளுக்கொருவராக பொறுப்பெடுத்து வளர்த்துக்கொடுப்பது என முடிவாயிற்று.அதன்படி,மூத்த மகனின் பொறுப்பில் வந்த குழந்தையை,பூரணி தன் சொந்த மகனே போல் வளர்த்து வந்தாள். மூத்த மகனின் வீட்டில் சகலமும் பூரணியின் பொறுப்பில் நடந்தது. அவர் குழந்தைகளுக்கு அத்தை ஒரு சொல் சொல்லிவிட்டால் அதுதான் வேதவாக்கு.

பூரணியின் கணவன் வீட்டாரும் பூரணியை அடிக்கடி வந்து பார்த்து நலம் விசாரித்து வந்தனர். குறிப்பாக, பூரணியின் கொழுந்தனாரும் அவர் மனைவியும் மதுரைக்கு வரும் போதெல்லாம், பூரணியை வந்து பார்க்கத் தவறுவதில்லை.

காலம் உருண்டோடியது.கால காலன், தன்னடியில் பூரணியைச் சேர்த்துக் கொண்டான். அவருக்கு யார் இறுதிச் சடங்குகள் செய்வதென்பதில் பிரச்னை ஏற்பட்டது.ஆனால் இது வேறுமாதிரியான பிரச்னை.'அத்தை எங்களைத் தாய்போல் வளர்த்தார். அவர் எங்களுக்காகவே வாழ்ந்தார்.ஆகவே நாங்கள்தான் செய்வோம் ' என்று பூரணியின் அண்ணன் மகன்கள் வாதிட,பூரணியின் சகோதரி மகனோ, 'நான் தான் அபிமான புத்திரன் [முறைப்படி ஒரு குழந்தையைத் தத்து எடுக்காமல் வளர்த்தால் அக்குழந்தை வளர்த்தவரின் அபிமான புத்திரன்],ஆகவே எனக்குத்தான் உரிமை' என்று அடம் பிடித்தான். அத்தையின் கொழுந்தனாரோ,'எங்கள் அண்ணன் சிறு வயதில் மாண்டு போனதால் அவர் உங்கள் வீட்டுக்கு வந்தார். இல்லையென்றால் எங்களுடன் தான் இருந்திருப்பார். திருமணத்திற்குப் பிறகு எங்கள் வீட்டுப் பெண்ணாகி விட்ட அவருக்கு நாங்கள் செய்வதுதான் முறை' என்றார்.

இத்தனைக்கும் இதில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும், அத்தை உள்பட ,டாடா,பிர்லா இல்லை. அத்தையில் பெயரில்,மதுரை பண்டாபீசில், அவள் தமையன்,தனக்குப் பின் தங்கைக்கு உதவும் என்று போட்டுவைத்திருந்த சொற்பத் தொகையும் ஓரிரண்டு பவுன் சங்கிலியுமே (அந்தக் காலத்தில் தங்கம் என்ன விலை?) அத்தையின் சொத்து.

கடைசியில் முடிவு என்ன ஆயிற்று?.அத்தையின்அபிமான புத்திரனுக்குத் திருமணமாகி சில ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை. அக்கால வழக்கப்படி மறுமணம் செய்ய முடிவு எடுக்கப்பட்டிருந்த நிலை அப்போது. ஆகவே அவர் கர்மம் செய்தால்,அத்தையின் ஆசீர்வாதத்தில் குழந்தை பாக்கியம் கிட்டும்,ஒரு பெண்ணின் வாழ்வை மனதில் வைத்து மற்றவர்கள் இதற்குச் சம்மதிக்க வேண்டும் என்று வயதில் மூத்த உறவினர் ஒருவர் எடுத்துக்கூற,அனைவரும் ஏற்றுக் கொண்டனர். அவர் கூற்றுப்படியே, மறுவருடமே அத்தையின் அபிமான புத்திரனுக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது.

இதை கூறிவிட்டு எங்கள் தாத்தா கூறிய 'மாரல்ஸ் ஆஃப் தி ஸ்டோரி'.

1. வம்ச விருத்திக்கு முன்னோர்களுக்கு நீத்தார் கடன்களை விடாமல் செய்வது முக்கியம்.

2. ஆதரவில்லாதவர்கள் இறந்தால் அவர்களுக்கு,இறுதிக் காரியங்கள் செய்வது,அச்வமேத யாகப் பலன் தரும். யாரும் செய்ய முன்வராவிட்டால், பிரஜைகளின் தந்தை என்ற முறையில்,ராஜாவே செய்ய வேண்டும் என்பது சாஸ்திரம் (இக்கால 'ராஜா' க்கள் ஒரு இனத்துக்கே செஞ்சிருவாங்க).

3.பணத்துக்காக இக்காரியங்கள் செய்யப்பட்டால்,இறந்தவரின் ஏழு தலைமுறைப் பாவம்,கர்மம் செய்தவரைச் சேரும்.

4.தர்ம சிந்தனையுடன், இம்மாதிரி காரியங்கள் நடைபெற பண உதவி செய்வது,சிவலோகப் பிராப்தியைப் பெற்றுத்தரும்.

இந்த விஷயங்களை யார் இந்தக்கால குழந்தைகளுக்கு சொல்வார்கள்?.இதை சொல்லவேண்டிய ஆட்களில் கொஞ்சம்,ஓல்ட் ஏஜ் ஹோமிலும்,கொஞ்சம் வீட்டு டி.வி,முன்னாலும் பழிகிடக்க,கேட்க வேண்டிய குழந்தைகள் 'க்ரச்'ல் உறங்குகின்றன. மீதிப்பேர் சொல்ல ரெடி. யார் கேட்கிறார்கள்?.

ஒரு நீண்ட நெடிய பெருமூச்சு ஒன்றுதான் என்னிடமிருந்து வெளிப்பட்டது.

ஆ, சொல்ல மறந்துட்டேனே. எங்க தாத்தவும் இதில ஒரு சின்ன காரெக்டர் (மெயின் அல்ல). இன்னமும் பூரணியின் அபிமான புத்திரன் உயிரோடு இருக்கிறார். தள்ளாத வயதிலும் தன் சின்னம்மாவிற்கு திதி கொடுத்துக்கொண்டிருக்கிறார்.

கட்டுரையாக்கம்: அன்புடன், பார்வதி இராமச்சந்திரன், பெங்க‌ளூரு
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

4



வரைபடம்
வரைந்தவர்: தேமொழி

இந்த ஓவியத்தை தன் மகள் பிறந்த பொழுது வந்த வாழ்த்து அட்டை ஒன்றினைப் பார்த்து வரைந்ததாகக் கூறுகின்றார்.
------------------------------------------------------------


காணொளி சுட்டி:


shampoo-word-origin-india-s-many-contributions-to-the-english-language
http://news.yahoo.com/who-knew/shampoo-word-origin-india-s-many-contributions-to-the-english-language-28213249.html

இந்தக் காணொளியை அனுப்பியவரும் தேமொழி அவர்கள்தான்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

5


சிறுகதை: வாழும் இதயங்கள்
ஆக்கம்: ஸ்ரீஷோபனா

அழகான லண்டண் மாநகரில் அந்திப்பொழுது அப்பொழுது தான் சாய ஆரம்பித்திருந்தாலும் வானம் பார்ப்பதற்கு என்னவோ சாமத்தை நெருங்கி விட்டதைப் போன்று இருள் சூழ துவங்கியிருந்தது. அன்று பனிப்பொழிவு சற்று குறைவு தான் என்றாலும் குளிர் வதைப்பதில் பின்வாங்குவதாகயில்லை. அக்குளிர்ந்த காற்றிடம் மல்லுக்கு நிற்பதைப் போலவே சாலைகளில் அக்குளிரையும் பொருட்படுத்தாது சிலர் மெதுவாக ஊர்ந்தபடியே சென்று கொண்டுயிருந்தனர். நடுங்க வைக்கும் அக்குளிரின் நடுவில் மூன்று இளைஞர்கள் சற்று வேகமாக நடந்து சென்று கொண்டிருந்தார்கள். அவர்களின்முகத்தோற்றமே அவர்கள் மூவரும் இந்திய துணைக்கண்டத்தை சேர்ந்தவர்கள் தான் என்பதை சொல்லாமல் உணர்த்தியது.

"டேய்...சலீம்,சீக்கிரமா வாடா...இப்பவேலேட்ஆயிடுச்சு...ப்ரொஃபசர் அங்கே ரொம்ப நேரமா காத்துக்கிட்டு இருப்பார்" அவசரப்படுத்தினான் பஞ்சாபியான ககன்தீப்சிங்

"கூல்..மேன்...உங்க இந்தியாகாரங்களுக்கு எப்பவும் அவசரம் தானா.. .ப்ரொஃபசர் என்ன வீட்டில் தானே இருக்கப்போறார்...எதுக்கு டென்ஷன் படுத்துற...அதோ பாரு...நாளைக்கு நான் பறந்துப்போகப்போகிற காரை கொஞ்சம் விளம்பரத்திலயாவது பார்க்க விடுப்பா"என்று விளம்பர பலகையை பார்த்தபடியே ஆமை நடை நடுந்து வந்தான் பாகிஸ்தானியனாகியச லீம்ஹுசைன்முகமது

"பீட்...இட்...பீட்இட்...ஹூ..." என்று திடீரென்று கத்திக்கொண்டே ஒரு விதமாக நடந்தான் மேற்கு வங்காளியான ரித்தீஷ் சாட்டர்ஜி

"ஆமா...நான் உங்களை லேட்ஆகுதுன்னு முன்னாடி வேகமா நடந்து வாங்கன்னு சொன்னால் நீ மட்டும் ஏன்டா ரித்தீஷ்பின்னாடியே போற...நான் முக்கியமான என் ஆராய்ச்சி கட்டுரையை ப்ரொஃபசரிடம் கொடுக்கனும்ன்னு அவசரப்படுத்தினால்...ப்ளீஸ்,ரித்தீஷ்...சீக்கிரமாவாடா"எரிச்சலடைந்தான் ககன்

"டேய்...ககன்...இது என்ன வாக்குன்னு இன்னுமாதெரியல...இதுக்கு பேர் தான் 'மூன்வாக்'" என்று கூறி மீண்டும் அந்த நடையை செய்து காட்டினான் ரித்தீஷ்

"என்ன மூன்வாக்கா...ஆர்ம்ஸ்ட்ராங்நிலாவில் கால் பதிச்சப்போதுகுதிச்சுட்டு தானே இருந்தார்...இப்படி பின்னாடி போகவேயில்லையே?..."என்றபடியே தலையை சொறிந்தான் ககன்

"அட...நீ எப்பவும் நாசா விஞ்ஞானி மாதிரி யோசிச்சிக்கிட்டே இருந்தால்,எப்படி உனக்கு இது மாதிரி பொது அறிவு வளரும்...லூசு...இது எம்ஜெ தெரியுமில்ல அவரோட'கிளாசி'ஸ்டெப்டா...இது தெரியல,உனக்கு ஆக்ஸ்ஃப்ர்டுல எவன் சீட்டை கொடுத்தான்?" ககனை சீண்டிப் பார்த்தான் ரித்தீஷ்

"என்னது எம்ஜேவா...ஓ மைக்கில்ஜாக்சனைசொல்கிறாயா" தெளிபடுத்திக் கொண்டான் ககன்

"ஹிஹிஹி நீ எம்ஜே மாதிரி நடந்தால் தானே தெரியும்; இப்படி கழுதை மாதிரி நடந்து காட்டினா...எப்படிப்பா நாங்களெல்லாம் தெரிஞ்சிக்க முடியும்..." என்று சலீம் கூறியது தான் தாமதம்,அதுவரை அமைதியாக வந்த ககன் தன்னையும் மறந்து சிரித்தான்.அவனது சிரிப்பு மட்டும் சில நிமிடங்கள் கழித்தே அடங்கியது.

"பார்த்தீயா,ரித்தீஷ்...கக‌ன் இப்படி சிரிக்கிறதை பார்த்தே எவ்வளவு நாளாச்சு..."என்று சலீம் மெதுவாக ரித்தீஷிடம் கூற அவ‌னும் த‌லையைஆட்டிய‌ப‌டியே ஆமோதித்தான்

அவ‌ர்க‌ள்பேசி‌க் கொண்டே பாதாள‌ இர‌யில் நிலைய‌த்தில் இருந்து மெட்ரோ புகைவண்டியில் ஏறி வேறொரு இடத்தைநோக்கி ப‌ய‌ண‌மாயின‌ர். புகைவண்டியில் ஏறி அம‌ர்ந்த‌ பிறகு தான் நிம்ம‌திய‌டைந்தான் க‌க‌ன்.

அவ‌னுக்கு சற்று அருகில் ஒரு தாய் த‌ன்குழ‌ந்தையுட‌ன் விளையாடுவ‌தை பார்த்து ர‌சித்த‌ப‌டியேசிந்த‌னையில் ஆழ்ந்து போனான் ககன்.சென்ற மாதம்  இந்தியாவில் ஒரு சாலை விபத்தில் இறந்த தன் தாயின் முகம் தான் நிழலாடியது கண்ணீரால் பனித்திருந்த அவனதுகண்களில்.இதைப் புரிந்து கொண்ட‌ அவனது தோழ‌ர்க‌ள்,மீண்டும் பேச்சை தொட‌ங்கினார்க‌ள்

"ககன்...நீ வேணும்னா நாளைக்கு போய் ப்ரொஃபெஸரிடம் உன் பேப்பர்ஸை கொடு...இன்னிக்கு நீயும் எங்க கூட "லேடி காகா"வோடகான் சர்ட்டுக்கு வாயேன்...இது மாதிரி ஒரு வாய்ப்பு மறுபடியும் நமக்கு கிடைக்கிறது ரொம்ப கஷ்டம்டா" என்று ககனின் சிந்தனைகளை திருப்பும் விதமாக பேசினான் சலீம்

"ம்...நானா...இல்லைடாசலீம்...இந்த ப்ராஜெக்ட் தான் என்னோட ட்ரீம்...யார் இந்த வருஷம் பெஸ்ட் ப்ராஜெக்ட் சப்மிட் பண்றாங்களோ அவங்களைத்தான் அவரோட ஆராய்ச்சியில் அஸிஸ்டென்டா ஏற்றுப்பேன்னு சொல்லிருக்கிறார் நம்மப்ரொஃபஸர்...இதை வச்சு தான் ப்ரொஃபஸரோட அஸிஸ்டென்டாக ஆக முடியும்...இந்த மாதிரி வாய்ப்பு தான் மறுபடியும் நமக்கு கிடைக்காது" சலீமின் பேச்சால் ககன் சற்றேத‌ன் சிந்தனையிலிருந்து விடுபட ஆரம்பித்தான்.

"என்னது நமக்கா...அது உன்னை மாதிரி கூண்டுக் கிளிகளுக்கு மட்டும்தான்ப்பா...எங்களை மாதிரி சுதந்திர பறவைகளுக்குதான் எம்ஜே, என்ரிக்கே, ஜஸ்டின்பைபர் மாதிரியான‌ பெரிய ப்ரொஃபெஸர்கள் இருக்கிறாங்களே..." என்று மீண்டும் ககனை வெறுப்பேற்றினான் ரித்தீஷ்

"ரித்தீஷ் கண்ணா...எம்ஜே தான் இப்போ இல்லையேப்பா..."என்று ரித்தீஷை இடறினான் சலீம்

"அவர் இல்லைன்னா என்ன...அந்த இடத்தை பிடிக்க தான் நான் வந்துவிட்டேனடா...வருங்காலத்தில் நீங்கள் என்னை 'ஆர்சி'ன்னு கூப்பிட வேண்டி வரும்...அதனால் அதை இப்பவே ப்ராக்டீஸ் பண்ணி வச்சுக்குறது நல்லது"என்று தன்னையே பெருமைப் படுத்திக்கொண்டான் ரித்தீஷ்

"நீயே தான் உனக்கு தம்பட்டம் அடிச்சக்கனும் சார்...ஆனால் நான் பாரு நாளைக்கு ஒரு ஷுமாக்கர் மாதிரியோ இல்லை லீவிஸ் ஹாமில்டன் மாதிரியோ வந்த பிறகு இருநூறுகிலோமீட்டர் வேகத்தில் போர்ஷ், லம்பார்கினி மாதிரி 'ஸ்போர்ட்ஸ்' காரில் எப்படி ட்ராவல் பண்ணனும்ன்னு தெரிஞ்சுக்க போறீங்க" என்று சலீமும் தன் பங்குக்கு கனவுலகில் மிதக்க தொடங்கினான்

"ஒ...வாவ்...என்னோட வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்...ஏனென்றால் நாளைக்கு உங்களை பார்க்க நான் இருப்பேனோ இல்லையோ"என்று ககன் கூறியதும் சற்று திகைத்து போய் நின்றனர் சலீமும் ரித்தீஷும்.

"என்ன சொல்ற...ககன்" என்று தயக்கம் கலந்த பதற்ற‌த்துடன் கேட்டான் ரித்தீஷ்

"அட...நீங்கள் ரெண்டு பேரும்மிகப் பெரிய‌'செலிபிரிட்டி'யான பிறகு எங்கே என்னை கண்டு கொள்வீங்கன்னு தான் சொல்றேன்..."என ககன் கூறியதும் தான் சலீமும் ரித்தீஷும் ஆசுவாச மடைந்தனர்

"ககன்ஜி...நம்ம ரெண்டு நாட்டுக்கு நடுவில் இருக்கிற வெறுப்பு என்றும் மாறாமல் போனாலும் நம்மளோட நட்பு என்றும் நிலைக்கும்" என்று உணர்ச்சி வசத்துடன்சலீம் பேசவே அவனை அணைத்துக்கொண்டனர் ககனும் ரித்தீஷும்

"டேய்...உண்மையை சொல்லு,எந்த இந்திப்படத்துலயிருந்து இந்த வசனத்தைத் திருடினே..."என்று ரித்தீஷ் கிண்டல் செய்யவே மீண்டும் சிரிப்பொலி புகைவண்டியில் ஒலிக்க தொடங்கியது

அவ‌ர்க‌ள் இந்தி மொழியில் பேசுவதையும் சிரிப்பதையும் பார்த்த‌தும் புகைவண்டியில் வ‌ந்த‌ ச‌க‌ப‌ய‌ணிக‌ள்,குறுந்தாடியுட‌ன் இருந்த‌ ச‌லீமையும் க‌க‌னையும் புகைவண்டியில் குண்டு வைப்பதற்கு வந்த‌ தீவிர‌வாதிக‌ளை பார்ப்ப‌து போல‌வே பார்த்து கொண்டிருந்தார்கள்.அதை புரிந்து கொண்ட‌ நண்பர்கள் தாங்க‌ள் இற‌ங்கும் இட‌ம் வந்த பிறகுதான் மீண்டும் பேச‌வே தொட‌ங்கினார்க‌ள்.

"சரிடா,ககன்...நீ ப்ரொஃபஸரை பார்த்துவிட்டு இங்கே ஸ்டேஷன்ல இரு...நாங்க வந்துவிடுவோம்...நாங்கள் வர அதிக‌ நேரமானால் நீ வீட்டுக்கு கிளப்பி விடு,சரியா"

"இல்லே...ரித்தீஷ் நாம எல்லோரும் சேர்ந்தே வீட்டுக்கு போகலாம்...பாய்டா"

ககன் புகைவண்டி நிலையத்தில் இருந்து சற்று தூரம் சாலையை கடந்து வந்து ஒரு வீட்டின் வாசலின் முன் நின்றான்.தான் குறித்த நேரத்தில் பேராசிரியரின் இல்லத்தை அடைந்த திருப்தியுடன் வீட்டின் அழைப்பு மணியை அழுத்த எண்ணவும்,அவனுக்கு சற்று தொலைவில் ஒரு பெண்ணின் அலறல் சத்தம் கேட்டது. சத்தம் வந்த திசையை நோக்கி திகைத்துபடியே பேராசிரியரின் வீட்டின் வாசலில் நின்றுக்கொண்டிருந்தான் ககன்.

*********************

"ச்சே...இந்த மாதிரி பாப் ஸ்டார்ஸ் எல்லாருமே ரொம்ப மோசம்டா...அதெப்படி சொல்லி வைத்ததைப் போலவே நிகழ்ச்சி நடக்குற அன்னிக்கு பார்த்துத்தான் இவங்களுக்கு காய்ச்சல் வருது, ஃப்லைட்டை தவறவிட்டு விடுறாங்க...நம்மள பார்த்தா பைத்தியக்காரங்க மாதிரி தெரியும் போல இவங்களுக்கு..." கோபத்தின் உச்சியிலிருந்தான் ரித்தீஷ்

"ம்...அதுக்கு தான் கஷ்டப்பட்டு பகுதி நேர வேலையெல்லாம் பார்த்து சம்பாதிச்ச பணத்தை வச்சு ஏதாவது "கிராண்ட் ப்ரிக்ஸ்" கார் பந்தயத்திற்காவது  போகலாம்ன்னு சொன்னேன்...இப்ப பாரு, நிகழ்ச்சி ரத்து செய்துவிட்டதாக அறிவிப்பு பலகையில்போட்டிருக்காங்க..." சலித்தபடியே சலீம்

"அதானே பார்த்தேன்...நம்ம நண்பனாச்சே, எங்கே திருந்தி தெளிஞ்சிட்டி யோன்னு நினைச்சு பயந்து விட்டேன்...டேய்,சலீம்...நாமளும் ககன் மாதிரி ப்ரொஃப்ஸரை வீட்டுக்கு போய் ஏதாவது படித்தாலாவது நம்ம மூளைக்குள் நல்ல விஷயங்கள் கொஞ்சமா சேர்த்து கொள்ளலாம்ன்னு சொல்றதை விட்டுட்டு..."

"ம்...அதுவும் சரிதான்...நமக்கெல்லாம் பட்டால்தான் புரிகின்றது...சரி அரைமணிநேரமா காவல்காரங்களிடம் சண்டை போட்டு பிரயோஜனம் இல்லை...பணம் கிடைக்க போவதில்லை...ககனை பார்க்க ப்ரொஃப்ஸர்வீட்டுக்காவது போவோம்..." என்று சமாதானமடைந்தபடியே நடக்கக் தொடங்கினார்கள் ரித்தீஷும், சலீமும்.

"அப்போ ப்ரொஃபஸரை பார்க்கப்போக வேண்டாமா?"என்று ரித்தீஷ் சந்தேகத்தை எழுப்ப, "ககனுக்குபோட்டியா நான் எப்படி ரித்தீஷ் வர முடியும்...என் நண்பனுக்காக இதைக் கூட செய்யவில்லை என்றால் எப்படி?"

"அதானே,பார்த்தேன்...நீ திருந்திட்டியான்னு"

"உங்க இந்தியாகாரங்களுக்கு சந்தேகப்படுறதே வேலையாகி விட்டதுப்பா..."என்று சலீம்கூறவே சிரிப்பொலி ஆரம்பமானது

சலீமும், ரித்தீஷூம் நிகழ்ச்சி நடக்கவிருந்த மைதானத்தை விட்டு விலகி நடக்க தொடங்கவும் கூச்சல் சத்தம் விலகி மயான‌ அமைதி நிலை கொள்ளத் துவங்கியது. அப்பொழுது அங்கே ஒரு வெள்ளைக்காரப் பெண் பதற்றத்துடன் அவர்களை நோக்கி ஓடி வந்தாள்.இருளில்அப்பெண்ணின் முகம் சரியாக தெரியாததால் உதவ எண்ணிய அவர்கள், இருவரின் முகத்திலும் இருள் சூழத் தொடங்கியது வெளிச்சத்தில் அவளைக்கண்டதும்.

"சலீம்,ரித்தீஷ்...தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள்..."என்று ஆங்கிலத்தில் பதற்றத்துடன் கெஞ்சினாள்

"ச்சே...அங்கே என்னடான்னா அந்த "லேடி காகா" தொல்லை...இங்கே வந்தால் இந்த லேடி தொல்லை...இந்த லேடிஸ்களே இல்லாத உலகமே இருக்காதா?..."என்று ரித்தீஷ் கோபத்தில் கத்தினான்

"இங்கே பாரும்மா செலினா,உங்களுக்கு தான் எங்க'ஆசியர்களை' பார்த்தால் பிடிக்காதே,அப்புறம் எதுக்கு எங்ககிட்ட வந்து உதவி கேட்கிற...போ,அங்கே ஏதாவது வெள்ளைக்காரனுங்க இருப்பானுங்க,அவனுங்களை உதவ சொல்லி கேளு..."என்று தன் பங்குக்குவெறுப்பை காட்டினான் சலீம்

"போதும் வாடா,சலீம்...இவள் நம்ம ககனை வகுப்பறையிலே வைத்து அவ்வளவு மோசமாக அவமானப்படுத்தியதற்கு இவளிடம் இவ்வளவு நேரம் நின்று பேசுவதே பாவம்...வா,நாமககனைப் பார்க்க போகலாம்...இவளிடம் என்ன பேச்சு நமக்கு..."என்று ரித்தீஷ்சலீமின் தோளை பிடித்து இழுத்து நடக்கத் தொடங்கினான்.

"அட...கடவுளே...ஹையோ..."அதிர்ச்சியில் உறைந்திருந்த அவளின் நாவிலிருந்துவார்த்தைகளும் உறைந்து போய் வர மறுத்தன
"உன்னை பார்க்கவே எங்களுக்கு பிடிக்கலை...இனவெறி பிடித்த உன்னை மாதிரி இருக்கிறவங்க தான் உண்மையான 'சாத்தான்கள்'என்று மேலும் எரிந்து விழுந்தான் சலீம்

அதிர்ச்சியில் இருந்த செலீனா கதறி கதறிஅழத்தொடங்கினாள்.ஒரு பெண்ணை இந்த அளவிற்கு வேதனைப் படுத்தியதும்,அங்கே முகம் தெரியாத ஒருவரை ஆபத்திலிருந்து மீட்காமல் செல்வது நண்பர்கள் இருவருக்கும் குற்றவுணர்வை மேலெழச் செய்தது. சிலஅடிகளே நடந்து சென்ற நண்பர்கள் இருவரையும் அவளது கண்ணீர் மீண்டும் அவளை நோக்கி நடக்க செய்தது

"செலீனா...எங்கள் இருவரையும் மன்னித்து விடு...ஏதோ வெறுப்பில்... சரி...யாருக்கு உதவி வேண்டும்?...என்ன நடந்தது?" என்று தன் தவறை உணர்ந்தவனாய் படபடத்தான் ரித்தீஷ்

"ரித்தீஷ்...அங்கே...நான் வரும் வழியில் சில திருடர்கள் என்னை வழிமறித்து என் கைப்பையை பறித்துக் கொண்டு என்னை கொலை செய்ய முயன்றார்கள் ... அப்போ,நான் பயத்தில் அலறி கத்தவும்,அங்கே ஒருவர் என் அலறல் சத்தம் கேட்டு வந்து நின்றார்...அவர்" மீண்டும்அழத் தொடங்கினாள் செலீனா.

"சரி,செலீனா...உன்னை சற்று ஆசுவாசப்படுத்திக் கொள்...பிறகு என்னவாயிற்று?"பதற்றத்துடன் கேட்டான் சலீம்

"அது...ககன் தான்...நான் அவனை மோசமாக அவமானப்படுத்தினாலும் அவன் ஆபத்தில் இருந்த என்னை காப்பாற்ற ஓடி வந்தான்...பின்னர் அந்த திருடர்களிடமிருந்து என் கைப்பையை பிடுங்கிக் கொடுத்து விட்டு என்னை அங்கிருந்து ஓடிவிடுமாறு சொன்னான்..."என்று அவள் கூறி முடிக்கவும் தன் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் மேலும் தேம்பி தேம்பிஅழத் தொடங்கினாள் செலீனா.

செலீனாகூறியதும் அதிர்ந்து போய்விட்டார்கள் ரித்தீஷும்,சலீமும்.ஒரு நிமிடம் கூடதாமதிக்காது,நடப்பதற்கே சிரமமாயிருந்த அந்தப் பனியில் தங்களது நண்பனைத் தேடி ஓடத்தொடங்கினார்கள்.சாலையில் அங்கும் இங்கும் ககனைத் தேடியபடியே ஓடினார்கள்.செலீனா காட்டிய வழியில் சென்றும் ககனை கண்டுபிடிக்க முடியாததால் அருகில் இருந்த சில சாலைகளிலும் தேடியும் பயனில்லை.சோர்வடைந்திருந்த அவர்களில் ரித்தீஷுக்கு ஒரு யோசனை தோன்றியது

"...சலீம்...ஒரு வேளை,ககன் ப்ரொஃபஸர் வீட்டுக்கு போயிருக்கலா ம்...வா...அங்கே போய் தேடலாம்..."அந்த வாடைக் காற்றில் ஓடிய களைப்பில் மூச்சை வாங்கியபடியே பேசினான் ரித்தீஷ்

"ம்...சரியான யோசனை...அங்கே போய் தேடலாம்"என்று அனைவரும் பேராசிரியரின் வீட்டை நோக்கி ஓடினார்கள்

பேராசிரியரின் வீட்டை நெருங்கியதும்,ஏதோ அசம்பாவிதம் நிகழ்ந்திருப்பது அங்கு குழுமியிருந்த போலீஸாரின் கூட்டத்தைப் பார்த்தே தெரிந்தது. மூவரும் தத்தமது தெய்வங்களை தாங்கள் நினைத்தபடி'அந்த' விபரீதம் நடந்திருக்க‌கூடாது என்று மனதிற்குள் வேண்டியபடியே அருகில் சென்றார்கள். சலீமும்,ரித்தீஷூம் போலீஸார் சுற்றிக்கட்டியிருந்த மஞ்சள் ரிப்பனை தாண்டி எத்தனிக்கவும்,அங்கே அவர்கள் கண்ட காட்சிகள் அவர்களை அதிரச் செய்தது. வெண்மையான உறைபனியில் நெஞ்சிலும், வயிற்றிலும் கத்தியால் குத்தப்பட்டு இரத்தம் கிடந்த ககன் அருகில் நின்றுக் கொண்டிருந்த ப்ரொஃபஸரின் கையில் ககன் கொண்டு வந்திருந்த 'ப்ராஜெக்ட்'இருந்தது.

ககன் தான் இறப்பதற்கு முன்பு தனது பேராசிரியரிடம் தனது 'ஆய்வு கட்டுரை'யை அளித்த பிறகே அவனது உயிர் பிரிந்தது. இறக்கும் தருவாயிலும் தனது வாக்குக்கு மதிப்பளித்து தன்னை சந்திக்க வ‌ந்த தனது சிறந்த மாணவனை இழந்த துக்கத்தில் பேராசிரியரின் க‌ண்க‌ளும் க‌ண்ணிரீல் தோய்ந்திருந்த‌து. சலீமும்,ரித்தீஷூம் தங்களது ஆருயிர் நண்பன் பிணமாய் ஆனதை நம்ப முடியாமல் கதறி அழத்தொடங்கினார்கள்.

"ஹையோ...ககன் நாங்களும் உன் கூடவே வந்திருந்தால்,இன்னிக்கு நீ எங்கக் கூடவே இருந்திருப்பியேடா..."என்று தலையில் அடித்துக் கொண்டு சலீம் அழுவதைப் பார்த்த போலீஸார் சற்று திகைத்து போயினர்

"ககன்...உன்னை மாதிரி ஒரு நல்ல தோழனை கடவுள் எங்ககிட்டயிருந்து ஏன் பறித்துக் கொண்டார்..."என்ற ரித்தீஷின் உறுக்கமானகதறல் அதிர்ச்சியில் இருந்த செலீனாவை அருகில் வரசெய்தது.

"வகுப்பில் முதல் மாணவனாய் ஒரு 'ஆசிய' இளைஞன் இருப்பதை விரும்பாம‌ல்ககனை பலமுறை பலரின்முன்பும் அவமானப்படுத்தி வேதனைப் படுத்தினேன்...ஹையோ...இன்று என்னை காப்பாற்ற எண்ணி அவன் தன் உயிரையும் இழந்துவிட்டானே...கடவுளே,இது உண்மையாக இருக்கக் கூடாது...இல்லை...இது உண்மையில்லை" என்று தனக்குள் பேசிய‌ப‌டியேந‌ட‌ந்தாள்செலீனா.

இன்னும் அருகில் சென்று,நடுங்க‌ வைக்கும் அக்குளிரில் விறைத்துப் போயிருந்த ககனின்உடலைப் பார்த்ததும் விறைத்துப் போன‌வ‌ளாய் நின்று கொண்டிருந்தாள் செலீனா.

ஆக்கம்: ஸ்ரீஷோபனா
+++++++++++++++++++++++++++++++++++++++
6




மின்சாரக் கனவு 
கனவு காண்பவர்: தனுசு
--------------------------
மின்சாரப் பூவே  
நீ மொட்டாய் துளிர்கையில் 
துள்ளுகிறோம் முழுமையாய் பூப்பாய் என்று 
ஆனால் துவண்டு விடுகிறோம் நீ 
துண்டு படும்போது.


மின்சாரக் கண்ணா
உன் முழு அலங்காரத்தை காண துடிக்கிறோம் 
மாப்பிள்ளை அலங்காரம் போன்று 
ஆனால் மடிந்து விடுகிறோம் 
நீ இருள் அலங்காரம் ஏந்தி வரும்போது .


மின்சார தேவியே 
உன் ஓளி கடாச்சத்தை கொண்டாடவே நினைக்கிறோம்
அலிபாபா குகை போன்று 
ஆனால் இருட்டில் இருப்பதையும் திருட்டுக்கு வார்த்துவிட்டு 
விசும்பிகிறோம் ஏமாளிகள் போன்று . 


மின்சார வெட்டே 
உனக்கு ஒரு வெட்டு விழத்தான் வேண்டுகிறோம் 
பலி ஆடு போன்று 
ஆனால் நாம் தான் பலியாகிறோம் 
வெட்டே வேட்டையாடி வரும்போது .


மின்சாரக் குறைவே 
உனக்கு ஒருநிறைவு வரத்தான் விரும்புகிறோம் 
நிறைகுடம் போன்று  
ஆனால் நாம்தான் கோபத்தில் நிறைகிறோம்    
அலுவல் சமையல் நேரங்களில் குறையும்போது  


மின்சார அரசியலே 
நீ இனிக்கிறாய் அறிவிப்பு தீர்மானங்கள் என்று 
சாயம்பூசி வரும் போது  
ஆனால் ஏமாறுகிறோம் அவையாவும் 
இருட்டுக்கடை அல்வாவாக மாறும்போது.


மின்சாரத் தலைமையே 
உன்னை பாராட்டவே விரும்புகிறோம் 
கோப்பையை வென்ற அணியைப்போன்று 
ஆனால் திட்டுகள் மட்டுமே தருகிறோம் 
மதுக்கோப்பையைக் காலிசெய்தவர் போன்று!
-தனுசு- 
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
7

சமயபுரத்தாளே சரணம் அம்மா! 
ஆக்கம்: ஆலாசியம் கோவிந்தசாமி. சிங்கப்பூர்

சமயபுரம் அமர்ந்தவளே சாகாவரம் தருபவளே!
உமையவளே, உண்மைதோறும் உறைபவளே!
அம்மையே, எமையாதரிக்க  வேண்டியே - தேடிவந்தேன் 
உம்மையே ஏழைமுகம் பாராயோ! 


"எங்கெங்கு காணினும் சக்தியன்றோ" அவள்
எங்கள் இதயம் நிறைந்த பக்தியன்றோ 
தங்கமான குணமதில் தாயாய் தங்கியருளும்  
மங்கலமுத்துமாரி வுன்சேவடி போற்றுகின்றேனே!

வயல்நடுவே வருகின்றேன் வரும்பாதை -அதனூடே  
முயலோட; நதிதனிலே கயலாட; கரைதனிலே
மயிலாட; யாதொடும் சேர்மனமாட வேண்டுகிறேனம்மா 
குயில்போலே நின்புகழ்பாட அருள்வாயே!

தேரோடும் வீதியெங்கும் தேடுகின்றோம் -மஞ்ச
நீரோடு வேப்பில்லையும் சூட்டிடவே -காவிரி
ஆறோடும் கரையினிலே தேடிவந்தேனம்மா -காட்டிடுவாய்
சீரோடு கனிமுகத்தை நேரில்வந்தே! 


பக்தி ஆறோடும்பாதை தோறும் பாடுகிறேன் 
சக்தி உனையே யாவினிலும் காணுகிறேன் 
சத்தியத்தில் வாழ்பவளே சங்கடங்கள் தீர்ப்பவளே
நித்தியானந்தம் அருள்வாய் தாயே!


சக்தியே நீயல்லால், இல்லையே முக்தியே 
பக்தியே கொண்டிங்கு நின்பாதம் பற்றுகின்றேன்
புத்தியில் நின்றுடுவாய் புலனின்பம் மறந்திடவே
சித்தியினை தந்திடுவாய் சீக்கிரம்வந்திங்கே!


மஞ்சளாடை உடுத்தி மண்டலமும் விரதமிருந்தே
அஞ்சுதிரி நெய்யிலேற்றி மாவிளக்கு போட்டுவந்தேன்
தஞ்சமென்று வந்தென்னை தடுத்தாண்ட ருளுவாயே
நெஞ்சமெல்லாம் நிறைந்த சமயபுரத்தாயே! 

ஆக்கம்: ஆலாசியம் கோவிந்தசாமி. சிங்கப்பூர்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

8

காலி சோப்பு டப்பா!
ஆக்கம்: G.ஆனந்தமுருகன்.

Cause and effect.
எப்பொழுதும் காரணங்களுக்கு தீர்வு காணவேண்டும். விளைவுகளுக்கு அல்ல. இதை நான் சொல்லவில்லை. ஜப்பான் நாட்டின் மேதை திரு. காரு இஷிகவா (Mr.Karu isihikawa.)கூறியுள்ளார்.
அதன் அடிப்படையில் இந்த பதிவு

The Empty Soap Box


One of the most memorable case studies on Japanese management was the  case  of the  empty  soap  box,  which  happened  in  one  of Japan's  biggest  cosmetics companies.  The  company  received  a complaint that a consumer had bought a soap box that was empty.  
   
Immediately the authorities isolated the problem to the assembly line, which  transported all  the  packaged  boxes  of  soap  to  the  delivery department.  For  some  reason,  one soap  box  went  through  the assembly line empty.  
     
Management  asked  its  engineers  to  solve  the  problem.  Post-haste, the  engineers worked  hard  to  devise  an  X-ray  machine  with  high- resolution  monitors  manned  by two  people  to  watch  all  the  soap boxes that passed through the line to make sure they were not empty. 
    
No  doubt,  they  worked  hard  and  they  worked  fast  but  they  spent whoopee amount to do so. But when a workman was posed with the same problem, did not get into complications  of  X-rays,  etc  but  instead came  out  with  another solution.  
   
He  bought  a  strong  industrial  electric  fan  and  pointed  it  at  the assembly line. He switched the fan on, and as each soap box passed the fan, it simply blew the empty boxes out of the line.  
     
Moral of the story: Always look for simple solutions. Devise the simplest possible solution that solves the problem. So, learn to focus on solutions not on problems. "If you look at what you do not have in life, you don't have anything; if you look at what you have in life, you have everything.
+++++++++++++++++++++++++++++++++++++++++
9

மணமகளின் நடனம்!
திருமணத்தன்று மணமேடைக்கு வரும்போது, வந்திருக்கும் விருந்தினர்களை வரவேற்கும் முகமாக மணமகளே (தமிழ்ப் பெண்) நடனமாடி வரவேற்கின்றார். உங்கள் பார்வைக்காக இதை அனுப்பிவைத்திருப்பவர் நமது வகுப்பறை மாணவர் கே.ராம்குமார், சிங்கப்பூர். மணமகளின் பெயர் ஒகனா. மனமகனின் பெயர்.திலீப்
திருமனம் நடந்த தேதி 12.2.2012 இடம் சிங்கப்பூர்


http://www.youtube.com/watch?v=rWzkt1DVJYQ 




+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
10



காணக்கண் கோடி வேண்டும்!
விக்டோரியா நீர்வீழ்ச்சியின் படங்கள்
அனுப்பியவர்: S. சபரி நாராயணன்.,சென்னை

தென்னாப்பிரிக்காவில், ஜாம்பியா நாட்டிற்கும் ஜிம்பாப்வே நாட்டிற்கும் எல்லையைப் பிரிக்கும் விதமாக அமைந்துள்ளது இந்த பிரம்மாண்டமான நீர்வீழ்ச்சி. ஜாம்பேஜி ஆற்றில் அமைந்துள்ளது. நீர்வீழ்ச்சியின் உயரம் 355 அடிகள். சராசரியாக பாய்ந்து விழுகும் தண்ணீரின் அளவு நிமிடத்திற்கு 38,430 கன அடிகள் (அம்மாடியோவ்)

1

2


3


4

5

6

7

8


9

10

11.Natural Swimming Pool called 'Devils Pool' in the falls

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

Cinema காதல் சொல்வது உதடுகள் அல்ல சம்பளச் சீட்டுடா தலைவா!


Cinema காதல் சொல்வது உதடுகள் அல்ல சம்பளச் சீட்டுடா தலைவா!

காதல் வயப்படுவது பெரும்பாலும் ஈர்க்கின்ற அழகை வைத்துத்தான். அதெல்லாம் ஒரு காலம். இப்போதெல்லாம் பார்க்கின்ற வேலையும், கிடைக்கின்ற சம்பளத்தையும் வைத்துத்தான் காதல் வசப்படுகின்றது. இன்றைய பொருளாதார சூழ்நிலையில் இரு பாலரும் தெளிவாக இருக்கிறார்கள். அதில் தவறொன்றும் இல்லை. கல்யாணம் செய்த பிறகு ஒண்டிக்குடித்தனத்தில் ஓட்டு வீட்டில் அவதிப்படக்கூடாது இல்லையா? ஆகவே அது சரிதான்.

அன்புடன்
வாத்தியார்
------------------------------------
நெஞ்சைத் தொட்ட புது பாடல் எண்.8
படம்: பத்ரி
பாடல்:  காதல் சொல்வது உதடுகள் அல்ல கண்கள்தான் தலைவா
------------------------------------------
காதல் சொல்வது உதடுகள் அல்ல கண்கள் தான் தலைவா
கண்கள் சொல்வதும் வார்த்தைகள் அல்ல கவிதைகள் தலைவா
கவிதை என்பது புத்தகம் அல்ல பெண்கள் தான் சகியே
பெண்கள் யாவரும் கவிதைகள் அல்ல நீ மட்டும் சகியே


அடடா இன்னும் என் நெஞ்சம் புரியலையா காதல் மடையா
இது என்னடி இதயம் வெளியேறி அலைகிறதே காதல் இதுவா
எப்படி சொல்வேன் புரியும் படி ஆளைவிடுடா
மன்னிச்சுக்கடி காதல் செய்வேன் கட்டளைப்படி
(காதல்..)


படப்படக்கும் எனது விழி பார்த்து நடந்துக்கணும் சொல்வது சரியா
தவறு செய்தால் முத்தம் தந்து என்னை திருத்திக்கணும் தண்டனை சரியா
எப்பொழுதெல்லாம் தவறு செய்வாய் சொல்லிவிடுடா
சொல்லுகிறேன் இப்போது முத்தம் கொடுடி
(காதல்..)
----------------------------------
படம்: பத்ரி (2001)
நடிப்பு: விஜய், பூமிகா சாவ்லா
இசை: ரமணா கோகுலா
பாடியவர்கள்: ஸ்ரீநிவாஸ், சுனிதா
பாடலாக்கம்: கவிஞர்.பழநிபாரதி
இயக்குனர்: P.A.அருண் பிரசாத்

காணொளி:

http://youtu.be/xyHNJnFYF2Y
Our sincere thanks to the person who uploaded the video clipping



++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

24.2.12

Devotional அதிபதியே! அருள் நிதியே!



Devotional அதிபதியே! அருள் நிதியே!

இன்றைய பாமாலைப் பகுதியை மிகவும் பிரபலமான பாடல் ஒன்று அலங்கரிக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்
------------------------------------------------
பாடல்: மருதமலை மாமணியே
பாடியவர்: மதுரை சோமு அவர்கள்

கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை?
கொங்கு மணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்த மலை?
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை?
தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருதமலை ...
ஆ ... ஆ ... ஆ ... மருதமலை ... மருதமலை ...  முருகா ...


மருதமலை மாமணியே முருகையா
மருதமலை மாமணியே முருகையா
தேவரின் குலம் காக்கும் வேலையா அய்யா ...
மருதமலை மாமணியே முருகையா
தேவரின் குலம் காக்கும் வேலையா அய்யா ...
மருதமலை மாமணியே முருகையா


மணமிகு சந்தனம் அழகிய குங்குமம் 
அய்யா உனது மங்கல மந்திரமே
(மருதமலை)


தைப்பூச நன்னாளில் ... தேருடன் திருநாளும்
பக்தர்கள் கொண்டாடும் கந்தையா ... ஆ ... 
(மருதமலை)


கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
  ஆ ... ஆ ... ஆ ..
கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்
நாடி என் வினை தீர ... நான் வருவேன் 


அஞ்சுதல் நிலை மாறி ... ஆறுதல் உருவாக
எழு பிறப்பிலும் உன்னை எட்டுவேன் ... ஆ ... 
(மருதமலை)


சக்தித் திருமகன் முத்துக் குமரனை மறவேன் ... நான் மறவேன்
பக்திக் கடலென பற்றிப் பெருகிட வருவேன் ... நான் வருவேன் 
பரமனின் திருமகனே ... அழகிய தமிழ் மகனே 
காண்பதெல்லாம் ... உனது முகம் ... அது ஆறுமுகம்
காலமெல்லாம் ... எனது மனம் உருகுது முருகா
அதிபதியே குருபரனே ... அருள் நிதியே சரவணனே


பனி அது மழை அது நதி அது கடல் அது
சகலமும் உனதொரு கருணையில் எழுவது 
வருவாய் ... குகனே ... வேலையா ...
  ஆ ... ஆ ... ஆ ... ஆ ...


தேவர் வணங்கும் மருதமலை முருகா .
(மருதமலை).

பாடலாக்கம்:  கவியரசர் கண்ணதாசன்
இசை:  குன்னக்குடி வைத்யநாதன்
படம் :  தெய்வம் (1971)
பாடியவர்: 'மதுரை' சோமசுந்தரம்

காணொளி:
http://youtu.be/82qfhI7uZf0
Our sincere thanks to the person who uploaded the video clipping in the net


+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

23.2.12

Cinema நம்மைக் கிறங்க அடிக்கும் குரல்கள் - பகுதி 2



Cinema நம்மைக் கிறங்க அடிக்கும் குரல்கள் - பகுதி 2

குரல் வளம் மிக்கவர்கள் என்று சொல்லும்போது, பலரையும் சொல்லலாம். நம்மைக் கிறங்க அடிக்கும் குரல்கள் என்று சொல்லும்போது, ஒரு சிலரைத் தான் குறிப்பிட முடியும்.

என் மனத்திரையில் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும் சிலருடைய குரல்களில் ஒன்றை - பின்னணிப் பாடகர் முகமது ரஃபி, அவர்களின் இனிய குரலை சென்றவாரம் (9.2.2012) பதிவிட்டேன். இன்று இன்னொரு மேன்மையான குரலைப் பதிவிடுகிறேன்.

யார் அவர்?

நீங்களே பாருங்கள்!

வரிசை எண். 3

கிஷோர் குமார்

பெற்றோர்கள் வைதத் பெயர் Abhas Kumar Ganguly
4.8.1929ல் பிறந்தவர் சுமார் 58 வயதுவரையே வாழ்ந்து 13.8.1987ல் காலமானார்
பிறந்த ஊர் Khandwa, Central Provinces and Berar
பாடகர், நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என்று பன்முகத் திறமை காட்டியவர்
திரையுலகில் கோலோச்சிய காலம் 1946 முதல் 1987 வரை சுமார் 41 ஆண்டுகள்
-----------------------------------------------------
படம்: அந்தாஸ்
பாடல்: ஜிந்தகி ஏக் ச்ஃபர் ஹை சுஹானா

வாழ்க்கை என்பது ஒரு அழகான பயணம். ஆனால் அந்தப் பயணத்தில் நாளை என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது Life is a beautiful journey, One never knows what's going to happen tomorrow என்பது பாடலின் பல்லவியாகும்

படம் வெளிவந்த ஆண்டு 1971
பாடலாக்கம் கவிஞர் ஹஸ்ரத் ஜெய்புரி
பாடியவர்: கிஷோர் குமார்
இசை: ச்ங்கர் ஜெய்கிஷன்

வெளிவந்தபோது மொத்த இந்தியாவையும் கலக்கிய படம். இந்தப் படத்தின் மூலம் நடிகர் ராஜேஷ்கன்னாவும், நடிகை ஹேமமாலினியும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்குப் புகழைப் பெற்றார்கள். திரை உலகின் உச்சத்தைத் தொட்டார்கள். இததனைக்கும் நடிகர் ராஜேஷ்கன்னா இந்தப் படத்தில் ஒரு சிறு பாத்திரத்தில் மட்டுமே நடித்திருந்தார். படத்தின் கதாநாயகன் ஷம்மி கபூர்.

இன்னொரு செய்தி படத்திற்கு இசையமைத்த இரட்டையர்களில் ஒருவரான ஜெய்கிஷனுக்கு இந்தப் படமே இறுதிப்படமாக அமைந்துவிட்டது. படம் வெளியான பிறகு கணயத்தில் ஏற்பட்ட கோளாறுக்காக அறுவை சிகிச்சைக்கு உள்ளான அவர், திரும்பவில்லை. காலமாகிவிட்டார். பாடலின் வரிகள் அவருக்கே பலித்துவிட்டன.

இப்போது பாடலைக் கேளுங்கள்.

இந்தப் பாடலின் மூலம் கிஷோர் குமாரும் புகழின் உச்சத்தைத் தொட்டார். ஹம்மிங் செய்வதில் யோடலிங் என்னும் ஒரு புது யுக்கிதையை அவர் கையாண்டார். அதையும் கவனித்துக்கேளுங்கள். யோடலிங்கில் அவர்தான் மன்னர். அது பாட்டிற்கு ஒரு துள்ளளைக் கொடுக்கும்

Yodeling (or yodelling) is a form of singing that involves singing an extended note which rapidly and repeatedly changes in pitch from the vocal or chest register (or "chest voice") to the falsetto/head register; making a high-low-high-low sound.
---------------------------------------------------------
காணொளி:
Video clipping : Andaz
http://youtu.be/8wZDU-DDTOU
Our sincere thanks to the person who uploaded the video clipping


------------------
கிஷோர் குமாரின் இன்னொரு புகழ்பெற்ற பாடலையும் கொடுத்துள்ளேன்

பாடல்: ஆஜ் உன்சே பஹ்லி முலாகத்
படம் பரயாதன்
இசை: ஆர்.டி.பர்மன், 
நடிப்பு: ராகேஷ் ரோஷன்

காணொளி:
Aaj unse pahliulakat
video clipping
http://youtu.be/O56NC4OoXsM
Our sincere thanks to the person who uploaded the video clipping




---------------------------------
அவர் குரலில் ஒலித்த பல பாடல்களில் மிக்ச் சிறந்த சில பாடல்களின் பட்டியல் கீழே உள்ளது



என்ன ரசித்துக் கேட்டீர்களா?

அன்புடன்
வாத்தியார்

++++++++++++++++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!