மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

30.9.09

சிறுகதை: கொழுக்கட்டை

+++++++++++++++++++++++++++++++++++
சிறுகதை: கொழுக்கட்டை

கொழுக்கட்டையால் வரப்போகும் பிரச்னையைப் பற்றித் தெரியாமல்
வைக்கவைக்க கொழுக்கட்டையை உள்ளே தள்ளிக்கொண்டிருந்தான்
முருகப்பன். அவர்களும் மாப்பிள்ளையென்று தாங்கித் தடுக்குப்போட்டு
உபசரித்துக் கொண்டிருந்தார்கள்.

என்ன இருந்தாலும் அது சின்ன மாமியார் வீடு. மூன்றாவது தட்டில்
வெட்கமாகிவிட்டது. போதுமென்று சொல்லி விட்டான்.

அவனுக்கும் பதினெட்டு வயது முடிந்துவிட்டது. இத்தனை வருட
வாழ்க்கையில் இவ்வளவு சூடான, ருசியான பலகாரத்தை அவன்
சாப்பிட்டதே இல்லை.

இதன் பெயர் என்னவென்று வேறு கேட்டுவிட்டான். அவர்களும்
மனதிற்குள் சிரித்துவிட்டார்கள். கொழுக்கட்டை என்றார்கள்.

சாலி, அதாவது அவன் மனைவி விசாலாட்சி நன்றாகச் செய்வாள்
என்றார்கள். அவன் அப்போதே மனதில் நினைத்துக் கொண்டுவிட்டான்
- இன்னும் ஓருவாரம் அல்லது பத்து நாட்களுக்காவது தினமும்
சாயங்கால வேளைகளில் இதைச் செய்யச்சொல்லி சாப்பிட
வேண்டுமென்று.

ஆதனால் கொழுக்கட்டை என்ற பெயரை மூன்று அல்லது நான்கு
முறைகள் தொடர்ந்து சொல்லி, மனதில் பதியவைத்துக் கொண்டான்.

எல்லாம் அவன் அப்பச்சி சாத்தப்பசெட்டியார் செய்தவேலை.
அவனுக்கு ஐந்து வயதாக இருக்கும்போது அவனையும் தன்னோடு
செய்கோனுக்குக் (Vietnam) கூட்டிக்கொண்டு போய்விட்டார்.
பன்னிரெண்டு வருடங்கள் தொடர்ந்து அங்கேயே அவன்
இருக்கும்படியாகிவிட்டது.

நடுவில் அவர் இந்தியாவிற்கு வந்துபோனபோது கூட, அவனுடைய
படிப்பைக் காரணம் காட்டி அங்கேயே விட்டுவிட்டு வந்து விடுவார்.

அவன் படித்ததெல்லாம் பிரெஞ்சுக்காரர்கள் நடத்திய பள்ளிக்கூடத்தில்.
அதனால் பிரெஞ்சு மொழியில் நன்றாகப் பேசுவான்

ஆங்கிலம் அறைகுறை. தமிழில் தடுமாற்றம். எழுத வராது. பேச
மட்டும் வரும். முருகப்பன் என்று தமிழ்க்கடவுளின் பெயரை வைத்ததற்கு
மாறாக அவனுடைய தமிழ் அறிவு இருந்தது.

இட்லியை யார் புட்டுப்போட்டது என்பதற்குப் பதிலாக இட்லியை யார்
கிழித்துப் போட்டது என்பான். சாம்பாரின் மணம் நல்ல வாசமாக
இருக்கிறது என்பதற்குப் பதிலாக சாம்பாரின் மணம் வரும்போதே
கேட்கிறது என்பான்.

பிரெஞ்சு, மற்றும் வீயட்நாம் சிறுவர்களோடு சேர்ந்து, கால்பந்து
விளையாட்டைத்தான் தினமும் விளையாடுவான். அதனால் முரட்டுத்தனம்
மட்டுமே அவனிடம் எஞ்சி நின்றது. பதினைந்து வயதில் இருந்து
குத்துச்சண்டை வகுப்பிற்கு வேறு போய் வந்தான்.

அதையெல்லாம் பார்த்த சாத்தப்ப செட்டியார் அப்படியே விட்டால்
தாங்காது என்ற முடிவிற்கு வந்து - இரண்டாவது உலகயுத்தம் ஆரம்பித்த
சமயம், செய்கோனை விட்டு இந்தியாவிற்குத் திரும்பியவர் - திரும்பிய
கையோடு அவனுக்கு ஓரு பெண்ணைப் பார்த்துத் திருமணத்தையும் நடத்தி
முடித்துவிட்டார்.

பெண்ணிற்குப் பதினாறு வயதுதான்.

கதை நடந்த காலம் 1941ம் வருடம்.

அவள் எட்டாம் வகுப்புவரை படித்திருந்தாள். அருமையாகச் சமையல்
செய்வாள். அவள் வீட்டில் நன்றாகப் பயிற்சி கொடுத்திருந்தார்கள்.
கருணைக்கிழங்கு கெட்டிக்குழம்பு ஓன்றுபோதும். சாத்தப்ப செட்டியாருக்கு
மிக்க மகிழ்ச்சி - தன்னுடைய முரட்டு மகனுக்கு நல்ல மனைவி கிடைத்து
விட்டாளென்று!

தங்கள் ஊரில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும்
காரைக்குடிக்குத் தினமும் காலையிலோ அல்லது மாலையிலோ
சென்றுவிட்டுத் திரும்புவான் முருகப்பன்.

இல்லையென்றால் பொழுது எப்படிப்போகும்?

யுத்தத்தின் போக்கைப் பார்த்துக்கொண்டு, பிறகு ஏதாவது செய்யலாம்
என்று சாத்தப்ப செட்டியாரும் சும்மாதானிருந்தார். பணம் நிறைய
இருந்தது. சுக ஜீவனம். கவலை ஏதுமில்லை. அப்படி ஓருநாள்
காரைக்குடிக்கு வந்தவனைத்தான் கல்லுக்கட்டியில் மடக்கிய சின்ன
மாமனார் வீட்டினர் கொழுக்கட்டை, டிகிரி காப்பி கொடுத்து
வழியனுப்பி வைத்தனர்.
++++++++++++++++++++++++++++++++++++

வாடகை சைக்கிளைக் கடைக்காரனிடம் கொடுத்துவிட்டு, வீட்டை
நோக்கி நடக்க ஆரம்பித்தான் முருகப்பன்.

சபாபதி படத்தில் வரும் காளி. என். ரத்தினத்தைப் போல தன் கன்னங்களை
உப்பலாக வைத்து - சேட்டை செய்தவாறு ரோட்டில் நடக்க ஆரம்பித்தான்.
இன்னும் அரைக்காத தூரம் போகவேண்டும். வழியில் ஓரு பெரிய சாக்கடை
குறுக்கிட்டது.

அவனுக்கு முன்னால் நடந்துகொண்டிருந்த ஓரு இஸ்லாமிய இளைஞன்,
”ஹைத்திரிபாச்சா” என்று உரக்கக் குரல் கொடுத்துக்கொண்டே ஓரே தாவலில்
அந்த சாக்கடையைத் தாண்டிவிட்டு நடக்க ஆரம்பித்தான்.

நம்ம ஆளும் அதேபோல், ”ஹைத்திரிபாச்சா” என்று சொல்லிக் கொண்டே
தாண்டியவன் சாக்கடையின் மறுபக்கம் பத்திரமாக வந்துவிட்டான்.

வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தான். மனம் அசை போட்டது.
”ஹைத்திரிபாச்சா” என்று ஆரேழு முறை உள்மனது சொல்லிக்கொண்டது.
அங்கேதான் வந்தது வினை. ”கொழுக்கட்டை” என்ற வார்த்தை மனதில்
இருந்து விலகி அந்த இடத்தில், ”ஹைத்திரிபாச்சா” வந்து ஓட்டிக் கொண்டு
விட்டது.

விட்டிற்குள் நுழைந்ததுமே முதல் வேலையாக அவன் கண்கள் சாலியைத்
தேடின. நல்ல வேளை அவள் முகப்பு அறை வாயிலில்தான் நின்று
கொண்டிருந்தாள்.

அவன் பரபரப்போடு அவள் அருகில் சென்றவன் வேகவேகமாகச்
சொன்னான்.”ஏய், உங்க சின்னத்தா விட்டில ”ஹைத்திரிபாச்சா”
செஞ்சு கொடுத்தாங்கடி. மூன்று பிளேட் சாப்பிட்டேன். சூப்பரா
இருந்துச்சுடி...!”

அவள் சிரிக்காமல் பதிலுக்குக் கேட்டாள், ”உப்புப் போட்டதா?
இல்லை இனிப்புப் போட்டதா?”

”உப்புப் போட்டதுதான். உனக்குச் செய்யத்தெரியும் என்றார்களே...
உனக்குத் தெரியுமா? தெரியாதா?”

அவளுக்குச் சிரிப்பு வந்து விட்டது.

“”ஹைத்திரிபாச்சா” சைத்தரிபாச்சா’க்களை எல்லாம் நாங்கள்
வீட்டில் செய்யமாட்டோம். கடையில்தான் வாங்குவோம்!”

சுரீர் எனறது அவனுக்கு. அவள் விளையாடுகிறாள். பொய் சொல்கிறாள்
என்றுணர்ந்தான். கோபம்மேலிட பளார் என்று அவளை ஓங்கி அறைந்து
விட்டான்.

அதை எதிர்பார்க்காத அவள் ’ஐயோ’ வென்று சத்தமிட - சத்தத்தை
நிறுத்த சரமாரியாக மூன்று நான்கு குத்துகளை வேறு அவள் முகத்தில்
இறக்கிவிட்டான்.

பெரிய ரகளையாகிவிட்டது.

சத்தம்கேட்டு உள்வீட்டில் இருந்து ஓடிவந்த, அவனுடைய பெரியத்தா
அன்னபூரணி ஆச்சிதான் கலவரத்தைத் தடுத்தார்கள்.

”அப்பச்சி, பொம்பளப்பிள்ளையைக் கைநீட்டி அடிக்கலாமா?
பார்க்க நல்லாவா இருக்கு?” என்று கோபமாகக் கேட்டார்கள்
அவன் சாந்தமடைந்து, பதில் சொன்னான்.

”இல்லை, பெரியத்தா! பலகாரம் செய்யறதைப்பத்திக் கேட்கும் போது
கேலி செய்தாள். அதனால்தான் சண்டை வந்துவிட்டது!”

”பலகாரத்திற்காக யாராவது முகத்தில் இப்படி அடிப்பார்களா?
பார் - அவளுடைய முகம் என்னமா வீங்கிவிட்டது - கொழுக்கட்டை
மாதிரி!”

பெரிய ஆச்சி இதைச் சொல்லவும், முருகப்பன் மனதில் மின்னல்
வெட்டியது.

”கொழுக்கட்டை” என்ற சொல்லைக் கேட்டவுடன், முருகப்பன்
தன்தவறை உணர்ந்தான். இருவரிடமும் நடந்ததைச் சொன்னான்.
சாலியின் கைகளைப் பிடித்துக் கொண்டு மன்னிப்பும் கேட்டான்.

அடுத்த கணமே எல்லாம் சரியாகிவிட்டது.

அதற்குப் பிறகு முருகப்பன் சாலியைக் கைநிட்டி அடிப்பது கிடையாது.
தன் ஞாபக மறதியாலும் அறைகுறைத் தமிழாலும் வரும் குழப்பங்களைப்
போக்க அல்லது தீர்க்க யார் எது சொன்னாலும் உடனே தாளில் குறித்து
வாங்கிக் கொள்வதை வழக்கமாகக் கொண்டான்.

(செட்டிநாட்டிலுள்ள பெரிசுகள் தங்கள் பேரக்குழந்தைகளுக்குச்
சொல்லும் குட்டிக்கதைகளில் ஒன்று இது. அதை நான், ஊதிப் பெரிதாக்கி,
1941ம் ஆண்டு, உலக யுத்தம், பிரெஞ்சுப் பள்ளிக்கூடம், இளம் மனைவி,
உரையாடல்கள் போன்ற மசாலாக்களைச் சேர்த்து, எனது வழக்கமான
நடையில் எழுதி, உங்களுக்காகக் கொடுத்துள்ளேன்.)








வாழ்க வளமுடன்!

29.9.09

Short Story: நாகபட்டிணமும், நடமாடும் தங்கச் சிலையும்!

Nagapattinam - Kayaarohaneswarar, Neelayathatchi temple
படத்தின் மீது கர்சரை வத்து அழுத்தினால் படம் பெரிதாகத் தெரியும்

++++++++++++++++++++++++++++++++++++++++++
Short Story: நாகபட்டிணமும், நடமாடும் தங்கச் சிலையும்!

தாயார் இறந்து ஒரு மாதமாகிவிட்டது. ஆனாலும் தேனப்பனின் மனதில்
இன்னும் சோகம் போகவில்லை.

‘அப்பச்சி’ என்று ஆத்தாள் கூப்பிடுவது போன்று வீடு முழுக்க அவ்வப்போது
கேட்டுக் கொண்டிருந்தது.

அன்று சனிக்கிழமை. ஆத்தா பழக்கிவிட்டுப்போன பழக்கம். சுடவைத்த
எண்ணெயும், சிகைக்காய்த் தூளும், கின்னங்களுமாக தோட்டத்துக்
குளியலறைக்குப் போனவன், குளிக்காமல், கிணற்றடித் திட்டில் உட்கார்ந்து,
பலத்த யோசனையில் ஆழ்ந்திருந்தான்.

அங்கே தற்செயலாக வந்த அவனுடைய மனைவி முத்துலெட்சுமி,
அருகில் வந்து, அவனுடைய தலையைக் கோதிவிட்டவாறு கேட்டாள்,
” ராசாவுக்கு என்ன கவலை? எந்த நாட்டிலிருந்து கப்பம் வரவில்லை?”

”நமக்கு எங்கே கப்பம் வரும்? அப்பம்தான் வரும், அதுவும் சொல்லிவிட்டால்
ராயர்கடை அப்பம்தான் வரும்”

“பிறகென்ன? சூடாக நாலு அப்பத்தைச் சாப்பிட்டுவிட்டு, அடுத்த வேலையைப்
பார்க்க வேண்டியதுதானே? எதற்காக நொடித்துப்போய் உட்கார்ந்திருக்கிறீர்கள்?”

”எங்க ஆத்தா, நான் அவதிப்படனும்னு, ஒன்றைப் பெற்று, வளர்த்துவைத்து
விட்டுப் போயிருக்கிறாளே, அதை நினைத்துத்தான் கவலைப் பட்டுக்
கொண்டிருக்கிறேன்.”

“நீங்க கவலைப்படுவதாலே, அவதி பரிதாபப்பட்டு, போய்விடப்போகிறதா என்ன?”

“போகாது. ஆனாலும் இப்படி ஈவு இரக்கமில்லாத மனிதன், என் ஆத்தாவிற்கு
எப்படி மகனாகப் பிறந்தான் என்பதை நினைக்கும்போது, கோபம் கோபமாக
வருகிறது?”

“எல்லா விரல்களும் ஒரு மாதிரியா இருக்கிறது? வலது, இடது என இரண்டு
கைகளும் ஒருமாதிரியாகவா பயன்படுகிறது? குடும்பம் என்றால், அண்ணன்,
தம்பி என்றால், இப்படிக் கலந்துகட்டிதான் இருப்பார்கள். எல்லோரும் உங்களைப்
போல ஆத்தாபிள்ளையாகவா இருப்பார்கள்? நீங்கள்தான் விடாப்பிடியாக உங்கள்
ஆத்தாவைக் கடைசிவரை கூடவே வைத்திருந்து, கண்ணைப் போல பார்த்துக்
கொண்டீர்கள். உங்கள் அண்ணன் படித்து முடித்து வேலைக்குப் போன
நாளிலிருந்து இன்றுவரை பெரிய குடும்பத்தில் ஒட்டுதல் இல்லாமல் தன்னைப்
பேணியாகவே இருந்துவிட்டார். தான், தனது மனைவி, மக்கள் என்று குடும்ப
அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார். அவரைப் போய் யார் திருத்த முடியும்?
அல்லது யார் மாற்ற முடியும்?”

”அதெல்லாம் ஆண்டவன் மாற்றுவான்!”

“ஆண்டவனிடம் விட்டு விட்டீர்கள் அல்லவா? பிறகெதற்கு அவரைப்
பற்றிய பேச்சு?”

“ஆண்டவன் அவரைக் கேட்கட்டும். ஆனால் ஆத்தாவின் மருத்துவச்
செலவிற்காகவும், கேதச் செலவுகளுக்காகவும் சடையப்ப செட்டியாரிடம்,
கடனாக வாங்கிய இரண்டு லட்ச ரூபாயை யார் திருப்பிக் கொடுப்பார்கள்?”

”உங்கள் ஆத்தா, காதில் போட்டிருந்த வைரத்தோட்டையும், கழுத்தில் அணிந்திருந்த இரட்டைவடச் சங்கிலியையும், இதர நகைகளையும் விற்றால் கடனைக் கொடுத்து விடலாமே? அதைச் செய்யுங்கள்”

’ஆத்தாவின் நகைகளை விற்க எனக்கு விருப்பம் இல்லை. ஆத்தாவின் நினைவாக அதை வைத்துக் கொள்ளப்போகிறேன்”

’சரி, அவரிடம் தவணை கேட்டு வையுங்கள். யோசித்து ஏதாவது செய்து,
கடனைக் கட்டிவிடலாம்”

“என் அண்ணன் பைசாக் கூடக் கொடுக்காமல் போய்விட்டாரே?
சும்மா விட்டுவிடலாம் என்கிறாயா?”

“கேட்டால் என்ன சொல்லுவார்? ஆத்தாவைக் காத்த அருமை மகன் எனும்
பெயர் உனக்குத்தான் கிடைத்திருக்கிறது. ஊருக்குள் கொடிபிடிக்கும் யோகம்
உனக்குத்தான் கிடைத்திருக்கிறது. சொந்தக்காரர்களிடையே உனக்குத்தான்
மதிப்பு இருக்கிறது. அதோடுசேர்த்துக் கடனையும் நீயே வைத்துக் கொள்
என்று கூறிவிடுவார்”

“ஒகோ!”

“என்ன ஒகோ? அதையெல்லாம் நானாக கற்பனை செய்து சொன்னேன்.
அவரிடம் கேட்டால் சண்டைதான் மிஞ்சும். நீங்கள் அவரிடம் ஒன்றும் கேட்க
வேண்டாம். ஒன்று சொல்கிறேன். நீங்கள் உங்கள் ஆத்தாவிற்கு ஒத்தை மகனாக
இருந்தால் என்ன செய்வீர்கள்? யாரிடம் போய்க் கேட்பீர்கள்? ஆகவே உங்கள்
ஆத்தாவிற்கு நீங்கள் ஒத்தைமகன் என்று நினைத்துக் கொண்டு, அவரை மறந்து
விடுங்கள். ஒரு தெளிவு வரும்”

செவிட்டில் அறைந்ததைப் போன்று இருந்தது தேனப்பனுக்கு.

அதோடு ஒரு தெளிவும் வந்தது.

++++++++++++++++++++++++++++++++++++++
மீனாட்சி ஆச்சி எனும் மீனியாச்சிக்கு இரண்டு மகன்கள் என்றாலும், இளைய
மகனான தேனப்பனைத்தான் அவர்கள் அப்பச்சி என்று கூப்பிடுவார்கள்.

அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று அந்தப் பெயர், ஆச்சி அவர்களின்
மாமனாரின் திருப்பெயர். அதனால் அந்தப் பெயரைச் சொல்லிக் கூப்பிட
மாட்டர்கள். அதோடு, சின்ன வயதில் தேனப்பன் அழகாக, துறுதுறுவென்று
இருப்பான். அப்போது ஆச்சி, அவர்கள் என்னைபெத்த அப்பச்சி இவன்,
என் அப்பச்சியே எனக்கு மகனாக வந்து பிறந்திருக்கிறார்கள் என்று
வருகிறவர்களிடமெல்லாம் சொல்லி, இவனைக் கொஞ்சுவார்கள்.

நான் உன்னோடுதான்டா’ இருப்பேன் என்றும் சொல்வார்கள். அதன்படியே,
தனது எண்பது வயதுவரை அவனுடனேயே இருந்து விட்டு சென்ற மாதம்தான்
காலமானார்கள். ஆச்சியவர்களின் 55 வருட நாகபட்டிண வாழ்க்கை முடிவிற்கு
வந்துவிட்டது.

1954ஆம் ஆண்டு ஏகப்ப செட்டியாரைத் திருமணம் செய்துகொண்டு,
நாகபட்டிணத்திற்குக் குடிவந்த ஆச்சி, முதல் 5 வருட காலம் மஞ்சக்
கொள்ளைப் பகுதி கன்னாரத்தெருவில்தான் குடியிருந்தார்கள்.
அப்போது செட்டியாருக்கு, நகரத்தார் ஒருவரின் அடகுக்கடையில் வேலை.
சம்பளம் நூறு ரூபாய்.ஆனால் அன்றைய பொருளாதாரச் சூழ்நிலையில் செலவு
போக மாதம் இருபது ரூபாய் மிஞ்சும்.

முழுத்தேங்காய் இரண்டணாதான் விலை. கடைக்காரன் ஒரணாவை வாங்கிக்
கொண்டு அரைமூடி கேட்டால்கூடத் தருவான். காலணாவை வாங்கிக் கொண்டு
இரண்டு பற்றைகள் கீறியும் தருவான். காலைச் சட்டினிக்கு அது போதும்.

வாழ்க்கை எளிமையாக இருந்தது. விலைவாசி அத்தனை மலிவாக இருந்தது.

வேலைக்கு இருந்தால் முன்னுக்கு வரமுடியாது என்று தன் மாமனார் கொடுத்த
எட்டாயிரம் ரூபாய் முதலீட்டில் சிறிய ஐஸ்ஃப்ரூட், தயாரித்து விற்கும் கடை
யொன்றைச் செட்டியார் துவங்கினார்.

தினமும் பத்துப் பெட்டி அளவு ஐஸ் ஃப்ரூட்கள் தயாராகும். கூலியாட்கள்
சைக்கிள்களில் வைத்துத் தள்ளிக்கொண்டுபோய் விற்றுவிட்டு வருவார்கள்.

நீலாயதாட்சி கோவில் வாசல், பெருமாள் கோவில் வாசல், செயின்ட் லூர்து
சர்ச், செயின்ட் பீட்டர் சர்ச், சி.எஸ் ஐ உயர் நிலைப்பள்ளி, நகராட்சி பெண்கள்
பள்ளி என்று கூட்டம் சேருமிடங்களில், அத்தனை பெட்டி ஐஸ்களும் விற்றுக்
காசாக வந்துவிடும்.

வடக்கு வீதியில் வீடும், ஐஸ் கடையும் ஒரே இடத்தில். வாடகைக் கட்டிடம்.
இன்றுவரை அங்கேதான் ஜீவனம் நட்ந்து கொண்டிருக்கிறது. மீனாட்சி ஐஸ்
பார்லர்’ என்றால் அனைவருக்கும் தெரியும். வேறுமனே மீனாட்சி ஐஸ் பார்லர்,
நாகபட்டிணம் என்று எழுதினால், கடிதங்கள் போய்ச் சேர்ந்துவிடும்.
அந்த அளவிற்குப் பெயருடன் விளங்கியது. ஆனால் வளர்ச்சிதான் இல்லை.
வருமானம் கைக்கும் வாய்க்குமாக இருந்தது. சேமிப்பு மூன்றாண்டுகளுக்கு
ஒரு முறை இத்துப்போன பெட்டிகளை, புதுப்பிக்கும் பணியில் கரைந்து விடும்.

மூத்தமகனை உள்ளூரிலும், பிறகு காரைக்காலில் உள்ள கல்லூரியிலும் படிக்க
வைத்த செட்டியார், அவனுக்கு தனியார் வங்கியொன்றில் வேலையும் வாங்கிக்
கொடுத்தார். அவன் விசுவாசமில்லாதவன். தன்னைப் பேணி, ஆரம்பத்தில்
வீட்டிற்குப் பணம் கொடுத்துக் கொண்டிருந்தவன், திருமணமான பிறகு
ஒன்றும் செய்வதில்லை. பணத்தைக் கட்டிக்கொண்டு அழுவான்.
சும்மா அழுகமாட்டான். மூக்கால் அழுவான்.

இளையவன், அவனுக்குப் பிறகு, பத்து ஆண்டுகள் கழித்துப் பிறந்தான்.
அது ஆச்சி அவர்களின் நச்சரிப்பால் ஏற்பட்டது. ”எனக்குப் பெண் குழந்தை
யென்றால் கொள்ளைப் பிரியம். எனக்கு ஒரு பெண் குழந்தை வேண்டும்.
அவளுக்கு நீலா என்று பெயர் வைக்க வேண்டும்.” என்று சொல்லிக்
கர்ப்பம் தரித்தார்கள் அவர்கள்.

விதி எப்போதுமே விருப்பத்திற்கு எதிராகத்தான் வேலை செய்யும்.

ஆச்சி அவர்களின் விருப்பம் நிறைவேறவில்லை. பெண் குழந்தை
பிறக்கவில்லை. மாறாக மீண்டும் ஆண் குழந்தையே பிறந்தது. ஒருவாரம்
வரை கண்கலங்கியவர்கள், பிறகு சமாதானமாகிவிட்டார்கள்.

தேனப்பன் பள்ளி இறுதியாண்டு படிக்கும்போது, செட்டியாருக்கு உடல்
நலமில்லாமல் போய்விட்டது. அவனை மேல் படிப்புப் படிக்க வைக்காமல்,
ஐஸ் கடைக்கு, தனக்கு உதவியாக வைத்துக் கொண்டு விட்டார் செட்டியார்.
ஆச்சி இதற்கு வருத்தம் தெரிவித்தபோது. செட்டியார் சிலாக்கியமாகச்
சொன்னார். “அவனுக்கு நாலில் கேது, படித்து வேலைக்குப் போகும்
ஜாதகக்காரனல்ல அவன். பின்னால் நன்றாக இருப்பான். இப்போது நீ
தொணதொணக்காதே!”

தேனப்பனுக்கும், தண்ணீர், எசன்ஸ், சாக்ரின், சீனி என்று மூலப்பொருட்களைக்
கலக்கி நேர்த்தியாக ஐஸ்ப்ரூட் போடும் தொழில் சின்ன வயதிலிருந்தே
அத்துபடியானதால், வியாபாரம் களைகட்டியது. இன்னும் இரண்டு சில்லிங்
பெட்டிகளைப் போட்டுத் தொழிலை விரிவாக்கினார்கள். கையில் சேர்ந்த
காசில் தேசிய நெடுங்சாலையில் தாமரைக்குளத்திற்கு எதிரே
(தற்போது தேவி திரையரங்கம் இருக்கும் பகுதியில்) 25 செண்ட் இடத்தை
வாங்கினார்கள்.

ஆனால் யார் கண்பட்டதோ - வாங்கிய இடம் நிலைக்கவில்லை.
ஆறு மாத காலத்திலேயே அதை விற்கும்படியாகிவிட்டது. செட்டியாருக்குப்
புற்று நோய்வந்து, சென்னைக்குக் கூட்டிக் கொண்டுபோய் வைத்தியம்
பார்த்ததில் அந்தப் பணம் கரைந்தது போக, செட்டியாரும் காலமாகிவிட்டார்.

அப்போது தேனப்பனுக்கு 25 வயது. யாரும் பெண் சொல்லிவிடவில்லை.
ஐஸ்புரூட் மாப்பிள்ளை என்று எந்தப் பெண்ணும் திருமணத்திற்கு
சம்மதிக்கவில்லை. மீனாட்சி ஆச்சி, தன்தம்பி மகளை, பைசா கூட
வாங்கிக் கொள்ளாமல் தன் மகனுக்கு மணம் முடித்து, நாகபட்டிணத்திற்குக்
கூட்டிக் கொண்டு வந்து விட்டார்கள்.

காலச் சுழற்சியில், முத்துலெட்சுமி நாகைக்கு வந்து இருபது வருடங்கள்
ஓடி விட்டது. தனக்கு வாழ்வு கொடுத்த விசுவாசத்தில், முத்துலெட்சுமி, தன்
அத்தைக்கும், தேன்னப்பனுக்கும் அத்தனை பணிவிடைகளையும் செய்தாள்.
தாம்பத்யமும் சிறப்பாக நடந்தது. அவர்களுக்கு இன்று ப்ள்ஸ் டூ முடித்து விட்ட
நிலையில் ஒரு பையனும் இருக்கிறான். இதுதான் தேனப்பனின் பூர்வ கதை.

**************************
காலதேவன்தான் சிறந்த ஓட்டக்காரன். எதைப்பற்றியும் கவலைப்படாமல்
சீராக ஓடிக்கொண்டிருப்பவன். அவனுடைய ஓட்டத்தில், பலருடைய வாழ்க்கை
முன்னுக்கு வந்திருக்கிறது. பலருடைய வாழ்க்கை பின்னுக்குப் போயிருக்கிறது.

அடுத்து வந்த ஐந்தாண்டுகளில் தேனப்பனின் வாழ்க்கை பலரும் புருவத்தை
உயர்த்திப் பார்க்கும் அளவிற்கு அசுர வளர்ச்சி பெற்றிருந்தது. எல்லாம் அவன்
தாயார் கும்பிட்ட தெய்வபலன். தன் மகன் நன்றாக இருக்க வேண்டும் என்று
அவர்கள் மனனம் செய்து அனுதினமும் பாடிய ‘ராஜேஷ்வரி கவசத்தின்’ மகிமை.
அதோடு தேனப்பனும், தன் தாயார் படத்திற்கு பூப்போட்டுக் கும்பிடாமல் எந்தப்
பணியையும் செய்வதில்லை.

தன் தாயரின் நினைவாக, தாயாரின் ஜென்ம நட்சத்திரமான மக’ நட்சத்திரத்தன்று,
நீலாதயாட்சி திருக்கோவிலில் பிரார்த்தனை செய்ததோடு, பத்து ஏழைகளுக்கு
அன்னதானம் செய்தும் வந்தான்.

நீலாயதயாட்சியின் கருணையால், அவன் பட்ட கஷ்டங்கள் அனைத்தும் ஒரே
நாளில் நீங்கியது. அவனுடைய மகன் பள்ஸ் டூ தேர்வில், மாவட்டத்திலேயே
முதல் மாணவனாகத் தேர்ச்சிபெற, அவன் படித்த தனியார் பள்ளிக்கூட
நிரவாகம் மகிழ்ந்து, அவனுக்கு, பொறியியற் படிப்பிற்கு சீட் வாங்கிக்
கொடுத்ததோடு, அவனுடைய படிப்புச் செலவு முழுவதையும் தாங்களே
ஏற்றுக் கொள்கிறோம் என்று சொல்லி விட்டார்கள். திருவாரூரில் நிலம் நீச்சு,
நவீன அரிசியாலை என்று செல்வம் கொழித்துக் கொண்டிருந்த நகரத்தார்
ஒருவர், தேனப்பனை நிர்வாகப் பங்குதாரராக சேர்த்துக் கொண்டு,
நாகப்பட்டிணம் - வேளாங்கன்னி சாலையில், இரண்டு கோடி ரூபாய்
செலவில் மிகப் பெரிய ஒயிட் ஐஸ் தயாரிக்கும் தொழிற்சாலையைத்
துவக்கினார்.

அடுத்து வந்த ஐந்து ஆண்டுகளில் தொழிற்சாலையும், இரண்டு மடங்கு
விரிவானது. தேனப்பனின் மகனும் படித்து முடித்து, இந்தியாவின் மிகப்
பெரிய கணினி மென்பொருள் நிறுவனத்தில் பணியிலமர்ந்தான்.

ஏடிஜே பெண்கள் பாலிடெக்னிக் அருகில் பெரிய வீடு. ஹுண்டாய்
சான்ட்ரோ கார் என்று தேனப்பனின் வாழ்க்கை அடையாளம் தெரியாமல்
மாறிவிட்டிருந்தது.

அதே நேரத்தில், தேனப்பனின் சகோதரர் வாழ்க்கை சிரம தசையில்
இருந்தது. திருமணமாகிச் சென்ற அவருடைய பெரிய மகள் திரும்பி
வந்து விட்டாள். சென்னை குடும்பநல நீதி மன்றத்தில் விவாகரத்து வழக்கு
நடந்து கொண்டிருக்கிறது. இரண்டாவது மகள் எனக்குத் திருமணம்
வேண்டாமென்று தகறாறு செய்து கொண்டிருக்கிறாள். அவர் வேலை
பார்த்த வங்கியில், தவறாக வழங்கப்பட்டு, வராமல் சிக்கலில் மாட்டிக்
கொண்டுவிட்ட பெரும் பணத்திற்காக, வங்கி நிர்வாகம், இவரைப் பணி
நீக்கம் செய்ததொடு, வழக்கும் நடந்து கொண்டிருக்கிறது. அவருடைய
மனைவிக்கும் பலவிதமான உடற்கோளாறுகள். வைத்திய செலவில்,
பணம் திறந்துவிட்ட பைப் தண்ணீராகப் போய்க் கொண்டிருக்கிறது.

**********************

அடுத்த நாள் சரஸ்வதி பூஜை. வழக்கம்போல ஆத்தாவின் தேக்குமரப்
பெட்டியடிப் பெட்டியை பூஜையில் வைத்துக் கும்பிட்டான் தேனப்பன்.
அது பழைய வீட்டில், ஆத்தாவின் அறையில், சுவற்று அலமாரியில்
முன்பு இருந்தது. இதுவரை அதைத் திறந்து ஒருமுறைகூடப் பாத்திராத
தேனப்பன், ஒரு குறுகுறுப்புடன் அதைத் திறந்து பார்க்க ஆசைப்பட்டான்.
சாவி கிடைக்கவில்லை.

ஸ்க்ரூ டிரைவர் ஒன்றைவைத்து, பூட்டை நெம்பித் திறந்துவிட்டான்.
உள்ளே இரண்டு ஓலைச் சுவடிகள் இருந்தன. ஐவரி எழுத்தாணி ஒன்று
இருந்தது. சிவப்பு பட்டுத் துணி ஒன்று இருந்தது. மாமப் பட்டு. அதையெல்லாம்
எடுத்துவைத்துவிட்டுப் பார்த்தபோது, கடைசியில் கனத்த கவர் ஒன்று இருந்தது.
அதில் பத்தாயிரம் ரூபாய் பணம் இருந்தது. அத்துடன் முத்துமுத்தான
ஆத்தாவின் கையெழுத்தில் கடிதம் ஒன்றும் இருந்தது.

”அன்பு மகன் தேனப்பனுக்கு,
மீனாட்சி எழுதிக்கொண்டது.
இத்துடன் உள்ள பணத்தை என் அந்திமகாரியங்களுக்கு வைத்துக் கொள்.
ஊரில் உள்ள நம் வளவு வீட்டு அறையில், என்னுடைய தோதகத்தி பீரோவில்
பவுன் காசுகள் உள்ளன. கீழ்தட்டுப் பலகைக்கு அடியில் உள்ள தடுப்புப்
பகுதியில் உள்ளன. மொத்தம் 108 பவுன் காசுகள். எனக்குத் திருமணமாகிப்
பத்து வருடங்கள் கழித்து, என் தந்தையார் எனக்குக் கொடுத்தது. ஒரு
அவசரத்திற்கு, அது உதவும் என்று அதை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.
அது உனக்குத்தான். நீ எடுத்துக்கொள். உன் விருப்பப்படி அதைப் பயன்
படுத்திக்கொள்.
வேணும்,
ஸ்ரீசண்முகநாதன் துணை!”

கடிதத்தை படித்த தேனப்பன் கண் கலங்கிவிட்டான். ஆத்தாவிற்குத்தான்
நம் மீது எத்தனை அன்பு! உடன் இருந்த முத்துலெட்சுமி, கடிதத்தை வாங்கிப்
படித்துவிட்டு இப்படிச் சொன்னாள்:

“அடி சக்கை! யோகம்தான் உங்களுக்கு!”

“என்னடி சொல்றே?” இது தேனப்பன்.

“108 பவுன்ல கெளரிசங்கம் ஒன்று செய்து கழுத்தில் போட்டுக் கொள்ளுங்கள்.
108 பவுனில் நகை போட்டுக்கொண்ட முதல் நகரத்தார் என்ற பெருமை
உங்களுக்குக் கிடைக்கட்டும்”

“இல்லை, இல்லை! அந்த 108 பவுனில் ஒரு கழுத்திரு செய்து, உன் கழுத்தில்
அணிவித்து அழகு பார்க்க வேண்டும்!”

“எனக்கு உள்ள அழகு போதும். புது அழகு எல்லாம் வேண்டாம்.”

”ஏன் வேண்டாம்? எங்கள் தாயாருக்கு நான் ஒத்தை மகனென்று நீதானே
சொல்லுவாய். நான் ஒத்தை மகனென்றால், நீதானே ஒத்தை மருமகள் தானே?
அதனால் நீ போட்டுக் கொள்வதுதான் நியாயம்! அதோடு நகைகள் என்றால்
பெண்களுக்குத்தான் என்பது எழுதப் படாத விதி. ஆண்களுக்கு வெறும்
வேஷ்டி சட்டை போதும்!”

“நியாயத்தை பற்றிப் பேசினால், அந்தப் பவுன் காசுகளில் பாதியை நீங்கள்
உங்கள் அண்ணனுக்குக் கொடுக்க வேண்டும்”

இந்த இடத்தில் சற்று திகைத்துவிட்ட தேனப்பன், மெல்லிய குரலில் கேட்டான்.

“ஏன் அப்படிச் சொல்கிறாய்?”

“ஒத்தை மகன் என்று முன்பு நான் சொன்னது செலவிற்குத்தான். வரவுக்கல்ல.
பூர்வீகவரவு எப்போதும் பொதுவானதுதான். உங்கள் ஆத்தா வைத்துவிட்டுப்
போனதில் அவருக்கும் பங்கு உண்டு. அவரும் உங்கள் ஆத்தாவின் வயிற்றிலிருந்து பிறந்தவர்தான். கூடப்பிறந்தவன் பங்கை எடுத்துக் கொண்டால், குடும்பம் விருத்தியாகாது என்று எங்கள் ஆயாவீட்டு அய்யா சொல்வார்கள். ஆகவே அவருடைய பங்கு நமக்கு வேண்டாம். கூப்பிட்டு உட்காரவைத்து, அவரிடம் கொடுத்துவிடுங்கள்.....”

முத்து லெட்சுமி சொல்லச் சொல்ல, தேனப்பனின் கண்கள் பனித்து விட்டன.

50 கிலோ பளிக்குச்சிலை - நடமாடும் தாஜ்மஹால் என்று பெண்ணை வர்ணித்து
ஒரு கவிஞன் பாட்டெழுதினானே, அதுபோல முத்து லெட்சுமி 60 கிலோ
எடையுடன், மனதுடன், நடமாடும் தங்கச் சிலை. அவளைவிட உயர்ந்த தங்கம்
எங்கே உள்ளது? அவளைவிட உயர்ந்ததாக தேனப்பனுக்கு வேறு என்ன
கிடைத்து விடப் போகிறது?

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&




வாழ்க வளமுடன்!

27.9.09

எங்கே இருப்பாள் சரஸ்வதி?


++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்கே இருப்பாள் சரஸ்வதி?

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாளாம். வீணையின் இனிய நாதத்தில்
இருப்பாளாம். மக்களுக்கு இன்பத்தை தருகின்ற கவிதைகளை வடிக்கின்ற
கவிஞர்களின் உள்ளத்தில் இருப்பளாம். வேதத்தின் பொருளை தேடி உணர்ந்து,
அதை மனதிலேற்றிச் சொல்லும் பக்தர்களின் முன் நின்று காட்சி கொடுப்பாளம்.
உண்மையான துறவிகள் மக்களுக்கு கூறுகின்ற வாசகங்களாகவும் அவள்
இருப்பாளாம். அறிவிற்கு, கல்விக்குத் தேவியான சரஸ்வதி.

சொன்னது யார்?

முண்டாசுக் கவிஞன் பாரதியைத் தவிர வேறு யாரால் இத்தனை
அழகாகச் சொல்லமுடியும்?

பாட்டாகச் சொன்னது பாரதியார்.

பாடலைப் பதிவின் இறுதியில் கொடுத்துள்ளேன். படித்து மகிழுங்கள்
--------------------------------------------------------------------
சரஸ்வதி தேவியார் அறிவிற்கு அதிபதி. கல்விக்கு, கற்றலுக்கு, நுண்ணறிவிற்கு,
எதையும் எதிர்கொள்ளூம் தன்மைக்கும் அவர்தான் அதிபதி. அஷ்டலக்‌ஷ்மிகள் எட்டு
வடிவங்களாக உங்களிடத்தில் இருந்தாலும், சரஸ்வதியின் அருள் இல்லையென்றால்,
உங்களால் அவற்றை அனுபவிக்க முடியாது. அறிவில்லாமல் எதையும் அனுபவிக்க
முடியுமா என்ன? ஆகவே சரஸ்வதியின் பங்களிப்பு அவசியமானது.

சரஸ்வதிதேவி பிரம்மாவின் மனைவி. அதை நம்புங்கள்.

இருவருக்கும் எப்போது திருமணம் நடைபெற்றது? பெற்றோர் செய்து வைத்த
திருமணமா? அல்லது கலப்புத் திருமணமா? சார்பதிவாளர் அலுவலத்தில்
அவர்களுடைய திருமணம் பதிவு செய்யப்பெற்றுள்ளதா? என்பது போன்ற
கேள்விகளைக் கேட்டுக் கொண்டிராமல், அவர்களைத் தம்பதி சமேதராக
ஏற்றுக் கொண்டு வணங்குங்கள்.

உங்கள் அறிவு விருத்தியாகும். அதாவது அறிவு அசுர வளர்ச்சி பெறும்.
ஜாதகத்தில் உள்ள அளவுதானே வரும் என்று கேட்கவேண்டாம். அதையும்
மீறி உங்கள் அறிவு வளர அன்னை உதவுவாள்

Goddess Saraswati (Sarasvati) is the wife (consort) of Lord Brahma and
possesses the powers of speech, wisdom and learning. She has four hands
representing four aspects of human personality in learning; mind, intellect,
alertness and ego.She has sacred scriptures in one hand and a lot us
(a symbol of true knowledge) in the second. With her other two hands
she plays the music of love and life on the violin (veena).
She is dressed in white (sign of purity) and rides on a white goose (swan).

அனைவருக்கும் சரஸ்வதி தின வாழ்த்துக்கள்!

அன்புடன்
வாத்தியார்
-----------------------------------------------------
2. வெள்ளைத் தாமரை
(ராகம் ஆனந்த பைரவி, தாளம் சாப்பு)

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்,
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்
கொள்ளை இன்பம் குலவு கவிதை
கூறு பாவலர் உள்ளத் திருப்பாள்,
உள்ளதாம் பொருள் தேடி யுணர்ந்தே
ஓதும் வேதத்தின் உள் நின் றொளிர்வாள்,
கள்ள மற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத் துட்பொருளாவாள்

(வெள்ளைத்) 1

மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்,
மக்கள் பேசும் மழழையில் உள்ளாள்,
கீதம் பாடும் குயிலின் குரலைக்
கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்,
கோத கன்ற தொழிலுடைத் தாகிக்
குலவுச் சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலடை யுற்றாள்
இன்ப மேவடி வாகிடப் பெற்றாள்

(வெள்ளைத்) 2

வஞ்ச மற்ற தொழில்புரிந் துண்டு
வாழும் மாந்தர் குலதெய்வ மாவாள்,
வெஞ்ச மர்க்குயி ராகிய கொல்லா
வித்தை யோர்ந்திடு சிற்பியர், தச்சர்
மிஞ்ச நற்பொருள் வாணிகஞ் செய்வோர்
வீர மன்னர் பின் வேதியர் யாரும்
தஞ்ச மென்று வணங்கிடுந் தெய்வம்
தரணி மீதறி வாகிய தெய்வம்.

(வெள்ளைத்) 3

தெய்வம் யாவும் உணர்ந்திடும் தெய்வம்
தீமை காட்டி விலக்கிடுந் தெய்வம்,
உய்வ மென்ற கருத்திடை யோர்கள்
உயிரி னுக்குயி ராகிய தெய்வம்,
செய்வ மென்றொரு செய்கை யெடுப்போர்
செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம்,
கைவ ருந்தி உழைப்பவர் தெய்வம்,
கவிஞர் தெய்வம், கடவுளர் தெய்வம்

செந்த மிழ்மணி நாட்டிடை யுள்ளீர்
சேர்ந்தித் தேவை வணங்குவம் வாரீர்,
வந்த னம் இவட் கேசெய்வ தென்றால்
வாழியஃதிங் கௌiதன்று கண்டீர்,
மந்திரத்தை முணுமுணுத் தேட்டை
வரிசை யாக அடுக்கி அதன்மேல்
சந்தினத்தை மலரை இடுவோர்
சாத்தி ரம் இவள் பூசளை யன்றாம்.

(வெள்ளைத்) 5

வீடு தோறும் கலையின் விளக்கம்,
வீதி தோறும் இரண்டொரு பள்ளி,
நாடு முற்றிலும் உள்ளன வூர்கள்,
நகர்கெளுங்கும் பலபல பள்ளி,
தேடு கல்வியி லாததொ ரூரைத்
தீயி னுக்கிரை யாக மடுத்தல்
கேடு தீர்க்கும் அமுத மென் அன்னை
கேண்மை கொள்ள வழியிவை கண்டீர்.

(வெள்ளைத்) 6

ஊணர் தேசம் யவனர்தந் தேசம்
உதய ஞாயிற் றொளி பெறுநாடு,
சேண கன்றதோர் சிற்றடிச் சீனம்
செல்வப் பார சிகப்பழந் தேசம்
தோணலத்த துருக்கம் மிசிரம்
சூழ்க டற்கப் புறத்தினில் இன்னும்
காணும் பற்பல நாட்டிடை யெல்லாம்
கல்வித் தேவியின் ஒளிமிகுந் தோங்க.

(வெள்ளைத்) 7

ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம்
நல்ல பாரத நாட்டிடை வந்தீர்,
ஊனம் என்று பெரிதிழைக் கின்றீர்,
ஓங்கு கல்வி யுழைப்பை மறந்தீர்
மான மற்று விலங்குக ளொப்ப
மண்ணில் வாழ்வதை வாழ்வென லாமோ?
போன தற்கு வருந்துதல் வேண்டா,
புன்மை தீர்ப்ப முயலுவம் வாரீர்

(வெள்ளைத்) 8

இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்,
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
பின்ன ருள்ள தருமங்கள் யாவ
பெயர்விளங்கி யொளிர நிறுத்தல்,
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கெழுத்தறி வித்தல்.

(வெள்ளைத்) 9

நிதிமிகுந்தவர் பொற்குவை தாரீர்,
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்,
அதுவு மற்றவர் வாய்ச்சொல் தாரீர்,
ஆண்மையாளர் உழைப்பினை நல்கீர்,
மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்
வாணி பூசைக் குரியன பேசீர்,
எதுவும் நல்கியிங் கெவ்வகை யானும்
இப்பெருந் தொழில் நாட்டுவம் வாரீர்.

(வெள்ளைத்) 10
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - --


வாழ்க வளமுடன்!

26.9.09

சனிப் பெயர்ச்சி!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++
சனிப் பெயர்ச்சி!

சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும்
இல்லை என்பார்கள்.

சனி என்ன நம் மாமனாரா? பெண்ணைக் கொடுத்தவரா? அவராக
வந்து கொடுப்பதற்கு?

நம் ஜாதகத்தின் படி என்னென்ன பலாபலன்கள் உள்ளதோ - அதாவது
நம் கர்மவினைப்படி என்ன பலன்கள் store ஆகியுள்ளதோ - அதைக்
கொடுப்பவர் அவர். அவர் store keeper. அவ்வளவுதான். அவரைக் கண்டு
பயப்பட வேண்டாம்.

அவரில்லாமல் யாருடைய வாழ்க்கையும் இங்கே நடக்காது.
ஆமாம், அவர்தான் ஆயுள்காரகர். அயுள் முடிந்துவிட்டால், ஜாதகனை
ஒரு விநாடிகூட, இங்கே இருக்க அவர் அனுமதிக்க மாட்டார்.
வலுக்கட்டாயமாக போர்டிங் பாஸ் கொடுத்து அனுப்பி விடுவார்.

எங்கே?

எங்கே அனுப்பிவைப்பார் என்பது தெரியாது. இந்த உலகத்தைவிட்டு
அனுப்பி வைத்து விடுவார். அது மட்டும் தெரியும்.

”வந்தது தெரியும், போவது எங்கே?
வாசல் நமக்கே தெரியாது!”
என்று கவியரசர் பாடி வைத்துள்ளார்.

அதோடு, தொடர்ந்து சொல்லியுள்ளார்:

”உறவைச் சொல்லி அழுவதனாலே
உயிரை மீண்டும் தருவானா?
கூக்குரலாலே கிடைக்காது - இது
கோர்ட்டுக்குப் போனால் ஜெயிக்காது - அந்தக்
கோட்டையில் நுழைந்தால் திரும்பாது
போனால் போகட்டும் போடா...!”

கவியரசர் சொன்ன அந்தக் கோட்டைதான் எங்கே உள்ளது என்பது
தெரியவில்லை:-)))

ஆகவே சனீஷ்வரன் நமக்கு முக்கியமானவர். அவருக்கு இன்னொரு
இலாக்காவும் இருக்கிறது. அவர்தான் தொழில்காரகன், ஜீவனகாரகன்.
ஒரு ஜாதகன் தன் வாழ்க்கையை நடத்துவதற்கு உரிய தொழிலை அல்லது
வேலையைக் கொடுப்பவர் அவர்தான்.

ஆகவே, அவர் அங்கேயும் நமக்கு முக்கியமானவர்
=====================================================
++++++ ஒரு ஜாதகனுக்கு அவன் பார்க்கும் தொழிலில் அல்லது வேலையில்
பிரச்சினை என்றால். அது ஏன்? எப்போது அந்த நிலை மாறும் என்பதைப்
பார்க்க ஒரு ஃபார்முலா உள்ளது.

10ஆம் வீட்டை, லக்கினமாக எடுத்துக் கொண்டு, அன்றையத் தேதியில்
கோச்சார சனீஷ்வரன் அந்த வீட்டிலிருந்து எங்கே இருக்கிறான் என்று
பாருங்கள். அந்த வீட்டிற்கு 6, 8,12ஆம் வீடுகளில் அவன் சஞ்சாரம் செய்தால்,
பிரச்சினைதான். அந்த வீட்டை விட்டு நகரும் வரை பிரச்சினை தீராது.
பதவி நீக்கம், பதவி பறிமுதல், பதவியிலிருந்து கீழ் நிலைக்குத் தள்ளப்படுதல்,
தண்ணீர் இல்லாக் காட்டிற்கு மாற்றப்படுதல் என்று எது வேண்டுமென்றாலும்
நடக்கும். அந்த வீட்டிற்கு 11ல் சனி சஞ்சாரம் செய்தால், பதவி உயர்வு,
பதவியில் மேன்மை, பெருமை எல்லாம் கிடைக்கும்
----------------------------------------------------
அதுபோல எப்போது டிக்கெட் கிடைக்கும் என்பதைச் சொல்ல முடியுமா?
அதற்கு ஏதாவது சூத்திரம் இருக்கிறதா?

++++++இருக்கிறது. அது ஒருவரிச் சூத்திரம். அதை இங்கே சொல்ல முடியாது.
வாசகர்கள் என்னைப் பிறாண்டி எடுப்பதோடு. எனக்கு டிக்கெட் கொடுத்து
விடுவார்கள். ஆகவே, சொல்ல வேண்டிய இடத்தில், சொல்ல வேண்டிய
நேரத்தில் அதைச் சொல்லி உங்களுக்கு அறியத் தருகிறேன். பொறுத்திருங்கள்
--------------------------------------------------------
சரி விஷயத்திற்கு வருகிறேன்

செ‌ப்ட‌ம்ப‌ர் 26ஆ‌ம் தே‌தி சனிக்கிழமை, மதியம் மணி 3.18க்கு சனீஷ்வரன்
சிம்ம ராசியிலிருந்து கன்னி ராசிக்குள் நுழைகிறார்.

இ‌ந்த சனிப் பெயர்ச்சியினால் ஒவ்வொரு ராசிதாரரின் வாழ்விலும் ஏற்படக்கூடிய
மாற்றங்கள், பாதிப்புகள் அதற்கான பரிகாரங்கள் ஆகியன ராசி வாரியாக
தொகுத்து கீழே உள்ள தளத்தில் கொடுக்கப்பெற்றுள்ளது!

விரிவான சனிப்பெயர்ச்சி (பொதுப்பலன்களுக்கான) தளம் அது!
உங்கள் ராசிக்கான பகுதியைக் க்ளிக் செய்து, படித்து முழு விவரங்களையும்
அறிந்து கொள்ளுங்கள். அதற்கான சுட்டி கீழே உள்ளது.
----------------------------------------------------
இந்தப் பொதுப்பலன்களைப் பற்றி ஒரு விஷயம்.
அவைகள் பொதுவானவை அவ்வளவுதான்.
அவர்கள், பத்திரிக்கை விற்பதற்காகவும், சிலர் புத்தகங்கள் விற்பதற்காகவும்
பொதுப் பலன்களை எழுதுகிறார்கள்.
நாமும் காசு கொடுத்து வாங்கி, மாய்ந்து மாய்ந்து படிக்கிறோம்.
அது எப்படி நமக்குப் பொருந்தும்?

அம்பானிக்கும், அனுஷ்கா சர்மாவிற்கும், அஜீத்திற்கும், அய்யம்பேட்டை
கலிவரதனுக்கும், அம்மா மண்டபம் ரங்கராஜனுக்கும், ஒரே ராசி என்று வைத்துக்
கொள்ளூங்கள், இந்தப் பொதுப் பலன்களின் படியா, அவர்கள் அனைவருக்கும்
இன்ப, துன்பங்கள் வரப்போகின்றன. இல்லை!

110 கோடி மக்கள் வகுத்தல் 12 ராசிகள் = 9.16 கோடி மக்கள்
இந்த 9.16 கோடி மக்களுக்கும் எப்படிப் பலன் ஒருவிதமாகப் பொருந்தும்?

++++++அவரவர்களின் ஜாதகப்படிதான் பலன்கள் அமையும்.

1. உங்கள் ஜாதகத்தில் ஏகப்பட்ட யோகங்கள் இருந்து, அதற்கான தசாபுத்தி
நடந்து கொண்டிருந்தால், இந்தக் கோச்சாரங்கள் வழிவிட்டு விடும்.

2. நல்ல தசை அல்லது புத்தி நடந்து கொண்டிருந்தாலும் கோள்சாரங்கள்
பாதிப்பை ஏற்படுத்தாது.

சுருங்கச் சொன்னால், கோள்சாரத்தைவிட, தசை/புத்தி முக்கியம்.

ஒரு சாலையில் முதலமைச்சர் வருகிறார். அவருக்கு முன், அவருடைய பைலட்
மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் வருகின்றன என்றால் மொத்த சாலையும்
துடைக்கப்பட்டு, வழி ஏற்படுத்தப் பட்டிருக்கும் இல்லையா? ஏன் தப்பித்தவறி
நீங்கள் சென்றாலும், வழி விட்டு ஒதுங்கி நிற்ப்பீர்கள் இல்லையா?
அதுபோலத்தான் இதுவும்.
------------------------------------------------------------------
பெயர்ச்சி என்றவுடன், சனீஷ்வரன் மூட்டை முடிச்சுகளைக் கட்டி எடுத்துக்
கொண்டு வீடு மாறுகிறார் என்று நினைக்க வேண்டாம்.

அவருக்கு எதற்கு மூட்டை, முடிச்சு?

வானவெளியில், 121 பாகையில் இருந்து 150 பாகைகள் வரை, சிம்ம ராசியில்
இதுவரை சஞ்சாரம் செய்தவர், இப்போது 151 பாகைக்குள், தன் சுழற்சியின் மூலம்
நுழைகிறார். அது கன்னி ராசி. அங்கே அவர் இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு
வாசம் செய்வார்.

அவர் ஒரு பாகையைக் கடக்க எடுத்துக் கொள்ளூம் காலம் ஒரு மாதமாகும்.
கன்னிராசியின் 30 பாகைகளையும் அவர் கடப்பதற்கு 30 மாதங்களாகும்.

அதுவரை அங்கே இருப்பார். அங்கே மடக்கு நாற்காலியைப் போட்டு உட்கார்ந்து
கொண்டு செய்ய வேண்டிய பணிகளைச் செவ்வனே செய்வார்.
--------------------------------------------------------
இந்த சனிப்பெயர்ச்சியால், அதிக நன்மைகளை அடைய உள்ளவர்கள், மகர
ராசிக் காரர்களும், கடக ராசிக்காரர்களும் ஆவார்கள்.

1
மகர ராசிக்காரர்கள், அஷ்டமச் சனியால் (அதாவது 8ஆம் இடத்துச் சனியால்)
பலவிதமான தொல்லைகளை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள். அந்தத்
தொல்லைகள் அனைத்தும் நீங்கிவிடும். வாழ்க்கை வளம் பெறும், மகிழ்ச்சி
உடையதாக இருக்கும்.
+++++++++++++++++++++++++++++++++++++++
2
அதுபோல கடக ராசிக்காரர்களும், இதுவரை, ஏழரைச் சனியால் அவதிப்
பட்டுக்கொண்டிருந்தார்கள். அந்த அவதிகள் முழுமையாக நீங்கி விடும்.
வாழ்க்கை வளம் பெறும், மகிழ்ச்சி உடையதாக மாறும்.
இதுவரை பாதச்சனியாக அமர்ந்து அவர்களைப் பலவழிகளிலும் அலைக்கழித்த
சனிஷ்வரன் யோகம் தரும் வீடான 3ஆம் வீட்டில் (அவருக்கு அது நல்ல வீடு)
அமர்ந்து, புகழையும், பாராட்டையும் அவர்களுக்குத் தருவார்.
+++++++++++++++++++++++++++++++++++++++++
3.
மேஷ ராசிக்கு ஆறாம் இடத்திற்கு சனி வருகிறார். அந்த ராசிக்காரர்களுக்கு
எல்லா நன்மைகளும் கிடைக்கும்.
இதுவரை 5ஆம் வீட்டில் அமர்ந்து கொண்டு, அல்லல்படுத்திய சனீஷ்வரன்,
விபரீத வீடான 6ஆம் வீட்டில் அமர்ந்து சகல யோகங்களையும் தர உள்ளார்.
++++++++++++++++++++++++++++++++++++++++
4.
விருச்சிக ராசிக்குப் பதினொன்றாம் இடத்திற்கு சனி வருகிறார்.
அந்த ராசிக்காரர்களுக்கும் எல்லா நன்மைகளும் கிடைக்கும்.
இதுவரை 10ஆம் வீட்டில் நின்ற சனிபகவான், லாப வீடான 11ஆம் வீட்டில்
அமர்ந்து பல நன்மைகளைச் செய்ய உள்ளார்.
+++++++++++++++++++++++++++++++++++++++
5.
மீன ராசிக்காரர்களுக்கு 7ஆம் இடத்திற்கு சனி வருகிறார். அவர்களுக்கு
தொல்லைகள் அவ்வப்போது தலையைக் காட்டும். இதுவரை ராசிக்கு 6வது
வீட்டில் அமர்ந்து பல நன்மைகளைச் செய்த சனீஷ்வரன், ராசிக்கு 7வது வீட்டில்
நுழைந்து தலைவலியைத் தரப்போகிறார். வீண் அலைச்சல், நஷ்டங்கள் ஏற்படும்.
நன்மைகள் அதிகமாக இருக்காது!
+++++++++++++++++++++++++++++++++++++++
6.
கும்ப ராசிக்காரர்களுக்கு சனி, 8ஆம் இடத்திற்கு சனி வருகிறார்.
அவர்களுக்குத் தொல்லைகள் முதுகில் ஏறி சவாரி செய்யும்.
இந்த ராசிக்காரர்களுக்குத்தான் அதிகமான தொல்லைகள், பிரச்சினைகள்
ஏற்படும். அஷ்டமச்சனி. அதை நினைவில் வையுங்கள்
இதுவரை உங்களின் ராசிக்கு 7வது வீட்டில் இருந்தவர் அஷ்ட்டமத்துச் சனியாக
இருந்து செயல்படப் போகிறார்.அஷ்ட்டமத்துச் சனி அவஸ்தை தான்.
அகப்பட்டவனுக்கு அஷ்ட்டமத்துச் சனி என்பார்கள்!
+++++++++++++++++++++++++++++++++++++++++
7.
துலாம் ராசிக்காரர்களுக்கு ஏழரைச் சனி ஆரம்பம். முதல் இரண்டரை
ஆண்டுகளில் பலவிதமான விரையங்கள் ஏற்படும். விரையம் = Loss
+++++++++++++++++++++++++++++++++++++++
10.சிம்மம் - 2ல் பாதச்சனி (ஏழரையில் கழிவுச்சனி)
11. கன்னி - 1ல் ஜன்மச்சனி (ஏழரையில் 2வது காலகட்டம்)
இவ்விரண்டு ராசிக்காரர்களுக்கும் விட்டகுறை, தொட்டகுறை.
ஏழரைச் சனியின் பாதிப்புக்கள் தொடரும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
8. ரிஷபம் - 5ல் கோள்சாரச்சனி (கோள்சாரத்தில் மனஸ்தானம்)
9. மிதுனம் - 4ல் (சுகஸ்தானத்தில் கோள்சாரச்சனி)
12. தனுசு - 10 ல் கோள்சாரக் கேந்திரச்சனி
இந்த ராசிக்காரர்களுக்கு எல்லாம் கலந்த பலன் (Mixed Results)
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சனியின் கோச்சார சஞ்சாரத்தால் கிடைக்கும் நன்மைகள் அல்லது
தீமைகளின் அளவைச் சொல்ல முடியுமா? அதற்கு ஏதாவது சூத்திரம்
இருக்கிறதா?

++++++இருக்கிறது. உங்கள் ஜாதகத்தில் எந்தந்த இடங்களில் 30ம்
அதற்கு மேற்பட்ட பரல்களும் உள்ளன என்பதைக் குறித்து வைத்துக்
கொள்ளுங்கள். அந்த இடங்களில் சஞ்சார சனியால் எந்தவிதமான
உபத்திரவங்களும் இருக்காது.

ஏழரைச் சனியின் இடங்களான 12, 1, 2ஆம் வீடு ஆகிய மூன்று இடங்களிலும்,
30ம் அதற்கு மேற்பட்ட பரல்களும் இருந்தால், ஏழரைச் சனி, ஜாதகனை
ஒன்றும் செய்யாது. அந்த ஏழரை ஆண்டுகளும் ஜாதகன் செளக்கியமாக
இருப்பான்.

அதற்கு மாறாக சனி சஞ்சாரம் செய்யும் இடம் 25 பரல்களூம், அல்லது
அதற்குக் குறைவான பரல்களைக் கொண்டிருந்தால் கோள்சாரச் சனி,
ஜாதகனைப் படுத்தி எடுக்கும்.
------------------------------------------------------------------
முழுப் பலன்களுக்கான சுட்டி இங்கே!

அன்புடன்
வாத்தியார்


வாழ்க வளமுடன்!

25.9.09

அனுபவம்: பெரியப்பச்சி

கழுத்திரு - செட்டிநாட்டின் முக்கிய அணிகலன்
-------------------------------------------------------------------------------
அனுபவம்: பெரியப்பச்சி

எங்கள் பெரியப்பச்சி அறிவு ஜீவி. கலா ரசிகர். தீவிர வாசகர்.
கொஞ்சம் முரட்டுத்தனம் இருக்கும். அதிரடியாகப் பேசக்கூடியவர்.
எந்த சபையாக இருந்தாலும் அவர் தனியாகத்தெரிவார். அவரைப்
பற்றிப் பக்கம் பக்கமாக எழுதலாம். கதையின் நீளம் கருதி இரண்டு
சுவையான விஷயங்களை மட்டும் இப்போது சொல்கிறேன்.

பெரியப்பச்சி என்பது அப்பச்சியின் அண்ணனைக் குறிக்கும். அப்பச்சி
என்பது அப்பாவைக் குறிக்கும். டாடி என்று தங்கள் தந்தையைக் கூப்பிட்டுக்
கொண்டிருக்கும், இக்கால இளசுகளுக்காக இதைச் சொல்கிறேன்.

கதை நடந்த காலம் 1921ஆம் ஆண்டு. அப்போது எங்கள் பெரியப்பச்சிக்கு
வயது 18. திருமணமான புதிது. பெரியத்தாவிற்கு வயது 16. இந்த வயதுத்
திருமணம் எல்லாம் அந்தக்காலத்தில் சர்வ சாதாரணம். அப்போதெல்லாம்
ஆறு நாள் கல்யாணம்.

கல்யாணம் முடிந்த கையோடு, எங்கள் பெரியப்பச்சியை வேற’ வைத்து
விட்டார்கள். அதாவது ’வேறாக’ வைத்து விட்டார்கள். இருக்கும் பெரிய
வீட்டிற்குள்ளேயே, சமையல் கட்டு அறை, தங்குவதற்கு அறை, படுக்கை
அறை என்று ஒதுக்கிக் கொடுத்து, தனிக்குடித்தனம் வைத்து
விட்டார்கள். தனியாகச் சமைத்துச் சாப்பிடச் சொல்லிவிட்டார்கள்.
அப்போதுதான் தம்பதியருக்குப் பொறுப்பு வரும் என்பதற்காக அப்படிச்
செய்வார்கள்.

’வேறாக’ வைக்கும் வைபவம் பெரிய விழா போல நடக்கும். ’வேறாக’
வைத்த அடுத்த நாள், எங்கள் பெரியத்தா, காலை ஏழரை மணிக்கு,
காலைப் பலகாரத்தை செய்து, தேக்கு மரவையில் - பாத்திரங்களில்,
அவற்றை எடுத்துக் கொண்டு வந்து, தன் கணவனுக்குப் பறிமாற
ஆரம்பித்தார்கள்.

முகப்புப் பெட்டக சாலையில் இந்தக் காட்சி நடைபெறுகிறது.
அப்போதெல்லாம் ஆண்கள் அடுப்படிக்குச் சென்று சாப்பிடும் பழக்கம்
இல்லை. ஒன்று முகப்பு அறையில், அல்லது பெட்டக சாலையில் அல்லது
வளவு சுற்றுப் பத்தியிலேயே ஆண்கள் அமர்ந்து சாப்பிடுவது வழக்கம்!

என்ன மெனு?

இட்லி, உளுந்து வடை, தேங்காய் சட்னி, சாம்பார்.

எங்கள் பெரியப்பச்சி அப்போதிலிருந்தே சாப்பாட்டு ரசிகர்.

முதலில் வடையைக் கையில் எடுத்துக் கடித்து, ஒரு வாய் சாப்பிட்டவர்,
தன் இளம் மனைவியிடம் பேச்சுக் கொடுத்தார்

’வடைக்கு என்ன அளவு உளுந்து போட்டாய்?”

”ஒரு ஒழக்கு!” இது பெரியத்தாவின் பதில்.

“எல்லா மாவையும் வடையாகச் சுட்டு விட்டாயா?”

“ஆமாம்!”

”எத்தனை வடைகள் வந்தன?”

“பதினாறு வடைகள் வந்தன”

“வந்த வடைகள் எல்லாமே இந்தப் பாத்திரத்தில் இருக்கிறதா?”

“ஆமாம்”.

இந்த இடத்தில் கலவரமாகி, தன் மனைவியிம் முகம் சற்று சிவப்பதைக்
கண்டும் காணமலும், பெரியப்பச்சி தொடர்ந்தார்.

“ இந்தா, அறைச் சாவி, நிலைக்கதவு பலகையில், சன்னக் கயிறும்,
சின்னக் கத்தரிக்கோலும் இருக்கிறது. எடுத்துக் கொண்டு வா?”

எடுத்து கொண்டு வந்தார்.

பெரியப்பச்சி பொறுமையாக, இரண்டு வடைகளைத் தனித் தனியாக,
கயிற்றை சிறு சிறு வளையமாக்கி அதில் கட்டினார். பிறகு மீதம் இருந்த
வடைகளைக் கயிற்றால் கோர்த்து மாலையாக்கினார். எழுந்து
பெரியத்தாவின் காது மடல்களில், வடையைத் தொங்க விட்டுவிட்டு,
வடை மாலையைக் கழுத்தில் அணிவித்து விட்டு, எல்லாம் சரியாக,
பிடிப்புடன் இருக்கிறதா என்று பார்த்தார்.

பிறகு மனைவியின் கையைப் பிடித்து, நடத்திக் கொண்டு போய், வளவு
நடுவாசலில் நிறுத்தி, ”இங்கேயே இந்தக் கோலத்திலேயே ஒரு மணி
நேரம் நில். வளவில் உள்ளவர்கள் அத்தனை பேரும் பார்க்கட்டும்.
அப்போதுதான் புத்திவரும்.”

’’என்ன தப்பு என்று சொன்னால்....பரவாயில்லை!” பெரியத்தாவின்
கண்களில் கண்ணீர் ததும்புகிறது.

“வடையில் அதிகமான உப்பு. வடையைச் சுடுமுன்பாக, மாவின் ஒரு
துளியை வாயில் வைத்து, உப்பு, காரம் சரியாக உள்ளதா என்று பார்க்க
வேண்டாமா? அல்லது ஒரு வடையையைச் சுட்டு எடுத்தவுடன், ஒரு
விள்ளல் கிள்ளி வாயில் போட்டுப் பார்க்க வேண்டாமா?. இனிமேல்
அப்படிச் செய்யக்கூடாது என்பதற்காகத்தான் இந்த வடைமாலை
அலங்காரம். அனைவரும் பார்க்கட்டும்”

சொன்னவர், திரும்பி வந்து, அமர்ந்து இட்லியை எடுத்து சாப்பிட
ஆரம்பித்து விட்டார். அங்கே நடுவாசலில் புது மனைவி, திகைப்பு
மற்றும் கண்ணீருடன், என்ன செய்வது என்று தெரியாத நிலையில்.

இதையெல்லாம் அமைதியாக, பக்கத்து பெட்டக சாலையில் அமர்ந்து
பார்த்துக் கொண்டிருந்த, எங்கள் சின்னைய்யா (cousin grand father)
மெல்லிய குரலில் சொன்னார்:

“டேய், மாணிக்கம், அவள் சின்னப் பெண்ணடா. எல்லாம் ஒரே நாளில்
வந்து விடாது. போகப் போகத் தெரிந்து கொள்வாள். பேசாமல் அவளை,
உள்ளே போகச் சொல்!”

அதன்படியே நடந்தது.

அப்போது, பெண்களுக்கு ஆணாதிக்கம் என்றால் தெரியாது. வாக்கு வாதம்,
மகளிர் காவல் நிலையம், நீதி மன்றம், விவாகரத்து என்று எதுவும் கிடையாது.
பொறுமையின் சிகரங்கள் அவர்கள். எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டார்கள். எங்கள் பெரிய அன்னையார், எங்கள் பெரிய அப்பச்சியை முழுமையாகப் பொறுத்துக் கொண்டார்கள். ஏனென்றால் அவர் கொஞ்சுவதும் முரட்டுத்தனமாக இருக்குமாம்!:-))))))

***************************

அது நடந்து முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, 1951ஆம் ஆண்டு தை
மாதத்தில் ஒரு நன்நாள்.

ஒரு திருமணவைபவம். மணப்பெண் ஒரு நடுத்தரக் குடும்பத்தைச்
சேர்ந்தவள். ஒரு வராகன் சீதனம்.30 பவுன் நகைகள் என்று திருமணத்திற்குத்
தோது பேசியிருந்தார்கள். மொத்த செலவு பத்தாயிரம் ரூபாய்க்குள் வரும்.
அன்றையத் தேதியில் பத்தாயிரம் என்பது இன்றைய மதிப்பில் ஆறு லட்சம்
வரும்.

தோது என்பது இங்கே வரதட்சனையைக் குறிக்கும். ஒரு வராகன் என்பது
சுமார் 3,500 ரூபாய்!

பர்மா நொடித்துப்போன சமயம். பர்மாவிலிருந்து திரும்பி வந்திருந்த
பெண்ணின் தந்தை, பல சிரமங்களுக்கிடையே அந்தத் திருமணத்திற்கு
ஏற்பாடு செய்திருந்தார்.

முக்கிய நகையான ‘கழுத்திரு’ அவரிடம் இல்லை. திருமணத்தில்
பெண்ணின் கழுத்தில் திருப்பூட்டுவதற்கும், அணிவிப்பதற்கும் அது வேண்டும்.
இல்லாதவர்கள் இரவல் வாங்கிக் கட்டி விட்டு, அடுத்த நாள் திருப்பிக்
கொடுத்து விடுவார்கள்.

மணப்பெண்ணின் தந்தை எங்கள் அப்பத்தா வழி உறவு. அவர் என்
தந்தையை அனுகிக் கேட்க, என் தந்தையாரும், செல்வந்தர் ஒருவர்
வீட்டில் இருந்து, கெட்டிக் கழுத்திரு ஒன்றை இரவல் வாங்கிக் கொடுத்திருந்தார்.
செல்வந்தர் வீட்டில் 4 அல்லது 5 கழுத்திருக்கள் வைத்திருப்பார்கள், நம்
வீடுகளில் அண்டா, குடங்கள் வைத்திருப்பதைப்போல அவர்கள்
கழுத்திருவை, அதிக எண்ணிக்கையில் வைத்திருப்பார்கள்.
கெட்டிக் கழுத்திரு என்பது 100 பவுன் தங்கத்தில் செய்யப்பெற்றதாகும்.
அன்றைய மதிப்பு எட்டாயிரம் ரூபாய். இன்றைய மதிப்பு 13 லட்ச ரூபாய்.
அதை நினைவில் வையுங்கள்.

என்னுடைய தந்தையார், எங்கள் பெரிய அப்பச்சி மற்றும் அவருடைய
உற்ற நண்பர் ஆகிய மூவரும் அந்தத் திருமணத்திற்குச் சென்றிருந்தார்கள்.

மாலை ஏழு மணிக்கு, பெண் அழைத்துக் கொள்ளும் நிகழ்ச்சி சிறப்பாக
நடந்தேற, வந்திருந்த விருந்தினர்கள் அனைவருக்கும் மாப்பிள்ளை வீட்டில்
இரவு உணவு வழங்கப்பெற்றது.

விருந்து முடிந்து என் தந்தையார், புறப்பட எத்தனிக்கும் போது,
பெண்ணின் தந்தை ஓடி வந்து,“ வீரப்பா, போய் விடாதே, எல்லா
வேலையும் முடிந்து விட்டது. சம்பந்தியிடம் கழுத்திருவை வாங்கிக்
கொண்டு புறப்பட வேண்டியதுதான். நானும் வருகிறேன். துணக்கு
ஆள் வேண்டும். போகிற வழியில், இரவல் கொடுத்தவரிடம் நகையைக்
கொண்டுபோய்த் திருப்பிக் கொடுத்து விட்டுப்போய் விடுவோம்”

என் தந்தையார் சரி’ யென்று சொல்ல, அவர் தன் சம்பந்தி செட்டியாரிடம்
சென்று,” அய்த்தான், நாங்கள் புறப்பட வேண்டும், கழுத்திருவைத் தாருங்கள்.
புறப்படுகிறோம்” என்று சொன்னார்.

அவர் மணவறைக்குள் சென்று, அங்கே இருந்த தன் மனைவிடம் பேச்சுக்
கொடுக்க, அந்த ஆச்சி சொன்னார்கள்: “முறைச் சிட்டையில் திகட்டல்
இருக்கிறது. அதைக் காலையில், பேசிப் பணத்தை வாங்கிக் கொண்ட
பிறகு கழுத்திருவைக் கொடுப்போம். இப்போது இல்லை என்று
சொல்லி அவரை அனுப்பி வையுங்கள்”

“இல்லை என்று எப்படிச் சொல்வது. அது நன்றாகவா இருக்கும்?”

“இல்லை என்று ஏன் சொல்கிறீர்கள்? மாற்றிச் சொல்லுங்கள். இன்று
வெள்ளிக்கிழமை. பெண்பிள்ளைகள் இன்று வேண்டாம் என்று
சொல்கிறார்கள். ஆகவே, நகையை நாளை வந்து வாங்கிக் கொண்டு
போங்கள் என்று சொல்லுங்கள்”

அப்படியே அவரும், வந்து விஷயத்தைச் சொல்ல, பெண்ணின்
தந்தையாருக்குத் திக்’கென்றிருந்து. நேராக வந்து என் தந்தையாரின்
காதில் விஷயத்தைச் சொல்லி, என்ன செய்யலாம் என்று குழம்பியவாறு
கேட்டிருக்கிறார்.

அதைக் கவனித்துவிட்ட எங்கள், பெரியப்பச்சி, “டேய் என்னடா, கிசு, கிசு?
ஒருத்தன் காதை இன்னொருத்தன் கடிக்கிறீர்கள். எதுவாக இருந்தாலும்,
வெளிப்படையாகச் சொல்லுங்கடா” என்று அதட்டவும், இருவரும் அவரிடம்
விஷயத்தைச் சொன்னார்கள்.

ஒரு விநாடி கூட யோசிக்காமல் அவர் பதில் சொன்னார்:” இப்படி கேட்டால்
வராதுடா. நான் கேட்கிறேன் பார், உடனே கொண்டுவந்து கொடுக்கிறானா -
இல்லையா? என்று பாருங்கள்”

அதைச் செயல் படுத்தவும் முனைந்தவர், அருகில் இருந்த ஒரு சிறுவனை
விட்டு, மாப்பிள்ளையின் தந்தையை அழைத்துவரச் சொன்னார். எங்களூரில்,
எங்கள் பெரியப்பச்சியைத் தெரியாதவர்கள் ஒருவர் கூட இருக்க மாட்டார்கள்.
பெரியப்பச்சி கூப்பிடுகிறார் என்று தெரிந்தவுடன், அவரும் விழுந்தடித்துக் கொண்டு வந்து எதிரில் நின்றார்.

“டேய், நாங்கள் வீட்டிற்குக் கிளம்ப வேண்டும். கழுத்திரு என் தம்பி இரவலாக
வாங்கிக் கொடுத்தது. அதைக் கொடுத்தால், எடுத்துக் கொண்டு கிளம்பி
விடுவோம்”

“அதான் சம்பந்தியிடம் சொன்னேனே அண்ணே!”

“என்ன சொன்னாய்?”

“இன்று வெள்ளிக் கிழமை.ஆகவே நாளை வந்து வாங்கிக் கொண்டு
போங்கள் என்று சொல்லியிருக்கிறேனே....”

அதற்குள் எங்கள் பெரியப்பச்சி இடைமறித்தார்,” என்னடா வெள்ளிக்கிழமை.
நாங்கள் எங்கள் பெண்ணையே வெள்ளிக் கிழமை என்று பாராமல், உங்கள்
வீட்டிற்குக் கூட்டி அனுப்பியிருக்கிறோம். அவளை விட அந்த நகை
உசந்ததா என்ன?”

”இன்று திருப்பிக் கொடுக்கப் பெண்கள் பிரியப் படவில்லை... அதனால்தான்”

“ஒகோ பெண்கள் பிரியப் படவில்லையா? அப்படியென்றால் சரி. நாங்கள்
நால்வர் இருக்கிறோம். எங்களுக்கு இன்னும் ஒரு தம்ளர் சூடாகப் பால்
கொண்டு வரச் சொல். அதோடு உங்கள் பட்டாலையில் நான்கு மெத்தை
விரிக்கச் சொல். நாங்கள் இங்கேயே படுத்துத் தூங்கி விட்டு, அதிகாலையில்
எழுந்தவுடன் நகையை வாங்கிக் கொண்டு போகிறோம்.சரிதானே?” என்று
பெரியப்பச்சி அதிரடியாகக் கேட்கவும், அவரின் முகம் பேயரைந்ததைப் போல
ஆகி விட்டது.

ஓடிச் சென்று, தன் மனைவியைக் கடிந்து கொண்டார்.அதோடு மாணிக்கம்
செட்டியார், படுத்திருந்து விட்டு, அதிகாலையில், நகையை வங்கிக் கொண்டு
போவதாகச் சென்னதையும் சொன்னார். கழுத்திருவைக் கொடுத்தவர்கள்,
படுத்திருந்து, அதிகாலை வாங்கிக் கொண்டு போனால், போனது ஊருக்குள்
தெரிந்தால், அது நமக்கு, அசிங்கம், கேவலம் என்றும் சொன்னார்.

அடுத்த நிமிடம், நகை உரியவர்களிடம் வந்து சேர்ந்தது!

இது உண்மையில் நடந்த கதை. ஒரு விஷயத்தை எப்படிக் கையாள
வேண்டும்? எப்படிப் பேச வேண்டும்? என்பதற்கு உதாரணமாக இந்தக்
கதையை என் தந்தையார் சொல்வார்.

அது என் மனதிலுள்ள ஹார்ட் டிஸ்க்கில் பதியப்பட்டுள்ளது. உங்களுக்காக
அதை இன்று அதை எழுத்தில் வடித்துக் கொடுத்திருக்கிறேன்!

=================================================================
கழுத்து உரு (கழுத்து அணிகலன்). முழுவடிவில் நீங்கள் பார்த்துத்
தெரிந்து கொள்ள படம் ஒன்றைக் கீழே கொடுத்துள்ளேன்

படத்தில் உள்ள பெண்மணி என் தாய் வழிப் பாட்டி. அவர் கழுத்தில் அணிந்திருப்பதுதான் கழுத்துரு. அதன் எடை ஒரு கிலோ தங்கம்.
அவர் காலத்தில் அப்படித்தான் செய்வார்கள். அதைத் தினமும் அணிந்து
கொள்ள மாட்டார்கள். வீட்டில் நடக்கும் திருமண, மணி விழாக்களில்
அணிந்து கொள்வார்கள். இப்போது யாரும் 100 பவுன் அல்லது ஒரு
கிலோ தங்கத்தில் அதைச் செய்வதில்லை. அது 16 பவுன் 21 பவுன் எனும்
அளவில் சுருங்கி விட்டது.

அருகில் இருக்கும் எனது தாத்தா (அய்யா) தன் கழுத்தில் அணிந்திருப்பது
கெளரி சங்கம் எனப்படும் ருத்திராட்ச மாலையாகும். அதன் அடியில்
உள்ள டாலரின் எடை 25 பவுன்கள். அதில் ரிஷப வாகனத்தில்
சிவனும் சக்தியும் சமேதராக அமர்ந்திருக்கும் காட்சி வடிவமைக்கப்
பெற்றிருக்கும்!

உபரித்தகவல்: இந்தப் படம் எடுத்த ஆண்டு 1953 (அக்டோபர்) எங்கள்
தாத்தாவின் மணிவிழாவில் எடுக்கப் பெற்ற படம் அது!

அன்புடன்
வாத்தியார்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இடைச் சேர்க்கை!

சகோதரி வல்லிசிம்ஹன் அவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, என் பெரியப்பாவின் படத்தைப் பதிவில் இப்போது சேர்த்துள்ளேன். படத்தில் இடது கோடியில் சிவந்த நிறத்துடன் இருப்பவர் என் பெரியப்பா. வலது கோடியில் சஃபாரி சட்டையுடன் காலமேல் கால்போட்டு அமர்ந்திருப்பவர் எனது தந்தை. நடுவில் அமர்ந்திருப்பவர் எங்கள் நெருங்கிய உறவினரும், கரூர் வெண்ணைமலை பரம்பரை அறங்காவலர் குடும்பத்தைச் சேர்ந்தவரும், பெரும் செல்வந்தருமான திருவாளர்.திண்ணப்ப செட்டியார். மற்றும் படத்தில் உள்ள மூவரும் எங்கள் பங்காளிகளே. படம் எடுக்கபெற்ற ஆண்டு 1941. அப்போது என் தந்தையாரின் வயது 20. என் பெரியப்பாவின் வயது. 38

படத்தின் மீது கர்சரை வைத்து, அழுத்தினால், படம் பெரிதாகத் தெரியும்!


+++++++++++++++++++++++++++++++++++++++++++++



வாழ்க வளமுடன்!

24.9.09

புதிர்: படங்களைப் பார்த்து, பதிலைச் சொல்லுங்கள்!

புதிர்: படங்களைப் பார்த்து, பதிலைச் சொல்லுங்கள்!

இருக்கும் 5 படங்களுமே, தமிழ்த் திரைப்படத்ததுறையைச் சேர்ந்த
பிரபலங்களின் படங்கள்.

அவர்களின் பெயரைச் சொன்னால் போதும்!

ஒரே ஒரு சிக்கல் படங்கள் அனைத்துமே 50ஆண்டுகளுக்கு
முற்பட்ட படங்கள்.

நம் வலைப்பூவிற்கு (Blog) மூத்த குடிமக்கள் பலரும் வந்து செல்வதால்,
அவர்களுக்கான, விழாக்காகப் பதிவு இது.

அவர்கள், சரியான பதிலைச் சொல்வார்கள் என்று எதிர் பார்க்கிறேன்
இளைஞர்களிலும் கில்லாடிகள் இருக்கிறர்கள். அவர்களும் சொல்லலாம்

அன்புடன்
வாத்தியார்
--------------------------------------------------------------




1. இவருடைய பெயர் என்ன?


2. படத்தில் உள்ள நடிகரின் பெயர் என்ன்?



3. வல்து பக்கம் உள்ள பிரபலத்தின் பெயர் என்ன?


4. அமர்ந்து உரையாடிக்கொண்டிருக்கும் இருவருடைய பெயர்களும் என்ன?


5. இவர்கள் இருவருடைய பெயர் என்ன?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


வாழ்க வளமுடன்!

23.9.09

நகைச்சுவை: ஒரு கல்லில் இரண்டு மாங்காய்!

+++++++++++++++++++++++++++++++++++++++++++++
நகைச்சுவை: ஒரு கல்லில் இரண்டு மாங்காய்!

இன்று ஒரே இடுகையில் இரண்டு பதிவுகள்
+++++++++++++++++++++++++++++++++++
பதிவு எண் 1

நகைச்சுவை: கணினிப் பொறியாளரின் உரையாடல்!

தன் மனைவியுடன், ஒரு கணினிப் பொறியாளர் நடத்திய உரையாடலைக்
கீழே கொடுத்துள்ளேன். தன் மனைவியின் கேள்விகளுக்கு அவர் தரும்
பதில்கள் கணினி மொழியில் உள்ளது.

மொழிமாற்றம் செய்யாமல் அப்படியே கொடுத்துள்ளேன். கணினிச் சொற்களை
தமிழாக்கம் செய்தால் சுவை குன்றிவிடும் வாய்ப்பு உள்ளது. ஆகவே அப்படியே
கொடுத்துள்ளேன். தனித் தமிழ் ஆர்வலர்கள் பொறுத்துக் கொள்ளவும்

இது இறக்குமதிச் சரக்கு. மின்னஞ்சலில் வந்தது!
---------------------------------------------------------------

Husband - hey dear, I am logged in.

Wife - would you like to have some snacks?
Husband - hard disk full.

Wife - have you brought the saree.
Husband - Bad command or file name.

Wife - but I told you about it in morning
Husband - erroneous syntax, abort, retry, cancel.

Wife - hae bhagwan !forget it where's your salary.
Husband - file in use, read only, try after some time.

Wife - at least give me your credit card, I can do some shopping.
Husband - sharing violation, access denied.

Wife - I made a mistake in marrying you.
Husband - data type mismatch.

Wife - you are useless.
Husband - by default.

Wife - who was there with you in the car this morning?
Husband - system unstable press ctrl, alt, del to Reboot.

Wife - what is the relation between you & your Receptionist?
Husband - the only user with write permission.

Wife - what is my value in your life?
Husband - unknown virus detected.

Wife - do you love me or your computer?
Husband - Too many parameters.

Wife - I will go to my dad's house.
Husband - program performed illegal operation, it will Close.

Wife - I will leave you forever.
Husband - close all programs and log out for another User.

Wife - it is worthless talking to you.
Husband - shut down the computer.

Wife - I am going
Husband - Its now safe to turn off your computer .
+++++++++++++++++++++++++++++++++++++++++
பதிவிற்குள் பதிவு.
இது இரண்டாவது பதிவு:
++++++++++++++++++++++++++++++++++++++++
நகைச்சுவை: பிரபல விஞ்ஞானி சர் ஐசக்நியூட்டன் அவர்கள்
சொல்ல மறந்தது!

Some Important Laws Which Newton Forgot to State!

1
LAW OF QUEUE: If you change queues, the one you have left will
start to move faster than the one you are in now.

2
LAW OF TELEPHONE: When you dial a wrong number,
you never get an engaged one.

3
LAW OF MECHANICAL REPAIR : After your hands become
coated with grease, your nose will begin to itch.

4.
LAW OF THE WORKSHOP: Any tool, when dropped,
will roll to the least accessible corner.

5.
LAW OF THE ALIBI: If you tell the boss you were late for work
because you had a flat tire, the next morning you will have a flat tire.

6.
BATH THEOREM: When the body is immersed in water,
the telephone rings.

7.
LAW OF ENCOUNTERS: The probability of meeting someone you know
increases when you are with someone you don't want to be seen with.

8.
LAW OF THE RESULT: When you try to prove to someone
that a machine won't work, it will!

9. LAW OF BIOMECHANICS: The severity of the itch is
inversely proportional to the reach.

10.
THEATRE RULE: People with the seats at the furthest
from the aisle arrive last.

11.
LAW OF COFFEE: As soon as you sit down for a cup of hot coffee,
your boss will ask you to do something which will last until the coffee is cold.
++++++++++++++++++++++++++++++++++++++++++++
எது நன்றாக உள்ளது?

விழாக்காலப் பதிவுகளில் இவைகள் இரண்டும் அடுத்தடுத்த பதிவுகள்


வாழ்க வளமுடன்!

22.9.09

நகைச்சுவை: நீங்கள் இருப்பது எந்த ஊர்?

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நகைச்சுவை: நீங்கள் இருப்பது எந்த ஊர்?

ஒரே நிகழ்ச்சி. அது நடக்கின்ற ஊரில் நீங்கள் இருக்கின்ற
சூழ்நிலை. நடக்கும் காட்சியை வைத்து, நீங்கள் இருக்கும் ஊர்
எது என்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
-----------------------------------------------------------
எச்சரிக்கை: இது நகைச்சுவைக்காக எழுதப்பெற்றது.
உம்மன்னா’ மூஞ்சிகள் பதிவை விட்டு விலகவும்.
------------------------------------------------------------
காட்சி ஒன்று!

இரண்டுபேர் சண்டையடித்துக் கொண்டிருக்கிறார்கள்
அந்த இடத்திற்கு மூன்றாவது நபர் வருகிறார். அவரைத் தொடர்ந்து
இன்னொருவரும் வருகிறார். வந்தவர்கள் இருவரும் சண்டையில்
யார் பக்கம் நியாயம் உள்ளது என்று விவாதம் செய்ய ஆரம்பித்தால் -
நீங்கள் இருப்பது கொல்கத்தா!
----------------------------------------------------
காட்சி இரண்டு!

இரண்டுபேர் சண்டையடித்துக் கொண்டிருக்கிறார்கள்
அந்த இடத்திற்கு மூன்றாவது நபர் வருகிறார்.
வந்தவர் இருவரையும் சமாதானம் செய்ய ஆரம்பித்தால் -
நீங்கள் இருப்பது மும்பை!
-----------------------------------------------------
காட்சி மூன்று!

இரண்டுபேர் சண்டையடித்துக் கொண்டிருக்கிறார்கள்
அந்த இடத்திற்கு மூன்றாவது நபர் வருகிறார்.
வந்தவர் இருவரையும் சமாதனம் செய்ய முயல்கிறார்.
ஆனால் அவர்கள் இருவருக்கும் கோபம் அதிகமாகி,
ஒன்று சேர்ந்து சமாதானம் செய்ய முயன்றவரைத் தாக்க
ஆரம்பித்தால் -
நீங்கள் இருப்பது தில்லி!
-----------------------------------------------------
காட்சி நான்கு!

இரண்டுபேர் சண்டையடித்துக் கொண்டிருக்கிறார்கள்
அந்த இடத்திற்கு மூன்றாவது நபர் வருகிறார்.
வந்தவர், ஓடிச்சென்று, தேநீர் கேன் மற்றும் பேப்பர்
கோப்பைகளுடன் திரும்பி வந்து, அங்கே சேரும் கூட்டத்திற்கு
டீ வியாபாரம் செய்யத்துவங்கினால்-
நீங்கள் இருப்பது அஹமதாபாத்!
------------------------------------------------------
காட்சி ஐந்து!

இரண்டுபேர் சண்டையடித்துக் கொள்கிறார்கள்.
ஐந்து நிமிடங்கள் தங்கள் சண்டையை நிறுத்திவிட்டு,
இருவரும் தங்களது மொபைல் போனில், தங்கள்
நணபர்களுக்கு அழைப்பு விடுத்து, அவர்கள் வந்தவுடன்
சண்டையை மீண்டும் துவக்குகிறார்களென்றால் -
அதாவது தற்சமயம் சண்டையிட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை
50ஐத் தாண்டிவிட்டது என்றால்-
நீங்கள் இருப்பது ஹரியானா!
-----------------------------------------------------
காட்சி ஆறு!

இரண்டுபேர் சண்டையடித்துக் கொள்கிறார்கள்.
அந்த இடத்திற்கு மூன்றாவது நபர் வருகிறார்.
வந்தவர், தன் மடிக்கணியை உபயோகித்து, நெட்டில்,
அந்தச் சண்டைக்கு ஏதாவது தீர்வு கிடைக்குமா? என்று
தேடத்துவங்கினால்-
நீங்கள் இருப்பது பெங்களூரு!
------------------------------------------------------
காட்சி ஏழு!

இரண்டுபேர் சண்டையடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கூட்டம் கூடி விடுகிறது. அந்தக் கூட்டம் நடக்கும்
சண்டையை சுவாரசியத்துடன் வேடிக்கை பார்க்கத்
துவங்கி விடுகிறது. அந்த இடத்திற்குக் கரை வேட்டி நபர்
ஒருவர் வருகிறார்.”டேய் கஸ்மாலங்களா, இதெல்லாம்
அண்ணனுக்குப் பிடிக்காது. நிறுத்துங்கடா சண்டையை”
என்று அதிரடியாகக் குரல் கொடுக்கிறார்.
சட்டென்று சண்டையும் முடிவிற்கு வந்து, நிற்கும்
அனைவரும் கலைந்து செல்லத் துவங்குகிறார்கள் என்றால்-
நீங்கள் இருப்பது சென்னை!
----------------------------------------------------------------
காட்சி எட்டு

இரண்டுபேர் சண்டையடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கூட்டம் கூடி விடுகிறது. அந்தக் கூட்டம் நடக்கும்
சண்டையை சுவாரசியத்துடன் வேடிக்கை பார்க்கத்
துவங்கி விடுகிறது. வந்தவர்களில் ஒருவர் காவல்துறைக்குத்
தகவல் கொடுக்கிறார். காவல்துறையினர், அவ்விடத்திற்கு
வந்தவர்கள், கூட்டத்தைக் கலைந்து போகச் சொல்கிறார்கள்,
அவர்கள் மேல் கற்கள் வந்து விழுகின்றன. உடனே தடியடி
செய்து கூட்டத்தைக் கலைக்க முற்படுகிறார்கள்.
முடியவில்லை. கல்வீச்சு கலவரத்தில் முடிகிறது.
காவல்துறையினர் நிற்பவர்களில் சிலரைக் கைது செய்து
தங்களுடைய வாகனத்தில் ஏற்ற ஆரம்பிக்கிறார்கள்.
பக்கத்தில் இருக்கும் கடைகள் அடித்து நொறுக்கப்படுகிறன.
கலவரம் நகரம் முழுவதும் பரவி விடுகிறது.
அடுத்த நாள் ஹர்த்தால். போராட்டங்கள். அரசாங்கம்
விடுமுறையை அறிவிக்கிறது. இப்படியாக நிலைமை
மாறிவிட்டது என்றால் -
நீங்கள் இருப்பது திருவனந்தபுரம்!
----------------------------------------------------------------
இருப்பதில் எது மிகவும் சிறப்பாக உள்ளது?

விழாக்காலக் கொண்டாட்டப் பதிவுகளில், இது அடுத்த பதிவு!







வாழ்க வளமுடன்!

21.9.09

உங்களுடைய பொது அறிவிற்கு ஒரு சோதனை!


++++++++++++++++++++++++++++++++++++++++++++
உங்களுடைய பொது அறிவிற்கு ஒரு சோதனை!

கீழே உள்ள பத்துக் கேள்விகளில், உங்களுக்குத் தெரிந்தவற்றிற்குப்
பதில் சொல்லுங்கள்

1.யாஹூ ‘(YAHOO) என்பதன் விரிவாக்கம் என்ன?

2.அடிடாஸ்’ (ADIDAS)என்பதன் விரிவாக்கம் என்ன?

3.ஸ்டார் டி.வி. நெட் ஒர்க்கில் ஸ்டார் என்பதன் விரிவாக்கம் என்ன?

4.ஐ.சி.ஐ.சி.ஐ விங்கியின், ஐ.சி.ஐ.சி.ஐ’ என்பதன் விரிவாக்கம் என்ன?

5.1984 - 1985ல் சியால்கோட்டில் நடைபெற்ற 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, பாதியில் கை விடப்பட்டது. காரணம் என்ன?

6.இரண்டு நாடுகளின் தேசிய கீதங்களை எழுதியவர் இவர். யார் அவர்? அந்த நாடுகள் எவை?

7.’குட்பை’ (goodbye) என்று சொல்லுவதில் உள்ள அர்த்தம் என்ன?

8.’Agnes Gonxha Bojaxhiu’ என்ற ஒரிஜினல் பெயரை உடைய இந்தப் பெண்மணி, உலகப் புகழ் பெற்றவர். யார் அவர்?

9.இந்தியாவைத் தவிர, ஆகஸ்ட் 15ஆம் தேதியில் சுதந்திரம் பெற்ற இன்னொரு நாடு எது?

10.முதன் முதலில் நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில், முதல் பந்தை எதிர் கொண்டு ஆடிய கிரிக்கெட் வீரரின் பெயர் என்ன?

தெரிந்தவற்றிற்குப் பதில் எழுதுங்கள்!

++++++++++++++++++++++++++++++++++++
விழாக்காலப் பதிவுகளில் இது அடுத்த பதிவு!






வாழ்க வளமுடன்!

20.9.09

நகைச்சுவை: உங்கள் டெக்னிக்!

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நகைச்சுவை: உங்கள் டெக்னிக்!


மார்வாரி இளைஞன் ஒருவனுக்கு ஆதங்கமாக இருந்தது. அவனுக்குத் திருமணமாகி மூன்று ஆண்டுகளாகக் குழந்தை இல்லை. கையில்
காசு இல்லை. சொந்த வீடு இல்லை. அதோடு கண்பார்வையில்லாத
தாயும் உடன் இருந்தாள்.

மனமுருகி பிரார்த்தனை செய்தான்.

அவன்முன் காட்சி கொடுத்த கடவுள், ஒரே ஒரு வரம் தருகிறேன். என்ன வேண்டினாலும் கிடைக்கும். கேள் என்றார்.

என்னடா சோதனை? ஒரே ஒரு வரமா? எதைக் கேட்பது? எதை விடுவது?

மின்னலென யோசித்தவன் சட்டென்று கேட்டான்.

என்ன கேட்டான்?

ஸ்க்ரோல் செய்து பாருங்கள்!

V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V

"அரண்மனை போன்ற எனது சொந்த வீட்டிலமர்ந்து, என் மனைவி எங்கள் குழந்தைக்கு, வைர வளையல்களை அணிவிக்கும் காட்சியைப் பார்த்து என்தாய் மகிழ வேண்டும்!"

அதாவது 4 in one!

கடவுள் கொடுத்தாரா? அதுதான் ஏற்கனவே வாக்குறுதி கொடுத்திருந்தாரே, அதனால் கொடுக்கும்படியாகிவிட்டது.

கொடுத்த பிறகு, கடவுள் சொன்னார்: “ மார்வாரிகளிடமிருந்து நான் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது!”
-----------------------------------------------------------------
கதையின் நீதி:
"Compile all requirements and present in one line rather than boring the appraiser for long time"
----------------------------------------------------------------
இது ஒன்றும் நம் மாணவக் கண்மணிகளுக்குப் புதிதல்ல. வாத்தியார் ஜாதகத்துடன் ஒரு கேள்விமட்டும் கேளுங்கள் என்று சொல்லும்போது,
அவர்கள் இந்த டெக்னிக்கைத்தான் உபயோகிக்கிறார்கள்
------------------------------------------------------------------------------------
விழாக்காலக் கலக்கல் பதிவு சீரியலில் இது 6 வது பதிவு!
விழாக்காலம் என்பது, ரம்ஜான் மற்றும் சரஸ்வதி பூஜைக் காலம்!
படித்து, மகிழுந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்!

அன்புடன்,
வாத்தியார்





வாழ்க வளமுடன்!

19.9.09

நகைச்சுவை: இதுவும் பிரார்த்தனைதான்!

நகைச்சுவை: இதுவும் பிரார்த்தனைதான்!

வேலைக்குச் செல்கிறவரா நீங்கள்?
உங்களுக்காகத்தான் இந்தப் பதிவு!

இல்லை, வேலை கொடுப்பவரா?
அல்லது பலரை வைத்து வேலை வாங்குபவரா?
உங்களுக்கு இந்தப் பதிவு ஒத்துவராது!
வெளியேறிவிடுங்கள்!

விழாக்காலக் கலக்கல் பதிவு வரிசையில் இது 5 வது பதிவு!
முன்னதாக உள்ளவற்றைப் படித்தீர்களா?
அதையும் படித்து மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்

விழாக்காலம் என்பது, ரம்ஜான் மற்றும் சரஸ்வதி பூஜைக் காலம்!
-----------------------------------------------------------------
அலுவலகத்தில் நுழையும்போது, அனுதினமும், இந்தப் பிரார்த்தனையைச்
செய்துவிட்டு, பிறகு உள்ளே செல்லுங்கள்!
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
V
படத்தின்மீது கர்சரை வைத்து அழுத்திப் பாருங்கள். படம் பெரிதாகத் தெரியும்!


++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++



வாழ்க வளமுடன்!

கற்றதும் பெற்றதும்!

கற்றதும் பெற்றதும்!

தலைப்பைப் பார்த்து, எழுத்தாளர் சுஜாதாவின் நூலில் இருந்து வாத்தியார்
எதையோ சுட்டுக் கொண்டு வந்து பதிவிட்டிருக்கிறார் என்று நினைப்பவர்கள்
பதிவை விட்டு விலகவும்.

மற்றவர்கள் உள்ளே வாருங்கள்.
விழாக்காலக் கலக்கல் பதிவுத் தொடரில் இது 4 வது பதிவு!
படித்து மகிழுங்கள்!

அன்புடன்,
வாத்தியார்

விழாக்காலம் என்பது, ரம்ஜான் மற்றும் சரஸ்வதி பூஜைக் காலம்!
------------------------------------------------------------------


1


2


3


4


5


6


7


8


9


10


11


12


13


14


15


16


17


18


19


20


21


22


23


24


25


26


27


28


29


30


31


32
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
உள்ளதில் எது மிகவும் நன்றாக உள்ளது என்பதைச் சொல்லுங்கள்!
இறக்குமதிச் சரக்கு. மின்னஞ்சலில் வந்தது!



வாழ்க வளமுடன்!