மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.4.11

எங்கே போகிறது இந்த உலகம்?

-------------------------------------------------------------------
எங்கே போகிறது இந்த உலகம்?
இளைஞர் மலர்

ஏன் இந்த அவலம்? எங்கே போகிறது இந்த உலகம்?

சில தினங்களுக்கு முன்பு தினமலர் தனது சினிமா செய்திப் பிரிவில் இந்தச் செய்தியை பிரசுரித்திருந்தது!!!

"பிரிட்டன் இளவரசர் வில்லியம்சிற்கு, ஏற்ற இந்திய மணப்பெண் காத்ரீனா கைப்தான் என்று பிரபல  மேட்ரிமோனியல் தளமான ஷாதி.காம் தெரிவித்துள்ளது.

பிரிட்டன் இளவரசர் சார்லஸ், மறைந்த டயானா ஆகியோரின் மூத்த
மகனான வில்லியம்ஸ் ஆர்தர் பிலிப்யிஸ்க்கும், கதே மிடில்டனுக்கும் நாளை(29.04.11) திருமணம் நடைபெற இருக்கிறது. லண்டனில் உள்ள பாரம்பரியம் மிக்க வெஸ்ட்மின்ஸ்டர் அபே எனும் தேவாலயத்தில் விமரிசையாக நடக்கிறது. உலகமே இவர்களது திருமணத்தை 
ஆவலாக எதிர்பார்த்துள்ள நிலையில், இளவரசர் வில்லியம்ஸ்க்கு
ஏற்ற இந்திய மணப்பெண் பாலிவுட் நடிகைகாத்ரீனா கைப்தான்
என்று பிரபல மேட்ரிமோனியல் தளமான ஷாதி.காம் தெரிவித்து
இருக்கிறது.

இதுதொடர்பாக அந்த இணையதளம் 8000பேரிடம் நடத்திய கருத்து
கணிப்பில் 75.3சதவீதம் பேர் காத்ரீனா  கைப்புக்கும், 16.7சதவீதம்
பேர் பிரியங்கா சோப்ராவுக்கும், 8சதவீதம் பேர் சோனாக்ஷி
சின்ஹாவுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இத்தகவலை
ஷாதி.காம் இணையதளத்தின் தலைமை அதிகாரி கவுரவ் ராக்ஷித்  தெரிவித்துள்ளார்."

எவ்வளவு நேர்த்தியான ஒரு பணி..... இந்தக் கருத்துக் கணிப்பில்
எட்டாயிரம் பேர் கலந்ததும் தான்...... என்னே??...

சரி இதைப் பாருங்கள்...

"எந்த நடிகையை நிர்வாண ஓவியத்தை பார்க்க ஆசை? என்ற
கேள்வியுடன் ஒரு ஏடாகூட கருத்துக்கணிப்பை  நடத்தியிருக்கிறது
ஒரு ஆங்கில நாளிதழ். ஹாலிவுட் நடிகைகள் பலரும் நிர்வாண
ஓவியத்திற்கு போஸ் கொடுத்து பல கோடிகளை சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். அதேகலாச்சாரம் விரைவில் பாலிவுட்
நடிகைகள் மத்தியிலும்  பரவப் போகிறது. இதற்கான முயற்சிகளில்
பிரபல ஓவியர்கள் இறங்கியிருக்கிறார்கள். இதன் முன்னோட்டமாக 
பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று நிர்வாண ஓவியத்தை மையக் கருத்தாக வைத்து ஒரு கருத்துக்கணிப்பை  நடத்தியுள்ளது.

அதாவது, எந்த நடிகையின் நிர்வாண ஓவியத்தை பார்க்க ஆசை?
என்ற கேள்வியுடன், நாட்டின் முக்கிய  நகரங்களில் நடத்தப்பட்ட
இந்த கருத்துக்கணிப்பில் பலரும் உற்சாகமாக கலந்து கொண்டு
கருத்து தெரிவித்தனர்.

கருத்துக்கணிப்பு முடிவின்படி, 40 சதவீத ஓட்டுக்கள் பெற்று
ஐஸ்வர்யா ராய் முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு  அடுத்தபடியாக பிரியங்கா சோப்ரா 30 சதவீத வாக்குகள் பெற்றிருக்கிறார்.
ரேகா 14 சதவீதமும், வித்யாபாலன்  13 சதவீதமும், கரீனா கபூர்
12 சதவீதமும், மலாய்கா அரோரா, அனுஷ்கா சித்ராங்கடா தலா
1 சதவீதமும்  ஓட்டுக்கள் பெற்றுள்ளனர். சென்னை ரசிகர்கள் அதிக
அளவில் விரும்பியது கரீனா கபூரைத்தானாம். நம்ம ஊர்  த்ரிஷா
உள்ளிட்ட நடிகைகளை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளவில்லையா?
அல்லது ஓட்டுக்கள் விழவில்லையா?

என்பது பற்றி விவரங்கள் வெளியாகவில்லை."

என்ன நடக்கிறது இங்கே? எதை நோக்கி இந்தப் பயணம்? எங்கே சென்று முடியும்?

இப்படியெல்லாம் ஒரு ஆசை! இந்த மஞ்சள் பத்திரிக்கைச் செய்தியை தினமலரில் மணம் பரப்பச் செய்வது தான்  ஏன்?

முன்னைய செய்தி தொடர்புள்ள, அந்த நிறுவனம் பதிந்தவர்களுக்கு
மாத்திரம் பணம் பெற்றுக் கொண்டு திருமண  ஜோடி சேர்த்துக்
கொண்டு இருந்தது. இப்போது வேறு வேலையை செய்து
கொண்டிருக்கிறது?.

அடுத்ததாய் உள்ளது:

யாரைப் பிறந்த மேனியில் பார்க்கப் பிடிக்கும் என்று ஒரு ஆங்கில
நாளேடு இந்தியாவின் பல நகரங்களில்  நடத்திய சர்வே... அதில் இன்னொருவனின் மனைவி தான் முதலிடத்தில் வந்திருக்கிறார்!?...

பங்கெடுத்து வாக்களித்தவர்கள்....

தமது தாய் நாட்டையே தாயின் கோலத்தில் பார்க்கும் நம்
மண்ணின் மைந்தர்கள்  என்பது தான் வெட்கக்கேடு....ஆங்கிலப்
பத்திரிகை நடத்தும் அயோக்கியர்கள் பெண்ணில்லாமல் சுயம்பாய் வந்தவர்களா?

இல்லை பெண் என்றாலே வக்கிரமாய்ப் பார்க்கும் மன நோயாளிகளா?

வெள்ளைக் கலாச்சாரம் கொள்ளை கொள்வது எதை?

விவேகானதர் சொன்னார்.. மேலை நாடுகளிலே ஒரு நாள்
தொடர்ந்து அழுகுரல் கேட்கும் என்றார்... கீழை  நாடுகளிலும் அது
தொடர்ந்தே ஒலிக்கும் என்பதில் ஐயமில்லை....

நம்மைப் பெற்றவளும், நம்மொடுப் பிறந்தவளும் பெண்தானே, நாம் பெற்றாலும் அது பெண்தானே?

அபிராமி பட்டராக இருக்க வேண்டாம், சுத்தானந்த பாரதியாக
இருக்க வேண்டாம்... ஒரு நல்ல மகனாக,  தமையனாக, தந்தையாக இருக்கலாமே?

நமது முன்னோர்களின் அறவுரைகளை இந்தத் தருணத்திலே சற்று
திருப்பிப் பார்ப்போம்!!

பெருவாயின் முள்ளியாரின் ஆசாரக்கோவை
(கடைச்சங்க காலத்தை சேர்ந்த பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில்
ஒன்று ஆசாரக்கோவை)

ஒழுக்க மற்றவை
சுடரிடைப் போகார் சுவர்மேல் உமியார்
இடரெனினும் மாசுணி கீழ்தம்மேற் கொள்ளார்
படைவரினும் ஆடை வளியுரைப்பப் போகார்
பலரிடை ஆடை உதிராரே என்றும்
கடனறி காட்சி யவர்.


நரகத்துக்குச் செலுத்துவன
பிறர் மனை கள்களவு சூது கொலையோடு
அறனறிந்தார் இவ்வைந்து நோக்கார் - திறனிலரென்று
எள்ளப் படுவதூஉம் அன்றி நிரயத்துச்
செல்வழி உய்த்திடுத லால்.


தனித்திருக்கக் கூடாதவர்

ஈன்றாள் மகள்தம் உடன்பிறந்தாள் ஆயினும்
சான்றார் தமித்தா(க) உறையற்க ஐம்புலனும்
தாங்கற்கு அரிதஆக லான்.


“ பெற்றவள், தாம் பெற்ற மகள், உடன் பிறந்த சகோதிரி என்றாலும் ஒரே இடத்தில்  தனியாக உறக்கம்  கொள்ளக் கூடாது”

ஐம்புலன்களில் எது எப்படிக் கெடும் என்பதை யாரறிவார்?

ஆக, ஒவ்வொருவருக்கும் முதல் உரிமை தாய், அடுத்து மகள் கடைசியாக உடன் பிறந்த சகோதரி என்று இதில் வகை படுத்தியதையும் காணலாம்... எவ்வளவு உரிமை இருந்தாலும்... செய்யத் தாகாதன என புலவர் கூறியதை
மனதில் கொள்ள வேண்டும்...

“பண்பெனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்” - கலித்தொகை.

இங்கே பண்பையும் பாடறிந்து ஒழுகும் தன்மையையும், அதன் உண்மையையும் இந்த உலகிற்கு கூறியவன் தமிழன் தான்...   

தமிழில் இல்லாதது ஏதும் இல்லை. இவை எக்காலத்திற்கும்
பொருந்தும். பல சூழலில் ஆசையின் பொருட்டு பெண்ணிற்கு
பெண்ணே தீங்கிளைத்தாலும், மகாகவியின் ஆதங்கத்தை பார்ப்போம்.

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி
பேணி வளர்த்திடும் ஈசன்;
மண்ணுக் குள்ளே சிலமூடர் - நல்ல
மாத ரறிவைக் கெடுத்தார்.

கண்கள் இரண்டினில் ஒன்றைக் - குத்திக்
காட்சி கெடுத்திட லாமோ?
பெண்க ளறிவை வளர்த்தால் - வையம்
பேதைமை யற்றிடுங் காணீர்.


அந்த மகாகவியே மேலும் கூறுகிறான்....

பெண்மை வாழ்கென்று கூத்திடு வோமடா!
பெண்மை வெல்கென்று கூத்திடு வோமடா!
தண்மை இன்பம்நற் புண்ணியஞ் சேர்ந்தன
தாயின் பெயரும் சதியென்ற நாமமும்.

அன்பு வாழ்கென் றமைதியில் ஆடுவோம்.
ஆசைக் காதலைக் கைகொட்டி வாழ்த்துவோம்;
துன்பம் தீர்வது பெண்மையி னாலடா!
சூரப் பிள்ளைகள் தாயென்று போற்றுவோம்.

வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா!
மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்;
கலிய ழிப்பது பெண்க ளறமடா!
கைகள் கோத்துக் களித்துநின் றாடுவோம்.

பெண்ண றத்தினை ஆண்மக்கள் வீரந்தான்
பேணு மாயிற் பிறகொரு தாழ்வில்லை!
கண்ணைக் காக்கும் இரண்டிமை போலவே
காத லின்பத்தைக் காத்திடு வோமடா.

சக்தி யென்ற மதுவையுண் போமடா!
தாளங் கொட்டித் திசைகள் அதிரவே,
ஓத்தி யல்வதொர் பாட்டும் குழல்கழும்
ஊர்வி யக்கக் களித்துநின் றாடுவோம்.

உயிரைக் காக்கும்,உயரினைச் சேர்த்திடும்;
உயிரினுக் குயிராய் இன்ப மாகிடும்;
உயிரு னும்இந்தப் பெண்மை இனிதடா!
ஊது கொம்புகள்; ஆடு களிகொண்டே.

'போற்றி தாய்' என்று தோழ் கொட்டி யாடுவீர்
புகழ்ச்சி கூறுவீர் காதற் கிளிகட்கே;
நூற்றி ரண்டு மலைகளைச் சாடுவோம்
நுண்ணி டைப்பெண் ணொருத்தி பணியிலே.

'போற்றி தாய்' என்று தாளங்கள் கொட்டடா!
'போற்றி தாய்' என்று பொற்குழ லூதடா!
காற்றி லேறியவ் விண்ணையுஞ் சாடுவோம்
காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே.

அன்ன மூட்டிய தெய்வ மணிக் கையின்
ஆணை காட்டில் அனலை விழுங்குவோம்;
கன்னத் தேமுத்தம் கொண்டு களிப்பினும்
கையைத் தள்ளும்பொற் கைகளைப் பாடுவோம்.

பாழும் சமூகம் இன்று எதைச் சொல்கிறது பாருங்கள்....

எந்த நடிகையை நிர்வாண ஓவியத்தை பார்க்க ஆசை? கருத்துக்
கணிப்பு முடிவின்படி, 40 சதவீத ஓட்டுக்கள் பெற்று ஐஸ்வர்யா ராய்
முதலிடம் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக பிரியங்கா
சோப்ரா 30 சதவீதவாக்குகள் பெற்றிருக்கிறார். ரேகா 14 சதவீதமும், வித்யாபாலன் 13 சதவீதமும், கரீனா கபூர் 12 சதவீதமும், மலாய்கா
அரோரா, அனுஷ்கா சித்ராங்கடா தலா 1 சதவீதமும் ஓட்டுக்கள்
பெற்றுள்ளனர்.

சரி, இந்த செய்தியைத் தந்த தினமலர் என்ன சொல்கிறது பாருங்கள்....

“நம்ம ஊர் த்ரிஷா உள்ளிட்ட நடிகைகளை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளவில்லையா? அல்லது ஓட்டுக்கள்  விழவில்லையா?
என்பது பற்றி விவரங்கள் வெளியாகவில்லை."

இதை வெளியிட்ட தினமலர் எந்த கண்டனமும் தெரிவிக்கவில்லை ?

பாவம் அதனின் ஆதங்கம் அது!

ஆமாம்.. நடிகைகள் தானே.... என்பது அல்ல... அவளும் ஒருவனின்
மகள், இன்னொருவனின் மனைவி, வேறொருவனுக்கு தாய்.... இப்படிக் கண்டால் உண்மை புரியும்...

இந்தப் பெரும் வியாதி எங்கும் பரவினால்.... இப்படிப்பட்ட மன
நோயாளிகள் எங்கும் நிறைந்திருந்தால் என்ன  ஆகும்? வாருங்கள்!!!
உங்கள் கருத்தைச் சொல்லுங்கள்???

நன்றி,
அன்புடன்,
ஆலாசியம் கோவிந்தசாமி
சிங்கப்பூர்


வாழ்க வளமுடன்!

29.4.11

பகவானுக் கடிதம் எழுதினேன் பலனே பதிலாய் வந்தது.

----------------------------------------------------------------------------


வெள்ளி மலர்
இன்றைய வெள்ளி மலரை மூவரின் ஆக்கங்கள் அலங்கரிக்கின்றன. படித்து மகிழுங்கள்
அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------------------------------------------

1
பகவானுக் கடிதம் எழுதினேன் பலனே பதிலாய் வந்தது.

1982 - ஆம் ஆண்டு எனது இரண்டாவது மற்றும் மூன்றாவது சகோதிரிகளுக்கு  மூன்று மாத இடைவெளியில் திருமணம் நடக்க இருந்தது.

அப்போது வீட்டில் எப்போதும் அவர்களின் கல்யாண ஏற்பாடுகள் அதாவது சீர் வரிசை, நகை நட்டு என்ற பேச்சுக்கள் தான் நடந்த கொண்டிருந்தன... எனக்கு அப்போது பதினோரு வயது தான், சிறு பிள்ளையாக இருந்தாலும்; எனது பேச்சும் செயலும் நடவடிக்கையும் வயதிற்கு மீறியதாக சற்று முதிர்ந்ததாகவே இருக்கும்.

என்னைவிட வயதில் மூத்தவர்களிடம் எனது கவனம் அதிகம் இருக்கும்; இன்னும் சொல்லப் போனால் அவர்களுடன் பேசிப் பழகுவதில் தான் அதிக நாட்டமும் இருக்கும். அது ஏனோ என்று பின்னாளில் நான் அதைப் பற்றிய சிந்தனையில் பல நேரம் இருந்திருக்கிறேன். சில நேரங்களில்... ஒரு வேலை நான் எனது தந்தையாரின் 41-வது வயதில் பிறந்ததால் இருக்குமோ? என்றும் கூட நினைத்தது உண்டு!?. அதுவும் சரியாகத் தான் இருக்கும் என்று வேறொரு சமயம் நான் மகாத்மா காந்தியைப் பற்றி படிக்கும் போது அறிந்து கொண்டேன்.

"மகாத்மாவிடம் ஒரு நிருபர் கேட்டாராம் உங்கள் இரு ஆண் பிள்ளைகளில் ஒருவர் உங்களிடம் இருந்து முற்றிலும் மாறுபடுகிறாரே? என்று. அதற்கு மகாத்மா, ஆமாம் உண்மை தான் ஒருவர் நான் மிருகமாக இருக்கும் போது பிறந்தார்... மற்றொருவர் நான் மனிதனாக இருக்கும் போது பிறந்தார் என்றாராம்" ஹரே ராம் இதில் தான் எத்தனைக் கருத்து பொதிந்துள்ளது...

இது போன்ற அனுபவங்கள் பலருக்கும் இருக்கலாம்... இருந்தும் சில நேரங்களில் மறந்தும் போகலாம்... இது இளையோருக்கு பயன் படட்டும்...

நான் எனது மகனைப் பெற்றெடுக்க எண்ணி இருந்த போது தெய்வ சிந்தனையோடு இருந்தேன்... அன்று வியாழன்! எனக்கு நன்கு ஞாபகம் இருக்கிறது... உண்மையில் எனது மகன் இன்றுவரை அவனது பத்தாவது வயது வரை ஒரு முறை கூட என்னை கோபத்திற்கு ஆளாக்கியதே இல்லை (மேஷ ராசி இரண்டில் செவ்வாய் உட்சம் கோபம் கடலெனப் பெருகும் என்னிடத்தில், அதனால் தான் கூறுகிறேன் ).. எனது சுண்டு விரல் கூட அவனின் மேல் கோபத்தில் அழுந்தியதில்லை... போகப் போகத் தான்; இன்னும் புரியும், தெரியும்!!???...

இருந்தும் என்னைப் போலே (நான் சிறுவயதில் இருந்ததைப் போல்) அவனும் இப்போதே பெரிய மனிதனை போல பழகுகிறான் என்று அவனின் நண்பர்களின் சில பெற்றோரிடம் புகாரைப் / பாராட்டையும் பெறுகிறான். அதை என்னால் உணர முடிகிறது...

(மன்னிக்கணும் கொஞ்சம் தூக்கலான சுயபுராணம் இருந்தும்.... பாயாசத்தில் வாசனைக்காக கலக்கும் பச்சைக் கற்பூரத்தைப் போல கொஞ்சமாகவே இருக்கும் படிப் பார்த்துக் கொள்கிறேன்).

வழக்கமாக துன்பத்தில் நாம் நம்மை அறியாமலே தெய்வத்தை அழைப்போம். அது இயற்கை, நான் பெரும்பாலும் எனது இன்பத்தில்; நான் இன்பமாக உணரும் ஒவ்வொரு தருணத்திலும் அந்த ஆண்டவனுக்கு நன்றியைக் கூறுவேன்... அது படைத்தவனிடம் நன்றி பாராட்டுவது என்றாலும் கூட! அதுவே நாம் அனுபவிக்கும் அந்த இன்பம் சாத்தியமானதா???? என்று எண்ணிப் பார்க்கவும் செய்யும் என்பது எனது கருத்து!!!....

என் பெற்றோருக்கு நான் எட்டாவதாகப் பிறந்து உயிரோடு இருக்கும் ஒரே ஒரு ஆண் பிள்ளை..... தவமாய் தவமிருந்து என்னைப் பெற்றார்களாம் (ஆமாம் நாகூர் ஆண்டவருக்கு கூட முடி காணிக்கை செலுத்தவேண்டும் / பாத்தியா ஓதவேண்டும் என்று என் அம்மா சொல்லி இருக்கிறார்கள்)

சரி விசயத்திற்கு வருவோம்... வீட்டில் கல்யாணச் செலவிற்கான பணப் பிரச்சனை ஓடிக் கொண்டிருக்கிறது... அப்பாவின் மத்திய சேம நிதியில் கடன் (சி.பி.எப் லோன்) பெற படிவத்தை நிரப்பி அதனுடன் முகூர்த்தப் பத்திரிக்கையையும்  இணைத்து அனுப்பி ஒரு மாதங்கள் கழிந்தும் எந்த பதிலும் இல்லை.... அது அப்படி இருக்க....

எனது பள்ளியில் உயர்நிலை வகுப்பில் அறிவியல் பாடம் எடுக்கும் ஆசிரியை செல்வி. ஆனந்தம், ஆமாம் அந்த ஆசிரியை திருமணமே செய்து கொள்ளாதவர். தஞ்சையில் இருந்து வந்து எங்கள் ஊரில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்கள். அவர்களுக்கு அப்போது வயது ஒரு முப்பத்தைந்து இருக்கும் என நினைக்கிறேன்... அந்த ஆசிரியை எங்கள் வீட்டிற்கு இரண்டு வீடு தள்ளி தான் தங்கி இருந்தார்கள்.

ஆக, ஆசிரியை தனியாக இருந்ததால் அவர்களுக்கு துணையாக இரண்டு சிங்கங்கள் காவல். வேறு யாரும் அல்ல இந்த ஹாலாஸ்யமும் எனது நண்பன் செல்வக்குமாரும் தான்.

தினமும் பள்ளி முடிந்து சாயங்காலம் கைகால் முகமெல்லாம் சுத்தம் செய்து புத்தகத்தை எடுத்துக் கொண்டு ஆசிரியையின் வீட்டிற்கு சென்று விடுவோம். அங்கே ஆசிரியை எங்களுக்கு பாடம் சொல்லித் தருவதோடு வேறு பல நல்ல விசயங்களையும், கதைகளையும் சொல்லித் தருவார்கள்.

அப்படித்தான் ஸ்ரீ சீரடி சாய் பாபாவின் வாழ்க்கை வரலாற்றை அறியலானேன். அதைத் தொடர்ந்து பகவான் ஸ்ரீ சத்திய சாய்பாபாவின் வரலாற்றையும் அறியலானேன்.

அதன் பின்பு நான் விஷ்ணு அவதாரங்கள், என்று கூறப்பட்ட பாபாக்களின் தீவிர பக்தனானேன். தினமும் சாயங்காலம் ஆசிரியையின் வீட்டில் வழிபாடு செய்வோம், அதிலும் குருவாரம் நடப்பது தான் சிறப்பு பஜனை. சுவாமியின் படத்தில் ஏதாவது அற்புதம் நடக்கிறதா என்று நாள் தோறும் பார்ப்பது வழக்கம். சில மாற்றங்களை கண்டு பூரிப்போம். காண்பவரே சந்தேகம் கொள்வது இயற்க்கை; அப்படி இருக்க கண்டவர் கூறினால் நம்புவது கடினம் தான்.

இரவு சாப்பாட்டிற்கு வீட்டிற்கு வந்துவிட்டு ஆசிரியையின் துணைக்கு அவரின் வீடு சென்று… பக்தி, படிப்பு, தூக்கம் என்று சென்று கொண்டிருந்தது.

அப்போது தான், என் சகோதிரிகளின் திருமணப் /  குடும்ப பணப் பிரச்னையை எப்படியோ அறிந்திருந்த ஆசிரியை என்னிடம் தீர விசாரித்து; அது தீர பாபாவிடம் நீ மனம் உருகி வேண்டிக்கொள் என்றார்கள். சரி என்று அப்படியே செய்தேன்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்த நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்த நேரத்தில் நடந்த ஒரு சுவாரஸ்யமான விஷயம்...

அது ஒரு வெயில் காலத்து இரவு, எங்கள் வீதியில் (ஹவுசிங் யூனிட்) பெரும் பாலானோர் பெரியவர்களும், பெண்டிரும் வாசலில் வந்து படுத்து உறங்குவது வழக்கம். எங்களின் பெரியக் குடும்பம்... வயது வந்த எனது அக்காக்கள் நான்கில் மூவர், நான் எனது பெற்றோர்......வழக்கமாக இரவில் அனைவரும் படுக்கைக்குச் செல்ல தாமதமாகும். அந்த நேரங்களில் நான் வீட்டு வாசலில் இருக்கும் பட்டியல் கல்லில் சென்று உறங்கிவிடுவேன்; இரவு அனைவரும் படுக்க, படுக்கைத் தயாராகிய பிறகு என் தாயார் வந்து என்னை எழுப்பி வீட்டிற்கு அழைத்துச் செல்வார்கள்...

அப்படி ஒரு நாள் என்னை எழுப்பி விட்டு என் அம்மா வீட்டிற்குள் சென்று என்னை பார்த்தால் நான் காணவில்லை... மாறாக நான் எதிர்த்த வீட்டின் வாசலை நோக்கி போய்க் கொண்டிருக்கின்றேன்... அப்போது அங்கு வாசலில் படுத்திருப்பவர்கள்... தூக்கத்திலே நடந்து வந்த என்னைப் பார்த்து ஆலாசியம் என்ன வேண்டும் என்று கேட்க... நான் அவர்களிடம் எங்கள் வீட்டு தங்க விசிறியைத் தாருங்கள் என்றுக் கூற அவர்கள் அனைவரும் என்னது தங்க விசிறியா?? என்று பெரிதாக சிரிக்கவும், எனது தாயாரும் என்னை பின் தொடர்ந்து வந்து இதைக் கண்டு அவர்களும் சிரிக்கவும்... எனக்கு சுய நினைவு வரவும் சரியாக இருந்தது.... நான் வெட்கப் பட்டுக் கொண்டு வீடு திரும்பினேன்.... ஆழ் மனதில் இந்தத் தங்கம் படுத்திய பாடு தான் அது.... ஆசிரியைக்கு துணைக்கு செல்பவன் வீட்டில் எப்படி என்கிறீர்களா?.... ஆசிரியை மாதத்தில் ஒரு சனி ஞாயிறு ஊருக்கு (தஞ்சை என்று நினைக்கிறேன்) அவர்களின் சித்தப்பா வீட்டிற்கு சென்று விடுவார்கள்.....

அந்த அளவிற்கு வீட்டின் பிரச்சனையில் எனது கவனம் இருந்திருக்கிறது... இதை இன்றும் சில நேரங்களில் சகோதிரிகளுடன் இருக்கும் பொது சொல்லிச் சிரிப்பது வழக்கம்.... சரி கதைக்கு வருவோம்....

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அப்படித்தான், அன்று பாபாவின் படத்திற்கு முன்பு நான் கும்பிடும் போது அங்கே புதிதாக வந்திருக்கும் சஞ்சிகையைக் கண்டேன். மாதம் ஒரு முறையோ, இருமுறையோ சரியாக ஞாபகம் இல்லை.... பகவான் சத்திய சாய்பாபா ஆசிரமத்தில் இருந்து ஆசிரியையின் வீட்டிற்கு பக்தி தாங்கிய சிறிய சஞ்சிகை வரும்.

அப்போது, அதை கண்ணுற்ற எனக்கு ஒரு சிந்தனையும் தோன்றிற்று. உடனே நானும் ஆசிரியையிடம்  சென்று... டீச்சர் நான் பாபாவைக் கும்பிடுவதோடு இருக்காமல்; நான் அவருக்கே எனது பிரச்னையை தபாலில் எழுதி அனுப்பினால் நன்றாக இருக்குமே! என்றேன்.

அதற்கு வழக்கமாக அமைதியான புன்னகையுடன் சிறிது புன்முறுவலோடு......

(இதை எழுதும் போது என் கண்கள் பனிக்கிறது... டீச்சர் நீங்கள் எங்கு இருக்கிறீர்களோ? நான் உங்களின் நினைவை சுமந்துகொண்டே தான் இருக்கிறேன்!! கடைசியாக நீங்கள் மாறுதலாகிப் போகும் போது நான் கண்ணீரோடு உங்களைப் பிரிந்தது என் மனதில் இன்றும் ஈரமாகவே இருக்கிறது. இனியும் நான் உங்களை இந்த ஜென்மத்தில் சந்தித்து ஆசி பெறுவேனா? என்று ஏக்கம் மேலிடுகிறது.. எங்கிருந்தாலும் என்னையும் என் மனைவி மக்களையும் ஆசிர்வதியுங்கள்)
………..சற்று கலங்கி விட்டேன்... புன்முறுவலோடு என்னை அனுமதித்தும் சஞ்சிகையின் அனுப்புனர் முகவரியை குறித்துக் கொள்ளவும் சொன்னார்கள். நானும்

பகவான் ஸ்ரீ சத்திய சாய்பாபா,
பிரசாந்தி நிலையம்,
புட்டப் பருத்தி - அஞ்சல்,
அனந்தப்பூர் மாவட்டம்,
ஆந்திரப் பிரதேசம்.

என்று ஆங்கிலத்திலே குறித்துக் கொண்டேன். பிறகு வீட்டிற்கு வந்து எனது தாயாரிடம் விவரத்தைக் கூறினேன். அவர்களும் அப்படியாவது பிரச்சனை தீர பணம் உடனே வராதா! என்ற எண்ணத்தோடு என்னை எழுதச் சொல்லி தபால் செலவிற்கும் ஒரு ரூபாய் தந்தார்கள்.

உடனே, ஒரு வெள்ளைத் தாளில் பிள்ளையார் சுழி போட்டு.. பகவான் ஸ்ரீ சத்திய சாய்பாபா அருள் என்றும் எழுதி எனது பிரச்சனைகளையும், அதோடு மற்ற விவரகளுடன் எனது தந்தையாரின் சி.பி.எப் அக்கவுன்ட் எண்ணையும் மற்றும் அவரின் மற்ற விவரங்களையும்  எழுதி எங்களது சிரமம் தீர தாங்கள் தான் அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொண்டு தபாலையும் அனுப்பினேன்.

ஒரு வாரம் தான் ஆகி இருக்கும்..... கேசியர் ஆபத் சகாயம் அவர்கள் அப்பாவை வரவழைத்து விவரத்தைக் கூறியதோடு அல்லாமல். இது எப்படி சாத்தியம்.. வழக்கமாக இவ்வளவு சீக்கிரம் கடன் கிடைக்காதே?.. இருந்தும் எப்படியோ ஆண்டவனின் அருளால் உங்கள் விசயத்தில் விரைவாகவே கிடைத்துள்ளது என்றுக் கூறி ஆச்சரியமும் சந்தோசமும் கொண்டார் என்று அப்பாவும் ஆச்சரியத்துடன் அம்மாவிடம் கூறியிருக்கிறார்கள்.

நான் பள்ளியில் இருந்து திரும்பினேன் எனது பாபாவின் படத்திற்கு மல்லிகை சரம் சூட்டி அவரின் முன்பு விளக்கு ஏற்றி.. புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மன் கோவில்  தசாங்கமும் தனது மணத்தை வீடெங்கும் பரப்பிக் கொண்டிருந்தது.

எனக்கு ஆச்சரியம் மேலிட.... அம்மா! அம்மா!! என்னாயிற்று இன்றைக்கு, ஏதோ அதிசயம்! நம் வீட்டில் நடக்கிறது என்றேன். ஆமாம் அப்பா…. நமது பாபாவின் அருள் தான் அந்த அதிசயம் என்று அத்தனையும் விளக்கினார்கள்.

பிறகு உடனே நானும் என் அம்மாவும் சென்று ஆசிரியையிடமும் கூறி அவர்களையும் சந்தோசத்தில் ஆழ்த்தினோம். பிறகு வீட்டில் அனைவருமே பாபாவையும் சேர்த்து வணங்கலானோம்.

1926-ல் அவதாரம்: புட்டபர்த்தியில் 1926-ம் ஆண்டு ஸ்ரீ சாய் பாபா அவதாரம் செய்தார். அப்போது அவருடைய பெற்றோர் அவருக்கு இட்ட பெயர் சத்ய நாராயண ராஜு. சத்யம், சிவம், சுந்தரம் என்ற தத்துவங்களுக்கு இலக்கணமாக வாழ்ந்த பாபா தன்னுடைய பக்தர்களுக்காக காற்றிலிருந்து விபூதி வரவழைப்பது, லிங்கங்களை வரவழைத்துத் தருவது போன்ற சித்து வேலைகளைச் செய்வார். அதைத்தான் அவருடைய விமர்சகர்கள் மிகப்பெரிய குறையாகச் சொன்னார்கள். ஆனால் பாபாவின் அருளாசியால் தங்களுக்கு நேர்ந்த சங்கடங்களிலிருந்தும், நோய்களிலிருந்தும் மீண்டதால் அவரை அவதார புருஷனாகவே மக்கள் பார்த்தனர். படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை, பாரதவாசிகள் முதல் படித்த வெளிநாட்டவர் வரை அவருடைய சீட கோடிகளின் எண்ணிக்கையும் தரமும் அனேகம்.

 பாபா மறையவில்லை. கோடிக்கணக்கான சீடர்களின் நெஞ்சங்களில் வாழ்கிறார். அடுத்து பிரேம சாயாக கர்நாடக மாநிலத்தின் மண்டியா மாவட்டத்தில் அவதரிப்பேன் என்று கூறியிருக்கிறார். சாய் பக்தர்கள் நம்பிக்கையோடு காத்திருப்பார்கள் அவரைத் தரிசித்து ஆசி பெற. உலகம் முழுவதும் மூன்று கோடி பக்தர்கள் தங்களது வாழும் தெய்வமாகக் கருதி வந்த சத்ய சாய் பாபா பருவுடல் நீத்தபோதிலும் அவரது பக்தர்களைப் பொருத்தவரை அவர் ஆன்மா எப்போதும் துணை நின்று வழிநடத்தும் என்ற நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள்.  உலகம் முழுவதும் பக்தர்களைப் பெற்றிருப்பது அத்தனை சுலபம் அல்ல. அதிலும், அறிவுஜீவிகளையும் மிக உயர்ந்த பதவிகளில் உள்ள மெத்தப்படித்த மனிதர்களையும் பக்தர்களாக ஆட்கொள்ள முடிந்தது என்றால் அது அவ்வளவு எளிதான செயல் அல்ல. ஆனால், அதை நிகழ்த்திக்காட்டியவர் சாய் பாபா.

தொடர்ந்து ஐந்து ஆண்டுகள்கூட மக்களின் நன்மதிப்பையும், நம்பிக்கையையும் பொதுவாழ்க்கையில் ஈடுபட்ட நமது அரசியல் தலைவர்களால் தக்க வைத்துக் கொள்ள முடியாத ஒரு காலகட்டத்தில், ஏறத்தாழ 70 ஆண்டுகள் தனது பக்தர்களின் மனங்களில் சிம்மாசனமிட்டுத் தொடர்ந்து வழிகாட்டி வந்தார் என்றால், அதை நாம் வசியம் என்றோ மேஜிக் என்றோ தள்ளிவிடவா முடியும்?

பிற உயிர்களுக்கு துன்பம் செய்யாமல் இருப்பதோடு, துன்பத்தில் துடிக்கும் உயிர்களுக்கு உதவி செய்வதற்காகத் தொடங்கியதுதான் புட்டபர்த்தி மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் இலவச மருத்துவ சிகிச்சைபெற்றுக் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை பல லட்சம். இந்த மருத்துவமனையில் சேவை செய்த சாய் மன்றத் தொண்டர்களும் பல லட்சம். இந்தச் சேவையின் பலனைத் தான் மட்டுமே பெறுவதாக இல்லாமல், இதில் அத்தனை தொண்டர்களுக்கும் பங்கிருப்பதாக மாற்றியதால்தான் அவரது அறக்கட்டளை இன்று ரூ. 40,000 கோடிக்கு மதிப்பிடப்படுகிறது.

 "உற்றநோய் நோன்றல், உயிருக்கு உறுகண் செய்யாமை அற்றே தவத்திற்கு உரு' என்கிறது வள்ளுவம். அதாவது ஏற்பட்ட துன்பத்தைத் தாங்குதல், துன்பம் ஏற்பட்டதற்காகவோ அல்லது ஏற்படுத்தியவர்கள் மீதோ தான் துன்பம் செய்யாதிருத்தல் ஆகிய இரண்டும் தவத்தின் வடிவம் என்கிறார் வள்ளுவர். அந்த வழி வாழ்ந்தவர்கள், கடந்த 50 ஆண்டுகளில் இருவர்தான். ஒன்று காஞ்சி சங்கர மடத்தின் பரமாச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். அடுத்ததாக சத்ய சாய் பாபா.******

சாய்பாபா தன்னுடைய வாழ்நாளில் தன்னுடைய பக்தர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஒழுங்கு, கட்டுப்பாடு, உணர்ச்சிகளுக்கு ஆள்படாமை, பிறருக்கு உதவுதல், அமைதி காத்தல் ஆகியவற்றை அவருடைய பக்தர்கள் கடைப்பிடிப்பார்கள் என்பதால் எத்தனை ஆயிரம்பேர் வந்தாலும் சமாளித்துவிட முடியும் என்று மாவட்ட நிர்வாகம் நம்பிக்கையுடன் இருக்கிறது.

நன்றி தினமணி.

"செயற்கரிய செய்வார் பெரியர்"

பகவான் ஸ்ரீ சத்யா சாய்பாபாவினை நாம் நன்கு அறிவோம்.... அவரின் அறிய தொண்டை இந்த உலகம் நன்கு அறியும். இந்த தருணத்திலே; இறைவனோடு அவர் கலந்த தருணத்திலே,  நான் அவரை நன்றியோடு நினைந்து வணங்குகிறேன்.

நன்றி வணக்கம்.
ஆலாசியம் கோவிந்தசாமி,
சிஙகப்பூர்




ஒரு மாறுதலுக்காக கட்டுரையாளரின் படத்தைப் போடாமல், அவருடைய செல்வத்தின் படம் போடப்பட்டுள்ளது. 
முதல் படம், சிறுவனின் 3 வதுப் புகைப்படம். 
அடுத்தபடம் 10 வயதில் சமீபத்தில் எடுக்கப்பெற்றது
பெயரா? கோவிந்தசாமி சுதன் ஆலாசியம்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
2.
நரியைப் போல் தின்று, நாயைப்போல் தூங்கியவர்!

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்ஸருக்கு இளைஞர்களாக 16 பேர் சீடர்களாகக் கிடைத்தார்கள்.எல்லோருமே அந்தக் காலத்தில் கொல்கத்தாவில் ஆங்கிலப் பள்ளிகளில்,கல்லூரிகளில் படித்தவர்கள்.ஸ்ரீ ராமகிருஷ்ணர் அவர்களுக் கெல்லாம் முறைப்ப‌டி சன்னியாசம் கொடுக்கவில்லை. தன் மறைவுக்குச் சில நாட்களுக்கு முன்னர் காவி வஸ்திரத்தை மட்டும் தன் கையால் எடுத்துக் கொடுத்தார்.

அவருடைய மறைவுக்குப் பின்னர் இந்த இளைஞர்கள் கூடித் தாங்களாகவே விரஜா ஹோமம் செய்து சன்னியாசத்தை மேற்கொண்டனர். இதற்குத் தலைமை ஏற்று எல்லோருக்கும் அவர்களுடைய குண இயல்புக்கேற்ற சன்யாசப் பெயரைக் கொடுத்தவர் சுவாமி விவேகான்ந்தரே ஆவார்.அப்படி பெயர் கொடுக்கப்பட்டவர்களில் ஒருவர் அற்புதானந்தர்!

எல்லா சீடர்களும் ஆங்கிலம் பயின்றவர்கள் என்று நான் கூறியதில் ஒரு மாற்றம்.பிற்காலத்தில் சுவாமி அற்புதானந்தர் என்று பெயர் பெற்ற லாட்டு மஹராஜ் எழுதப் படிக்கத் தெரியாதவர். சரியாகப் பேசக்கூட வராது.நரேந்திரர் என்ற பெயர் கொண்ட விவேகானந்தரை எல்லோரும் 'நரேன்' என்று கூப்பிடுவார்கள்.லாட்டு அவர்களுக்கு அப்படிக் கூப்பிட வராது.அவர் விவேகானந்தரை 'லொரேன் பாய்' என்றே கூப்பிடுவார்.

ஸ்ரீராமகிருஷ்ணரின் ஓர் இல்லறச் சீடர் வீட்டில் எடுபிடி ஆளாக லாட்டு இருந்துள்ளார். அடிக்கடி அந்த இல்லறச் சீடர் வீட்டிலிருந்து   ஸ்ரீராம கிருஷ்ணருக்கு ஏதாவது சிறப்புத் தின்பண்டங்கள், தோட்டத்தில் காய்த்த பழம்,காய், பூக்கள் ஆகியவை அனுப்பி வைப்பார்களாம். அதனைக் கொண்டு சேர்ப்பது லாட்டுஜிதான்.அப்படித்தான் குருதேவரிடம் லாட்டுஜிக்குப் பழக்கம். சீடனின் நல்லியல்பைக் குரு கண்டு கொண்டார்.சீடனுக்கு அருள் புரியத் திருவுள்ளம் கொண்டார். தன் இல்லறச் சீடரிடம் பேசி லாட்டுஜியைத் தன்னுடனேயே வைத்துக் கொள்ள அனுமதி பெற்றார்.அது முதல் ஸ்ரீ ராமகிருஷ்ணரின் மெய்க்காப்பாளராக லாட்டுஜி விளங்கினார்.

லாட்டுஜி எழுதப் படிக்கத் தெரியாத கிராமத்து ஆள். கட்டுமஸ்தான உடல்வாகு கொண்டவர். நல்ல உடல் உழைப்புக் கொடுக்கக் கூடியவர். அதனால் நன்கு சாப்பிடக் கூடியவர்.தூக்கமும் அப்படியே.சீடனை இந்தத் தாமச உணர்விலிருந்து வெளியில் கொண்டு வரக் குருதேவர் ஒரு நாள்,

"ஏய் லாட்டு!என்ன நீ நரியைப் போல் தின்கிறாய். நாயைப்போல் தூங்குகிறாய்"

என்று கண்டிக்கும் குரலில் சொன்னாராம். அந்த சமயத்தில் இருந்து அவர் சாப்பாடு வேண்டும் என்று கேட்பதை நிறுத்தி விட்டாராம்.யாராவது அவருக்குத் தாங்களாகவே முன் வந்து உணவு அளித்தாலே சாப்பிடுவாராம்.அதேபோல தூங்குவதற்காகப் படுப்பதையும் விட்டு விட்டாராம் எப்போதும் அமர்ந்த கோலத்திலோ அல்லது நின்ற கோலத்திலோதான் அவரைப் பார்க்க முடியுமாம். அவர் படுத்துக் கொண்டு அதன் பின்னர் யாருமே பார்க்கவில்லயாம்.

ஸ்ரீராமகிருஷ்ணருக்கு வங்க மொழி எழுதப் படிக்கத் தெரியும். தூய அன்னை சாரதாமணி தேவியாருக்குக் குருதேவர்தான் வங்க மொழி சொல்லிக் கொடுத்தார். அது போலவே லாட்டுஜிக்கும் வங்க மொழி கற்பிக்கக் குருதேவர் முயன்று பார்த்துத் தோல்வி அடைந்தாராம்.

"அந்த சரஸ்வதி தேவியே வந்தாலும் உனக்குப் பாடத்தை மண்டையில் ஏற்ற முடியாதப்பா!" என்று சொல்லிவிட்டு குருதேவர் லாட்டுவுக்கு கற்பிப்பதைக் கைவிட்டு விட்டாராம்.

ஸ்ரீ ராமகிருஷ்ணர் எந்த அற்புத்தத்தினையும் செய்யவில்லை என்று பலரும் சொல்லக்கேட்ட விவேகானந்தர்,

"ஏன் செய்யவில்லை? லாட்டுஜியை ஒரு மகானாக உருப் பெறச் செய்தவர் குருதேவரே! அதுவே அவர் செய்த அற்புதம்!"என்று கூறுவாராம்.

அதனாலேயே லாட்டுஜிக்கு சன்னியாச நாமமாக சுவாமி அற்புதானந்தர் என்ற திருப் பெயர் சூட்டியுள்ளார் விவேகானந்தர்!

சுவாமி விவேகானந்தர் உலகம் முழுவதும் சுற்றி வந்த பின்னர், அமைப்புக்கள் இல்லாததே இந்து மதத்தின் ஒரு குறை என்று நினைத்தார். எனவே தான் அமைப்பு ரீதியாகச் செயல் பட விழைந்தார். எனவே மடம், மிஷன் ஆகியவற்றைத் துவங்கினார்.அமைப்பு என்றாலே சட்டதிட்டங்கள் வந்து விடுமல்லவா?

மடத்தில் காலையில் 4 30க்கு மணியடிக்கப்படும்.எல்லோரும் எழுந்து தயாராகி 5 மணிக்குத் தியான மண்டபத்திற்கு வர வேண்டும். 5 முதல் 6 வரை தியானம். மீண்டும் 6 மணிக்கு மணியடித்தால் தியானம் கலைய வேண்டும்.... இப்படிக் காலை முதல் மாலை வரை திட்டம் தீட்டி எல்லோருக்கும் அறிவுறுத்தப் பட்டது. லாட்டு மஹராஜுக்கும் சொல்லப்பட்டது.அந்தக் கூட்டத்த்தில் விவேகானந்தர் சொல்லிய விஷயங்களை எல்லோரும் ஏற்றுக் கொண்டு செயல் படுத்த உறுதி எடுத்துக் கொண்டனர். அப்போது லாட்டு மஹராஜ் மட்டும் துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு வெளியேறி விட்டாராம்.அவ்ரைப் பின் தொடர்ந்து சென்று தடுத்து நிறுத்தினார் விவேகானந்தர்.

"லாட்டுபாய்!எங்கே கிளம்பி விட்டீர்கள்?"

"என்னை மன்னித்துவிடுங்கள் லொரேன்பாய்!உங்கள் கட்டுத் திட்டம் எதுவும் எனக்குச் சரியாக வராது.என்னால் கடைப்பிடிக்க முடியும் என்று தோன்றவில்லை.நான் என் போக்கில் கங்கைக் கரையில் ஒரு பிச்சைக்காரனாக‌ வாழ்ந்து விட்டுப் போகிறேன்."

"எந்தக் கட்டுப்பாட்டை உங்க‌ளால் கடைப்பிடிக்க முடியாது, லாட்டுபாய்?"

"எல்லாக் கட்டுப்பாடுகளையும்தான் என்னால் கடைப் பிடிக்க முடியாது.அதுவும் முக்கியமாக தியானத்தைப் பற்றியது.நான் படிக்காத முட்டாள். நீங்கள் எல்லாம் மணி அடித்தவுடன் தியானம் செய்யவும், மீண்டும் மணி அடித்த‌வுடன் தியானம் கலையவும் கூடிய அளவுக்குப் படித்த அறிவாளிகள்.நானோ பாமரன். எனக்குத் தியானம் கூடி விட்டால் உங்கள் மணியொலி எல்லாம் எனக்குக் கேட்காது.நான் தொடர்ந்து தியானத்திலேயே பல நாட்கள் கூட இருப்பேன். எனவே சங்கத்தின் வேலைகள் என்னால் பாதிக்க வேண்டாம்.போய் வருகிறேன், லொரேன்பாய்!"

விவேகானந்தர் பதில் சொல்ல முடியாமல் நின்று விட்டார்.லாட்டு மஹராஜ் வாசல் கேட்வரை சென்று விட்டார்.  திகைத்து நின்ற விவேகானந்தர் ஓடிச் சென்று லாட்டு மஹராஜை வழி மறைத்தார்.

"லாட்டுபாய் போக வேண்டாம்.உங்க‌ளுக்கு மட்டும் எந்தக் கட்டுப்பாடும் கிடையாது.உங்கள் விருப்பம் போல் விரும்பிய நேரத்தில் தியானம் செய்யலாம்.உள்ளே வாருங்கள்" என்று திருப்பி அழைத்து வந்தார்.

சுவாமி விவேகானந்தரின் விருப்பத்திற்காகக் கொஞ்சநாள் மடத்தில் தங்கியிருந்தாலும் லாட்டு மஹராஜால் தொடர்ந்து மடத்தில் தங்க முடியவில்லை. தன் வாழ்நாள் முழுவதும் கங்கைக் கரையில் ஒரு பிச்சைக்காரனைப் போலத் தோற்றம் கொடுத்துக் கொண்டு வாழ்ந்து மறைந்தாராம்.

சுவாமி அற்புதானந்தரின் நினைவைப் போற்றுவோம்!

இந்தச் சம்பவத்திலிருந்து உங்க‌ளுக்குத் தோன்றும் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே!

நன்றி, வணக்கம்!
கே.முத்துராமகிருஷ்ணன்
லால்குடி


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3
உண்டியலில் பணத்தைப் போட்டாமல், பாட்டெழுதிப் போட்ட கவிஞர்!
திருப்பதி உண்டியலில் எல்லோரும் பணத்தை, தங்கத்தைப் போடுவார்கள். ஆனால் கவியரசர் கண்ணதாசன் பாட்டு ஒன்றை எழுதிப் போட்டுவிட்டு வந்தார்

“என் கடனைத் தீர்ப்பாய் இறைவா! திருமலைவாழ்
        வெங்கடேசு ரப்பெருமாள் வேந்தனே - மங்காத
செல்வத்தை அள்ளித் தினமும் தருவாயேல்
        நல்வழியில் வாழ்ந்திருப்பேன் நான்"


அந்த நிகழ்வுக்குப் பிறகு அவருக்குப் பணத்திலும் வறுமை இல்லை. ஓடிப்போய்விட்டது. பாட்டிலும் வறுமை இல்லை. எண்ணற்ற பாடல்களை எழுதிக்குவித்தார்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? திருப்பதி உண்டியலில் பணம் போட்டால் பணம் பெருகும். பாட்டெழுதிப் போட்டால் புலமை பெருகும். துன்பங்களை எழுதிப்போட்டல், நமது துன்பங்கள் நீங்கும். மொத்தத்தில் பட்ட கடன் தீரும். அடுத்து முறை திருமலைக்குச் செல்லும்போது முயன்று பாருங்கள்

“வேங்கடம் ஏறக் கால்வலு வில்லை
     வீட்டிலே இருந்துனைக் கேட்டேன்
பாங்குடன் எனக்குப் பைந்தமிழ் அளித்த
     பாட்டையே காணிக்கை போட்டேன்
தீங்குடன் நலமும் சேர்த்துவைக் கின்றாய்
     சிறிது அதைப் பிரித்துவைப் பாயே
ஓங்குமால் நிலையே உயர்பெரும் மலையே
     உன்பதம் என்சிரம் தாயே


என்று தான் பாட்டு எழுதிப்போட்டு விட்டு வந்ததையும் கவிதையாக்கிச் சொன்னார் கவியரசர் கண்ணதாசன்

எப்படி இருக்கிறது சாமிகளா?
அன்புடன்
வாத்தியார்

------------------------------------------

வாழ்க வளமுடன்!

28.4.11

தமிழ் நாட்டையே அசத்திய ஜோடி!

-------------------------------------------------------------------------
தமிழ் நாட்டையே அசத்திய ஜோடி!

எத்தனை தடவைதான் பிரியாமணியைப் பற்றியும், நயன்தாராவைப்
பற்றியுமான செய்திகளைப் படித்துக்கொண்டிருப்பீர்கள்?
ஒரு மாறுதலுக்காக இதையும் படியுங்கள்.

திருமதி. K.B.சுந்தராம்பாள் அவர்கள் 11.10.1908ஆம் ஆண்டு
ஈரோட்டிற்கு அருகில் உள்ள கொடுமுடி என்னும் ஊரில் பிறந்தார்.
அற்புதமான குரல்வளம் மிக்கவர். சிறந்தபாடகி.
காவிரிக் கரையில் இருக்கும் இயற்கை எழில் சூழ்ந்த ஊர் அது.

சிறுவயதில் மிகவும் சிரமப்பட்டவர். குழந்தையாக இருக்கும்
போது ரயிலில் பாட்டுப்பாடி, கிடைத்த காசைத் தன் தாயார்
பாலாமணி அம்மாள் அவர்களிடம் கொடுத்து பிழைக்க வேண்டிய
சூழ்நிலையில் இருந்தவர். இவருடைய அற்புதமான குரல் வளத்தைப்
பார்த்த - அவருடைய தாயார் பாலாமணி அம்மாவிற்கு
வேண்டிய காவல்துறை அதிகாரி திரு. கிருஷ்ணசாமி என்பவர்
அவரை அழைத்துக் கொண்டு சென்று அந்தக்காலத்தில் நாடகக்
கம்பெனி ஒன்றை நடத்திக் கொண்டிருந்த P.S. வேலு நாயர்
என்பவரிடம் சேர்த்துவிட்டார். அப்போது சுந்தராமபாளுக்கு
வயது பத்து.

வள்ளிதிருமணம், பவளக்கொடி, ஹரிச்சந்திரா போன்ற நாடகங்களில்
நடித்துக் கொண்டிருந்த போது, தன்னுடன் நாடகங்களில் நடித்தும்,
பாடிக்கொண்டுமிருந்த S.G.கிட்டப்பாவின் மேல் மயக்கம் கொண்டு
அவரைத் தீவிரமாகக் காதலிக்க ஆரம்பித்தார். S.G.கிட்டப்பா
அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமான பாடகர். சம வயதுக்காரர்தான்.

இருவருமே தங்கள் குரல்வளத்தால் தமிழ் மக்களைக் கட்டிப்
போட்டார்கள்.

இருவரும் திருமணம் செய்துகொள்ள ஜாதி ஒரு தடையாக இருந்தது.
இருவர் வீட்டிலுமே பலத்த எதிர்ப்பு. சுந்தராம்பாள் கவுண்டர்
இனத்தைச் சேர்ந்தவர். S.G.கிட்டப்பா அந்தனர் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

பலத்த எதிர்ப்பிற்கிடையே, நண்பர்கள், மற்றும் ஏராளமான ரசிகர்களின்
ஆதரவுடன் இருவரும் 1927ஆம் ஆண்டு திருமணம் செய்து
கொண்டார்கள்.அற்புதமான ஜோடி என்று தமிழ் நாடே பார்த்தும்,
கேட்டும் வியந்தது. அப்போது சுந்தராம்பாளுக்கு வயது 19தான்.

ஐந்து வருட காலம் ஓடியதே தெரியவில்லை.

எந்தக் கொள்ளிக்கண் பட்டதோ - 1932ஆம் ஆண்டு கிட்டப்பா
மேடையில்நடித்துக் கொண்டிருக்கும்போதே இரத்தம் கக்கி
இறந்து விட்டார். சுந்தராம்பாள் நொறுங்கிப்போய் விட்டார்.

அப்போது அவருக்கு வயது 24தான்.

அந்தக் காலகட்டத்தில் ஒலி வாங்கி, ஒலி பெருக்கியெல்லாம்
கிடையாது. Mike & Sound System, Speakers எல்லாம் கிடையாது.
மேடையில் இருந்து இருவரும் பாடினால் அரங்கில் கடைசி
வரிசையில் இருக்கும் ரசிகனுக்கும் கேட்கும் படியாகப் பாட
வேண்டும். அப்படித் தன்னை வருத்திக் கொண்டு அனுதினமும் பாடியதால்தான் கிட்டப்பா இளம் வயதிலேயே மாண்டு போனார்.

பின்னாளில் ஒரு விமர்சகன் இப்படிச் சொன்னான்:

For want of mike
Kittappa lost his life!


பிறகு சில ஆண்டுகளில் சுந்தராம்பாள் தன்னைத் தேற்றிக் கொண்டு
மேடைகளில் பக்திப் பாடல்களைப் பாட ஆரம்பித்து அதிலும்
பிரபலமானார். அவர் எங்கு பாடினாலும் கூட்டம் அலை மோதியது.

"வெந்நீறு அணிந்ததென்ன? - வேலைப் பிடித்தததென்ன?"
"பழம் நீயப்பா - ஞானப் பழம் நீயப்பா - தமிழ்ஞானப் பழம் நீயப்பா!"

போன்ற அவர் பாடிய முருகன் பாமாலைகள் மிகவும் பிரசித்தமானவை.

1953ஆம் ஆண்டு வந்த ஒளவையார் திரைப்படம் அவர் வாழ்க்கையில்
ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியதென்றால் அதில் சந்தேகம் ஒன்றுமில்லை!

அந்தப் படத்தில் அவர் நடிக்க ஒப்புக்கொண்டதே ஒரு சுவையான
விஷயம்.

அந்தக் காலகட்டத்தில் மிகவும் பிரபலமாக இருந்த திரைப்படத்
தயாரிப்பாளரும், ஜெமினி ஸ்டுடியோவின் உரிமையாளருமான
திரு.S.S. வாசன் அவர்கள் ஒளவையாரின் கதையைத் திரைப்படமாக
எடுப்பது என்று எண்ணிச் செயல்படத் துவங்கியவுடன், கதாநாயகி
யாக நடிக்க மிகவும் தகுதியானவர் சுந்தராம்பாள் என்று முடிவு
செய்து அவரை அணுகினார்.

தன் கணவர் இறந்தவுடன், நாடக மேடைகளைத் துறந்திருந்த
சுந்தராம்பாள் அவர்கள் சினிமாவில் நடிக்க முதலில் மறுத்து
விட்டார்.

ஆனால் தான் நினைத்ததைச் சாதிக்கும் திறமையுள்ள திரு.வாசன்
அவர்கள் விடவில்லை.

"நீங்கள் தான் நடிக்க வேண்டும்.அப்போதுதான் இந்தப் படத்திற்கு
உயிர் கிடைக்கும் என்று சொன்னதோடு நீங்கள் கேட்கின்ற தொகை
யையும் தருவதாகச் சுந்தராம்பாளிடம் சொன்னார். அப்போது
ஐந்தாயிரம், பத்தாயிரத்திற்கு மேல் யாருக்கும் சம்பளம் இல்லாத
காலம்.

அவர் விட்டால் போதும் என்பதற்காக யாருமே எதிர்பார்க்க 
முடியாத ஒரு தொகையைக் கே.பி.எஸ் அவர்கள் சொன்னார்.

ஆமாம்,"ஒரு லட்ச ரூபாய் தருவீர்களா?" என்று சும்மா கேட்டு
வைத்தார்,

சற்றும் யோசிக்காத திரு,வாசன் அவர்கள் தருகிறேன் என்று
உடனே சொல்ல அவர் நடிக்கும்படி ஆகிவிட்டது. படம் சூப்பர்
ஹிட்டாக ஓடியது தனிக் கதை!

பின்னாட்களில் நல்ல இயக்குனர்களின் படங்களில் அவர் நடித்தார்.
பூம்புகார், திருவிளையாடல் போன்ற படங்களை உதாரணமாகச்
சொல்லலாம்.

1964ஆம் ஆண்டில் தமிழ் இசைப் பேரறிஞர் விருதும், 1970ஆம்
ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் அவருக்குக் கிடைத்தது.

தமிழ் இசை உலகில் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி
யவர் 1980ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

அந்த ஓளவையார் படம் பிரமாண்டமான விளம்பரங்களுடன் ஓடியது
மக்கள் அலையென வந்து படத்தைப் பார்த்தார்கள். அந்தப் படம் ஓடிய
ஒவ்வொரு ஊர்களிலும் படத்தின் காட்சி ஒன்று கலரில் - படம் நடக்கும்
திரையரங்கின் பெயருடன் நோட்டிசில் விளம்பரப் படுத்தப்பட்டது.

கலர் நோட்டிசையெல்லாம் நினத்துப் பார்க்க முடியாத காலம் 
அது. வாசன் அவர்கள் அதிலும் ஒரு சாதனை நிகழ்த்தினார் 
என்பதுதான் கூடுதல் ஆச்சரியம்.


கிட்டப்பாவின் படம். 
அருகில் ஹார்மோனியம் வாசிப்பவர் 
அவருடைய சகோதரர் காசி அய்யர் 
படம் உதவி: நன்றி ஹிந்து நாளிதழ்

அன்புடன்
வாத்தியார்
(நேறைய பதிவில் குறிப்பிட்டிருந்த அந்த 33 பதிவுகளில் இது
இரண்டாவது. மற்ற பதிவுகளும் தொடர்ந்து வரும்)

வாழ்க வளமுடன்!

27.4.11

கடவுளை நம்புவது மூடத்தனமா ?

-------------------------------------------------------------------
கடவுளை நம்புவது மூடத்தனமா ?

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு (அதாவது மார்ச்’2008ல்) தமிழ்மணத்தில் நட்சத்திரப் பதிவாளராக என்னைத் தேர்வு செய்து ஒருவாரம் தொடர் பதிவுகள் எழுதப் பணித்திருந்தார்கள். ஏழு நாட்களில் ஏழு பதிவுகள் எழுதினால் போதும் என்ற நிலையில் நான் அந்த ஏழு நாட்களில் மொத்தம் 33 பதிவுகளை எழுதியிருந்தேன்.

அவற்றில் ஒன்றை நீங்கள் படித்து மகிழ இன்று வலை ஏற்றுகிறேன். மற்ற முக்கியமான பதிவுகளும் மீள் பதிவுகளாகத் தொடர்ந்து வரும்!
அன்புடன்
வாத்தியார்
----------------------------------------------------------------------------------
கடவுளை நம்புவது மூடத்தனமா ?

ஆக்கம்: திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள்
(25-12-1969 குமுதம் இதழுடன் இணைப்பு)

“கடவுள் உண்டா? கடவுள் இருக்குமானால் கண்ணுக்குத் தெரியவில்லையே? உண்டு என்பவர்கள் முட்டாள்கள். அது மூட நம்பிக்கை,” என்று சிலர்
வாதஞ் செய்கின்றனர்.

உலகமெல்லாம் போற்றும் திருவள்ளுவர் இது பற்றி என்ன கூறுகின்றார்; சிந்திப்போம்.திருவள்ளுவர் தெளிவுபடுத்துகிறார்

உலகத்தார் உண்டென்ப தில்லென்பான் வையத்து
அலகையாய் வைக்கப்படும்'

என்பது வள்ளுவரது அமுதவாக்கு. உலகம் என்பது உயர்ந்தோர்மாட்டே', என்பது தொல்காப்பியம். எனவே உலகம் என்ற சொல் அறிவு நிறைந்த
ஆன்றோரைக் குறிக்கும்.

ஆன்றோர்கள் உண்டு உண்டு என்று கூறுவதை இல்லையென்பவனைப் பேய் என்று ஒதுக்கிட வேண்டும் என்று தெய்வப்புலமைத் திருவள்ளுவர்
தெளிவுபடுத்துகின்றார். இதுபற்றி நன்கு சிந்திப்போமாக.

தொல்காப்பியர் நான்கு நிலங்களைக் கூறி அந்நிலங்கட்குத் தெய்வங்களைக் கூறியுள்ளார். சேயோன் மேய மைவரை உலகும்'' என்பது தொல்காப்பியம்.
கடவுள் என்ற சொல்லின் பொருள், என்ன? கடவுகின்றவன் கடவுள், கடவுதல்; செலுத்துதல். உடம்பை உயிர் செலுத்துகின்றது. உயிரைக் கடவுள்
செலுத்துகின்றார். காரை டிரைவர் செலுத்துகின்றான். டிரைவரைப் பின் சீட்டிலுள்ள எஜமான் செலுத்துகின்றான். இறைவன் உயிருக்கு உயிராய்
உள்நின்று நம்மைச் செலுத்துகின்றான். உடம்புக்குள்ளே உயிர்; உயிருக்குள்ளே கடவுள். டயருக்குள் ட்யூப் டயருக்குள் ட்யூப்பு. ட்யூப்புக்குள்ளே காற்று.
டயர் போல் உடம்பும், ட்யூப்பு போல் உயிரும், காற்று போல் கடவுளும் எனவுணர்க.

நீராயுருக்கி என் ஆருயிராய் நின்றானே, என்கின்றார் பாண்டி நாட்டு முதலமைச்சராக விளங்கிய மணிவாசகர்.

ஒரு கார் ஒடுகின்றது என்றால் ஓட்டுபவன் இன்றி கார் ஓடாது அல்லவா? தானே அது ஒடுகின்றது என்பவனைக் கீழ்ப்பாக்க மருத்துவமனையில்
சேர்க்க வேண்டுமல்லவா?

உலகம் நியதியாக நடைபெறுகின்றது. கதிர்மதிகள் காலந் தவறாது உதிக்கின்றன. வானில் சஞ்சரிக்கின்ற நட்சத்திரங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளாமல் ஒழுங்கு தவறாமல் இருக்கின்றன.

நம் உடம்பில் உள்ள உயிர் கண்ணுக்குத் தெரிகின்றதா? கண்ணுக்குத்தெரியாமையால் நான் உயிர் இல்லாதவன் என்று ஒருவன் கூறுவானானால் அவனை  என்னென்று உரைப்பது? அருகில் உள்ளவர்கள் உயிர் இல்லாதவன் என்று கூறுபவனைப் புதைகுழியில் வைப்பார்கள் அல்லவா?

கடந்து நிற்பது கடவுள். கட என்ற பகுதியடியாகப் பிறந்த சொல். எல்லாவற்றையும் கடந்தது கடவுள். இனி நம்மைப் பிறவிப் பெருங்கடலிலிருந்து கடக்கச் செய்வது கடவுள்.

கடவுள் கறுப்பா? சிவப்பா?

கடவுள் கறுப்பா சிவப்பா? என்றும் வினவுகின்றார்கள்.

ஒரு பெரியவர் அரச மரத்தின் கீழ் அமர்ந்து கடவுளைத் தியானித்துக் கொண்டிருந்தார். அங்கே ஒரு மாணவன் சென்றான். அம்மாணவன் மிடுக்கும்,
சொல்லுடுக்கும் உடையவனாகக் காட்சியளித்தான்.

ஐயா! பெரியவரே! ஏன் உட்கார்ந்து கொண்டே தூங்குகின்றீர்? சுகமாகப் படுத்து உறங்கும்.''

தம்பீ! நான் உறங்கவில்லை. கடவுளைத் தியானிக்கின்றேன்.''

ஓ! கடவுள் என்று ஒன்று உண்டா? ஐயா! நான் எம்.ஏ. படித்தவன். நான் மூடன் அல்லன். நூலறிவு படைத்தவன். கடவுள் கடவுள் என்று கூறுவது மூடத்தனம்.
கடவுளை நீர் கண்ணால் கண்டிருக்கின்றீரா?''

தம்பீ, காண முயலுகின்றேன்.''

கடவுளைக் கையால் தீண்டியிருக்கின்றீரா''

இல்லை.''

கடவுளின் குரலைக் காதால் கேட்டிருக்கின்றீரா?''

இல்லை.''

ஐயா! என்ன இது மூட நம்பிக்கை? உம்மை அறிவற்றவர் என்று கூறுவதில் என்ன தடை? கடவுளைக் கண்ணால் கண்டீரில்லை, மூக்கால் முகர்ந்தீரில்லை, கையால் தொட்டீரில்லை, காதால் கேட்டீரில்லை, இல்லாதவொன்றை இருப்ப தாகக் கற்பனை செய்து கொண்டு அரிய நேரத்தை வீணடிக்கின்றீரே? உம்மைக் கண்டு நான் பரிதாபப்படுகின்றேன். உமக்கு வயது முதிர்ந்தும் மதிநலம் முதிரவில்லையே? பாவம்! உம் போன்றவர்களைக் காட்சிச்சாலையில் வைக்க வேண்டும். கடவுள் என்றீரே. அது கறுப்பா? சிவப்பா?''

சட்டைப்பையில் என்ன இருக்கிறது

தம்பி! என் சட்டை பையில் என்ன இருக்கின்றது?.

இது தேன்பாட்டில்.

அப்பா! தேன் இனிக்குமா, கசக்குமா?

என்ன ஐயா! இதுகூட உமக்குத் தெரியாத சுத்த மக்குப் பிண்டமாக இருக்கின்றீர். உலகமெல்லாம் உணர்ந்த தேனை இனிக்குமா கசக்குமா என்று வினாவுகின்றீரே.

உணவுப் பொருளிலேயே தேன் தலைமை பூண்டது, இது அருந்தேன். இதை அருந்தேன் என்று எவன் கூறுவான்? அதற்காக இருந்தேன் என்பான். தேன்
தித்திக்கும். இதை எத்திக்கும் ஒப்புக் கொள்ளும்.

தம்பி! தித்திக்கும் என்றனையே அந்த இனிப்பு என்றது கறுப்பா? சிவப்பா? சற்று விளக்கமாக விளம்பு. நீ நல்ல அறிஞன்.

மாணவன் திகைத்தான். தித்திப்பு என்ற ஒன்று கறுப்பா சிவப்பா என்றால் இந்தக் கேள்விக்கு என்ன விடை கூறுவது என்று திக்கித் திணறினான்.

ஐயா! தேனின் இனிமையை எப்படி இயல்புவது? இதைக் கண்டவனுக்குத் தெரியாது; உண்டவனே உணர்வான்.

பெரியார் புன்முறுவல் பூத்தார். அப்பா! இந்தப் பெளதிகப் பொருளாக, ஜடவஸ்துவாகவுள்ள தேனில் இனிமையையே உரைக்க முடியாது. உண்டவனே உணர்வான்

என்கின்றனையே? ஞானப் பொருளாக, அநுபவ வஸ்துவாக விளங்கும் இறைவனை அநுபவத்தால்தான் உணர்தல் வேண்டும்.

தேனுக்குள் இன்பம் கறுப்போ? சிவப்போ?
வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்!
தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல்
ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே
என்றார். அவர் பரமஞானியாகிய திருமூலர்.

மாணவன் வாய் சிறிது அடங்கியது. பெரியவரே! எனக்குப் பசிக்கின்றது. சாப்பிட்டுவிட்டு வந்து உம்முடன் உரையாடுவேன்.

பசியைப் பார்த்திருக்கறாயா?

தம்பி! சற்று நில். பசி என்றனையே, அதைக் கண்ணால்  கண்டிருக்கின்றனையா?.

இல்லை.

பசி பேசுவதைக் காதால் கேட்டிருக்கின்றனையா?

இல்லை.

பசியை மூக்கால் முகர்ந்திருக்கின்றனைனையா?

இல்லை.

பசியை கையால் தொட்டிருக்கின்றனையா?

இல்லை.

என்ன தம்பீ! உன்னை அறிஞன் என்று நீயே கூறிக் கொள்ளுகின்றாய் பசியைக் கண்ணால் கண்டாயில்லை: காதால் கேட்டாயில்லை. மூக்கால்
முகர்ந்தாயில்லை. கையால் தொட்டாயில்லை. அப்படியிருக்க, அதை எப்படி நம்புவது? பசி பசி என்று உரைத்து உலகத்தை ஏமாற்றுகின்றாய்.
பசி என்ற ஒன்று கிடையவே கிடையாது. இது சுத்தப் பொய், பசி என்ற ஒன்று இருக்கின்றது என்று கூறுபவன் முட்டாள். உனக்கு இப்போது புரிகின்றதா? பசி

என்ற ஒன்று அநுபவப் பொருள். அது கண்ணால் காணக் கூடியதன்று. அதுபோல் தான் கடவுளும் அநுபவ பொருள். அதைத் தவஞ் செய்து மெய்யுணர்வினால்

உணர்தல் வேண்டும். உடம்பு வேர்த்தது

மாணவன் உடம்பு வேர்த்தது. தலை சுற்றியது. இந்தக் கிழவர் கூறுவதில் உண்மையுளது என்று உணரத்தலைப்பட்டான்.

ஐயா, வணக்கம். இப்போது தன் அறியாமையை உணர்கின்றேன். ஒரு சந்தேகம். கடவுளைக் கண்ணால் கண்டால்தான் நான் ஒப்புக் கொள்ளுவேன். நீர் சிறந்த தவ

முனிவர். கடவுளைக் காட்ட முடியுமா?

தம்பி! உன் பெயர் என்ன?

என் பேர் பச்சையப்பன்.

பச்சையப்பா! நீ பேசுவது எல்லாம் கொச்சையப்பா. உனக்குச் சொல்ல வேண்டும் என்பது என் இச்சையப்பா. கவனமாகக் கேள். பச்சையப்பன் என்ற சொல் இந்த

உடம்புக்குப் பேரா? உயிருக்குப் பேரா?

அவன் திகைத்தான்.

ம்..ம்.. என்று முணுமுணுத்தான்.

பெரியவர் பொருள் பொதிந்த அறிவுரை கூறுவாரானார்.

பச்சையப்பா! சற்று நிதான புத்தியுடன் கேள். அறுபது அடி நீளமுள்ள இரு சுவர்கள். ஒவ்வொரு சுவரிலும் எட்டு ஜன்னல்கள், இரண்டு நிலைகள்
அமைந்துள்ளன. மேலே ஒரு கூரை வேய்ந்தால் அதனைப் படிப்பகம் என்றோ, மாணவர் இல்லம் என்றோ கூறுவார்கள். மேலே கூரையில்லை
யானால் எட்டு ஜன்னல்களுடன் இரு நிலைகளுடன் கூடிய அறுபது அடி நீளமுள்ள அந்தச் சுவர்கட்கு என்ன பேர்? தயவு செய்து சொல்.

அதற்குக் குட்டிச்சுவர் என்று பேர்.

இப்போது சிந்தனை செய். அறுபது அடி நீளமுள்ள சுவர்கள் எத்துணைச் சிறுமை பெற்றது! குட்டிச்சுவர் என்ற பழி பெற்றது. சுவர்கட்குப் பெருமை
யில்லை. மேலே வேய்கின்ற கூரைக்குத்தான் பெருமையென்று உணர்கின்றாயல்லவா?

சவமும் சிவமும்

சவம் என்று எழுதி, முதல் எழுத்தாகிய சகரத்தின் மீது ஒரு வளைந்த கோடு இட்டால் சிவம் என்று பெருமை பெறுகின்றது. அந்த ஒரு சிறு
கோடில்லையானால் சவம் என்று சிறுமையடைகின்றது.இந்த உடம்பில் சிவம் என்ற ஒன்றிருந்து பெருமை தருகின்றது. சிவம் இல்லையானால் இது
சவமாகிறது. அப்பா! நீ நல்ல பிள்ளை. முன்னுக்கு வரக்கூடியவன். நீயும் உய்ய வேண்டும். உன்னால் நாடும் வீடும் உய்ய வேண்டும்.இந்த உடம்பை
நீ கண்ணால் பார்க்கின்றாயா?''

என்ன ஐயா! என்னைச் சுத்த மடையன் என்றா கருதுகின்றீர்? எனக்கென்ன கண் இல்லையா ? இந்த உடம்பை எத்தனையோ காலமாகப் பார்த்து
வருகின்றேன்.''

தம்பீ! நான் உன்னை மூடன் என்று ஒரு போதும் கருதமாட்டேன். நீ அறிஞன் தான். ஆனால் அறிவில் விளக்கந்தான் இல்லை. கண் இருந்தால்
மட்டும் போதாது. கண்ணில் ஒளியிருக்க வேண்டும். காது இருந்தால் மட்டும் போதுமா? காது ஒலி கேட்பதாக அமைய வேண்டும். அறிவு இருந்தால்
மட்டும் போதாது. அதில் நுட்பமும் திட்பமும் அமைந்திருத்தல் வேண்டும்.

பச்சையப்பா !

பச்சையப்பா! இந்த உடம்பை நீ பார்க்கின்றாய். இந்த உடம்பு முழுவதும் உனக்குத் தெரிகின்றதா?''

ஆம். நன்றாகத் தெரிகின்றது.''

அப்பா! அவசரப் படாதே. எல்லாம் தெரிகின்றதா?''

என்ன ஐயா! தெரிகின்றது தெரிகின்றது என்று எத்தனை முறை கூறுவது? எல்லாந்தான் தெரிகின்றது.''

அப்பா! எல்லா அங்கங்களும் தெரிகின்றதா?''

ஆம்! தெரிகின்றது.''

முழுவதும் தெரிகின்றதா?''

அவன் சற்று எரிச்சலுடன் உரத்த குரலில், முழுவதும் தெரிகின்றது,'' என்றான்.

தம்பீ! உடம்பின் பின்புறம் தெரிகின்றதா?''

பச்சையப்பன் விரள விரள விழித்தான்.

ஐயா! பின்புறம் தெரியவில்லை.''

என்ன தம்பீ! முதலில், தெரிகின்றது தெரிகின்றது என்று பன்முறை பகர்ந்தாய். பின்னே பின்புறந் தெரியவில்லை என்கின்றாய். முன்புறம் முழுவதுமாவது
தெரிகின்றதா ?''அவசரம் கூடாது

பச்சையப்பன் சிரித்தவண்ணம், ஆம், முன்புறம் முழுவதும் தெரிகின்றது,'' என்றான்.

அப்பா! அவசரங்கூடாது. முன்புறம் எல்லாப் பகுதிகளையுங் காண்கின் றனையா? நிதானித்துக் கூறு......''

எல்லாப் பகுதிகளையுங் காண்கின்றேன்...எல்லாம் தெரிகின்றது.''

தம்பீ! இன்னும் ஒருமுறை சொல். எல்லாம் தெரிகின்றதா? நன்கு சிந்தனை செய்து சொல்.''

ஆம்! நன்றாகச் சிந்தித்தே சொல்லுகின்றேன், முன்புறம் எல்லாம் தெரிகின்றது.''

தம்பி! முன்புறத்தில் முக்கியமான முகந் தெரிகின்றதா ?''

மாணவன் துணுக்குற்றான். நெருப்பை மிதித்தவன் போல் துள்ளினான். தன் அறியாமையை உன்னி உன்னி வருந்தலானான்.

தணிந்த குரலில் பணிந்த உடம்புடன், ஐயனே! முகந் தெரியவில்லை,'' என்றான்.

குழந்தாய்! இந்த ஊன உடம்பில் பின்புறம் முழுவதும் தெரியவில்லை. முன்புறத்தில் முக்கியமான முகந் தெரியவில்லை. நீ இந்த உடம்பில் சிறிதுதான்
கண்டனை; கண்டேன் கண்டேன் என்று பிதற்றுகின்றாய். அன்பனே! இந்த உடம்பு முழுவதுந் தெரியவேணுமானால்

என்ன செய்ய வேண்டும்? சொல்.''

ஐயனே! இரு நிலைக் கண்ணாடிகளின் இடையே நின்றால் உடம்பு இருபுறங்களுந் தெரியும்.''

தம்பீ! இந்த ஊன உடம்பை முழுவதுங் காண்பதற்கு இரு நிலைக் கண்ணாடிகள் தேவைப்படுவது போல், ஞானமே வடிவாய் உள்ள கடவுளைக்
காண்பதற்கும் இரு கண்ணாடிகள் வேண்டும்.''

ஐயனே! அந்தக் கண்ணாடிகள் எந்தக் கடையில் விற்கின்றன? சொல்லுங்கள், இப்போதே வாங்கி வருகின்றேன், பெல்ஜியத்தில் செய்த கண்ணாடியா?''

அப்பனே! அவை பெல்ஜியத்தில் செய்ததன்று, வேதகாமத்தில் விளைந்தவை. ஞானமூர்த்தியைக் காண இரு நிலைக் கண்ணாடிகள் வேண்டும் என்றேன்
அல்லவா? ஒரு கண்ணாடி திருவருள். மற்றொன்று குருவருள். இந்தத் திருவருள் குருவருள் என்ற இரு

கண்ணாடிகளின் துணையால் ஞானமே வடிவாய் இறைவனைக் காண வேண்டும். அன்புள்ள தம்பீ! திருவருள் எங்கும் நிறைந்திருப்பினும் அதனைக் குருவருள்

மூலமே பெற வேண்டும். கடும் வெயிலில் பஞ்சை வைத்தால் வெதும்புமேயன்றி வெந்து சாம்பலாகாது. சூரியகாந்தக் கண்ணாடியை வெயிலில் வைத்து அதன்

கீழே வரும் ஒளியில் பஞ்சை வைத்தால் அந்தக் கணமே வெந்து சாம்பலாகும். சூரியகாந்தக் கண்ணாடி பரந்து விரிந்துள்ள வெயிலின்

ஆற்றலை ஒன்றுபடுத்திப் பஞ்சை எரிக்கின்றது. அதுபோல் யாண்டும் விரிந்து பரந்துள்ள திருவருளை ஒன்று படுத்தி மாணவனுடைய வினைகளாகிய பஞ்சைக்

குருவருள் சாம்பலாக்கு கின்றது. கதிரவனது வெயிலும்

சூரியகாந்தக் கண்ணாடியும் தேவைப்படுவது போல் திருவருளும் குருவருளும் இறைவனைக் காண இன்றியமையாதவை.இறை என்ற சொல் இறு என்று

பகுதியடியாகப் பிறந்தது. எங்கும் நீக்கமற நிறைந்த பரம்பொருள் இறைவன் என்று பேர் பெற்றது. எங்கும் நிறைந்த பொருளைக் காணும் வழி வகைகளையறிவது

தான் அறிவுடைமை. முரட்டுத்தனமாகப் பேசுவது அறிவுடைமையாகாது.

எதை எதனால் அறிவது?

எந்தப் பொருளை எந்தக் கருவியினால் அறிய வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும். ஓசையை மூக்காலும் மணத்தைச் செவியாலும்
அறிய முயல்வது மூடத்தனமன்றோ?''

நன்கு படித்த ஒருவர், இருபத்தைந்து ஆண்டுகளாக, மல்லி முல்லை ரோஜா முதலிய மலர்களில் மணம் இருக்கின்றது என்கிறார்களே, அதனை நான்
கண்ணால் கண்ட பிறகே ஒப்புக் கொள்ளுவேன்.' என்று பூதக் கண்ணாடியை வைத்து நறுமணத்தைக் கண்ணால் காண முயன்று கொண்டிருந்தார். ஏன்?
அவருக்கு நாசியில் சதை வளர்ந்திருந்தது. சுவாசக் காற்று வாய்வழியே சென்று கொண்டிருந்தது. எனவே அவர் இந்தப் பிறப்பிலே நறுமணத்தைக்
காண முயன்றால் முடியமா? நெடிது ஆராய்ந்து, மல்லிகையில் முல்லையில் ரோஜாவில் நறுமணம் உண்டு என்று கூறுகின்றவன் முட்டாள். மலரில் மணம்
இல்லை; இல்லவேயில்லை, இது சுத்தப் பொய்,'' என்று கூறினால் இதை யார் ஒப்புக் கொள்ளுவார்கள்? மூக்கில் சதை வளர்ந்தவர்கள் ஒவ்வொரு
ஊர்களில் சிலர் இருப்பார்கள் தானே? அவர்கள், ஆம், ஐயா கூறுவது உண்மை. மலர்களில் மணம் இல்லை,' என்று கூறி ஆமோதித்ததார்கள்.
இவர்களைக் கண்டு நாம் இரங்க வேண்டுமேயன்றி, சீற்றமடையக் கூடாதுதானே?

நறுமணத்தை நாவினால் அறிய முடியாது. சுவையை நாவினால் அறிதல் வேண்டும். சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்ற ஐந்தையும் நாக்கு கண்
உடம்பு செவி நாசி என்ற கருவிகளால் அறிய வேண்டும்.

ஐந்துக்கும் அப்பாற்பட்டவர் கடவுள் இந்த ஐந்துக்கும் அப்பாற்பட்டவர். அவரை இந்த பெளதிகக் கருவிகளால் அறியத் தலைப்படுவது அறிவுடையைகாது.

மனத்தாலும் அறிய ஒண்ணாது. புத்தகங்களைப் படித்து அதனால் எய்தும் நூலறிவாலும் உணர வொண்ணாது. வாலறிவனை நூலறிவினால் உணர்தல் இயலாது.
ஒரு மகான் கோயிலுக்குச் சென்றார். அங்கு ஒருவன் ஒரு குடத்தில் கையை விட்டு அவசரம் அவசரம்மாகத் துழாவிக் கொண்டு இருந்தான். அந்த மகான், அப்பா!

நீ என்ன தேடுகின்றாய்?'' என்று கேட்டார்.

அவன், மகானே! நான் யானைப்பாகன். யானை எப்படியோ காணாமல் போய்விட்டது. அதைத்தான் இப்பானைக்கும் தேடுகின்றேன்,'' என்றான்.

மகான் சிரித்தார். யானையைப் பானையில் தேடுகின்ற அறிவாளியும் உலகில் இருக்கின்றானா?'' என்று அதிசயப்பட்டார்.

ஒருவனவன் யானை கெடக் குடத்துள் செங்கை ஓட்டுதல் போல்.''
என்கின்றார் தாயுமானார்.

இறைவன் அறிவு வடிவானவர். அறிவே வடிவாய் ஆண்டவனை அறிவு என்ற ஒன்றினாலேயே அறிதல் வேண்டும். ஆனால் நூலறிவு அன்று.
அநுபவத்தால் உண்டான மெய்யுணர்வு. திருவள்ளுவர் மெய்யுணர்வு என்ற ஓர் அதிகாரத்தில் இதனை உணர்த்துகின்றார்.

வாழை நாரும் மதயானையும்

வாழை நாரால் மலர் தொடுக்கலாம். மதயானையைக் கட்ட முடியாது. ஏணி வைத்து மாடிமீது ஏறலாம். இமயத்தின் உச்சியாகிய எவரெஸ்டுக்கு
ஏறமுடியாது; படியினால் நெய்யை அளக்கலாம்; கடல் நீரை அளக்கலாகாது. அதுபோல நூலறிவினால் பிற பொருள்களையிறயலாம். இறைவனை
யடைய முடியாது. வாசித்துக் காணாது,'' என்பார் அருணகிரிநாதர்.

அறிவாலறிந்துன் இருநாள் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே.''
அறிவையறிபவர் அறியும் இன்பந்தனை''.

என்பவை அருணகிரிநாதரது அமதவகாக்கு. எனவே இறைவனை அநுபவ அறிவால் அறிய முயல் வதுவே அறிவுடைமை. பொருள் தொலைவில் இருகுமானால்

கண்ணுக்குத் தெரியாது. நீலகிரியில் இருப்பவனுக்குச் சென்னை மாநகரந் தெரியாது தானே? தனக்குத் தெரியாமையால் சென்னை நகரமே இல்லையென்று

கூறலாமா ?

ஒரு பொருள் கண்ணை ஒட்டி வைத்தாலும் தெரியாது. எனவே மிகத் தொலைவில் உள்ள பொருளளுந் தெரியாது; மின நெருங்கிய பொருளுந்
தெரியாது. திரைக்கு அப்பாலுள்ள பொருளுந் தெரியாது.

பெரிய பொருளின் சர்க்கரையும் அப்பில் கரைந்த உப்பும் தெரியாது. மிக நுட்பமான பொருளுந் தெரியாது. ஒருவனிடமுள்ள அன்பு அறிவு
இவைகள் தெரியமாட்டா. இவை செயல்படும்போது மட்டும் உணர முடியும். இதுபோல் கடவுள் மெய்யுணர்வுக்கு மட்டும் புலனவார். உணர்ந்தவரும்
இத்தன்மையால் உரைக்கமாட்டாமல் திகைப்பார்கள்.

உலககெலாமுணர்ந் தோதற் கரியவன்,' என்பார் சோழநாட்டு முதலமைச் சராகிய சேக்கிழார் பெருமான். செவ்வானுருவில் திகழ் வேலவன் அன்று
ஒவ்வாததென உணர்வித்தது தான் அவ்வாறறியார் அறிகின்றதலால் எவ்வாறொருவர்க்கு இசைவிப்பதுவே,'

என்கின்றார் அருணகிரியார்.

ஓரில் கண்ட ஊமன் கனவென
ஆருக்குஞ் சொலல வாயில்லை ஐயனே,'
என்கிறார் தாயுமானார்.

முகத்தில் கண் கொண்டு காண்கின்ற மூடர்காள்
அகத்தில் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்
மகட்குத் தாய்தன் மணாளனொடாடிய
சுகத்தைச் சொல்லெனச் சொல்லுமாறு எங்ஙனே'!
என்கின்றார் திருமூலர்.

பச்சையப்பா! நம் முன்னோர்கள் பரம ஞானிகளாக விளங்கினார்கள். தொல்காப்பியர் முதல் அண்மையில் வாழ்ந்த காந்தியடிகள் வரை கடவுள்
பற்றும், கடவுள் உணர்ச்சியும் உடையவர்களே. ஆழ்வார்களும் சமய குரவர்களும் நாயன்மார்களும், தாயுமானாரும்,
இராமலிங்க அடிகளாரும், பாம்பனடிகளும் கடவுள் காட்சி பெற்றவர்கள்.

முன்னோர் மூடர்களானால்

முன்னோர்கள் மூடர்கள் என்றால், மூடர் பரம்பரையில் அறிவாளி வரமுடியாது. அகலக்கட்டையான வேட்டியிலிருந்து கிழிந்த துண்டு
அதிக அகலமுள்ளதாக இருக்காது என்பதைச் சிறு பிள்ளைகளும் உணர்வார்களே?

ஆதலால் நம் முன்னோர்கள் பேரறிவு படைத்த பெரியோர்கள், வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபினில் யான் ஒருவர்,'
என்கின்றார் வள்ளல் பெருமானார்.

கண்டேன் அவர் திருப்பாதங்
கண்டறியாதன கண்டேன்' ................ அப்பர்.

பிரமபுரம் மேவிய பெம்மான் இவன்,' என்று கண்டு காட்டுகின்றார்
திருஞான சம்பந்தர்.''

பச்சையப்பன் இந்த அறிவுமயமான அறவுரை கேட்டுக் கண்ணீர் அரும்பினான். அப்பெருமானுடைய அடிமலர் மீது வீழ்ந்தான். மெய் நடுங்கினான். உள்ளம் பதை

பதைத்தது. உரை குழறியது.

கண்ணுக்கு வைத்தியம்

ஐயனே! நான் கல்லூரியில் படித்து அறிவு பெற்றேன். ஆனால் தாங்கள் கூறிய இறையறிவைப் பெற்றேனில்லை.

தாங்கள் அறிவின் கருவூலமாக விளங்குகின்றீர்கள். என் அறியாமையால் என்னை அறிவாளியென்றும், தங்களை அறிவற்றவர் என்றும் கருதினேன். கண்

மருத்துவரிடம் போய் கண்ணுக்கு மருந்திட வேண்டுமேயன்றி, மிருக மருத்துவசாலைக்குப் போய், புண்ணுக்கு மருந்திடும் மருத்துவரிடம் கண்ணுக்கு

மருந்திடுவது எத்துணை அறியாமை! அதுபோல் ஞானமூர்த்தியாகிய தாங்களே என் அறிவுக்கண்ணுக்கு மருந்திட வேண்டும். தங்களிடம் சிற்சில விளக்கம் பெற

விரும்புகின்றேன். தாங்கள் கருணை கூர்ந்து விளக்கஞ் செய்வீர்களாக,'' என்றான்.

மெய்ஞ்ஞானி கூறுகின்றார். அப்பனே! உனக்கு நான் எந்தக் கருத்துக்கு விளக்கஞ் செய்ய வேண்டும்? தயங்காமல் கூறுக.''

பெருமானே! தாங்கள் கூறியவற்றிலிருந்து நான் தெரிந்து கொண்டது கடவுள் அறிவு வடிவானவர் என்பது ஆகும். கடவுள அறிவுப் பொருளாக இருக்க,

கோயில்களில் செம்பாலும், சிலையாலும் உருவங்கள் வைத்து வழிபடுகின்றார்களே? இது அறிவுக்குப் பொருந்துமா? இன்னும் ஆடம்பரமாகத் தேர்த்

திருவிழாக்கள் செய்கின்றார்களே? இது என்ன நியாயம்? கல்லும் செம்பும் கடவுளாகுமா? பலர் வீடின்றித் தவித்துக் கொண்டு இருக்க ஊரில் பாதி கோயிலா?

பலர் பட்டினி கிடந்து பரிதவிக்க சிலைக்கு விலை மதிக்க முடியாத அணிகலன்களா? இத்தகைய ஐயங்கள் எழுகின்றன. இவைகளுக்கு விளக்கந் தர வேண்டும்.''

அப்பனே! இத்தகைய வினாக்கள் எழுவது இயல்பு தான். இவைகளுக்குத் தக்க விடைகள் பகர்கின்றேன். ஒருமைப்பட்ட மனத்துடன் கேள்.

ஊரில் பாதி கோவிலா?

ஊரில் பாதி கோயிலா என்று கேட்டனை; அதற்கு விளக்கம் கூறுகின்றேன், கேள். மதுரையில் மிகப் பெரிய கோயில் இருக்கிறது. அதை இருநூறு வீடுகளாக

அமைத்துக் கொடுத்தால் இருநூறு பேருக்கு வீடில்லாத துயரம் தொலையும். இவ்வாறு செய்வதனால் அக்கோயில் இருநூறு பேருக்குத் தனியுடைமையாக

ஆயிற்று.மக்கள் நெருங்கி வாழும் மதுரைக்கு வரும் யாத்ரீகர்கள் கோயிலில் தங்குவார்கள். வீட்டில் இடமில்லாத வறியவர்கள், கோயிலில் சென்று படிப்பார்கள்,
படுப்பார்கள், தியானம் செய்வார்கள். எனவே, மதுரை கோயில் இன்று வாழும் நாற்பத்தைந்து கோடி மக்களுக்கும் பொதுவுடமையாகத் திகழ்கின்றது. எனவே,

நாற்பத்தைந்து கோடி மக்களுக்கும் பொதுவுடமையாகத் திகழும் ஆலயத்தை நூறு அல்லது

இருநூறு பேருக்குத் தனியுடைமயாகச் செய்வது பரந்த நோக்கம் ஆகுமா? ஆதலால், பழங்காலத்தில் வாழ்ந்த மன்னர்கள் மக்கள் அனைவருக்கும் பயன்படுமாறு
ஆலயங்களை விசாலமாக அமைத்தார்கள்.

சிலைக்கு நகையா ?

சிலைக்கும் செம்புக்கும் அணிகலன்கள் அவசியமா என்று கேட்டனை. முன்னிருந்த முடிமன்னர்களும் தனவந்தர்களும் தாம் அணிந்திருந்த அணிகலன்களைத்

தெய்வச் சிலைகளுக்கு அணிவித்து எல்லோரும் கண்டு களிக்குமாறு செய்தார்கள். அணிகலன்கள் காட்சிப் பொருளே அன்றி, உணவுப் பொருள்கள் அல்ல. ஒரு

பெருந்தனவந்தன் விலை மதிக்க வொண்ணாத நவமணிகளாலான அணிகலன்களைத் தன் மனைவிக்குப் பூட்டி அலங்கரிப்பானானால் அதனை மற்றவர்கள

கண்டு களிக்கலாமா? அயலானுடைய மனைவியின் அலங்காரத்தைக் காண்பது முறையா? தனவந்தன் தான் காண உடன்படுவானா? எனவே, கண்ணால் மட்டும்

காணக்கூடிய அணிகலன்களைத் திருப்பதி வெங்கடாசலபதிக்கும் திருவரங்கம் அரங்கனாதருக்கும் மதுரை மீனாட்சிக்கும் அரசர்கள் அர்ப்பணித்தார்கள்.

இனி, சிலையும் செம்பும் கடவுளாகுமா என்று கேட்டனை; பசுவின் உடம்பு முழுவதும் பால் பரவியிருந்தாலும் அந்தப் பாலைக் கொம்பைப் பிடித்து
வருடினால் பெற முடியுமா? வாலைப் பிடித்து வருடினால் பெற முடியுமா? வாலைப் பிடித்து வருடினால் என்ன கிடைக்கும்? பால் கிடைக்காது;
பல் கிடைக்கும். பாலைப் பசுவின் மடி மூலம் பெறுவதுபோல் எங்கும் பரந்து விரிந்திருக்கும் இறைவனுடைய திருவருளைக் கோயிலில் விளங்கும்

திருவுருவத்தின் மூலமாகப் பெறுதல் வேண்டும். கோயிலில் உள்ள திருவுருவத்துக்கு மூர்த்தி என்று பேர். அதிலிருந்து வெளிப்பட்டு அருள் புரிகின்ற இறைவன்

மூர்த்திமான் எனப்படுவான்.

தனவந்தர் மகன்

ஒரு பெருந்தனவந்தருடைய மகன் பள்ளியில் சேர்ந்தான். அவன் படியாமல் பள்ளிக்கூடத்தையே கலக்கிக் கொண்டிருந்தான். பள்ளித்துணை ஆய்வாளர்

அப்பள்ளிக்கு வந்தார். எல்லாப் பிள்ளைகளும் எழுந்து நின்று, வணக்கம்,' என்றார்கள். பள்ளித் துணை ஆய்வாளர் ஆடை அணிகலன்களால் அலங்கரிக்கப் பெற்று

மோர்க்குழம்பு தான் போல் மொழு மொழுவென்று இருந்த இந்தப் படியாத தடியனைப் பார்த்து, தம்பி, நீ என்ன படிக்கின்றாய்?' என்று கேட்டார்.

அவன், புஸ்தகம் படிக்கின்றேன்,' என்றான்.

புஸ்தகம் எங்கே?' என்று கேட்டார்.

வீட்டில் இருக்கிறது,' என்றான்.

புஸ்தகம் இல்லாமல் ஏன் வந்தாய்?'

மோட்டார் லாரிகளில் அகப்பட்டுக் கொள்வேன் என்று என்னை இங்கு அனுப்பியிருக்கிறார்கள்.'

இது என்ன, ஆடுமாடு அடைக்கின்ற பவுண்டா? தலைமையாசிரியரே, நீர் பள்ளிக்கூடம் நடத்துகின்ற பாங்கு நன்றாக இருக்கின்றது.'

பள்ளித் துணை ஆய்வாளர் கரும்பலகையில், அறம் செய விரும்ப,' என்று எழுதி, நம்பி, இது என்ன படி,' என்றார்.

அவன் அதைப் பார்த்துக் கொண்டே நின்றான்.

என்னப்பா, ஆறு மாதங்களாகப் பள்ளிக்கு வருகின்ற உனக்கு அறஞ்செய விரும்பு என்பதைப் படிக்கக் கூடத் தெரியவில்லையே!' என்று
கூறி வெகுண்டார்.

பின்னர் குழந்தைகள் கலபமாகப் படிக்கக்கூடிய விதத்தில் அக்கரும் பலகையில் படம்' என்று எழுதினார்,
அம்மாணவனைப் பார்த்து, இதனைப் படி,' என்றார்.

அவன் ஆந்தைபோல் விழித்துக் கொண்டு நின்றான்.

பள்ளித் துணை ஆய்வாளர், படம் என்ற பதத்தில் பகரத்தையும் மகர மெய்யையும் அழித்தார். நடுவில் உள்ள எழுத்தைக் காட்டி, தம்பி, இது உனக்குத்

தெரிகிறதா?'

தெரிகின்றது,'

ஆசிரியரும் ஆய்வாளரும் சற்று மகிழ்ந்தார்கள். ஓர் எழுத்தாவது தெரிகின்றது என்றானே என்று உள்ளம் உவந்தார்கள்.

தம்பி, இது என்ன எழுத்து?'

கோடு,' என்று கூறினான் அம்மாணவன்.

ஆசிரியரும் ஆய்வாளரும் சிரித்தார்கள்.

மற்றொரு மாணவனை அழைத்து, இது என்ன?' என்று கேட்டார்.

அவன், ட' என்று கூறினான்.

கோடும் அதுதான்; டவும் அதுதான். கற்றவன் ட என்று கண்டான்; கல்லாதவன் கோடு என்று கண்டான். கோட்டுக்குள்ளே அறிவுள்ளவன் ட என்ற ஒலியைக்

காண்கின்றான். அது போல கல்லாலும் செம்பாலும் செய்த சிலைக்குள்ளே சச்சிதானந்த பரம்பொருளை ஞானிகள் காண்கின்றார்கள். அவைகளைச் செம்பு என்றும்,

கல் என்றும் கூறுவது ட என்ற எழுத்தைக் கோடு என்று கூறுவதை ஒக்கும்.

கருத்து ஒருமித்த காதலுனும் காதலியும் நல்லறமாகிய இல்லறத்தில் வாழ்ந்தார்கள். அந்த இல்லறக்கிழத்தி பம்மபரமாகச் சுழன்று கணவருக்கு
அறுசுவை உணவு அமைத்து ஊட்டுவாள். ஆடைகளைத் துவைத்துக்கொடுப்பாள். கணவனாருக்குப் படுக்கை விரிப்பாள். விசிறி விடுவாள். கணவன் திருவடிகளை

வருடி விடுவாள்.

காதல் கடிதம்

காதல் கணவன் வியாபார நிமித்தம் பம்பாய்க்குப் புறப்பட்டான். மனைவி இனிய உணவுகளை ஆயத்தம் செய்து கணவனைப் புகை
வண்டியில் ஏற்றினாள். வண்டி புறப்படும் பொழுது அவளுடைய கண்கள் குளமாயின. விரைவில் வாருங்கள்,' என்று தழு தழுத்துக் கூறினாள்.

வண்டி புறப்பட்டதும் அவள் கைப்பையை எடுத்து அசைத்தாள்.

அவன் கைத் துண்டை அசைத்தான். புகைவண்டி நிலையத்தில் அவள் அப்படியே தூண் போல் அசைவற்று நின்றுவிட்டாள். பின்னர் வீட்டுக்கு
வந்தாள். அவளுக்கு வீடு வெறிச்சென்று இருந்தது. மறுநாள் அன்பு ததும்பும் கடிதம் எழுதி அனுப்பினாள். கண்ணீரினால் அக்கடித்தின் எழுத்துக்கள்

அணைந்திருந்தன. கை தடுமாறியதால் எழுத்துக்கள் கோணல் மாணலாக இருந்தன. பம்பாய் சேர்ந்த கணவன், மாண்பு மிகுந்த மனைவியின் கடிதத்தை

ஒவ்வொரு கணமும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அவசரம் அவசரமாக உறையைப் பிரித்துப் படிக்கத் தலைப்பட்டான். அந்தப் பொன்னெழுத்துக்களைக் கண்டு

தாரை தாரையாகக் கண்ணீர் வடிந்தது. இப்பொழுது சிந்தியுங்கள்.

அவன் கடிதத்தைக் கண்டா அழுதான். அந்த மைக் கோடுகளைக் கண்டா அழுதான்? இல்லை இல்லை. கண்டது கடிதம். மனக் கண்கண்டது மனைவியினுடைய

மலர்க கரங்கள். உணர்வில் உணர்ந்தது மனைவியின் அன்புடைமை. அந்த அன்பையும் பண்பையும் நினைந்து அழுகின்றான். இது போல் தெய்வத்

திருவுருவத்தைக் கண்டு பக்தர்கள் மனக் கண்ணால் இறைவனுடைய அருள் வடிவத்தையும், மெய்யுணர்வால் இறைவனுடைய கருணைப் பண்பையும் உணர்ந்து
கண்ணீர் வடிக்கிறார்கள். ஆதலினால் தெய்வத் திருவுருவங்களைக் கண்டு அன்பர்கள் அழுகிறார்கள், தொழுகிறார்கள் என்று உணர்வாயாக!

துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்''
- திருவாசகம்

தேர் திருவிழா எதற்கு?

தம்பீ! ஆடம்பரமாகத் தேர்த்திருவிழா எற்றுக்கு? என்று கேட்டனை. இதற்கும் விளக்கம் கூறுகின்றேன்.

பலவழியாலும் பணம் படைத்த ஒருவன் கோயிலில் திருவிழா செய்கின்றான். மூவாயிரம் ரூபாய்கள் செலவழிகின்றன. இந்த ரூபாய் நோட்டுக்களைக் கயிற்றில்

கோத்தா இறைவனுக்குச் சாத்துகின்றான்! இல்லை.

சுவாமி தூக்குகின்றவனுக்கு ரூ. 75 - பூமாலை தொடுத்தவனுக்கு 300 - திருமுறைகள் ஓதுவாருக்கு 200 - விளக்குச் சுமப்பவர்கட்கு 75 - குடை பிடிப்பவனுக்கு

50 - மேளம் வாசிப்பவர்கட்கு 500 - பந்தல் இட்டவனுக்கு 300 -வறியவர்க்கு பிரசாதமாக 500 - வேலை செய்பவர்க்குக் கூலியாக 200 - வாணக்காரனுக்கு 200
- விரிவுரை புரிபர்க்கு 300 - அச்சிடுபவருக்கு 200 - அபிஷேகத்துக்கு 100 - சிற்றுண்டிகள் 400 - என்று செலவழிகின்றன. இத்தனையும் வறியவர்க்குப்

பயன்படுகின்றன. இது இல்லையானால் தனவந்தனுடைய பணம் அவன் பெட்டியில் தூங்கிக் கொண்டிருக்கும். வாண வேடிக்கையால் யாக்கை நியைமையைப்

பாமர மக்கள் உணர்வார்கள். எனவே பெருந்தனவந்தனுடைய பணம் பல தொழிலாளர்க்குப் பயன்படுகின்றது. இதனால் திருவிழாவினாலும் பல மக்கள் உண்டு

கண்டு உவகையுறுகின்றார்கள்.

அன்பினால் இதனை நம் முன்னோர்கள் அமைத்தார்கள். ஆதலால் இது பயனற்றது என்று கூறுவது அறிவுடைமையாகாது.

மேற்றிசையிலிருந்து கிழக்கே ஓடுவதற்கு நதி என்று பேர். கிழக்கேயிருந்து மேற்கே ஓடுவதற்கு நதம் என்று பேர்.

மழையும் வெள்ளமும்

மாலையிலே ஒருவன் நதிக்குப் போனான். அதில் ஒரு துளி கூடத் தண்ணீர் இல்லை. மறுநாள் காலை நதியின் அருகில் சென்றான். நதியில் நொப்பும்
நூரையுமாக வண்டலுடன் வெள்ளம் ஓடுவதைக் கண்டான். அந்த ஊரில் சிறிதும் மழை பொழியவில்லை.

மேற்கே மழை பொழிந்தது என்கின்றார். கண்டது வெள்ளம்; காணாதது மழை. கண்ட வெள்ளத்தைக் கொண்டு, காணாத மழையை நிச்சயிப்பதுபோல்,
காணுகின்ற உலகைக் கண்டு காணாத கடவுளைக் கருதல் அளவையால் உறுதிப்படுத்த வேண்டும்.

மரங்களில் இலையுதிர்காலத்தில் நியதியாக இலைகள் உதிர்கின்றன. மார்கழி தை மாதங்களில் பனி துளிக்கின்றது. சித்திரை வைகாசியில் வெய்யில்

வெதுப்புகின்றது. மரங்களுக்கும் பனிக்கும், வெய்யிலுக்கும் எந்த அரசாங்கம் கட்டளை பிறப்பித்தன?

இவைகள் எல்லாம் இறைவனுடைய திருவருள் ஆணையினால் நியதியாக நிகழ்கின்றன.

உலகம் காரியப்பாடுடைத்து. கர்த்தா இன்றி, காரியம் நிகழாது.

நாம் ஒரு குடத்தைக் காண்கின்றோம் அக்குடத்துக்கு மண் முதல் காரணம். தண்ட சக்கரங்கள் துணைக் காரணம். குயவனார் நிமித்த காரணம்.
இதுபோல் உலகிற்கு மாயை முதற் காரணம். அருட் சக்தி துணைக் காரணம். இறைவன் நிமித்த காரணம் என உணர்தல் வேண்டும்,''

பச்சையப்பன், ஐயனே, தாங்கள் நான் வினவிய வினாக்களுக்குக் காரணகாரியங்களுடன் விளக்கம் செய்தீர்கள். அறிவு படைத்த எவனும் இதனை
ஒப்புக் கொள்வான். மற்றொரு ஐயப்பாடு.'' என்று கூறலானான்.

எல்லாம் ஈசன் செயல். அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்று பெரியோர்களும் அறிவு நூல்களும் கூறுகின்றன. ஒருவன் கொலை செய்கின்றான். எல்லாம்

அவன் செயல் என்பது உண்மையானால் குற்றம் செய்தவனை ஏன் தண்டிக்க வேண்டும் என்ற ஓர் ஐயம் எழுகின்றது. இதனை விளக்கியருளுமாறு

வேண்டுகின்றேன்.''

தம்பீ! எல்லாம் அவன் செயல் என்பதும் அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்பதும் முற்றிலும் உண்மை தான். அதற்குப் பொருள்
காண்பதில் தான் பிழை நேருகின்றது.

விளக்கைச் சூழ்ந்து பலர்

அமாவாசை நடு இரவு. நள்ளிருள். ஒருவிளக்கு எரிகின்றது. அந்த விளக்கைச் சூழ்ந்து பலர் இருக்கின்றார்கள். ஒருவன் அறிவு நூல்களை ஓதுகின்றான். ஒருவன்

புத்தகத்தில் ஐந்தெழுத்தை எழுதிக் கொண்டிருக்கின்றான். ஒருவன் பொய்க் கணக்கு எழுதிக் கொண்டிருக்கின்றான். ஒருவன் தன் மாற்றானைக் கொல்ல மருந்து

ஆயத்தம் செய்து கொண்டிருக்கின்றான். மற்றொருவன் ஒருவனைக் கொல்லக் கத்தியைத் தீட்டிக் கொண்டிருக்கின்றான்.

இத்தனை விதமான செயல்களும் விளக்கின்றி நிகழவில்லை. விளக்கின்றிப் படிக்க முடியாது. விளக்கின்றிப் பொய்க் கணக்கு எழுத முடியாது. நனமையான

செயல்களுக்கும், தீமையான செயல்களுக்கும் விளக்கின் ஒளியே காரணமாகும்.

ஆனால் நன்மை தீமைகளால் விளையும் பண்ணிய பாவங்களுக்கு விளக்கு காரணமாகாது. அதுபோல் அவரவர்கள் செய்யும் செய்யும் நன்மை தீமைகளின்

பயன்கள் அந்த ஆன்மாக்களையே சாரும். இதனை உய்த்து உணர்க.

இனி, நம்பிக்கையைப் பற்றிக் கூறுகின்றேன் கேள். நம்பிக்கையின்றி எந்த மனிதனும் ஒரு கணமும் வாழ முடியாது. முதலாவதாக, பேருக்கு முன் பொறிக்கும்

தலையெழுத்தே நம்பிக்கையை வைத்துத் தான் போடுகிறோம். இவர் தான் உன் தந்தை,' என்று தாய் கூறும் வார்த்தையினால் தான் பேருக்கு முன்

தலையெழுத்தைப் பொறிக்க முடியும். நம்பித்தான் ஆகவேண்டும்

நம் வீட்டைவிட்டுப் புறப்படும்பொழுது மனைவி முதலியோரை நம்பித்தான் வெளியேறுகிறோம். மருத்துவச்சாலையில் கம்பவுண்டர் கொடுக்கின்ற மருந்தை

நம்பித்தான் உண்கிறோம். இந்த மருந்து எந்தக் கம்பெனியில் செய்தது? யார் யார் உண்டு நலம் பெற்றார்கள்? நலம் பெற்றவர்கள் முகவரியைக் கொடுங்கள்.

அவர்களுக்கு எழுதிக் கேட்டுத் தெளிவு பெற்ற பின் மருந்தை உண்பேன் என்று எந்த நோயாளியாவது கூறுகின்றானா? மருத்துவரை நம்பித்தானே நோயாளி

மருந்து உண்கின்றான்?

பேருந்தில் பிராயணம் செய்கின்ற ஒருவன்'' அதைச் செலுத்துகின்றவனை நம்பித்தானே தூங்கின்றான்? பேருந்து செலுத்து கின்றவனும் மனிதன் தானே?

அவனுக்கும் தூக்கம் வரும் தானே? செலுத்துகின்ற டிரைவர் தூங்குவானானால் தூங்கிய பிராயணி கண் விழிப்பானா?

எனவே, முன்பின் தெரியாத கம்பவுண்டர்களையும் டிரைவர்களையும் நம்புகின்ற நாம், அறிவு படைத்த ஆன்றோர்களையும் நம்பித்தானே ஆக வேண்டும்?

மனிதனுக்குத் துன்பங்கள் அத்தனைக்கும் மூல காரணம் ஆசை ஒன்று தான். ஆசையை விட்டவனே இன்பத்தை அடைவான். ஆசையை விடாதவன் துன்பத்தில்

துடித்துத் துயரமடைந்து மாள்வான் என்பதனை உணர்த்த எழுத்தையே ராமாயணமும் பாரதமும் என உணர்க.

ஒரு பெரியவர் பல மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொண்டிருந்தார். ஆறு மாதம் ராமாயணமும் ஆறு மாதம் பாரதமும் பாடம் சொன்னார். ஓர் ஆண்டுக்குப்

பின் ராமாயண, பாரதமும் பாடம் சொன்னார். ஓர் ஆண்டுக்குப்பின் ராமாயண, பாரத பாடங்கள் முடிவு பெற்றன. பூர்த்தி விழாக் கொண்டாடப்பட்டது. தேநீர்

வழங்கினார்கள்.

ஆசிரியர் மாணவர்களைப் பார்த்து, மாணவ ரத்தினங்களே! ராமாயணத்துக்கும் பாரதத்துக்கும் என்ன வேற்றுமை?'' என்று வினவினார்.

வேற்றுமை என்ன?

ஒருவன்: ராமாயணம் மஞ்சள் அட்டை. பாரதம் பச்சை அட்டை.
ஒருவன்: ராமாயணம் நானூறு பக்கம். பாரதம் ஐந்நூறு பக்கம்
ஒருவன்: ராமாயணம் பதிப்பித்தது பார்க்கர் பிரஸ். பாரதம்
அனுமந்து பிரஸ்.
ஒருவன்: ராமாயணத்தில் சகோதரர்கள் நால்வர்: பாரதத்தில் ஐவர்கள்.
ஒருவன்: ராமாயணம் சொன்னவர் வால்மீகி. பாரதம் சொன்னவர்
வியாசர்.
ஒருவன்: ராமர் பதினாலு வருஷம் வனவாசம் செய்தார். தருமர்
பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசஞ் செய்தார்.
ஒருவன்: ராமாயணம் திரேதா யுகத்தில் நிகழ்ந்தது. பாரதம் துவாபர
யுகத்தில் நிகழ்ந்தது.

இப்படிப் பலரும் பலவாறு கூறினார்கள். ஒரு சிறுமி குருநாதரைத் தொழுதாள்.

குருநாதா! நான் கூறலாமா?''

அம்மா! அறிவு எல்லாருக்கும் பொதுவுடைமை தானே? நீயும் சொல்லலாம்,'' என்றார்.

அந்தப் பெண் சிறுமி, குருநாதா! ராமாயணத்துக்கும் பாரதத்துக்கும் ஒரே ஓர் எழுத்துத் தான் வேற்றுமை,'' என்றார்.

இதைக் கேட்டு எல்லா மாணவர்களும் கொல்லென்று சிரித்தார்கள். சிறுமியைக் கோபத்துடன் உற்றுப் பார்த்தார்கள்.
ஹும்.....'' என்று உறுமினார்கள். அசடு! சும்மா இரு, உளறாதே!'' என்று கூறி வைத்தார்கள்.

இராமாயணம், உலகம் யாவையும் தாமுளவாக்கலும்....' என்று தொடங்குகின்றது. மகாபாரதம், நீடாழி உலகத்து.....' என்று தொடங்குகின்றது. இவ்வாறு பல

எழுத்துக்கள் வேற்றுமையாக இருக்கும் பொழுது ஒரே-ஒரு எழுத்து வேற்றுமையென்று இந்த மக்குப் பெண் கூறினாளே!'' என்று எள்ளி நகையாடினார்கள்.

ஆசிரியர் அவர்களை அடக்கி, அம்மா, குழந்தாய்! இராமாயணத்துக்கும் பாரதத்துக்கும் ஒரே ஓர் எழுத்துத் தான் வேற்றுமையென்று சொன்னாயே, அதனை

இவர்கள் விளங்கிக் கொள்ளுமாறு விளக்கமாக விளம்பு,'' என்றார்.

அது என்ன எழுத்து ?

அச்சிறுமி, குருநாதா! இராமாயணம் பெண்ணாசையில் விளைந்தது. மகாபாரதம் மண்ணாசையினால் விளைந்தது. இராவணன் தன் மனைவியரை விடுத்து,

இராகவன் மனைவியை விரும்பிக் குலத்துடன் அழிந்தான். துரியோதனன் பாண்டவர்களின் அரசை விரும்பி 11 அட்சரோணிசேனைகளுடன் மாய்ந்தான். எனவே

பெண்ணாசையை விட்டுவிடு என்று ராமாயணமும், மண்ணாசையை விட்டுவிடு என்று மகாபாரதமும் நமக்கு அறிவுறுத்துகின்றன.''
இதனைக் கட்டு, ஆசிரியர்களும் மாணவர்களும் அக மகிழ்ந்தார்கள்.

ஓர் எழுத்துத்தான் வித்தியாசம்

பச்சையப்பா! இவ்வாறு நூல்களை நுனித்து உணர்தல் வேண்டும். பழங்கதைகள் என்றும், புராணப் புளுகு என்றும் புறக்கணிக்கக் கூடாது.

ஆதலால் ஆன்றோர்களின் நூல்களில் அசையாத நம்பிக்கை வைக்க வேண்டும். அயலாருக்குப் போகின்ற நாம் கை காட்டி மரத்தை நம்பினலொழியப் பிரயோசனப்

படாது. புகை வண்டியில் போகின்ற நாம் கால அட்டவணையை நம்பினாலன்றிப் பிராயணம் செய்ய முடியாது.

அதுபோல் ஜீவ யாத்திரைக்கு ஆன்றோர்கள் எழுதிய அறிவு நூல்கள் நமக்கு வழி காட்டுகின்றன. எனவே எங்குமாய், எல்லாமாய், அறிவு வடிவாய், கருணை

மயமாய் விளங்கும் இறைவனைச் சிந்தித்தும் வாழ்த்தியும், வந்தித்தும் ஆன்ம லாபத்தைப் பெறுவாயாக!'' என்று அரச மரத்தின் கீழிருந்த அறிஞர் பெருமான்

அமுத மயமாகிய அறிவுரைகளை அன்பாலும் அருளாலும் எடுத்து விளக்கமாக உரைத்தருளினார்.

பச்சையப்பன் திருந்தினான்

பச்சையப்பன் கேட்டுப் பரவசமடைந்தான். பழந் துணியை எடுத்தெறிவது போல தன் அறியாமையை உதறித் தள்ளி அறிவு நலம் பெற்றான். பண்புடைய
வனாய் வாழத் தொடங்கினான். பரம்பொருளைப் பணிந்தான்.

இதுகாறும் கூறியவற்றால் தொல்காப்பியர் முதல் காந்தியடிகள் வரை ஆன்றோர்கள் கடவுள் உண்டு என்று வற்புறுத்தியும் வலியுறுத்தியும் கூறினார்கள்
என்பதும், கடவுகின்ற பொருள் கடவுள் என்பதும், அது உயிர்க்குயிராய் உள் நின்று உதவுகின்றது என்பதும், அதை அனுபவ அறிவால் காண வேண்டும் என்பதும்,

திருவருளாலும் குருவருளாலும் காண முயலுதல் வேண்டும் என்பதும், கண்டவர் விண்டிலர் என்பதும், கோயில்கள் விசாலமாக இருப்பதன் அவசியம் இது

என்பதும், விக்கிரக ஆராதனை உட்கருத்து இது என்பதும், கோட்டில் ட வைக் காண்பது போல் திருவுருவத்தில் தெய்வத்தைக் காண வேண்டும் என்பதும்
திருவிழாக்களால் பல ஏழைத் தொழிலாளிகள் வாழ்வு பெறுகிறார்கள் என்பதும், எல்லாம் அவன் செயல் என்பதனுடைய உட் கருத்து இது தான் என்பதும்,

நம்பிக்கையின்றி வாழ முடியாது என்பதும், இதிகாசங்களின் உட்கருத்தை உணர வேண்டும் என்பதும் உணர்த்தப் பெற்றன.

ஆதலால் நல்லறிவு பெற்றவர்கள் அதனைப் பலமுறை சிந்தித்து, தெளிந்து பண்புடையவர்களாக வாழ்வார்களாக!

நன்றி – குமுதம்
இந்தப் பதிவு நண்பர், த்ஞ்சாவூர்ப் பெரியவர் திரு.கோபாலன் அவர்களுக்குச் சமர்ப்பணம்!

வாழ்க வளமுடன்!

26.4.11

மைனருக்கு ஒரு மேஜர் விளக்கம்

பேராசிரியர்.அ.ச.ஞானசம்பந்தன் அவர்கள்

----------------------------------------------------------------------------------------
 மைனருக்கு ஒரு மேஜர் விளக்கம்

24.4.2011ம் தேதிப் பதிவில் நமது வகுப்பறை மாணவர் ஜப்பான்மைனர் அவர்கள் கீழ்க்கண்ட பின்னுட்டத்தை இட்டிருந்தார். அதற்கு விளக்கம் அளித்து நமது வகுப்பறையின் மூத்த மாணவர் திருவாளர் வி.கோபாலன் அவர்கள் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். அதை அப்படியே கொடுத்துள்ளேன்.
அன்புடன்
வாத்தியார்
-------------------------------------------------------------------------------------------
minorwall said...
    /////////Thanjavooraan said...
    அந்த சொல்லுக்கு பொருள் கிடையாது.
    'சும்மா' அன்போடு அழைக்கும் சொல்.///////////////
    ஆடவரைக் குறித்தோ சிறுவரைக் குறித்தோ விளையாட்டாக
சொல்லும் போது இந்த வார்த்தை பொருளில்லாததாகக் கொள்ளப்படும் வழக்கம் தஞ்சைப்பகுதியில் இருக்கின்றதென்றாலும் கணவனை
இழந்த பெண்மணியாரைக் குறிக்கும் அவப்பெயராகவே பொருள் பொதிந்ததாகக் கேள்விப்பட்டிருக்கிறேன்..
-----------------------------------------------------------------------------------------
வி.கோபாலன் அவர்களின் விளக்கம்:

சில சொற்களின் பயன்பாடு.
                       
    நண்பர் திரு கே.முத்துராமகிருஷ்ணன் தனது அனுபவங்கள் சிலவற்றை ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார். அதில் தனது பள்ளித் தலைமை ஆசிரியர் அவரை அன்போடு 'கம்மனாட்டி' என்று அழைப்பது வழக்கம் என்றும், இந்தச் சொல்லின் நேரடியான பொருள் அமங்கலமானது ஆனாலும் தஞ்சை மாவட்டத்தில் பெரும்பாலும் பேச்சுவழக்கில் நண்பர்களை செல்லமாக இந்த சொல் கொண்டு அழைப்பது வழக்கமாக இருந்திருக்கிறது என்றும்
குறிப்பிட்டிருந்தார். ஜப்பான் 'மைனர்' அவர்கள் இந்தச் சொல் கணவனை இழந்த கைம்பெண்களைக் குறிக்கும் சொல் என்றும், அப்படி நண்பர்களை அல்லது நெருக்கமானவர்களை அழைப்பது சா¢யா என்பதுபோல எழுதியிருந்தார். இருவா¢ன் கருத்துக்களும் சா¢யென்றாலும், நடைமுறையில் இருக்கும் பழக்கத்தைப் பற்றி சற்று அறிந்து கொண்டால், இதில் எது சரியானது என்பதை ஓரளவு புரிந்துகொள்ளலாம் என்பதால் இதனை எழுதுகிறேன்.

    ஐம்பது அல்லது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு 'ரோஜுலு மாராயி' எனும் தெலுங்குத் திரைப்படத்தை தமிழில் "காலம் மாறிப்போச்சு' என்ற தலைப்பில் உருவாக்கினார்கள். அதில் ஒரு பாட்டு வரும். ஆண், பெண் ஜோடியாகப் பாடுகின்ற பாடல். ஆண் குரல் எஸ்.சி.கிருஷ்ணன் என்பவருடையது. பெண் குரல் நினைவில் இல்லை. அந்தப் பாடல் "பட்டணம் தான் போகலாமடி, பொம்பளை பணம் காசு சேக்கலாமடி" என்று தொடங்கும்.

அதில் கடைசி வா¢கள் "நீ உலகம் தொ¢ஞ்ச பொம்மனாட்டி, நான் ஒண்ணுமே அறியா கம்மனாட்டி" என்பது. இதனை உடுமலை நாராயணகவி எழுதியதாக நினைவு. மிகச் சாதாரணமான எளிய சொற்களைக் கொண்டு எழுதப் பட்டிருந்தாலும், அந்தக் காலத்தில் மக்கள் கிராமங்களைவிட்டு நகரங்களுக்குக் குடிபுக எண்ணியிருந்த நிலை இருந்தது. அதனை தவறு என்று சுட்டிக்காட்டும் விதமாக இந்தப் பாடல் அமைந்திருந்தது. ஆணுக்கு நகரத்துக்குப் போகவேண்டுமெங்கிற ஆசை. பணம் காசு சேர்க்க வேண்டுமெங்கிற ஆசை. ஆனால் அப்படி பட்டணம் போனால் வரக்கூடிய தீமைகளை அந்தப் பெண் பட்டியலிட்டு பயமுறுத்த, இறுதியில் ஆண் அவள் சொல்வதுதான் சரி, 'நீ உலகம் அறிந்தவள், நனோ, ஒண்ணுமே அறியாதவன்' என்று சொல்கையில் தன்னை 'கம்மனாட்டி' என்ற சொல்லால் குறிப்பிடுவதாக கவிஞர் எழுதியிருந்தார்.

    இதனை ஏன் சுட்டிக் காட்டுகிறேன் என்றால், இந்தச் சொல்லை விதவை என்ற பொருளில் மட்டுமல்ல, அறியாமையில் உழலுபவன் என்றும் பொருள் கொள்ளும்படியாக எழுதியிருப்பதால் இந்தச் சொல் 'தீண்டத்தகாதது' அல்ல என்பதைப் பு¡¢ந்து கொள்ளலாம். இது தவிர வேறொரு நிகழ்ச்சியையும் சொன்னால் மேற்சொன்ன எனது கருத்துக்கு வலு சேர்ப்பதாக அமையும் என்பதால் அதனையும் கூறுகிறேன்.

    பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தம் அவர்களைத் தெரியாதவர்கள்
இருக்க முடியாது. அவர் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில்
முதுநிலை படிப்புக்காகச் சேர்ந்தார். அப்போது அறிவியலைத்தான்
பாடமாக எடுத்துக்கொண்டார். ஆனால் தமிழ்த்துறைத் தலைவராக
அங்கு இருந்த நாவலர் திரு சோமசுந்தர பாரதியார்
திரு  அ.ச.ஞானசம்பந்தத்திடம், அவர் தந்தையாரைப் பற்றி
தெரிந்திருந்ததால், "அடேய்! நீயெல்லாம் தமிழ் படிக்காவிட்டால்,
வேறு யாரடா படிப்பார்கள், நீ அறிவியலில் சேர்ந்திருக்கிறாயே,
தமிழ் எம்.ஏ.வகுப்பில் சேர்ந்துகொள்" என்று உரிமையோடு சொன்னார்.

    அதற்கு அவர் யோசனையை மா¢யாதையுடன் தட்டிக்கழிக்க எண்ணிய அ.ச.ஞா. சொன்னார், "ஐயா! தமிழ் படிக்கிறேன், ஆனால் ரா.ராகவ ஐயங்கார், பாடம் எடுப்பதானால் நான் அவசியம் தமிழில் சேர்கிறேன்" என்றார்.

    இந்த ரா.ராகவ ஐயங்கார் ராமனாதபுரத்தைச் சேர்ந்த மிகப்பொ¢ய தமிழறிஞர். ராமனாதபுர சமஸ்தானத்தில் பெரும் புலவர். முதுபெரும் கிழவர். இவருடைய உறவினர்தான் மு.ராகவய்யங்கார் எனும் தமிழறிஞர். இவரது புலமையைக் கண்டு ராஜா சர் அண்ணாமலை செட்டியார் அவர்கள் ரா.ராகவ ஐயங்காரை அண்ணாமலை பல்கலக்கழகத்தில் தமிழ்த்துறையில் ஆய்வுத்துறை தலைவராக நியமித்திருந்தார். இவர் வகுப்புக்குச் சென்று பாடம் எடுப்பதில்லை. ஆய்வு மட்டுமே இவரது பணி. அந்த நிலையில், இவர் பாடம் எடுத்தால், நான் தமிழ் படிக்கிறேன் என்று அ.ச.ஞா. சொன்னது "போகாத ஊருக்கு வழிசொல்வது" போல இருந்தது. அப்போதே தடியூன்றி நடக்கும்
பருவம் ஐயங்காருக்கு. அவராவது பாடம் எடுப்பதாவது என்ற எண்ணத்தில் இப்படியொரு நிபந்தனையை விதித்திருந்தார் அ.ச.ஞா.

    சோமசுந்தர பாரதி எப்பேற்பட்டவர்? விடுவாரா? அவர் ரா.ராகவ ஐயங்காரிடம் போய் நடந்ததைச் சொன்னார். அவர் சொன்னார், "இந்தப் பையனுடைய அப்பா பெரும் தமிழறிஞர் என்பதால், இவனும் அப்படியே இருக்க வேண்டுமா என்ன?. இருந்தாலும், அவன் விரும்பியபடி நான் எம்.ஏ.வகுப்புக்குப் பாடம் எடுக்கத்தயார்" என்றார். இதனை பாரதியார் அ.ச.ஞாவிடம் சொன்னதும் அவரும் வேறு வழியின்றி தமிழ் எம்.ஏ.வகுப்பில் சேர்ந்தார். அவரோடு மொத்தம் நான்கு பேர்தான் தமிழ் எம்.ஏ.வகுப்பில் படித்தார்கள்.

    அந்த நிலையில் தினமும் இந்த நான்கு பேருக்கும் பாடம் நடத்த அறிஞர் ரா.ராகவ ஐயங்கார் வகுப்புக்கு வருவார். அவர் வரும்போது அவர் ஊன்றி நடக்கும் கைத்தடியின் ஓசை இவர்களுக்குக் கேட்டவுடன் நான்கு பேரும் அமைதியாக உட்கார்ந்திருப்பர். ஒரு நாள் கைத்தடி ஓசை கேட்கவில்லை என்பதால் அ.ச.ஞா. பாடத் தொடங்கினார். அவை மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பாடல்கள். நான்கு பாடல்களைப் பாடி முடிக்கும் வரை ஆசி¡¢யர் வரவில்லை என்று பாடிக் கொண்டிருந்தார். ஆனால் கைத்தடியின் அடியில் ரப்பர் பதித்திருந்ததால் கைத்தடி சத்தம் கேட்காமல் ஆசிரியர் வகுப்பறை வாசலில் நின்று கேட்டுக் கொண்டிருந்ததை இவர் அறியவில்லை.

    பின்பு ஆசி¡¢யர் உள்ளே வந்து, "அடேய்! முதலியார் மகனே! (அப்படித்தான் ஆசிரியர் அ.ச.ஞா.வை அழைப்பார்). இதுவரை பாடிக் கொண்டிருந்தாயே, அவை யாருடைய பாட்டுக்கள்?" என்றார்.

    அ.ச.ஞா. சொன்னார், "இவைகளெல்லாம் சுப்பிரமணிய பாரதியாருடைய பாடல்கள்" என்று.

    "அப்படியா, இப்படியெல்லாம் கூட அவன் பாட்டுக்கள் எழுதியிருக்கிறானா? தெரியாமல் போய்விட்டதே. அவன் ஏதோ, நாட்டுப் பாடல்கள் பாடுகிறான் என்றல்லவா கேள்விப்பட்டிருக்கிறேன். அடடா! அந்தப் பாடலின் கருத்து உனக்கு விளங்குகிறதா. அப்படியே, நம்மாழ்வார் பாடிய பாடல்களின் சாரங்களை அல்லவா அவன் பிழிந்து கொடுத்திருக்கிறான். எப்பேற்பட்ட கவிஞன். இதுவரை புரிந்துகொள்ளாமல் போய்விட்டேனே" என்று
அவரை மீண்டுமொருமுறை பாடச்சொல்லிக் கேட்டுவிட்டு வகுப்பு நடத்தினார்.

    அன்று மாலை இவர் விடுதியில் தங்கி இருந்தபோது, துணைவேந்தர் ரைட் ஆனரபிள் சீனிவாச சாஸ்திரியாரின்  கார் ஓட்டி வந்து, துணை வேந்தர் அழைப்பதாக அ.ச.ஞா.வை அழைத்தார். இவரும் காரில் சென்று அவர் வீட்டை அடைந்தார். அங்கு துணை வேந்தருடன் ரா.ராகவ ஐயங்காரும் இருந்தார். அ.ச.ஞாவைக் கண்டதும் துணைவேந்தர் சீனிவாச சாஸ்திரி, அவரை எப்போதும் அழைக்கும் விதத்தில் "அடே கம்மனாட்டி" வாடா.ஐயங்கார் சுவாமிக்கு ஏதோ பாட்டுக்களைப் பாடிக் காட்டினாயாமே! அவற்றை எனக்கும் பாடிக் காண்பிக்க மாட்டாயா?" என்றார்.

    உடனே அ.ச.ஞா. அந்தப் பாடல்களை துணை வேந்தருக்காகவும் பாடிக்காட்டினார். அப்போது முதியவர்களான அவ்விருவரும்,
அதாவது சீனிவாச சாஸ்திரியும் ரா.ராகவ ஐயங்காரும் கண்களில்
நீர் வடிய கேட்டுக் கொண்டிருந்தார்களாம். மகாகவியின் பாடல்கள்
இத்தனைத் தாக்கத்தைத் தந்தது கண்டு அ.ச.ஞா.வுக்கு பெருமையாக
இருந்தது.

    இந்த வரலாற்று உண்மையில் அத்தனை பெரிய பதவியில் இருந்த
சீனிவாச சாஸ்திரியார் "கம்மனாட்டி"  எனும் சொல்லால் அ.ச.ஞா.வை அழைத்தது அன்பினால் மட்டுமே, அந்தச் சொல்லின் 'பொருளை'
உணர்ந்து அல்ல என்பதற்காச் சொன்னேன்.

    இந்த வரலாற்றுச் செய்தியை திரு அ.ச.ஞா. எழுதிய "நான் கண்ட பெரியோர்கள்" எனும் நூலில் காணலாம். இதுபோன்று இந்த
'கம்மனாட்டி' எனும் சொல்லை கவியோகி சுத்தானந்த பாரதியாரும் பயன்படுத்தியிருக்கிறார், புண்படுத்தும் பொருளில் அல்ல, அன்போடு
மிக அன்னியோன்னி யமான நண்பர்களை அப்படி விளித்திருக்கிறார் என்பதற்கும் சான்றுகள் இருக்கின்றன.

    நண்பர் கே.எம்.ஆர். கட்டுரையும், அதற்கு ஜப்பான் 'மைனர்வாள்'
எழுதிய பின்னூட்டமும் ஏற்படுத்திய விளைவால் விளைந்தது இந்தக்
கட்டுரை. சில சொற்களின் நேரடி பொருள் 'லிட்டரரி மீனிங்' என்பார்களே அவைசில இடங்களில் எடுத்துக் கொள்ளக்கூடாது. அவை பயன்படுத்தும் விதத்திலும் சூழ் நிலைகளையொட்டியும் அமையும் என்பது என் கருத்து.
என்ன நண்பர்களே, உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்களேன்.

நன்றி, வணக்கத்துடன்
வி.கோபாலன்
தஞ்சாவூர்

------------------------------------------------------------------------------------------
வாத்தியாரின் கருத்து:

மைனர் சொல்வதும் சரிதான். அந்தச் சொல் தமிழகத்தின் வேறு
பகுதிகளில் அந்த அர்த்தத்துடன் பயன் படுத்தப்படுகிறது. கோபாலன் சார் சொல்வது போல் செல்லமாக விளிப்பதற்கும் பயன் படுத்தப்பெறுகிறது.

அன்னையோடு அறுசுவை போம்; தந்தையோடு கல்வி போம் என்பார்கள். எங்கள் பகுதியில், விதவைத் தாயாரால் வளர்க்கப்பெற்ற குழந்தைகள் சரியாகப் படிக்காமல் பின்னாட்களில் உதவாக்கரையாகத் திரிந்துள்ளன. நானும்  சிலரைப் பார்த்துள்ளேன். அன்னையின் செல்ல வளர்ப்புத்தான் அதற்குக் காரணம். அப்படிப்பட்ட குழந்தைகளை  ‘கம்மனாட்டி வளர்த்த கழிசடை’ என்று சொல்வார்கள்’

கழிசடை’ என்றால் ஒன்றிற்கும் உதவாத நபர் அல்லது ஒன்றிற்கும் உதவாதபொருள் என்று அர்த்தம். worthless person or thing

அது போல சில சொற்கள் இரண்டுவிதமான அர்த்ததைக் கொடுக்கும்.

எங்கள் பகுதியில் ஒருவனைச் சாடுவதற்கு (திட்டுவதற்கு) பலரும் சர்வசாதாரணமாகச் சொல்லும் சொல்: ‘பட்டுக்கிடப்பான்’ அல்லது ’பட்டுக்கெடப்பான்’

பட்டுக்கிடப்பான் என்றான் அடிபட்டுக்கிடப்பான் அல்லது நோய்வாய்ப்பட்டுக் கிடப்பான் என்று பொருள்.

அதே சொல்லைச் சில பெரிசுகள், தங்கள் வீட்டுப் பேரனைக் கொஞ்சும்போதும் சொல்வார்கள். “பட்டுக்கிடப்பான்  சுட்டியாக இருக்கானே! பட்டுக்கிடப்பான் அழகாக இருக்கானே!”

இங்கே அந்தச் சொல்லிற்கு, ‘பட்டில் கிடப்பவன்’ என்று பொருள்

செட்டி நாட்டுப் பகுதியான பள்ளத்தூரில் வளர்ந்த திரைப்பட நடிகை திருமதி மனோரமா அவர்கள் இந்தச்  சொல்லை செட்டிநாட்டுத் தொணியில் மிக அழகாகச் சொல்வார். (படம் தில்லானா மோகனாம்பாள்)
-------------------------------------------------------------------------------------------
அந்தக் காலத்தில் அண்ணாமலை பல்கலைகழகத்தில் பணியில் இருந்த பல மூத்த தமிழ் அறிஞர்களைப் பற்றியும், அவர்கள் செய்த அரிய தமிழ்ப் பணிகளைப் பற்றியும் இன்றையத் தலைமுறை அறியாது. அவர்களில் சிலரைத் தன் கடிதத்தில் திரு.வி.கோபாலன் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். அவர்களைப் பற்றிய மேல் விவரங்களை  நீங்கள் தெரிந்து கொள்வதற்காக விக்கி மகாராஜாவிடம் கேட்டு வாங்கிக் கீழ் கொடுத்துள்ளேன். விருப்பம்
உள்ளவர்கள் படித்து மகிழுங்கள்
1
Article about Scholar R.Raghava Iyengar http://en.wikipedia.org/wiki/R._Raghava_Iyengar
2.
பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தன் http://en.wikipedia.org/wiki/A._S._Gnanasambandan
3
Rt.Hon.Srinivasa Sastri http://en.wikipedia.org/wiki/V._S._Srinivasa_Sastri
---------------------------------------------------------------------------------------------------
மேலும் கோபாலன் அவர்கள் அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த ஒரு பாடலைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்கள். அந்தப் பாடல்  இடம் பெற்ற படத்தின் விவரம் மற்றும் அதற்குப் பங்களித்தவர்களின் விவரங்களை, அவருக்காகக் கீழே  கொடுத்துள்ளேன்
------------------------------------------------
பாடல்: பட்டணந்தான் போகலாமடி
திரைப்படம்: எங்கள் வீட்டு மஹாலட்சுமி
பாடியவர்கள்: சீர்காழி கோவிந்தராஜன், பி.சுசீலா
இயற்றியவர்: உடுமலை நாராயண கவி
இசை: மாஸ்டர் வேணு
படம் வெளிவந்த ஆண்டு: 1957

------------------------------------------------------
விவரம் சரி, பாடல் வரிகள்?
அதையும் கொடுத்துள்ளேன்
----------------------------------
ஹ்ஹ்ம் மூட்டயக் கட்டிக்க..
எதுக்கு?

பட்டணந்தான் போகலாமடி பொம்பளே பணங்காசு தேடலாமடி - நல்ல
கட்டாணி முத்தே என் கண்ணாடி நீயும் வாடி பொண்டாட்டி தாயே

டவுனு பக்கம் போகாதீங்க மாப்பிள்ளே டவுனாகிப் போயிடுவீங்க - அந்த
டாம்பீகம் ஏழைக்குத் தாங்காது பயணம் வேண்டான்னா கேளு மாமா

கெட்டவுங்க பட்டணத்த ஒட்டிக்கோணும் என்பதால
கெட்டவுங்க பட்டணத்த ஒட்டிக்கோணும் என்பதால
பட்டிக்காட்ட விட்டுப்போட்டுப் பல பேரும் போவதால
கட்டிச் சோத்தக் கட்டிக் கொள்ளடி பொம்பளே
தட்டிச் சொன்னா கேக்க மாட்டேண்டி - நல்ல
கட்டாணி முத்தே என் கண்ணாட்டி நீயும் வாடி பொண்டாட்டி தாயே

வேலை ஏதுங்க கூலி ஏதுங்க வெக்கக்கேட்ட சொல்றேன் கேளுங்க - அங்கே
வேலை ஏதுங்க கூலி ஏதுங்க வெக்கக்கேட்ட சொல்றேன் கேளுங்க
காலேஜ் படிப்பு காப்பி ஆத்துதாம் பிஏ படிப்பு பெஞ்சு தொடைக்குதாம்
ஆளை ஏச்சு ஆளு பொழைக்குதாம் அஞ்சுக்கு ரெண்டு கஞ்சிக்கலையுதாம்
மேலே போறது நூத்துல ஒண்ணு மிச்சமுள்ளது லாட்டரியடிக்குதாம்

எப்படி?

ஒண்ணான சாமி எல்லாம் ஒண்ணுமே பண்ணாமே தவிக்கையிலே மாப்பிள்ளே
ஒண்ணான சாமி எல்லாம் ஒண்ணுமே பண்ணாமே தவிக்கையிலே
உன்னாலே என்னாகும் எண்ணமே போனா பின்னாலே கேடு மாமா

ராத்திரி பகலா ரிக்சா இழுப்பேன் நைஸா பேசி பைசா இழுப்பேன்
அம்மா ஒதுங்கு ஒதுங்கு
ராத்திரி பகலா ரிக்சா இழுப்பேன் நைஸா பேசி பைசா இழுப்பேன்
டிராமா சினிமா சர்க்கஸ் பார்ப்பேன் ராஜா மாதிரி சிகரெட்டும் பிடிப்பேன்
வேத்துப் புடுங்கினா பீச்சுக்குப் போவேன் மீந்தப் பணத்திலே மீனு வாங்குவேன்
ஆத்தாடி உன் கையில குடுப்பேன் ஆக்கச் சொல்லியே சாப்பிட்டுப் படுப்பேன்

மேல இதுக்கு மேல சொல்ல மாட்டேண்டி பொம்பள இந்த ஊரில் இருக்க மாட்டேண்டி - நான்
இப்போதே போவணும் உங்கொப்பாவைக் கேட்டு ஏதாச்சும் வாங்கி வாடி

பட்டணந்தான் போகலாமடி பொம்பளே பணங்காசு தேடலாமடி - அந்தக்
கட்டாணி முத்தே என் கண்ணாடி நீயும் வாடி பொண்டாட்டி தாயே
டவுனு பக்கம் போகாதீங்க மாப்பிள்ளே டவுனாகிப் போயிடுவீங்க - அந்த
டாம்பீகம் ஏழைக்குத் தாங்காது பயணம் வேண்டான்னா கேளு மாமா

மனுஷன மனுஷன் இழுக்கற வேலை வயிறு காஞ்சவன் செய்யற வேலை
மனுஷன மனுஷன் இழுக்கற வேலை வயிறு காஞ்சவன் செய்யுற வேலை
கழுத்துக்கு மீறி பணம் வந்த போது மனுஷன சும்மா இருக்க விடாது
என்னை மறந்து உன்னை மறந்து எல்லா வேலையும் செய்வே துணிஞ்சு
இரவு ராணிகள் வலையில விழுந்து ஏமாந்து போவே இன்னும் கேளு

அப்புறம்..

போலீசு புலி புடிக்கும் மாமா புர்ராவ பேத்தெடுக்கும்
அங்கே போவாதே வீணாக சாவாதே மாமா பொஞ்சாதி பேச்சக் கேளு

அப்படியா ஆஹா .. -

நீ ஒலகம் அறிஞ்ச பொம்மனாட்டி நான் ஒண்ணுமே தெரியாக் கம்மனாட்டி - நீ
ஒலகம் அறிஞ்ச பொம்மனாட்டி நான் ஒண்ணுமே தெரியாக் கம்மனாட்டி
ஊருவிட்டு ஊரு போனா சீரு கெட்டுப் போகுமுன்னு
ஊருவிட்டு ஊரு போனா சீரு கெட்டுப் போகுமுன்னு
உண்மையோட சொன்ன சொல்லு நன்மையாகத் தோணுது

பட்டணந்தான் போக மாட்டேண்டி உன்னையும் பயணமாகச் சொல்ல மாட்டேண்டி நல்ல
கட்டாணி முத்தே என் கண்ணத் தொறந்தவ நீ தான் பொண்டாட்டி தாயே
என்னைத் தனியா விட மாட்டேன்னு என் தலைமேல் அடிச்சு சத்யம் பண்ணு
எங்கப்பனான சத்தியம் சத்தியம் சத்தியம்

ஏரோட்டி பாத்தி புடிச்சு அதிலே நீர் பாய்ச்சு நெல்ல வெதெச்சு - நம்ம
ஊரோடு ஒண்ணாக உள்ளதக் கொண்டு நாம் உல்லாசமாக வாழ்வோம்
ஏரோட்டி பாத்தி புடிச்சு அதிலே நீர் பாய்ச்சு நெல்ல வெதெச்சு - நம்ம
ஊரோடு ஒண்ணாக உள்ளதக் கொண்டு நாம் உல்லாசமாக வாழ்வோம்
-----------------------------------------------
பாடல் வரிகள் சரி, பாடலின் ஒலி வடிவம்?
அதையும் கொடுத்துள்ளேன். அதற்கான சுட்டியையும் கொடுத்துள்ளேன். கேட்டு மகிழுங்கள்
பாட்டின் ஒலி வடிவத்திற்கான சுட்டி:Song Link: http://www.in.com/music/enga-veettu-mahalakshmi/songs-55615.html
---------------------------------------------------------------------------------------


வாழ்க வளமுடன்!