மாணவர் பதிவேடு (Enrolment Register)

என்னைப் பற்றி

My photo
Coimbatore, Tamil Nadu, India

Contact vaaththiyar

Contact vaaththiyar
Please write to Vaaththiyar

திருமணப் பொருத்தம்

திருமணப் பொருத்தம்
Marriage Matching

My Phone Number and whatsApp number

94430 56624

My email ID

எனது மின்னஞ்சல் முகவரி:
classroom2007@gmail.com
My Phone Number 94430 56624

வந்தவர்களின் எண்ணிக்கை

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்

வாத்தியாரின் புதிய புத்தகங்கள்
வாங்கி விட்டீர்களா?

வாத்தியாரின் அடுத்த புத்தகம்

வாத்தியாரின் அடுத்த புத்தகம்
தொகுப்பு 4 யோகங்களைப் பற்றிய பாடங்கள் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புத்தகம் கிடைக்கும் குறைந்த எண்ணிக்கையிலேயே புத்தகம் அச்சாகிறது

28.10.08

ஜோதிடப் பாடம் எண் 128: பதினொன்றாம் வீடு - பகுதி 2

இதன் முன் பகுதி இங்கே உள்ளது. அதைப் படித்துவிட்டு இதைப் படிக்க வேண்டுகிறேன்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
1
பதினொன்றாம் அதிபதி உச்சமாகவும், லக்கினத்திற்குத் திரிகோணத்திலும்
இருந்து, புதன் இரண்டாம் இடத்து அதிபதி என்றால், ஜாதகன் வணிகம்
செய்து பெரும் பொருள் ஈட்டுவான்.

2
குரு 11ல் இருந்து புதனின் பார்வை பெற்றால், ஜாதகன் சிறந்த கல்வியாளன்.
பிறரால் போற்றப்படுவான்.

3.
11ஆம் அதிபதியும், அதில் அமரும் கிரகமும் வலுவாக இருந்தால்,
ஜாதகன் சமூகத்தில் அந்தஸ்தும், செல்வாக்கும் உள்ளவனாகத் திகழ்வான்.

4.
பதினொன்றாம் வீட்டில் ராகு, செவ்வாய், சனி, சூரியன் ஆகிய நான்கு
கிரகங்களும் அமர்ந்திருந்தால், வேறு நல்ல பார்வை இல்லாமல் இருந்தால்
ஜாதகன் மன நோயாளியாகிவிடுவான்.

5.
சுபக் கிரகங்கள் பதினொன்றில் வந்து அமர்ந்தால், ஜாதகன் நல்ல
வழியில் பெரும் பொருள் ஈட்டுவான்.

6
தீய கிரகம் பதினொன்றில் வந்து அமர்ந்திருந்தால் ஜாதகன் தவறான
வழிகளில் பொருள் ஈட்டுவான்.

7.
பதினொன்றாம் வீட்டில் 30ற்கும் மேற்பட்ட பரல்கள் இருந்தால், ஜாதகன்
வீடு, வாகனம், என்று செளகரியமாக வாழ்வான்.

8.
பதினொன்றாம் வீட்டில் உள்ள கிரகங்கள் அஸ்தமனம் பெற்று இருந்தாலும்
அல்லது நீசமாகிப் பலமின்றி இருந்தாலும், ஜாதகன் குடும்பச் சொத்துக்களை
ஒவ்வொன்றாக இழப்பான்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பதினொன்றில் வந்து அமர்ந்திருக்கும் கிரகங்களை வைத்துப் பலன்கள்:
(எல்லாம் பொதுப்பலன்களே!)

11ல் சூரியன் இருந்தால்
ஜாதகனுக்கு அதிக முயற்சிகள் இன்றி வெற்றிகள் கிட்டும்.
நீண்டு நாட்கள் வாழ்வான்
செல்வந்தனாக மாறுவான்.
மனைவி, குழந்தைகள், வேலையாட்கள் என்று செளகரியமாக வாழ்வான்
கொள்கைக் குன்றாக இருப்பான்.
அரசில் செல்வாக்கு இருக்கும். அரச மரியாதைகள், விருதுகள் கிடைக்கும்
================================
11ல் சந்திரன்.
புனிதனாக இருப்பான். பெருந்தன்மை உடையவனாக இருப்பான்.
மனைவி மக்கள் என்று குடும்பக் குறைபாடுகள் இல்லாதவனாக இருப்பான்.
அமைதியைக் கடைப்பிடிப்பவனாக இருப்பான்.
செய்யும் வேலையில் மேன்மை அடைவான்.
வணிகனாக இருந்தால் பெரும்பொருள் ஈட்டுவான்
இடங்கள், சொத்துக்கள் என்று அதீத செல்வம் சேரும்
=================================
11ல் செவ்வாய்
ஜாதகன் அதிரடியாகப் பேசக்கூடியவன்
புத்திசாலியாக இருப்பான்.
சபலமுடையவன்
எராளமான இடங்கள் சேரும்
அதிகாரவர்க்கத்தினருடன் தொடர்புடையவனாக இருப்பான்.
==================================
11ல் புதன்
அதிகம் படித்தவன்
கூர்மையான புத்தி உள்ளவன்
செல்வந்தனாகவும், மகிழ்ச்சி உள்ளவனாகவும் இருப்பான்.
விசுவாசமான வேலைக்கரர்கள் கிடைப்பார்கள்
பொறியியல் சம்பந்தப்பட்ட துறைகளுக்குப் போனால் சாதனை படைப்பார்கள்
========================================
11ல் குரு
ஜாதகன் நீண்ட நாட்கள் வாழ்வான்
துணிச்சலானவன்.செல்வந்தன்
புத்திசாலி. பலராலும் அறியப்பட்டவன்
இசையில் ஆர்வமுள்ளவன்
ஏராளமான நண்பர்களை உடையவன்
=========================================
11ல் சுக்கிரன்
ஊர் சுற்றி.
காசில், லாபத்தில் குறியாக இருப்பான்.
ஆடம்பரம் மிக்க, செளகரியங்கள் மிகுந்த வாழ்க்கை அமையும்
சபலமுள்ளவன். பெண்களின் மேல் மிகுந்த ஏக்கமுடையவன்
நண்பர்கள் வட்டாரத்தில் பிரபலமானவன்
==========================================
11ல் சனி
ஜாதகன் பலரை வேலைக்கு அமர்த்தி அவர்கள் மூலம் பொருள் ஈட்டுவான்.
குறைந்த எண்ணிக்கையில் நண்பர்கள் இருப்பார்கள்
வாழ்க்கையை அனுபவிக்கும் முனைப்பில் இருப்பான்
சிலர் அரசாங்க கான்ட்ராக்டுகள் அல்ல்து பணிகள் மூலம் பொருள்
ஈட்டுவார்கள்
நீண்ட நாள் வாழ்வான். ஆரோக்கியத்துடன் வாழ்வான்
சிலர் அரசியலில் நுழைந்து பிரபலம் அடைவார்கள்
==========================================
11ல் ராகு
ஜாதகன் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றுவான். அதில் புகழ் பெறுவான்
சிலர் வெளி நாடுகளில் வணிகம் அல்லது வேலை செய்து பெரும்
பொருள் ஈட்டுவார்கள்
ஜாதகன் கற்றவனாகவும், செல்வந்தனாகவும், புகழுடையவனகவும்
இருப்பான்.
=========================================
12ல் கேது
ஜாதகனுக்கு, சூதாட்டம், குதிரைப் பந்தயம், லாட்டரிச் சீட்டு
அல்லது பங்கு வணிகம் போன்றவற்றில் இருந்து பணம் வரும்.
அதில் நாட்டமுடையவனாக இருப்பான்,
நல்லவனாக இருப்பான். எடுத்த காரியங்களில் வெற்றி கிட்டும்
தர்மங்கள் செய்வான்.
=========================================
இந்த விதிகளை எல்லாம் ஒத்துப் பார்த்துப் பலன்களை அறிவதைவிட
சுலபமான முறை உள்ளது. அதுதான் அஷ்டகவர்க்கம் & சர்வாஷ்டகவர்க்கம்

11ஆம் வீட்டில் 30ம் அதற்கு மேலும் பரல்கள் இருப்பது நல்லது
28 பரல்கள் இருந்தால் சராசரி.
25ற்குக்கீழே இருந்தால் சுமார்.
20ம் 20ற்குக் கீழே யும் இருந்தால் பலனில்லை!

பதினொன்றாம் அதிபதி, அதில் அமர்ந்திருக்கும் கிரகம், அதைப் பார்க்கும்
கிரகம், மேலும் லக்கினாதிபதி ஆகியோர் தங்களது சுயவர்க்கத்தில் 5 அல்லது
அதற்கு மேல் பெற்றிருத்தல் நல்லது. நல்ல பலன்கள் அவர்களது தசா புத்தியில்
கிடைக்கும்

4 என்பது சராசரி
3 என்பது சுமார்
2ம் 2ற்குக் கீழேயுமான பரல்கள் என்றால் பலனில்லை!
அவற்றிற்கான தசாபுத்திகள் பலனைத் தராது.
=======================================================
(இவை எல்லாமே பொதுவிதிகள். தனிப்பட்ட ஜாதகங்களில் உள்ள
கிரகங்களின் அமைப்பை வைத்து இவைகள் சற்று மாறுபடும்)

பதினொன்றாம் வீட்டைப் பற்றிய பாடம் நிறைவு பெறுகிறது

அன்புடன்,
வகுப்பறை வாத்தியார்
வாழ்க வளமுடன்!

26.10.08

கரடிக்கு உண்டா இறை நம்பிக்கை?

சத்தியமங்கலத்தில் இருந்து இருபது கிலோமீட்டர் தொலைவில் இருந்தது அந்தக்
கிராமம். மொத்தம் நூறு வீடுகளே இருக்கும். ஒரு சிறு வனபத்ரகாளி அம்மன்
கோவிலும், ஆரம்பப் பள்ளிக்கூடமும் உபரியாக இருந்தன. மற்றபடி ஒன்றும்
கிடையாது.

அத்தனை பேருக்கும் விவசாயம்தான் தொழில்.

கிராமத்தின் வடக்குப் பகுதியில் பெரிய மலைகளுடன் கூடிய வனாந்திரக் காடு.

அன்பரசன் மட்டும் 50 மாடுகளைக் கொண்ட பால் பண்ணை வைத்திருந்தான்.
ஆள் வாட்ட சாட்டமாக இருப்பான். பத்தாம் வகுப்பு வரை படித்திருந்தான்.
அவனுக்கு வயது முப்பது. இறை நம்பிக்கையில்லதவன். தன்னைப் போலவே
இறைநம்பிக்கை இல்லாத பெண்தான் தனக்கு மனைவியாக வரவேண்டும் என்பதில்
அவன் உறுதியாக இருந்தான்.

அப்படி எண்ணம்கொண்ட பெண் இதுவரை கிடைக்கவில்லை. அவனது திருமணமும்
தள்ளிக்கொண்டே சென்றது.

அந்தக் கிராமத்தில் எல்லா இளைஞர்களுக்கும் 21 அல்லது 22 வயதிலேயே
அவர்களுடைய பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்துவிடுவார்கள். ஆனால்
அன்பரசனின் கொள்கையால் அவனுக்கு ஏற்ற பெண் இதுவரை கிடைக்கவில்லை.

அந்தக் கவலையிலேயே அன்பரசனின் தாய்க்கும் நோய்வந்து இறந்து போய் விட்டாள்.

அன்பரசனின் இயற்பெயர் முருகைய்யன். சின்ன வயதிலேயே இறைநம்பிக்கை
இல்லாததால், பள்ளி இறுதியாண்டு படிக்கும்போது அவன் தன் பெயரை அன்பரசன்
என்று மாற்றி வைத்துக்கொண்டு விட்டான்.

அவனுக்கு ஏன் இறைநம்பிக்கை இல்லாமல் போனது என்று விவரித்தால் பத்து
பக்கங்கள் எழுத வேண்டியதிருக்கும். அதோடு கதைக்கு அது அவசியமும் இல்லை.
ஆகவே எழுதவில்லை!

கிராமத்தில் வருடத்திற்கு நான்கு முறை கோவிலில் திருவிழா நடக்கும். அன்பரசன்
அந்த விழாக்களைப் புறக்கணித்து விடுவான். ஊரிலுள்ள பெரிசுகளுக்கும் அவன்
குணம் தெரிந்ததால் கண்டு கொள்ள மாட்டார்கள்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இப்படியே கதை போய்க் கொண்டிருந்தால் என்ன சுவாரசியம் இருக்கும்?
ஆகவே இப்போது எல்லாவற்றையும் தாண்டி கதையின் முக்கிய பகுதிக்கு
வருகிறேன்!
==========================================================
ஒரு நாள் அதிகாலை, அன்பரசனின் பண்ணையில் இருந்து கறவைமாடு ஒன்று
கட்டை அவிழ்த்துக்கொண்டு ஓடி விட்டது. தினமும் பத்து லிட்டருக்குக் குறையாமல்
பால் கொடுக்கும் மாடு அது.

எங்கே போய்விடப்போகிறது? பக்கத்துத் தோட்டங்கள் ஏதாவது ஒன்றில்தான் மாடு
நின்றுகொண்டிருக்கும், பிடித்துக் கொண்டு வந்து விடலாம் என்ற எண்ணத்தோடு
அன்பரசன் புறப்பட்டான்.

ஒரு மணி நேரம் சுற்றியும் மாடு தென்படவில்லை.

அப்போதுதான் அது நடந்தது.

வனத்தின் முன்பகுதியில் கிடந்த சுள்ளிகளைப் பொறுக்கிக்கொண்டு அந்தச்
சுமையோடு, கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தி வந்து கொண்டிருந்தாள். அவள்
அன்பரசனைப் பார்த்து விட்டு, அவன் கேட்காமலேயே சொன்னாள்,'' காட்டுப்
பாதைக்குள்ள ஒரு ஒத்தைமாடு ஓடிக் கிட்டிருக்கு, பிடிச்சு நிறுத்தலாம்னு பார்த்தேன்
முடியல்லை. ஒம்புட்டு மாடுதானா அது?"

அன்பரசனுக்குப் பதட்டமாகி விட்டது. அந்தக் காட்டைப் பற்றி அவன் நிறையக்
கேள்விப்பட்டிருக்கிறான். கொடிய வனாந்திரக்காடு அது. கிராம மக்கள் யாரும்
உள்ளே போக மாட்டார்கள். விலங்குகள் ஏராளமாகத் திரியும் காடு அது.

தகுந்த துணை கிடைக்காததால் அன்பரசனும் இதுவரை ஒருமுறைகூடக் காட்டிற்குள்
போய்ப் பார்த்ததில்லை.

மாட்டைப் பறிகொடுத்துவிடக்கூடாது என்ற எண்ணத்தாலும், இயற்கையாகவே உள்ள
மனத்திடத்தாலும் துணிந்து காட்டிற்குள் நுழைந்தான்.

துவக்கத்தில் ஒரு ஒத்தயடிப்பாதை இருந்தது. மாடு ஒன்று பயணித்த தடயமும் அதில்
இருந்தது.

உள்ளே நுழைந்தவன் ஒரு இரண்டு கல் தூரம் வந்துவிட்டான். மாடு கண்ணில் தென்
படவில்லை.

காடு அடர்ந்த மரம் செடி, கொடிகளுடன் பார்க்க ரம்மியமாக இருந்தது. அந்த
இயற்கை அழகில் அன்பரசன் தன்னையே மறந்துவிட்டான்.

குறுக்கிட்ட சிறு காட்டாறு ஒன்றின் அருகே பாதை முடிந்துவிட்டது. ஆற்றுத்
தண்ணீர் படு சுத்தமாகத் தெளிவாக இருந்தது.

ஆற்றில் இறங்கி, கால் முகத்தைக் கழுவிக்கொண்டு தன்னுடைய இரு கரங்களாலும்
தண்ணீரை அள்ளிப் பருகினான்.

தனக்குப் பின்னால் ஆற்றங்கரையில் கிடந்த சருகளில் யாரோ நடந்துவரும் ஓசை
கேட்க அவசரமாகத் திரும்பிப்பார்த்தான்.

அவனுடைய சப்த நாடியும் ஒடுங்கிவிட்டது!

சுமார் ஆறடி உயரம் உள்ள கரடி ஒன்று அவனை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தது.

யோசிப்பதற்கு நேரமில்லை. இதனிடமிருந்து தப்பித்தாக வேண்டும்.

அன்பரசன் தம் பிடித்து ஓட ஆரம்பித்தான்.

அவன் வேகமாக ஓட, கரடியும் துரத்த ஆரம்பித்தது.

ஐந்து நிமிட ஓட்டம்கூட நிறைந்திருக்காது. அதைத்தான் கெட்ட நேரம் என்பார்கள்.

பாதையில் குறுக்கிட்ட மரத்தின் வேர் ஒன்று தட்டிவிட, அன்பரசன், தடால் என்று
கீழே விழுந்து விட்டான். சுதாகரித்துப் புரண்டு நிமிர்வதற்குள், அவன் மார்பின் மீது
வந்து கரடி அமர்ந்து கொண்டு, அவன் கழுத்தைப் பிடிக்க ஆரம்பித்தது.

தான் இருக்கும் அபாய நிலையை உணர்ந்த அன்பரசன், முதன் முறையாக
அடிவயிற்றில் இருந்து குரல் கொடுத்துக் கத்தினான்:

"கடவுளே!"

காடு முழுவதும் அவன் குரல் எதிரொலித்தது.

அப்போதுதான் அது நடந்தது.

வானத்தில் இருந்து, சர்க்கஸ் லைட்டை போன்ற வட்ட ஒளி அவனைச் சுற்றி விழுந்தது.

அத்தனை இயக்கமும் நின்று போய் விட்டது. கரடி தன் கைகளைத் தூக்கிக்கொண்டு
விட்டது. அதோடு எந்தவித இயக்கமும் இன்றி உறைந்து விட்டதைப் போல் இருந்தது.
காட்டில் மரம் செடி, கொடி எதுவும் அசைவின்றி இருந்தன.

அன்பரசன் அனைத்தையும் ஆதங்கத்துடன் பார்த்தான்.

வானத்தில் இருந்து அசரீரி ஒலித்தது.

"என்ன வேண்டும் உனக்கு?"

"இந்தக் கரடியிடமிருந்து நான் தப்பிக்க வேண்டும். அதற்கு நீ உதவி செய்வாயா?"

"படைப்பின் இலக்கணத்தை அறிந்தவர்களுக்கு மட்டுமே நான் உதவி செய்வேன்"

"படைப்பின் இலக்கணத்தை எப்படி அறிந்து கொள்வது?"

"முதலில் அதற்கு இறை நம்பிக்கை வேண்டும்! ஒரே நொடியில் உனக்கு இறை
நம்பிக்கையை என்னால் உண்டாக்க முடியும். உண்டாக்கட்டுமா?"

மின்னல் வேகத்தில் அவன் யோசித்தான். இத்தனை நாட்கள் இருந்தாகிவிட்டது.
திடீரென்று இறைவனை ஏற்றுக் கொள்ள அவன் மனம் ஒப்புக்கொள்ளவில்லை.
ஆகவே வழக்கம்போல இடக்காகக் கேட்டான்:

"இந்தக் கரடிக்கு இறை நம்பிக்கை உண்டா?"

"கிடையாது!"

"அதற்கு இறை நம்பிக்கையை உண்டாக்க முடியுமா?"

"முடியும்!"

கரடிக்கு இறை நம்பிக்கை வந்துவிட்டால், அது தன்னை விட்டுவிடும் என்று நம்பிய
அவன் உடனே சட்டென்று சொன்னான்:

"அப்படியென்றால், இந்தக் கரடிக்கு இறை நம்பிக்கையை உண்டாக்கு!"

"நல்லது. அப்படியே செய்கிறேன்!" என்று அசரீரீ சொன்னவுடன், ஒளி வட்டம்
கரடி மீது முழுதாக விழுந்தது. அத்துடன் அடுத்த நொடியில் அது மறைந்தது.

எல்லாம் பழையபடி சகஜ நிலைமைக்குத் திரும்பியது.

இப்போது கரடி அவன் மீது அமர்ந்த நிலையிலேயே, தன் கைகள் இரண்டையும்
கூப்பி வணங்கிவிட்டுச் சொன்னது."இறைவா உனக்குக் கோடி நன்றி. எனக்கு
நெடு நாட்கள் கழித்து நல்ல உணவாகக் கொடுத்திருக்கிறாய். இவனை வைத்து,
இவன் உடலை வைத்து என்னுடைய இரண்டு நாள் பசியைப் போக்கிக்
கொள்வேன். மீண்டும் உனக்கு எனது நன்றி!"

வாழ்க வளமுடன்!

24.10.08

என்ன சொன்னார் பரமசிவன்?

கங்கை பிரவாகம் எடுத்து இரண்டு பக்கக் கரைகளையும் தொட்டவாறு
அழகாக ஓடிக்கொண்டிருந்தது.

ரம்மியமாக இருந்த வடது பக்கக் கரையில் பரமசிவன் தன் தேவியுடன்
பேசிவாறு நடந்து கொண்டிருந்தார். நதியின் அழகில் மயங்கிய பார்வதி
தேவி, தன் அன்புக் கணவரிடம் அதைப் பற்றிப் பேசிவாறு நடந்தார்.

"நாதா, இந்த நதியின் சிறப்பு என்ன?"

"உலகில் புண்ணியம் வாய்ந்த நதி இந்த நதிதான். அதனாலதான் இந்த
நதிக்கு என் சிரசில் இடம் கொடுத்திருக்கிறேன். இந்த நதியில் குளித்தால்
செய்த பாவங்கள் போகும்"

"பாவங்கள் போனால் என்ன ஆகும்?" என்று தேவி ஒன்றும் அறியாதவர்
போலக் கேட்க, சிவனார் தொடர்ந்தார்.

"பாவங்கள் நீங்கப் பெற்றவன் சொர்க்கத்திற்கு வருவான்"

"அப்படியென்றால், இந்த நதியில் முங்கிக் குளித்தவர்கள் அத்தனை பேரும்
சொர்க்கத்திற்கு வருவார்களா?"

"அத்தனை பேரும் வரமாட்டார்கள். ஒரு சிலர் மட்டுமே வருவார்கள்"

"முரண்பாடாக இருக்கிறதே நாதா! இதில் குளித்தால் பாவம் போகும் என்றால்.
குளித்த அத்தனை பேருக்கும் பாவங்கள் போக வேண்டும். போன அத்தனை
பேர்களும் சொர்க்கத்திற்கு வரவேண்டுமல்லவா? சிலர் என்பது ஏன்? சற்று
விளக்கமாகச் சொல்லுங்களேன்"

"ஆகா, விளக்கமாகச் சொல்கிறேன். அதற்கு நாம் இருவரும் ஒரு சிறு நாடகம்
நடத்த வேண்டும். ஒரு நொடியில் நான் வயோதிகம் அடைந்த தள்ளாத
முதியவனாகவும், நீ அந்த முதியவரின் மனைவியாகவும் உருமாற வேண்டும்.
மாறியவுடன் நாம் இருவரும் அடுத்த கணம் காசி நகரில் இருப்போம். அங்கே
நான் இறந்ததுபோல பேச்சு மூச்சில்லாமல் கிடப்பேன். என்னை மடியில் கிடத்திக்
கொண்டு நீ அழுது குரல் கொடுக்க வேண்டும். மற்றதெல்லாம் தானாக நடக்கும்!
நாடகத்தின் முடிவில் நீ கேட்ட கேள்விக்குத் தகுந்த விடை கிடைக்கும்"

"அப்படியே ஆகட்டும் நாதா!"
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
காசி நகரம். கங்கைக் கரையில் பிரதான இடம். படித்துறையின் அருகே
மக்கள் கூடும் இடம்

கிழவர் வேடத்தில் இருந்த சிவபெருமான் இறந்ததுபோலக் கிடந்தார்.

தேவியார் அவரை மடியில் கிடத்திக் கொண்டு குரல் கொடுத்து அழுது
கண்ணீர் விட கூட்டம் சேர்ந்து விட்டது.

கூட்டத்தினர் கேட்க, பாட்டி வேடத்தில் இருந்த தேவியார் விவரித்தார்.

"என் கணவர் பெரிய ரிஷி. சுவாமி தரிசனம் பண்ண வந்த இடத்தில்
இப்படி இறந்து விட்டார். அவருக்கு இறுதிக் காரியம் செய்ய வேண்டும்!"

"அதற்கு ஏன் விசனம்? ஆளுக்கு ஒரு காசு தருகிறோம். இங்கே
நிற்பவர்களில் பாதிப்பேர்கள் கொடுத்தால் கூட ஐம்பதுகாசு சேர்ந்து
விடும்.கவலைப் படாதீர்கள் தாயே!" என்று ஒருவன் சொல்ல, அங்கிருந்த
மற்றவர்களும் ஆமாம் என்று குரல் கொடுத்தார்கள்.

"பிரச்சினை பணமல்ல :கொள்ளி வைப்பது யார்?" என்று பாட்டி வேடத்தில்
இருந்த தேவியார் தொடர்ந்து கேட்க, கூட்டத்தில் இருந்தவர்களில் நான்கு
அல்லது ஐந்து பேர்கள் போட்டி போட்டுக் கொண்டு அதற்குத் தயாரென்றார்கள்

உடனே பாட்டி சொன்னார்," இவர் பெரிய ரிஷி. இவருக்குக் கொள்ளி
வைப்பவர் பாவம் எதுவும் செய்யாதவராக இருக்க வேண்டும். ஆகவே
உங்களில் யார் பாவம் எதுவும் செய்யாதவரோ அவரே முன் வருக!"

உடனே கூட்டத்தில் இருந்தவர்களில் ஒருவன் சொன்னான்,"அதெப்படித்
தாயே, மனிதர்களில் பாவம் செய்யாத மனிதன் எங்கே இருப்பான்?
தெரிந்து செய்தாலும் அல்லது தெரியாமல் செய்தாலும் பாவம் பாவம்தான்.
ஒரு எறும்பைத் தெரியாமல் மிதித்து, அது இறந்து போயிருந்தாலும் அது
பாவம்தானே? அதனால் பாவம் செய்திருக்காத மனிதன் கிடைப்பது
அரிதம்மா!"

அடுத்து ஒருவன் கேட்டான்,"பாவம் செய்திருப்பதை அறியாமல் அல்லது
உணராமல் ஒருவன் உன் கணவருக்குக் கொள்ளி வைத்தால் என்ன ஆகும்?"

அதற்குத் தேவி பதில் சொன்னார்:

"அவன் தலை வெடித்துவிடும்!"

அவ்வளவுதான் அங்கே இருந்தவர்கள் அமைதியாகி விட்டார்கள். ஆனால்
நேரம் ஆக நேரமாக கூட்டம் அதிகரித்துக்கொண்டே போனது. காலை
பதினோரு மணிக்கு ஆரம்பித்த நாடகம் மதியம் மூன்று மணி வரைக்கும் நீடித்தது

மூன்று மணிக்கு பதினெட்டு வயது நிரம்பிய இளைஞன் ஒருவன் அங்கே
வந்து சேர்ந்தான். கூட்டத்தினரிமிருந்து விவரத்தை அறிந்து கொண்டவன்
தேவியின் அருகில் வந்து சொன்னான்:

"பாட்டி, கவலையை விடுங்கள். நான் வைக்கிறேன் கொள்ளி!"

"நிபந்தனை தெரியுமா உனக்கு?"

"பாவம் எதுவும் செய்திருக்கக்கூடாது.அவ்வளவுதானே? அறியாமல் பாவம்
செய்திருக்கலாம். ஆனால் அதைப்போக்குவதற்கு வழி இருக்கிறது "

"எப்படி?"

"இந்தக் கங்கையில் குளித்தால் பாவங்கள் போய்விடும் என்று என் தாய்
சொல்லியிருக்கிறாள். என் தாயின் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது.
இந்தக் கங்கையின் மீது நம்பிக்கை இருக்கிறது. என்னைப்படைத்த ஆண்டவன்
மீது நம்பிக்கை இருக்கிறது! இதோ ஒரு நிமிடத்தில் வருகிறேன்" என்று
சொன்னவன், "ஓம் நமச்சிவாயா!" என்று ஓங்கிக் குரல் கொடுத்தவாறு
கங்கையில் குதித்தான்.

குதித்தவன் மூன்று முறைகள் முங்கி விட்டு எழுந்து கரைக்கு ஓடிவந்தான்.
அங்கே கரையில் யாரும் இல்லை!
=====================================
கைலாயத்தில் சிவபெருமான் தேவியிடம் சொன்னார்."இவன்தான் வருவான்!
எவன் ஒருவன் நம்பிக்கையுடன் குளிக்கிறானோ அவன்தான் வருவான்.
மற்றவர்கள் வரமாட்டார்கள்!"
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஆகவே அடுத்தமுறை, கங்கை என்றில்லை, எந்த நதியில் சென்று
நீராடினாலும், செய்த பாவங்கள் நம்மை விட்டுப்போக இறை நம்பிக்ககை
யுடன் அதில் குளியுங்கள்.

இறை நம்பிக்கை ஒன்றுதான் நம்மைக்காக்கும்.

வெட்டியாக, மொக்கையாக இறை நம்பிக்கையை எதிர்த்துக் கேள்வி
கேட்டுக் கொண்டிருப்பவர்கள் அத்தனை பேரும் திரும்பத் திரும்ப
இந்த அவல வாழ்க்கையில் உழன்று கொண்டிருக்க வேண்டியதுதான்.

கையில் ரேசன் கார்டு அல்லது அல்லது வங்கிக் கணக்குப் புத்தகம்
அல்லது விசா. மனதில் கவலை. மனைவியிடம் வாங்கிய திட்டு.
உடம்பில் பல தினுசியில் நோய்கள் என்று திருச்சி தில்லை நகரிலோ
அல்லது மதுரை மாசி வீதியிலோ அல்லது சென்னை சேப்பாகத்திலோ
ஜென்மம் ஜென்மமாய் சுற்றிக் கொண்டிருக்க வேண்டியதுதான்!

உய்வே கிடையாது.

வாழ்க இறை நம்பிக்கை! வளர்க பக்தி நெறி!

அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

வாழ்க வளமுடன்!

20.10.08

ஜோதிடம்: பதினொன்றாம் வீடு!


பதினொன்றாம் வீட்டு அதிபதியை லாபாதிபதி என்பார்கள். அதாவது லாபத்தைக்
கொடுக்கக்கூடியவன். இன்றைய சூழ்நிலையில் லாபத்தை விரும்பாதவர்கள் யார்
இருக்கிறார்கள் சொல்லுங்கள்?

பெரிய அரசியல் தலைவரில் இருந்து, தலையிலும், தோள்களிலும் சுமைகளைத்
தூக்கிக் கொண்டுபோய்க் கொடுத்துப் பிழைப்பு நடத்தும் சாமான்யத் தொழிலாளிவரை
அனைவருமே லாபத்தை எதிர் நோக்கி இருக்கிறார்கள்.

அதனால்தான் ஆட்டோ ஓட்டுனர்கள் மீட்டர் போட்டு ஓட்டுவதில்லை!
மீட்டர் போட்டு ஓட்டினால் என்ன பெரிதாக லாபம் வந்துவிடப்போகிறது?
அரசியல்வாதிகளும் தங்கள் கொள்கைகளில் பிடிப்பாக இருப்பதில்லை!
பிடிப்பாக இருப்பதனால் என்ன லாபம் வந்து விடப்போகிறது?
கொள்கைகளைக் காற்றில் பறக்கவிட்டு விட்டு ஆட்சியை பிடித்து, தொடர்ந்து
அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்வதிலேயே முனைப்பாக இருக்கிறார்கள்.
அதிகாரத்தைப் பயன்படுத்தினால்தானே நான்கு காசு (கோடிக்கணக்கில்)
பார்க்க முடியும்?

இப்போது பெண்களுக்கும், லாபத்தை வைத்துத்தான் காதல் வருகிறது. நல்ல
குணம் உடையவன் என்று எந்தப் பெண்ணாவது தேடிப்போய்க் காதலிக்கிறாளா?
ஒருவனுடைய வருமானம் என்ன? செலவழிக்கும் சக்தி என்ன என்பதைப்
பார்த்துத்தான் காதல் வருகிறது.

நல்ல வேளை, வங்கிகளில் ஸ்திர சொத்துக்களை (Collateral security) அடமானமாக
வாங்கிக் கொண்டு தொழில் முனைவோருக்குக் கடன் உதவி செய்கிறார்களே,
அதுபோல பெண்களும் ஸ்திர சொத்துக்களைக் (Collateral security) கையில் வாங்கிக்
கொண்டு காதலிக்கும் நிலைமை வரவில்லை. எதிகாலத்தில் அதுவும் வரலாம்.

அம்பிகாபதி, அமராவதி போன்ற தெய்வீகக் காதல் எல்லாம் இப்போது கிடையாது
இப்போதையைக் காதல் எல்லாம் இன்ஃபோசிஸ், டி.சி.எஸ், எல் அண்ட் டி என்று
காதலின் வட்டம் சுருங்கிவிட்டது.

வட்டம் சுருங்காத காதல் சினிமாவில் மட்டுமே!

ஒரு தந்தை தன் மகளுக்கு வரன் பார்த்தார். பையன் டெக்ஸ்டைல் டிப்ளமோ
ஹோல்டர். ஒரு நூற்பாலையில் வேலை பார்க்கிறான். மாதம் ஐயாயிரம் ரூபாய்
சம்பளம். பெண் வேண்டாம் என்று சொல்லிவிட்டாள்.

ஏன் என்று கேட்டால் "ஐயாயிரம் ரூபாயில் எப்படிக் குடும்பம் நடத்துவது?'
என்கிறாள்

ஊருக்கு வெளியே புறநகர் காலனிகளில் 1,500 ரூபாய்க்கு வாடகை வீடுகள்
கிடைக்கும். இருவருக்கு உணவிற்காகும் செலவு 2,500 ரூபாய் ஆகும் மேல்
செலவிற்கு மீதத்தை வைத்துக் கொள்ளுங்கள், என்றால் - ஒண்டிக்குடித்தனம்
பண்னுவதற்கெல்லாம் நான் தயாரில்லை. நாளைக்கு ஒரு குழந்தை பிறந்தால்
என்ன செய்வது? இப்படிப்போய் ஒருவனுடன் குடும்பம் நடத்த வேண்டிய
அவசியம் இல்லை. அதற்கு பதிலாக இருக்கும் இடத்திலேயே ஹாப்பி'யாக
இருந்துவிட்டுப்போகிறேன். ஆளை விடுங்கள்' என்கிறாள்.

திருமணம் ஆகின்ற நாள் அன்றே, கணவனிடம் எல்லா வசதிகளும் இருக்க
வேண்டும் என்று பெண் எதிர்பார்க்கிறாள். எட்டாயிரம் அல்லது பத்தாயிரம்
ரூபாய் வாடகையில் ஒரு அபார்ட்மெண்ட், ஆறாயிரம் ரூபாய்க்கு டிபார்ட்மென்ட்
ஸ்டோரில் அரிசி, மளிகைச்சாமான்களை அனாசயமாக வாங்கிப்போடக்கூடிய
திறன், பல்சர் அல்லது ஹோண்டா மோட்டார்சைக்கிள், வீட்டில் கேஸ் ஸ்டவ்,
குக்கர், மிக்ஸி, வெட் கிரைண்டர், பிரிஜ், வாஷிங் மெஷின், ஸ்பிளிட் ஏர்கண்டி
ஷனர் பொருத்தப் பட்ட படுக்கை அறை, மாலை வேளைகளில் மூன்று முழம்
மல்லிகைப்பூ, பானிப்பூரி, பேல்பேரி இத்யாதிகளுக்கு தினமும் நூறு ரூபாயை
முகம் சுழிக்காமல் செலவழிக்கும் திறன் ஆகிய உள்ள ஆடவனையே
இன்றைய பெண்கள்(பெரும்பாலோனோர்) விரும்புகிறார்கள்

இதற்கெல்லாம் அடிப்படை பணம். நார்மல் சானலில் வருகிற பணம் இல்லை.
அதீதமாக வருகிற பணம். அதாவது பொத்துக் கொண்டு வருகிற பணம்.

அதற்கு எங்கே போகிறது?

எங்கே போகலாம் என்பதைப் பதினொன்றாம் பாடத்தின் முடிவில் சொல்கிறேன்.

இப்போது பாடம்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
Eleventh house is called as house of profit! House for elder brother,
friend, acquisitions freedom from misery and total happiness!

பதினொன்றாம் வீடு நன்றாக இருந்தால் இவைகளும் நன்றாக இருக்கும்.
இல்லை என்றால் இல்லை.

நன்றாக இல்லை என்றால், மூத்த சகோதரரை இழக்க நேரிடும். நல்ல
நண்பர்களை இழக்க நேரிடும்.செல்வங்களை இழக்க நேரிடும். வாழ்க்கை
துன்பம் என்ற மேகங்களால் சூழப்பட்டதாகிவிடும். மகிழ்ச்சியின்மை என்ற
இருள் சூழ்ந்து நிற்கும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

1. லக்கினாதிபதி பதினொன்றில் இருந்தாலும் அல்லது பதினொன்றாம் வீட்டு
அதிபதி லக்கினத்தில் வந்து இருந்தாலும். நல்ல பலன் உண்டாகும். அதுதான்
முதல் விதி.

அதற்குரிய பலன்: குறைந்த முயற்சி; நிறைந்த பலன் (Minimum efforts;
Maximum Benefits) அதாவது 100 ரூபாய்க்கான உழைப்பு. ஐநூறு ரூபாய்
வருமானம். நான்கு மணி நேரம் மட்டுமே வேலை. எட்டு மணி நேர வேலைக்
குரிய சம்பளம். டேட்டா என்ட்ரி வேலை ஆனால் டீம் மானேஜரின் சம்பளம்.
வியாபாரம் என்றால் ஐந்து லட்சம் முதலீடு. செலவுபோக வருட லாபம் ஐந்து
லட்சம். இப்படி எழுதிக்கொண்டே போகலாம்.

2. லக்கினத்திற்குப் பதினொன்றாம் வீட்டு அதிபதி லக்கினத்தில் வந்து இருந்தால்
ஜாதகன் அதிகம் படித்தவனாகவும், சாதுர்யமாகப் பேசுபவனாகவும் இருப்பான்.
எந்தத் தொழில் செய்தாலும் அதீத லாபம் வரும். செல்வத்துடனும், செல்வாக்கு
டனும் இருப்பான்.

3. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு இரண்டில் இருந்தால், ஜாதகன்
வருமானம், கெளரவம், அதிகாரம் ஆகியவற்றுடன் பலரும் விரும்பும்படியாக
வாழ்வான்.

4. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு மூன்றில் இருந்தால், ஜாதகனின்
மூத்த சகோதரர்கள், மூத்த சகோதரிகள் நல்ல அந்தஸ்துடன் இருப்பார்கள்
அவர்களின் ஆதரவு ஜாதகனுக்குக் கிடைக்கும்.

5. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு நான்கில் இருந்தால், ஜாதகனுக்கு
இடங்கள், கட்டிடங்கள், வண்டி, வாகனங்கள் இருக்கும்.சந்தோஷத்துடன்
வாழ்வான். தெய்வீக வழிபாடுகளைக் கொண்டவர்களாகவும், நேர் வழியில்
செல்பவர்களாகவும் இருப்பார்கள்.

6. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு ஐந்தில் இருந்தால், ஜாதகனின்
புத்திரர்களால் நல்ல செல்வாக்குடனும், புகழுடனும் அவனது குடும்பம்
விளங்கும். தந்தையின் தொழிலையே அவனுடைய பிள்ளைகளும் செய்து
பெரும்பொருள் ஈட்டுவார்கள்.

7. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு ஆறில் இருந்தால், வரும்
லாபத்தையெல்லாம், கடன்காரர்களுக்கும், பங்குதாரர்களுக்கும் கொடுக்க
நேரிடும். செய்தொழிலில் சத்துருக்கள் இருப்பார்கள். பல இடைஞ்சல்கள்
உண்டாகும். லாபத்தைவிட, கடன் அதிகமாகும்!

8. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு ஏழில் இருந்தால், ஜாதகனுக்கு
அவனது மனைவி மூலம் செல்வங்கள், லாபங்கள் வந்து சேரும்.
திருமணம் ஆன நாள் முதலாய் யோகத்துடன் விளங்குவான்.பதவிகளிலும்
சிறப்புப் பெற்று விளங்குவான்.

9. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு எட்டில் இருந்தால், ஜாதகன்
சஞ்சலம் உடையவன். பலவிதமான தொழில்களைச் செய்ய முயல்வான்.
செய்வான். கையில் இருக்கும் செல்வத்தை இழந்து, சஞ்சலத்துடனேயே
காலத்தைக் கழிக்கும்படியாகிவிடும்.

10. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு ஒன்பதில் இருந்தால்,
ஜாதகன் தன்னுடைய தந்தையின் தொழிலை, அவரைவிடச் சிறப்பாகச்
செய்து பெரும்பொருள் ஈட்டுவான். பலவிதமான பொருள் லாபங்களை
அடைவான். வாழ்க்கை எல்லா விதத்திலும் சிறப்பாக இருக்கும்.

11. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு பத்தில் இருந்தால், ஜாதகன்
கெளரவமான உத்தியோகத்தில் அமர்ந்து, கைநிறையச் சம்பாதிப்பான்.
ஆடம்பரமின்றி அமைதியான குடும்ப வாழ்க்கை அமையும்.

12. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு பதினொன்றிலேயே இருந்தால்,
ஜாதகனுக்குப் பெரிய லாபங்கள் கிடைக்காது. மிதமான பலனே ஏற்படும்.
வயதான காலத்தில் தனவந்தராக இருப்பார்கள்.

13. பதினொன்றாம் அதிபன் லக்கினத்திற்கு பன்னிரெண்டில் இருந்தால்,
ஜாதகனுக்குப் பொருள் விரையம் ஏற்படும். கடன் தொல்லைகள்,
வியாதிகள் ஏற்படும். போஜன வசதிகளும், நித்திரை சுகங்களும்
இருக்கும். ஆனாலும் மன அமைதி இருக்காது.

(இவை எல்லாமே பொதுவிதிகள். தனிப்பட்ட ஜாதகங்களில் உள்ள
கிரகங்களின் அமைப்பை வைத்து இவைகள் சற்று மாறுபடும்)

பதினொன்றாம் படம் இன்னும் இரண்டு வகுப்புக்கள் உள்ளன
அவற்றையும் படித்துவிட்டு, பிறகு உங்கள் ஜாதகத்தை வைத்து
ஒத்துப் பாருங்கள்.

Do not jump to any conclusion, before reading the next two lessons in this topic!

(தொடரும்)

வாழ்க வளமுடன்!

19.10.08

அமெரிக்க நிதிநிலைச் சிக்கல் என்ன ஆகும்?

StefanStenudd - Sweedish Astrologer

அமெரிக்க நிதிநிலைச் சிக்கல் என்ன ஆகும்?
US credit crisis as per it's transit horoscope

என்ன ஆனால் நமக்கென்ன என்று இருக்க முடியுமா?
நமது கண்மணிகள் பலபேர் அங்கே இருக்கிறார்கள். அதோடு அமெரிக்காவை
பற்றிய ஒவ்வொரு செய்திக்கும் நமது பங்குச் சந்தைக்கு வயிற்றுப் போக்கு
ஏற்பட்டு, 700 அல்லது 800 புள்ளிகளைப் பறிகொடுத்துவிட்டு அசந்து படுத்துக்
கொண்டு விடுகிறது. நமது மாண்புமிகு நிதியமைச்சர் என்ன மருந்து மாத்திரை
கொடுத்தாலும் எழுந்து உட்கார மறுக்கிறது. எழுந்தாலும் அடுத்தடுத்து வரும்
கலவரச் செய்திகளால் மறுபடியும், மறுபடியும் வயிற்றுப்போக்கால் அடிபட்டு
விழுந்துவிடுகிறது.

என்னதான் ஆகும்?

ஒரு வெளிநாட்டு ஜோதிடர் அது பற்றி விவரமாக எழுதியுள்ளார்.
அனைவரையும் படித்துப் பார்க்க வேண்டுகிறேன்.

Link to the article: Click here!

நமது வலையுலக 'சந்தேகப் பதிவருக்கு' (வாரத்திற்கு இருமுறை சந்தேகப்
பதிவுகள் போடுவார். எல்லாப் பதிவுகளுமே சந்தேகக் கேள்விகளுடன் முடியும்)
இது குறித்து - அதாவது இந்த ஜோதிடரின் ஜோதிடப் பதிவு குறித்து
ஏற்படும் சந்தேகங்களுக்கும், இந்தச் சரிவு நிரந்தமானால் மற்ற நாடுகளுக்கு
என்ன ஆகும் என்கின்ற நியாமான சந்தேகங்களுக்கும், அதேபோல இதை
வானத்தில் விட்டேறியாகச் சுற்றும் கோள்களை வத்து எந்த ஆதாரத்துடன்
எழுதினார் என்பது போன்ற அதிரடியான சந்தேகங்களுக்கும், அவரையே
தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்:-))))))

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்

பின் குறிப்பு: ப்ளூட்டோ கிரகம் வானில் ஒருமுறை சுற்றிவர 248 ஆண்டுகள்
ஆகும். அதனால் அதைத் தனி மனிதர்களின் ஜாதகக் கணக்கிற்கு எடுத்துக்
கொள்வதில்லை. அதேபோல நெப்டியூன் கிரகம் வானில் ஒருமுறை சுற்றிவர
164.8 ஆண்டுகள் ஆகும்.நாடுகளின் ஜாதகத்திற்கு அவற்றை எடுத்துக்
கொள்வார்கள்

வாழ்க வளமுடன்!

15.10.08

பட்டுக்கிடப்பான் என்றால் என்ன?




எங்கள் பகுதியில் - அதாவது காரைக்குடிப் பகுதியில் ஒரு சொல் உண்டு;
ஆனால் அதற்கு இரண்டு பொருள் உண்டு. அந்தப் பகுதி மக்கள் - அந்தப்
பகுதியில் உள்ள 4 நகரங்கள், மற்றும் 72 கிராம மக்கள் - பேசும் போது
அந்த சொல்லை அதிகமாகப் பயன்படுத்துவார்கள்.

ஒருவனைத் திட்டுவதற்கும் அந்தச் சொல்தான். அதேபோல் ஒரு
குழந்தையை அல்லது இளைஞனைக் கொஞ்சு மொழியில் விளிப்பதற்கும்
அந்தச் சொல்தான்.

பட்டுக்கிடப்பான்' என்பதுதான் அந்தச்சொல். எங்கள் பகுதியைச்
சேர்ந்தவரான நடிகை மனோரமா அவர்கள் அந்தச் சொல்லை
லாவகமாக - அனாசயமாகப் பயன்படுத்துவார். தில்லானா மோகனாம்பாள்
படத்தில் தன் கணவனாக நடிக்கும் நாகலிங்கம் என்பவரைக் குறிப்பிடும்
போது - "ஆமா, அந்தப் பட்டுக்கிடப்பான்தான்" என்று பல்லைக் கடித்துக்
கொண்டு கோபமாகக் கூறுவார்.

பட்டுக்கிடப்பான் - என்ற சொல் அடிபட்டுக் கிடப்பவன் அல்லது
கிடக்க வேண்டியவன், நோய்பட்டுக் கிடப்பவன் அல்லது கிடக்க
வேண்டியவன் என்ற பொருளைக் கொடுக்கும்

அதே வார்த்தையை வீட்டில் உள்ள பெரிசுகள் தங்கள் பேரனைத் தூக்கிக்
கொஞ்சும் போதும் சொல்லிக் கொஞ்சுவார்கள். அதேபோல இளவயதுக்
காளையாகத் திரியும் தங்கள் பேரனைக் கூப்பிடுவதற்கும்
அந்தச் சொல்லைத்தான் பயன் படுத்துவார்கள்,"அட பட்டுக் கெடப்பா(ய்)
- இங்கின வந்து கேட்டுப் போடா" என்பார்கள்

இங்கே அந்தச் சொல்லிற்குப் பெயர். பட்டில் கிடப்பவன் - பட்டுத்
துணியில் கிடப்பவன் அல்லது பட்டுத்துணியில் கிடந்து வளர்ந்தவன்
என்று பொருள்படும்.
---------------------------------------------------------------------
இதை எதற்காகச் சொன்னேன் என்றால், ஜோதிடத்திலும் இந்த இரட்டைப்
பொருள் உள்ள வேலைகளைச் சில கிரகங்கள் செய்யும்!

உதாரணத்திற்கு சனி தீய கிரகம். ஆனால் அதே சனி பத்தாம்
வீட்டிற்குக் காரகன். அவன் கையெழுத்துப்போட்டால்தான்
பாத்தாம் வீட்டின் சட்ட திட்டங்கள் பாஸாகும். ஆகவே பத்தாம்
வீட்டைப் பொறுத்தவரை அவன் நல்லவன். பட்டில் கிடக்கும்
"பட்டுக்கிடப்பான்' அவன்! இதை மனதில் வையுங்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

பத்தாம் வீட்டில் அமர்ந்திருக்கும் கிரகங்களை வைத்துப் பொதுப்பலன்!

1.சூரியன்
இங்கே சூரியன் தனியாக நல்ல நிலையில் இருந்தால் - உதாரணம் கடகம்
ஒருவருக்கு லக்கினமாக இருந்து, பத்தாம் வீடாகிய மேஷத்தில் சூரியன்
இருந்தால், அவர் அங்கே உச்சம் பெற்றிருப்பார். அதே போல பத்தில்
இருக்கும் சூரியன், குருவின் பார்வை பெற்றிருப்பதும் நல்ல நிலைமைதான்.
இந்த அமைப்பால் ஜாதகருக்கு பலவிதமான நன்மைகள் ஏற்படும்.
ஜாதகருக்கு அவர் தொட்டதெல்லாம் துலங்கும். தெலுங்குக்காரர்கள்
சொல்வதுபோல மட்டி (மண்) கூட பங்காரம் (தங்கம்) ஆகிவிடும். எடுத்துச்
செய்யும் வேலைகள் அனைத்தும் வெற்றி பெரும். செழிப்பான, மகிழ்ச்சியான
வாழ்க்கை கிடைக்கும். அது பத்தாம் இடத்தின் அதிபதி மற்றும் சூரியனுடைய
தசா அல்லது புத்திகளில் அபரிதமாகக் கிடைக்கும்.

நுண்ணறிவு, பணம், பதவி, அதிகாரம், புகழ், செல்வக்கு என்று எல்லாம்
கிடைக்கும். சொந்த வீடு,வாகனம்,வேலையாட்கள் என்று ஜாதகன்
செளகரியமாக வாழ்வான்.

அரசாங்க உத்தியோகம் அல்லது பதவி கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள்
கிடைக்கும். இசை ரசிகராக ஜாதகர் இருப்பார்.

மற்றவர்களை ஈர்க்கக்கூடிய சக்தி உடையவராக இருப்பார்.
(இவ்வளவு இருக்கும்போது ஈர்க்கமுடியாதா என்ன?)

பத்தில் சூரியனுடன், செவ்வாய் சேர்ந்திருந்தால், ஜாதகர் குடி மற்றும் போதைப்
பழக்கங்களுக்கு அடிமையாகிவிடும் அபாயம் உண்டு!

பத்தில் சூரியனுடன், புதன் சேர்ந்தால், ஜாதகருக்கு விஞ்ஞானத்தில் அதிக
ஈடுபாடு உண்டாகும். பிரபல விஞ்ஞானியாக உருவெடுப்பார். அதே நேரத்தில்
பெண் பித்து (மயக்கம்) ஏற்படும் அபாயமும் உண்டு.

பத்தில் சூரியனுடன், சுக்கிரன் சேர்ந்தால், ஜாதகருடைய மனைவி, பெரும்
செல்வந்தர் வீட்டுப்பெண்ணாக இருப்பாள். அவள் மூலம் அவருக்குப் பெரும்
சொத்துக்கள் கிடைக்கும்.

பத்தாம் வீட்டில் சூரியனுடன், சனி சேர்ந்திருந்தால், அது நல்லதல்ல.
ஜாதகருக்குப் பலவிதமான துன்பங்கள் ஏற்படும். இறுதியில் வாழ்க்கை
வெறுத்துப்போகும் நிலைமைக்கு ஆளாகி விடுவார்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

2.சந்திரன்
பத்தில் சந்திரன் இருந்தால், ஜாதகர் இறைவழிபாட்டில், ஆன்மிகத்தில் மிகவும்
நாட்டம் கொள்வார். புத்திசாலியாக இருப்பார். துணிச்சல் மிக்கவராக இருப்பார்.
செய்யும் செயல்களில் வெற்றி காண்பராக இருப்பார்.உதவி செய்யும் மனப்பான்
மையும், தர்ம சிந்தனையும் மேலோங்கியவராக இருப்பார். பல கலைகளில்
தேர்ந்தவராக இருப்பார். மொத்தத்தில் சகலகலா வல்லவராக இருப்பார்.

இதே பத்தில் சந்திரனுடன், சூரியனும், குருவும் சேர்ந்திருந்தால், ஜாதகர்
வேதாந்தங்களிலும், ஜோதிடத்திலும் விற்பன்னராக இருப்பார்.

பத்தில் சந்திரன் இருந்து, அவர் சூரியனுடைய பார்வையையும், சனியினுடைய
பார்வையையும் பெற்றிருந்தால், ஜாதகர் மாறுபட்ட சிந்தனை உடையவராக
இருப்பார். அச்சுத்தொழில் அல்லது பதிப்பகத் தொழில் துவங்கிப் பெரும்பொருள்
ஈட்டுவார். அவருக்கு அனேக நண்பர்கள் இருப்பார்கள்.வாழ்க்கை வசதியானதாக
இருக்கும். நீண்ட ஆயுள் இருக்கும். பல அறக்கட்டளைகளைத் தலைமை
தாங்கி நடத்தும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
3.செவ்வாய்
பத்தாம் வீட்டில் செவ்வாய் இருந்தால், ஜாதகருக்கு ஆளும் திறமை இருக்கும்.
பெரிய பதவிகள் கிடைக்கும். இதே செவ்வாய், சனி அல்லது ராகுவுடன்
கூட்டணி போட்டிருந்தால் கடுமையான ஆட்சியாளராக இருப்பார். துணிச்சலாக
ஆட்சி நடத்தும் திறமை இருக்கும். பாராட்டுகளுக்கு மயங்குபவராக இருப்பார்.
எதிலும் எடுத்தேன், கவிழ்த்தேன் என்று வேகம் உடையவர்களாக இருப்பார்

பத்தில் செவ்வாயுடன், புதனும் சேர்ந்தால், நிறைய செல்வங்கள் சேரும். சொத்துக்கள்
குவியும். சிலர் மதிப்புமிக்க விஞ்ஞானியாக உருவெடுப்பார்கள்.சிலர் கணிதத்தில்
பண்டிதராக விளங்குவார்கள். பத்தில் செவ்வாயுடன் குரு சேர்ந்திருந்தால் பல
ஏழை மக்களின் துயர் தீர்க்கும் தலைவனாக ஜாதகன் விளங்குவான். அதே பத்தில்
செவ்வாயும், சுக்கிரனும் சேர்ந்திருந்தால் ஜாதகன் தூரதேசங்களுக்குச் சென்று
வணிகம் செய்து பொருள் ஈட்டுவான். பத்தில் செவ்வாயுடன் சனி சேர்ந்திருந்தால்
ஜாதகன் அதிரடியாக வேலைகளைச் செய்யும் திறமை பெற்றிருப்பான்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
4 புதன்
ஜாதகன் நேர்மையனவனாகவும், மகிழ்ச்சியுடையவனாகவும் இருப்பான்.
எல்லாக் கலைகளிலும் வித்தகனாக இருப்பான். அதோடு அறிவுத்தேடலில்
ஈடுபாடு கொண்டிருப்பான்.புகழ் பெற்று விளங்குவான். எடுத்த காரியங்களில்
வெற்றி காண்பவனாக இருப்பான்.
கணிதத்திலும், வானவியலிலும் தேர்ச்சியுற்றவனாக இருப்பான். அதே இடத்தில்
புதனுடன் சுக்கிரனும் சேர்ந்து இருந்தால் ஜாதகன் அழகான மனைவியையும்,
செல்வத்தையும் பெற்றவனாக இருப்பான். அதே இடத்தில் புதனுடன், குரு
சேர்ந்திருந்தால், ஜாதகனுக்குக் குழந்தைப்பேறு இருக்காது. வாழ்க்கையில்
மகிழ்ச்சியும் இருக்காது, ஆனால் அரசு வட்டாரங்களில் மிகுந்த தொடர்பு
உடையவனாக இருப்பான். இந்தப் பத்தாம் இடத்தில் புதனுடன் சனி சேர்ந்திருந்தால்
ஜாதகன் கடினமாக உழைக்க வேண்டியதிருக்கும். அச்சுத்தொழில் அல்லது
ப்ரூஃப் ரீடர் போன்ற தொழில்களில் ஈடுபட்டிருப்பான்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
5. குரு
ஜாதகன் அரசாங்கத்தில் உயர்ந்த நிலையில் உள்ள அதிகாரியாக விளங்குவான்.
செலவந்தானாக, தர்ம சிந்தனை உடையவனாக, இறை நம்பிக்கையாளனாக,
மத விஷயங்களில் ஈடுபாடு உடையவனாக, புத்திசாலித்தனம் மிக்கவனாக,
மகிழ்ச்சி உடையவனாக ஜாதகன் விளங்குவான். உயர்ந்த கொள்கைகள்
அவனுடைய வாழ்க்கைக்கு வழிகாட்டியாக விளங்கும். குருவுடன் சுக்கிரனும்
சேர்ந்திருந்தால் அரசில் முக்கியமான பொறுப்பில் இருப்பான்.
குருவுடன் ராகு சேர்ந்திருந்தால் ஆசாமி குசும்பானவன். மற்றவர்களுக்குத்
தொல்லைகளைக் கொடுப்பவனாக இருப்பான். ஒவ்வொரு செயலிலும் தொல்லை
யாக இருப்பான்.
பத்தில் இருக்கும் குருவை செவ்வாய் பார்த்தால், கல்விக் கேந்திரங்களுக்கும்
ஆராய்ச்சிக்கூடங்களுக்கும் தலைமை ஏற்று நடத்தும் பொறுப்பில் இருப்பான்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
6.சுக்கிரன்
ஜாதகன் இடம், வீடுகளை வாங்கி, கட்டி விற்கும் ரியல் எஸ்டேட் தொழிலில்
ஈடுபட்டுப் பெரும் பொருள் ஈட்டுவான். செல்வாக்கு மிகுந்தவனாக இருப்பான்.
நிறையப் பெண்களுக்கு வேலை கொடுப்பான். அல்லது நிறைய பெண்கள்
வேலை செய்யும் இடங்களில் வேலை பார்ப்பன். நட்புடையவனாக, பலராலும்
அறியப்பட்டவனாக இருப்பான். யதார்த்தவாதியாக இருப்பான்.

இங்கே சுக்கிரனுடன் சனி சேர்ந்தால் உடல் வனப்புப் பொருட்களை உற்பத்தி
செய்பவனாக அல்லது விற்பவனாக இருப்பான். பெண்களுக்கான அலங்காரப்
பொருட்களை விற்கும் தொழிலில் ஈடுபடுவான். யாரையும் வசப்படுத்தக்கூடிய
சக்தி இருக்கும். தனது திறமையால் வியாபாரத்தில் சிறந்து விளங்குவான்

சுக்கிரனும், சனியும் சேரும் இந்த அமைப்பினால் ஜாதகனுடைய கல்வி தடைப்
படும். தெய்வ சிந்தனை மிக்கவனாகவும், தெய்வ வழிபாடு மிக்கவனாகவும்
இருப்பான்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
7.சனி
ஜாதகன் ஆட்சியாளனாகவோ அல்லது அமைச்சராகவோ அல்லது அதற்குச்
சமமான பதவியிலோ சென்று அமர்வான். சிலர் ஜாதகத்தில் உள்ள வேறு
அமைப்புக்களின் கூட்டணியால், விவசாயியாக அல்லது விவசாயத்தொழிலில்
சிறந்து விளங்குவார்கள். துணிச்சல் மிக்கவனாக இருப்பான். செல்வம், புகழ்
இரண்டும் தேடிவருபவனாக இருப்பான். அடித்தட்டு மக்களுக்குப் பாடுபடுபனாக
இருப்பான். கோவில், குளம் என்று அடிக்கடி பயணம் செல்பவனாக இருப்பான்
ஒரு கட்டத்தில் மிகுந்த பக்திமானாக மாறிவிடுவான்.

பத்தில் சனி இருப்பவர்களுக்கு, வேலை அல்லது தொழிலில் பல ஏற்றங்களும்
இறக்கங்களும் இருக்கும். உச்சிக்கும் போவான். பள்ளத்திலும் விழுவான்

சனி எட்டாம் அதிபனுடன் சேர்ந்து நவாம்சத்தில் தீய இடங்களில் அமர்ந்திருந்தால்
ஜாதகனுக்கு எப்போதும் தொழிலில் அல்லது வேலையில் மோதல்கள் இருந்து
கொண்டேயிருக்கும். தொல்லைகள் இருந்து கொண்டேயிருக்கும்.
சனியுடன் பத்தாம் வீட்டதிபனும் சேர்ந்திருந்து, ஆறாம் அதிபனின் பார்வை
பெற்றால் ஜாதகனுக்கு ஒன்றிற்கு மேற்பட்ட தாரம் அமையும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
8.ராகு
காம இச்சை அதிகம் உடையவானாக ஜாதகன் இருப்பான். சிலர் அந்தக்
காம இச்சையிலும், தன்னைவிட விட வயதில் மூத்த பெண்ணிடம் தொடர்பு
வைத்திருப்பார்கள்.

(இது பொதுவிதி. இதைப்படித்துவிட்டு, எனக்குப் பத்தாம் இடத்தில் ராகு
உள்ளது. ஆனால் நான் அப்படிப்பட்ட ஆசாமி இல்லையே என்று யாரும்
சொல்ல வேண்டாம். வேறு சுப கிரகங்களின் பார்வையால், அது இல்லாமல்
இருக்கலாம். அதற்காக சந்தோஷப்படுங்கள்)

ஏன் சந்தோஷப்பட வேண்டுமா?
மண், பெண், பொன் ஆகிய மூன்றின் மீதும் ஆசைவைத்தவன் திருப்திய
டைந்ததாக சரித்திரம் இல்லை. உருப்பட்டதாகவும் சரித்திரமில்லை!

இந்த அமைப்பினர் (அதாவது 10ல் ராகு இருக்கும் அமைப்பு) கை தேர்ந்த
கலைஞர்களாக இருப்பார்கள். எல்லாக் கலைகளையும் சுலபமாகக் கற்றுக்
கொண்டு விடுவார்கள்.இலக்கியங்களிலும், கவிதைகளிலும் ஆர்வமுள்ளவர்களாக
இருப்பார்கள்.

அதிகமாக ஊர் சுற்றுபவர்களாக இருப்பார்கள். சிலர் கற்றவர்களாகவும், புகழ்
பெற்றவர்களாகவும் விளங்குவார்கள். சிலர் சுய தொழில் செய்து மேன்மை
அடைவார்கள். கடுமையான உழைப்பாளிகளாக இருப்பார்கள். தைரியம்
உடையவர்களாக, சாதனைகள் படைப்பவர்களாக இருப்பார்கள்

சிலர் அந்தரங்கமாக பல பாவச்செயல்களைச் செய்பவர்களாகவும் இருப்பார்கள்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
9. கேது
ஜாதகன் தன் தொழிலில் அல்லது வேலையில் பல தடைகளைச் சந்திக்க
வேண்டியதாக இருக்கும். ஜாதகன் மிகுந்த சாமர்த்தியசாலியாக இருப்பான்.
பத்தாம் இடத்துக் கேது சுபக் கிரகங்களின் பார்வை பெற்று அமர்ந்திருந்தால்
ஜாதகன் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்தவனாக இருப்பான்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
சரி பத்தாம் வீட்டிற்குரிய பலன்கள் எப்போது கிடைக்கும்?

1.பத்தாம் வீட்டின் அதிபதி
2.பத்தாம் வீட்டில் அமர்ந்தவன்
3.பத்தாம் வீட்டைப் பார்க்கும் கிரகம்
2.பத்தாம் வீட்டு அதிபதியைப் பார்க்கும் கிரகம்

ஆகிய கிரகங்களின் தசா (Major Dasa) அல்லது புத்திகளில் (Sub period)
பலன்கள் கிடைக்கும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பத்தாம் வீட்டை வைத்து, தொழில் முனைவோர், வேலையில் இருப்போர்,
பொறியாளர்கள், விளையாட்டு வீரர்கள், தலைவர்கள், நிதி நிறுவனங்கள்
வங்கிகளில் வேலை பார்ப்போர் போன்றவர்களுக்கான அமைப்புக்களைப்
பற்றிய பாடத்தை விடுபட்டவை என்ற பெயரில் தனித்தனியாகத் தரவுள்ளேன்
அது பின்னால் வரும். நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன்

இத்துடன் 10ஆம் வீட்டின் முக்கியமான பகுதிகள் நிறைவுறுகின்றது.

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்

வாழ்க வளமுடன்!

14.10.08

சிந்தனைக்கு விருந்து!

சிந்தனைக்கு விருந்தாகப் பத்துப் படங்கள். பார்த்து மகிழுங்கள்.
சுவையாக உள்ளதென்றால் சேமித்து வையுங்கள்


1


2


3


4


5


6


7


8


9


10
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
பத்தில் எது நன்றாக உள்ளது?

வாழ்க வளமுடன்!

13.10.08

வகுப்பறையின் இருநூறாவது பதிவு இது!

14.01.2007 பொங்கல் நன்நாளன்று இந்த வகுப்பறை துவங்கப்பெற்றது. இன்றுடன்
சுமார் 21 மாத காலங்களில் 200 பதிவுகளை இதில் எழுதியிருக்கிறேன்.
பெரும்பாலான பதிவுகள் நீளமான பதிவுகள்.

இந்த வகுப்பறையின் வெற்றிகரமான போக்கிற்கு வாசகர்களாகிய உங்களுடைய
அன்பும், ஆதரவும்தான் முக்கிய காரணம்.

உங்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்
====================================================================
இன்றைய பதிவில் 33 பிரபலங்களின் பிறப்பு விவரங்களைக் கொடுத்துள்ளேன்.
என்னுடைய சேகரிப்புக்களிலிருந்து பொறுக்கி எடுக்கப்பட்டவைகள் அவைகள்.
ஒவ்வொரு பிரபலத்தின் பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த இடம் ஆகிய மூன்றும்
உள்ளன.

இம்மூன்றையும், அதுவும் இத்தனை பேர்களுக்குக் கிடைக்கப்பேறுவது அரிதான
விஷயம். அதை உணரும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
இந்த விவரங்களை வைத்து, அவர்களுடைய ஜாதகத்தை நீங்கள் நொடியில்
பெறலாம். சைடுபரில் உள்ள planetarypositions.com இணைய தளத்தின் சுட்டி
உங்களுக்கு உதவும்
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
பாடம் படிப்பவர்களுக்கு, இதுவரை எழுதிய பதிவுகளில் உள்ள ஜோதிட
விதிகளுக்கும், இனி எழுதப்போகும் பதிவுகளில் உள்ள ஜோதிட விதிகளையும்
ஒப்பிட்டுப் பார்ப்பதற்கு இந்த ஜாதகங்கள் பேருதவியாக இருக்கும்.

உதாரணத்திற்கு, திருமதி இந்திரா காந்தி அவர்களின் ஜாதகத்தைப் பார்த்தீர்கள்
என்றால் அதில் ஆறு கிரகங்கள் பரிவர்த்தனை யோகத்தில் இருப்பது தெரியும்.
அதுதான் அவருடைய உயர்விற்குக் காரணம்.

அதுபோல என்.டி. ராமராவ் அவர்களின் ஜாதகத்ததப் பார்த்தீர்கள் என்றால், துலா
லக்கினக்காரரான அவருடைய ஜாதகத்தில் லக்கினகாரகன் சுக்கிரன் ஏழாம் வீட்டில்
இருந்து லக்கினத்தைப்பார்ப்பது தெரியும், அந்த நிலைப்பாடும், பார்வையும்தான்,
அவருக்கு ஒரு அழகான தோற்றத்தையும், புகழையும் கொடுத்து, அவரை மக்கள்
மனதிலே ராமனாகவும், கிருஷ்ணனாகவும் நடிக்கவும் வைத்து, இருக்கவும்
வைத்தது. அவர் போடாத புராண வேடங்களா?

இப்படி ஒவ்வொரு ஜாதகத்திற்கும் ஒரு சிறப்பு உண்டு.

ஆகவே இந்த ஜாதகக் குறிப்புக்களின் மேன்மையை உணர்ந்து பத்திரப்படுத்தி
வையுங்கள். உங்களுக்குப் பின்னால் உதவும்.

அவர்களைப் பற்றிய பாடங்கள் பின்னால் வரும் (அடிப்படைப் பாடங்கள் முடிந்தபிறகு!)

அன்புடன்
வகுப்பறை வாத்தியார்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

1
பாரதப் பிரதமர் மன்மோகன் சிங்
பிறந்த தேதி: 26 September 1932
பிறந்த நேரம்: 21.06 Hours
பிறந்த இடம்: 32 N 35 73 E 47
2
இசைக் கலைஞர் எம்.எஸ்.திருமதி சுப்புலெட்சுமி.
பிறந்த தேதி: 16 September 1916
பிறந்த நேரம்: 09.30 Hours
பிறந்த இடம்: 13 N 05 80 E 18
3
கவிஞர் ரவீந்திரநாத் தாகூர்
பிறந்த தேதி: 7th May 1861
பிறந்த நேரம்: 02.45 Hours
பிறந்த இடம்: 22 N 82 88 E 20
4
முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயி
பிறந்த தேதி: 25 December 1924
பிறந்த நேரம்: 02.30 Hours
பிறந்த இடம்: 24 N 54 74 E 55
5
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி
பிறந்த தேதி: 19 November 1917
பிறந்த நேரம்: 23.13 Hours
பிறந்த இடம்: 25 N 27 81 E 51
6
அரசியல் தலைவி திருமதி சோனியா காந்தி
பிறந்த தேதி: 09 December 1946
பிறந்த நேரம்: 21.30 Hours
பிறந்த இடம்: 45 N 30 11 E 33
7
விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர்
பிறந்த தேதி: 24 April 1973
பிறந்த நேரம்: 18.20 Hours
பிறந்த இடம்: 18 N 58 72 E 50
8
தேசத் தந்தை மகாத்மா காந்தி
பிறந்த தேதி: 2 october 1869
பிறந்த நேரம்: 07.45 Hours
பிறந்த இடம்: 21 N 37 69 E 49
9
முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு
பிறந்த தேதி: 14 November 1889
பிறந்த நேரம்: 23.03 Hours
பிறந்த இடம்: 25 N 25 82 E 00
10
அரசியல் தலைவர் எல்.கே.அத்வானி
பிறந்த தேதி: 08 November 1927
பிறந்த நேரம்: 09.15 Hours
பிறந்த இடம்: 25 N 24 68 E 22
11
சுவாமி விவேகானந்தா
பிறந்த தேதி: 12 January 1863
பிறந்த நேரம்: 06.33 Hours
பிறந்த இடம்: 22 N 40 88 E 30
12
விளையாட்டு வீரர் ராகுல் டிராவிட்
பிறந்த தேதி: 11 January 1973
பிறந்த நேரம்: 11.00 Hours
பிறந்த இடம்: 22 N 42 75 E 54
13
விளையாட்டு வீரர் சுனில் கவாஸ்கர்
பிறந்த தேதி: 10 July 1949
பிறந்த நேரம்: 20.42 Hours
பிறந்த இடம்: 18 N 56 72 E 51
14
விளையாட்டு வீரர் வீரேந்திர சேவாக்
பிறந்த தேதி: 20 October 1978
பிறந்த நேரம்: 08.00 Hours
பிறந்த இடம்: 28 N 39 77 E 13
15
திரைப்பட நடிகர் அமிதாப் பச்சன்
பிறந்த தேதி: 11 October 1942
பிறந்த நேரம்: 15.00 Hours
பிறந்த இடம்: 25 N 28 81 E 52
16
தொழிலதிபர் திருபாய் அம்பானி
பிறந்த தேதி: 28 December 1932
பிறந்த நேரம்: 06.37 Hours
பிறந்த இடம்: 28 N 42 77 E 11
17
திரைப்பட நடிகர் ராஜ் கபூர்
பிறந்த தேதி: 14 December 1924
பிறந்த நேரம்: 10.00 Hours
பிறந்த இடம்: 34 N 02 71 E 37
18
திரைப்பட நடிகர் திலீப் குமார்
பிறந்த தேதி: 11 December 1922
பிறந்த நேரம்: 11.15 Hours
பிறந்த இடம்: 34 N 02 71 E 37
19
திரைப்பட நடிகர் தேவானந்த்
பிறந்த தேதி: 26 September 1923
பிறந்த நேரம்: 09.30 Hours
பிறந்த இடம்: 30 N 23 76 E 26
20
திரைப்பட நடிகர் தர்மேந்திரா
பிறந்த தேதி: 08 December 1935
பிறந்த நேரம்: 06.00 Hours
பிறந்த இடம்: 22 N 35 88 E 21
21
திரைப்பட நடிகர் ராஜேஷ் கன்னா
பிறந்த தேதி: 29 December 1942
பிறந்த நேரம்: 17.45 Hours
பிறந்த இடம்: 31 N 35 74 E 57
22
திரைப்பட நடிகர் சாரூக்கான்
பிறந்த தேதி: 02 November 1965
பிறந்த நேரம்: 02.30 Hours
பிறந்த இடம்: 28 N 38 77 E 17
23
திரைப்பட நடிகர் ரஜினிகாந்த்
பிறந்த தேதி: 12 December 1950
பிறந்த நேரம்: 11.50 Hours
பிறந்த இடம்: 13 N 00 77 E 30
24
திரைப்பட நடிகர் நாகேஸ்வரராவ்
பிறந்த தேதி: 20 September 1924
பிறந்த நேரம்: 07.30 Hours
பிறந்த இடம்: 17 N 26 78 E 27
25
திரைப்பட நடிகர்.என்.டி.ராமராவ்
பிறந்த தேதி: 28 May 1923
பிறந்த நேரம்: 16.43 Hours
பிறந்த இடம்: 10 N 25 81 E 00
26
அரசியல் தலைவி செல்வி.ஜெயலலிதா
பிறந்த தேதி: 24 February 1948
பிறந்த நேரம்: 14.34 Hours
பிறந்த இடம்: 10 N 46 76 E 42
27
திரைப்பட நடிகை அஷ்வர்யா ராய்
பிறந்த தேதி: 01 November 1973
பிறந்த நேரம்: 04.30 Hours
பிறந்த இடம்: 12 N 55 74 E 07
28
திரைப்பட நடிகை சுஷ்மிதா சென்
பிறந்த தேதி: 19 November 1975
பிறந்த நேரம்: 06.30 Hours
பிறந்த இடம்: 17 N 26 78 E 27
29
முன்னாள் ஜனாதிபதி (Dr) ராதாகிருஷ்ணன்
பிறந்த தேதி: 6 September 1888
பிறந்த நேரம்: 06.30 Hours
பிறந்த இடம்: 13 N 05 80 E 18
30
Great Astrologer நீலகண்டசர்மா (கேரளா)
பிறந்த தேதி: 18 June 1858
பிறந்த நேரம்: 08.30 Hours
பிறந்த இடம்: 10 N 31 76 E 13
31
விளையாட்டு வீரர் சவ்ரவ்கங்குலி
பிறந்த தேதி: 08 July 1972
பிறந்த நேரம்: 07.30 Hours
பிறந்த இடம்: 22 N 35 88 E 23
32
விளையாட்டு வீரர் அனில்கும்ப்ளே
பிறந்த தேதி: 17 October 1970
பிறந்த நேரம்: 09.40 Hours
பிறந்த இடம்: 13 N 00 77 E 35
33
கலைஞர்.மு.கருணாநிதி
பிறந்த தேதி: 03 June 1924
பிறந்த நேரம்: 12.00 Hours
பிறந்த இடம்: 10 N 40 79 E 25

+++++++++++++++++++++++++++++++
வாழ்க வளமுடன்!

12.10.08

இதுவும் பாடம்தான்.

உரையில் எழுதினால் மட்டும்தான் பாடமா? இன்று இரண்டு படங்களின் மூலம்
பாடத்தைக் கொடுத்துள்ளேன். படித்துப் பயன் பெறுங்கள்!




வாழ்க வளமுடன்!

10.10.08

ஜோதிடம்: விடுபட்டவை

இராமேஸ்வரம் கோவில்


தேவிபட்டணம் கடற்கரையில் நவக்கிரஹ ஸ்தலம்


திருப்புல்லாணி கோவில்

எல்லோரும் விடுபட்டவை எழுதுவதுபோல வாத்தியாரும் விடுபட்டவை எழுதுகிறார்
என்று நினைக்க வேண்டாம்.

உண்மையிலேயே விடுபட்ட சின்னச் சின்ன விஷயங்களை இதில் எழுதலாம் என்று
உள்ளேன்.

தமிழக அரசின் மின்வெட்டு உயிரை வாங்குகிறது. ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம்
விட்டு விட்டு மின் வெட்டு என்றால் என்ன செய்ய முடியும்? சொந்த வேலைகளை
ஒழுங்காகப் பார்க்க முடியவில்லை. ஒரு பதிவை விவரமாக எழுத முடியவில்லை.
நேரா நேரத்திற்குப் பின்னூட்டங்களைப் படித்துப் பதில் எழுத முடியவில்லை.
என்ன வாழ்க்கை போங்கள்!

தமிழ் நாட்டிற்கே சனி பிடித்திருக்கிறது.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எனக்கு நிறைய மின்னஞ்சல்கள் வரும்.

சார், மிகவும் சிரமப் படுகிறேன். கிரகங்களுக்குப் பரிகாரம் ஏதாவது
செய்ய வேண்டுமா?

கிரகங்களுக்குப் பரிகாரமா? அதெல்லாம் ஒன்றும் இல்லை!

நீங்கள் கிரகங்களை வழிபடலாம். மனம் உருகி வழிபடலாம். அதுதான் உண்மையான பரிகாரம்.

உங்கள் ஊரில் கோவில்களில் நவக்கிரகங்களுக்கு என்று தனியாக சன்னிதானம் இருக்கும்.

வாரத்தில் ஒரு நாள். குறிப்பாக சனிக்கிழமை காலையிலோ அல்லது மாலையிலோ
சென்று நவக்கிரகங்களை ஒன்பது முறைகள், வேறு சிந்தனைகள் எதுவுமின்றி, சுற்றி
வந்து வழிபட்டு விட்டு வரலாம்.

கிரக தோஷங்களுக்கென தமிழ் நாட்டில் இரண்டு பரிகார ஸ்தலங்கள் (இடங்கள்) உண்டு!

ஒன்று இராமேஸ்வரம். இன்னொன்று ராமேஸ்வரத்திற்கு அருகில் உள்ள
தேவிபட்டணம். அங்கே சென்று வழிபடலாம்.

இராமேஸ்வரத்திற்குச் செல்பவர்கள். ராமேஸ்வரம் கிழக்கு கோபுர வாசலுக்கு எதிரில்
இருக்கும் கடலில் நவக்கிரகங்களை வழிபட்டு விட்டுக் கடலில் குளித்துவிட்டுப் பிறகு
கோவிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு வரலாம்.

கடற்கரையில் நவக்கிரகங்களுக்கு எங்கே போவது? அதை நாமே உண்டாக்கித்
தரிசிக்கலாம். ஒன்பது தொன்னைகளில் நவக்கிரகங்களுக்கு உரிய நவதான்யங்களை
வைத்து. அதை ஒன்பது முறை சுற்றி வந்து வழிபட்டுவிட்டு, அந்தத் தொன்னைகளை
அப்படியே கடலில் கொண்டுபோய்க்கொட்டிவிட்டுப் பிறகு அங்கே குளித்து விட்டு,
கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு வரலாம்.

ராமேஸ்வரம் போக முடியாதவர்கள், உள்ளூரில் உள்ள ஆற்றங்கரையிலும் அதைச்
செய்யலாம். ஆறு இல்லாத ஊரில் உள்ளவர்கள், தங்கள் வீட்டுத் தோட்டத்தில் அதைச்
செய்துவிட்டு, தங்கள் வீட்டுக் கிணற்று நீரில் குளித்துவிட்டு, கிரகங்களை வழிபடலாம்.

வழிபட்ட பிறகு அந்த நவதான்யங்கள் காலில் மிதிபடக்கூடாது. நீரில் கலந்துவிட
வேண்டும் அதை மட்டும் நினைவில் வையுங்கள்.

இதை எல்லாம் நம்பிக்கையின் அடிப்படையில் செய்ய வேண்டும்.

ஆதாரம் கேட்பவர்கள் இதைப் படித்தவுடன் மறந்து விடலாம்.

கிரங்களும் (அவை கோவில்களில் உள்ள அமைப்பின்படி), அவற்றிற்கு உரிய
தானியங்களையும் கீழே உள்ள படத்தில் கொடுத்துள்ளேன்.

கஷ்டங்கள், துன்பங்கள் என்றில்லாமல் காரியத் தடை உள்ளவர்களும், காரியத்
தாமதம் உள்ளவர்களும் இதைப் பின்பற்றலாம்.

எல்லாவற்றையும் அவரவர் விருப்பத்திற்கு விட்டு விடுகிறேன்.

அன்புடன்
வாத்தியார்
நவக்கிரகங்களும் அவற்றிற்குரிய தானியங்களும்


வாழ்க வளமுடன்!

8.10.08

வேதவாக்குகள் மூன்று!

வேதவாக்குகள் மூன்று!

வேதவாக்கு என்பது மதிக்கத் தகுந்த வாக்கு அல்லது சொல் என்று பொருள்படும்!
மனதை வருடிக்கொடுக்கும் தன்மை இந்த வேதவாக்குகளுக்கு உண்டு.
அது அதை உணர்பவர்களுக்கு மட்டுமே புரியும்!

சிலருக்கு அந்த உணர்வு இளம் வயதிலேயே வந்து விடும். பலருக்கு ரத்தம்
சுண்டி மருத்துவமனையில் படுக்கும்போதுதான் வரும்.

அது அவனவன் வாங்கி வந்த வரம்!

அல்லல்களில் இருந்து விடுபட்டு, மனம் அமைதிபெற எனக்குத் தெரிந்த
மூன்று வேதவாக்குகளைச் சொல்லியுள்ளேன்.
எதிர்க்கேள்வி கேட்பதற்கு வழியில்லை.
சரி என்று நினைப்பவர்கள் கடைப் பிடிக்கலாம்.
இல்லையென்று நினைப்பவர்கள் தங்கள் வழியில் போய்விடலாம்!
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


வேதவாக்கு ஒன்று

காலையிளங் காற்று, பாடிவரும் பாட்டு எதிலும் அவன்குரலே!
- கவியரசர் கண்ணதாசன்

அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை ஒரு வரிக்குள் அடக்கிய
கவியரசரின் இந்த வைர வரிகள்தான் முதல் வேதவாக்கு. எல்லாம் இறைவன் சித்தமே
என்று இருங்கள். மனது கவலைப் படுவதை நிறுத்திவிடும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++
வேதவாக்கு இரண்டு

மண்னைப் படைத்தான்
மலையைப் படைத்தான்
விண்ணைப் படைத்தான்
ஒளியைப் படைத்தான்
காற்றைப் படைத்தான்
நீரைப் படைத்தான்
பலஜீவராசிகளையும் படைத்தான்
மனிதனையும் படைத்தான்
எல்லா ஜீவராசிகளும் படைத்தவனின்
விதிப்படியே இயங்குகின்றன.
மனிதன்மட்டும் மீறிநடக்க முயல்கின்றான்
ஆனால்
நடப்பதென்னவோ
ஆண்டவன் கட்டளைப்படிதான்!
- ஆண்டவன் கட்டளை' திரைப்படத்தின் டைட்டில் கார்டில் வரும்
அற்புதமான வரிகள் இவை.எழுதியவர் அத்திரைப்படத்தின்
கதை வசனகர்த்தா திரு. ஜாவர் சீதாராமன்.M.A. B.L.

ஆமாம், வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தின் க்ளைமாக்ஸில் வந்து,
“இந்த மண் கோட்டையை வைத்துக்கொண்டா கட்டபொம்மன் மனக்கோட்டை
கட்டுகிறான். இன்று மாலைக்குள் இதைத் தரைமட்டமாக்குகிறேன் பாருங்கள்”
என்று வீரவசனம் பேசும் வெள்ளைக்காரத் துரையாக நடித்தாரே
அதே சீதாராமன்தான் அவர்.

"Path of duty is the way to glory!" (கடமைதான் வெற்றிக்கு வழி) என்ற
பொன்மொழி மேஜை மீது காட்சியளிக்க, கதாநாயகன் சிவாஜி அதன் எதிரில்
அமர்ந்திருக்க அந்தப்படம் அற்புதமாகத் துவங்கும்!
வாழ்க்கையில் சிலவற்றை மறக்கமுடியாது என்பதற்கு அந்தப் படமும் ஒரு சான்று!

இன்னும் ஒன்று சொல்லட்டுமா? 1964ல் குமுதம் இதழில், ”உடல், பொருள் ஆனந்தி”
என்ற அற்புதமான தொடர்கதையை எழுதினாரே அதே ஜாவர் சீதாராமன்தான் அவர்!

ஆக ஜாவர் சீதாராமன் எழுதியபடி நடப்பது எல்லாம் ஆண்டவன் கட்டளைப்படி
என்று இருங்கள். மனது பரிதவிப்பதை விட்டுவிடும். அமைதியான மனநிலை கிடைக்கும்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
வேதவாக்கு மூன்று

உன் சுதந்திரத்தைப் பறிக்கக்கூடிய எதனிடத்தும் நீ எச்சரிக்கையாய் இரு!
(Beware of everything that takes away your freedom)
- சுவாமி விவேகானந்தா

சுதந்திரமாக இருக்கும் உணர்வுதான் மனதை எப்போதும் உற்சாகமாக
வைத்திருக்கும். ஆகவே இதுதான் மூன்றாவது வேதவாக்கு!.
--------------------------------------------------------------------------------
(இந்த மூன்றும் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டிய வேதவாக்குகளாகும்!)

படிக்கவேண்டிய மூன்று நூல்கள்

1. கடவுள் மனிதனுக்குச் சொன்னது
2. மனிதன் கடவுளுக்குச் சொன்னது
3. மனிதன் மனிதனுக்குச் சொன்னது

அதெல்லாம் என்ன என்கிறீர்களா?
Scroll down செய்து பாருங்கள்

V
V
V
V
V
V
V

1. கடவுள் மனிதனுக்குச் சொன்னது - பகவத் கீதை
2. மனிதன் கடவுளுக்குச் சொன்னது - திருப்புகழ்
3. மனிதன் மனிதனுக்குச் சொன்னது - திருக்குறள்



தனக்கு முதல் அடி எடுத்துக்கொடுத்துத் திருப்புகழைப் பாடவைத்த வடிவேலனுடன் அருணகிரியார் இருக்கும் காட்சி

அனைவருக்கும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்!

அன்புடன்,
வகுப்பறை வாத்தியார்
வாழ்க வளமுடன்!

7.10.08

கண்ணனின் உறைவிடம் எது?


யமுனை நதியில் வெள்ளம் கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்தது.

அங்கே வந்த கோபிகைகள் ஆற்றைக் கடந்து செல்ல வகையறியாது
திகைத்து நின்று கொண்டிருந்தனர்.

எப்போதும் உள்ள பரிசல்காரனும் அப்போது இல்லை.

அதுசமயம் தற்செயலாக வந்த வசிஷ்ட முனிவர் கோபிகைகள்
கூட்டமாக நின்று கொண்டிருக்கும் இடத்திற்கு வந்ததும்
அவர்களைப் பார்த்து அன்புடன் புன்னகை செய்தார்.

அன்று அவர் தன்னுடைய மனம் கவர்ந்த கண்ண பெருமானுக்காக
உபவாசம் இருக்கின்ற தினம்.. கடும் உபவாசத்தால் சற்றுச் சோர்வுற்றிருந்தார்.

அவரும் ஆற்றைக் கடந்து செல்ல வேண்டியவர்தான்.

அது தெரிந்த கோபிகைகள் "ஸ்வாமீஜி, நீங்கள்தான் ஆற்றைக் கடந்து
செல்ல எங்களுக்கு உதவ வேண்டும்" என்றார்கள்.

"சரி," என்று சொன்ன அவர், கோபிகைகளின் கைகளில் இருந்த
பானைகளைப் பார்த்தார்.

உடனே, அவர்கள், "ஸ்வாமீஜி பால், தயிரெல்லாம் விற்றுப்போய் விட்டது.
வெண்ணெய் மட்டும்தான் இருக்கிறது - வேண்டுமா?" என்று கேட்டார்கள்.

" கொடுங்கள்" என்று இவர் சொல்லவும், அவர்கள் ஆளாளுக்கு ஒவ்வொரு
பெரிய உருண்டையாக எடுத்து அவரிடம் நீட்டினார்கள்.

அவரும் பொறுமையாக நீட்டப்பட்ட அவ்வளவு வெண்ணெயையும்
வயிறு முட்ட, ஏப்பம் வருமளவிற்குச் சாப்பிட்டு முடித்தார்

முடித்தவர், கரையைக் கடக்கும் முகமாக ஆற்றை நோக்கி நின்றவாறு
கணீரென்று குரல் கொடுத்துச் சத்தமாக இப்படிச் சொன்னார்

"யேய் மாயக் கண்ணா!, நான் உன் பக்தனென்பது உண்மையானால்,
நீ என் நெஞ்சிற்குள் குடியிருப்பது உண்மையானால், நான் இன்று
உபவாசம் இருப்பது உண்மையானால், இந்த வெள்ளத்தை நிறுத்தி
எனக்கு ஆற்றைக் கடக்க வழிவிடு" என்றார்.

என்ன ஆச்சரியம்!

மின்னல் வேகத்தில் ஆற்றின் வெள்ளம் தனிந்தது. அதோடு மட்டுமா -
ஆற்றின் நடுவே பத்தடிக்குப் பிளவு ஏற்பட்டு இருபக்க கரைகளையும்
இணைக்கும் பாதை ஏற்பட்டது. பாதையில், மண் , சேறு எதுவுமின்றி
நடந்து செல்லும் அளவிற்குச் சுத்தமாக இருந்தது.

வசிஷ்டரின் கையசைவிற்குக் கட்டுப்பட்ட கோபிகைகள் பின்தொடர,
வசிஷ்டர் உட்பட அனைவரும் மறுகரையை அடைந்தார்கள்.

அனைவரின் பிரமிப்பும் அகலுமுன்பே, பிளவு ஒன்று சேர யமுனை
ஆறு மீண்டும் பழைய பிரவாகத்தோடு ஓடத்துவங்கியது.

அததனை பெண்களும் அவர் காலில் விழுந்து வணங்கி விட்டுப்
புறப்பட எத்தனித்தார்கள்.

அவர்களில் ஒருத்தி மட்டும், குறுகுறுப்போடு வசிஷ்டரைப்
பார்த்தவள், "ஸ்வாமீஜி, ஒரு சிறு சந்தேகம் உள்ளது -
கேட்கலாமா?" என்றாள்.

அவரும், "கேள் பெண்ணே!" என்றார்.

"எவ்வளவு பெரிய முனிவர் நீங்கள் - ஏன் பொய் சொன்னீர்கள்?"

"என்னம்மா, பொய் சொன்னேன்?"

"கண்ணா, நான் உபவாசம் இருப்பது உண்மையானால் என்று
சொன்னீர்களல்லவா - அது பொய்தானே?"

" அது பொய்யல்ல, உண்மைதான்!"

"அப்படியென்றால் நாங்கள் கொடுத்த வெண்ணெய் உருண்டைகள்
எல்லாம் எங்கே போயிற்று?"

"என்னம்மா, என் வயசென்ன? அவ்வளவு வெண்ணையையும்
நான் எப்படிச் சாப்பிட்டிருக்க முடியும்? என் நெஞ்சிற்குள் குடியிருக்கும்
அந்த மாயக் கண்ணன்தான் உங்கள் பானைகளை எட்டிப் பார்த்து,
உங்களிடமிருந்து வெண்ணையை வாங்க வைத்தான்.
உண்டதும் அவன்தான், வழிவிட்டதும் அவன்தான் - இப்போது
புரிகிறதா?" என்றார்.

அந்தப் பெண் இந்தப் பதிலால், திகைத்து ஒன்றும் சொல்ல
முடியாமல் அவரை மீண்டுமொருமுறை விழுந்து வணங்கி
விட்டு, எழுந்து சென்று விட்டாள்.

ஆமாம் வசிஷ்டரின் நெஞ்சில் கண்ணபிரான் குடிருந்தது உண்மை!

அவர் நெஞ்சில் மட்டுமா, தன்னை நினைத்து உருகும் அததனை பக்தர்களின்
நெஞ்சங்களுமே அந்த மாயக் கண்ணனின் உறைவிடம்தான்!!!

வாழ்க வளமுடன்!

4.10.08

ஜோதிடம்: அடிப்படைப் பாடம் (Basic Lesson)

அடைப்படைப் பாடத்தைச் சுருக்கி வாசகர்களின் வசதிக்காக ஒரே பக்கத்தில்
வருமாறு கீழே கொடுத்துள்ளேன். இதைப் பிரதி எடுத்துக் கையில் வைத்துக்
கொண்டு, கிடைக்கும் நேரத்தில் படித்து, மனதில் உருவேற்றவும். இந்தப் பாடம்
வசப்பாட்டால் மட்டுமே, இங்கே நடத்தும் பாடங்கள் புரியும்.
இல்லை என்றால் புரியாது.

1. பன்னிரெண்டு ராசிகளின் பெயர்கள் என்ன?

மேஷம்,
ரிஷபம்,
மிதுனம்,
கடகம்,
சிம்மம்,
கன்னி,
துலாம்,
விருச்சிகம்,
தனுசு,
மகரம்,
கும்பம்,
மீனம்.

2. ராசி அதிபதிகளின் பெயர் என்ன?

மேஷம் - செவ்வாய்
ரிஷபம் - சுக்கிரன்
மிதுனம் - புதன்
கடகம் - சந்திரன்
சிம்மம் - சூரியன்
கன்னி - புதன்
துலாம் - சுக்கிரன்
விருச்சிகம் - செவ்வாய்
தனுசு - குரு
மகரம் - சனி
கும்பம் - சனி
மீனம் - குரு

3. 12 வீடுகளுக்கும் தனித்தனியாக உள்ள வேலைகள் (Portfolios) என்ன?
அட்டவனை உள்ளது பார்க்கவும்



++++++++++++++++++++++++++++++++++++++++++++
4. லக்கினம் என்பது என்ன?

ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில், அந்தக் குழந்தை வானத்தில் எந்த ராசியைப்
பார்த்தவாறு ஜனித்திருக்கிறதோ அதுதான் அந்தக் குழந்தையின் பிறந்த லக்கினம்

உதாரணம். சித்திரை மாதம் முதல் தேதியன்று (That is on April 14th) காலை
6 மணி முதல் 8 மணி வரை மேஷ லக்கினம்.
ஆவணி மாதம் (August 17th or 18th) அதே காலை நேரத்தில் உதய லக்கினம்
சிம்மம் இப்படி. அதையடுத்து ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் அடுத்தடுத்த
லக்கினம் வரிசைப்படி மாறிக்கொண்டிருக்கும்.

5. லக்கினத்தை வைத்து ஒவ்வொருவீட்டையும் எண்ணிப்பார்க்கும் முறை என்ன?

லக்னம் இருக்கும் ராசி முதல் வீடு. அதில் இருந்து கடிகார சுற்றுப்படி வந்தால்
ஒவ்வொரு ராசியும் 2,3,4,5,6,7,8,9,10,11, 12 என்று வரிசைப்படி வரும்.

6. சந்திர ராசி என்றால் என்ன? அது எதை ஆதாரமாகக் கொண்டது?

ஒரு ஜாதகத்தில் சந்திரன் இருக்கும் ராசி, சந்திர ராசி எனப்படும்.
அது ஜாதகன் பிறந்த நட்சத்திரத்தை ஆதாரமாகக் கொண்டது.

7. லக்கினம் எதற்குப் பயன்படும்? சந்திர ராசி எதற்குப் பயன்படும்?

பிறந்த ஜாதகம் (Birth Chart) என்பது வாகனம்,
தசாபுத்தி என்பது ரோடு,
கோள்சாரம் என்பது டிரைவர்.
லக்கினத்தையும் அதை அடுத்துள்ள பன்னிரெண்டு வீடுகளையும் வைத்து
ஜாதகனுடைய வாழ்க்கையையும், தசாபுத்தியைவைத்து அந்த ஜாதகன்
பயனடையப் போகும் காலத்தையும் கோள்சாரத்தைவைத்து அந்தப் பலன்கள்
கையில் கிடைக்கும் காலத்தையும் அறியலாம்.

8. கோச்சாரம் (கோள் சாரம் - Transit of planets) என்பது என்ன?

ஒவ்வொரு கோளும் வானவெளியில் சுழன்று ஒரு ராசியில் இருந்து மற்றொரு
ராசியில் இடம் பெயர்ந்து அமருவதே கோள்சாரம் எனப்படும்.

9. தசா / புத்தி என்பது என்ன? அதன் பயன் என்ன?

ஜாதகன் பிறந்த நட்சத்திரத்திற்கு அதிபதியான கிரகம் எதுவோ அதற்குரிய
தசாதான் ஜாதகனின் ஆரம்ப தசா, அதை அடுத்து ஒவ்வொரு தசாவாக மாறிக்
கொண்டே வரும் மொத்த தசா காலம் 120 ஆண்டுகள். ஒவ்வொரு தசாவையும்
மற்ற கோள்கள் பங்குபோட்டுக் கொள்ளும். அதற்கு புத்தி என்று பெயர்
(Sub period). ஒவ்வொருகிரகமும் அதன் தசாவில் அல்லது புத்தியில்தான்
தனக்குரிய நல்ல அல்லது தீய பலன்களைக் கொடுக்கும்

10. தசா புத்திகள் எதை வைத்து ஆரம்பிக்கின்றன?

ஒரு ஜாதகரின் பிறந்த நட்சத்திரத்தின் அதிபதியின் தசைதான் துவக்க தசை.

11. தசா புத்திகளின் கால அளவு, மற்றும் வரிசை என்ன?

சூரிய தசை - 6 ஆண்டுகள்
சந்திர தசை - 10 ஆண்டுகள்
செவ்வாய் தசை - 7 ஆண்டுகள்
ராகு தசை - 18 ஆண்டுகள்
குரு தசை - 16 ஆண்டுகள்
சனி தசை - 19 ஆண்டுகள்
புதன் தசை - 17 ஆண்டுகள்
கேது தசை - 7 ஆண்டுகள்
சுக்கிர தசை - 20 ஆண்டுகள்

மொத்தம் 120 ஆண்டுகள்

ஒரு பார்முலா உள்ளது:
Major Period x Sub Period = Number of months & Days of the Sub- Period
(In the three digit answer, first 2 digits are months and the last digit
multiplied by three is the days

12. கோள்களின் பெயர் என்ன? அவைகளின் சொந்த வீடு எது?

சூரியன் - சிம்மம்
சந்தின் - கடகம்
(இந்த இரண்டு கோள்களுக்கும் ஒரு வீடு மட்டுமே சொந்தம்)
செவ்வாய் - மேஷம், விருச்சிகம்
புதன் - மிதுனம், கன்னி
குரு - மூலம், மீனம்
சுக்கிரன் - ரிஷபம், துலாம்
சனி - மகரம், கும்பம்
(இந்த ஐந்து கிரகங்களுக்கு தலா 2 வீடுகள் சொந்தம்)
ராகு - சொந்த வீடு இல்லை
கேது - சொந்த வீடு இல்லை

13. அவைகள் உச்சம் அல்லது நீசம் ஆவது என்றால் என்ன?எங்கே ஆகும்?

ஒரு கிரகத்திற்கு அதன் சொந்த வீட்டில் 100% சக்தி (Power) உண்டு
உச்ச வீட்டில் சொந்தவீட்டைப்போல இரண்டு மடங்கு சக்தி உண்டு!

கோள்கள் "உச்சம்" அடையும் இராசி
சூரியன் - மேஷத்தில்,
சந்திரன் - ரிஷபத்தில்,
குரு - கடகத்தில்
புதன் - கன்னியில்
சனி - துலாமில்
ராகு, கேது - விருச்சிகத்தில்
செவ்வாய் - மகரத்தில்
சுக்கிரன் - மீனத்தில்
=======
நீசவீட்டில் ஒரு கிரகத்திற்கு சுத்தமாக வலிமை இருக்காது.

கோள்கள் "நீசம்" அடையும் இராசி
சூரியன் - துலாமில்,
சந்திரன் - விருச்சிகத்தில்,
செவ்வாய் - கடகத்தில்,
புதன் - மீனத்தில்
குரு - மகரத்தில்
சுக்கிரன் - கன்னியில்
சனி - மேஷத்தில்
ராகு, கேது - ரிஷபத்தில்

14. அவைகளின் நட்பு வீடு, பகை வீடுகள் எவை?

Chart கொடுக்கப்பட்டுள்ளது
கேந்திரம் என்பது லக்கினத்தில் இருந்து 4, 7,10ஆம் வீடுகள்
திரிகோணம் என்பது லக்கினம், 5, 9 ஆம் வீடுகள்
கேந்திரம் சிறப்பானது
அதைவிட திரிகோணம் இன்னும் சிறப்பானது.
இந்த வீடுகளில் அமரும் கிரகங்கள் வலிமை பெற்றுவிடும்

+++++++++++++++++++++++++++++++++++++++++++
15. அஸ்தமனம் என்றால் என்ன? அது எப்படி ஏற்படுகிறது?

ஒரு கிரகம் வலிமை இழந்து போவதுதான் அஸ்தமனம்
இரண்டு கிரகங்கள் 5 டிகிரிக்குள் அமர்ந்திருந்தால், 2-வதாக இருக்கும்
கிரகம் வலிமை இழக்கும். இந்த விதிப்படி சூரியனுடன் ஒரு கிரகம்
10 பாகைக்குள் இருக்கும்போது வலிமை இழந்துவிடும்

16. அஷ்டகவர்கம் என்றால் என்ன?

அஷ்டவர்க்கம் என்பது ஒரு கிரகத்தின் வலிமையையும், ஒரு வீட்டின்
தன்மையையும் மதிப்பெண்கள் கொடுத்துக் கணிப்பது.
ஒருகிரகத்தின் அதிகபட்ச மதிப்பெண் 8
ஒரு ஜாதகத்தின் மொத்த மதிப்பெண் 337
(யாராக இருந்தாலும் 337 மட்டுமே)
இந்த மதிப்பெண்களை வைத்து ஒரு ஜாதகத்தில் உள்ள நன்மை
தீமைகளை சுலபமாக அறியலாம்.
இதற்கு பதிவின் சைடுபாரில் உள்ள ஜகன்நாதஹோரா மென்பொருளைப்
பயன்படுத்தவும்.

17. நவாம்சம் என்றால் என்ன? அது எதற்குப் பயன்படும்?

Navamsam is the magnified version of a Rasi Chart
ஒரு ராசியை ஒன்பது சமபாகங்களாகப் பிரித்து, ராசியில் உள்ள கிரகம்
அதன் எந்தப் பகுதியில் உள்ளது என்பதைக் காட்டுவதுதான் நவாம்சம்.
(குறிப்பாக கணவன் அல்லது மனைவியைப் பற்றி அறிய உதவும்)

18. காரகன் என்பவன் யார்? எது எதற்கு யார் யார் காரகன்?
காரகன் என்பவன் authority
ஒரு வீட்டின் அதிபதி என்பது அந்த வீட்டின் சொந்தக்காரன் (Owner)
காரகன் என்பவன் அந்த வீட்டின் செயல்களுக்கு உத்தரவு போட்டு
நடத்திவைக்கும் வலிமை உடையவன்(authority)

(உதாரணத்திற்கு ஒன்பதில் சனி இருந்தால், அப்பாவிற்கும் மகனுக்கும் ஒத்துவராது.
ஆனால் ஜாதகனுடைய ஜாதகத்தில் சூரியன் நன்றாக இருந்தால் நல்ல தந்தையாகக்
கொடுப்பான். ஒத்துவராமைக்கு இவன் காரணமாக இருந்தாலும் தந்தை அனுசரித்து
அன்பாக இருப்பார். அதற்கு காரகன் காரணமாக அமைவான்.)

தந்தைக்குக் காரகன் சூரியன்
உடல் காரகன் சூரியன்
தாய்க்குக் காரகன் சந்திரன்
மன காரகன் சந்திரன்
ஆயுள் காரகன் சனி
தொழில் காரகன் சனி
களத்திர காரகன் சுக்கிரன்
தன (பணம்) காரகன் குரு
புத்திரகாரகன் குரு
கல்வி, புத்தி காரகன் புதன்
ஆற்றல், திறமைகளுக்குக் காரகன் செவ்வாய்!

++++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!

கண்மணிகள் எழுதிய பரிட்சை முடிவுகள்!

கண்மணிகள் எழுதிய பரிட்சை முடிவுகள்!

இந்தப் பதிவிற்குத் தொடர்புடைய முன்பதிவின் சுட்டி இங்கே உள்ளது!

வருகைப் பதிவேட்டில் உள்ளவர்கள் 48 பேர்கள்.
பதிவில் உள்ள ஹிட் கவுண்டர் மூலம் குறைந்தது (சராசரியாக)
500 பேர்களாவது தினமும் வகுப்பறைக்கு வந்து போவதை உணர்கிறேன்.
ஆனால் தேர்வு என்றதும் பலரைக் காணவில்லை.
எழுதியவர்கள் எட்டு பேர்கள் மட்டுமே!

முடிவுகள்

1. K.தங்கராஜ் (தங்ஸ்) 18ல் 8 கேள்விகளுக்கு விடைகளை எழுதியுள்ளார்
=======================================================
2. சங்கரலிங்கம் பிச்சைய்யா 18ல் 5 கேள்விகளுக்கு விடைகளை எழுதியுள்ளார்
=======================================================
3. அருண் ராஜேஷ் 18 கேள்விகளுக்கு 9 கேள்விகளுக்கு மட்டும் பதில்
எழுதியுள்ளார். வாங்கிய மதிப்பெண்கள் 50%
=======================================================
4. Sridhar Subramanaiam - 18 கேள்விகளில் 11 கேள்விகளுக்கு மட்டும் பதில்
எழுதியுள்ளார். 2 விடைகள் தவறானது வாங்கிய மதிப்பெண்கள் 50%
=======================================================
5. கூடுதுறை 18 கேள்விகளுக்கும் விடைகளை எழுதியுள்ளார்
12 பதில்கள் மட்டும் சரியானவை கூடுதுறையார் வாங்கிய மதிப்பெண்கள் 67%
=========================================================
6. நாமக்கல் சிபி சிரத்தையுடன் பதில் எழுதியுள்ளார்.
15 கேள்விகளுக்கான பதில் உள்ளது. அதில் 2 தவறுகள் உள்ளன!
வாங்கிய மதிப்பெண்கள் 72%
கிரகங்களின் Portfolioக்களுக்கு தமது வழக்கமான கலாய்ப்புக்களுடன்
பதில் எழுதியுள்ளார். சுவை கருதி அதைக் கீழே கொடுத்துள்ளேன்.
=========================================================
7. V.N.சுதாகர் 18 கேள்விகளுக்கும் விடைகளை எழுதியுள்ளார்.
14 பதில்கள் மட்டும் சரியானவை. வாங்கிய மதிப்பெண்கள் 78%
=======================================================
8. S.ராஜகோபால் - 18ல் 16 கேள்விகளுக்குச் சரியான பதில்கள் உள்ளன
வாங்கிய மதிப்பெண் 92% முதல் மாணவராகத் தேர்வு பெற்றுள்ளார்
அவருக்கு விஷேசமான பாராட்டுக்கள்
=========================================================
மதிப்பெண் வாங்குவது முக்கியமில்லை. தேர்வில் கலந்து கொள்வது முக்கியம்
ஏன் பலர் கலந்து கொள்ளவில்லை என்று தெரியவில்லை!
அடுத்த தேர்வில் இப்படி நடக்காது என்று நம்புகிறேன்
_____________________________________
பதில் எழுதிய அனைவருக்கும் பாராட்டுக்கள்

சரியான விடைகள், சில அட்டவனைகளுடன் (அடிப்படைப் பாடத்தின் சுருக்கம்)
அடுத்த பதிவில் வெளியாகும்! புதியவர்கள் பலருக்கும் அது உதவியாக இருக்கும்!

அன்புடன்,
வாத்தியார்
+++++++++++++++++++++++++++++++++++++

வீடுகளின் பணிகளுக்கான விளக்கம் (நாமக்கல் சிபி அவர்கள் எழுதியது.
கலாய்ப்புடன் எழுதியுள்ளார். சுவைக்காகக் கொடுத்துள்ளேன்)

12 வீடுகளுக்கான பணிகள்

a.லக்கினம் – தலைமைச் செயலகம்
The first house of your horoscope represents your identity, physical characteristics, appearance, health and well-being, the
physical body, vitality, attitude, temperament and the way you look upon the world. It also represents your self-image, outer
personality and disposition

b.இரண்டாம் இடம் : நிதித் துறை (& குடும்ப நலத்துறை)

The second house in your birth chart governs money, possessions, material assets, self worth, attitude towards security, bank and
savings accounts, spending and how money is acquired. Emotional and financial security, personal values and principles are all
2nd house issues

c. மூன்றாம் இடம் : சகோதர, சகோதரிகள் உறவுத்துறை, ராணுவத் துறை(தைரிய ஸ்தானம்)
உள்நாட்டு, வெளியுறவுத்துறை & தகவல் தொடர்புத் துறை

The third house of your horoscope governs all forms of communication and transportation. The style and manner of
communications, neighbors, siblings and other relatives such as aunts, uncles, and cousins are representative of the third house.
Additionally, letters, contracts, telephone calls, computers, early childhood education, documentation, papers, books, writing
utensils, cars, the subway and all forms of short distance travel are found in the third house. Your mental attitude, learning style,
opinions, the analytical mind, self-expression and speech are also 3rd house issues.

d.நான்காவது இடம் : கல்வித்துறை, வசதித் துறை, தாய்மைத் துறை

The fourth house of your horoscope governs areas related to home, family and property. Your roots, family background, childhood, inner emotions, immovable possessions, domestic life, the end of life and endings in general are covered by this house.
Psychological foundations and conditioning are also found in the 4th house.
There is some controversy as to whether this house covers the Father or the Mother. One might say that the parent with the
most influence is covered by this house. In my practice, the Mother is found in the fourth house and the Father in the tenth
house. Given that females are ruled by the moon in your chart and the moon is the natural ruler of the fourth house, I use the
fourth house as a significant factor of the mother. This house also covers the one that nurtures, which is primarily the mother

e.ஐந்தாவது இடம் : வாரிசு அரசியல், நுண்ணறிவுத் துறை

Children and how one relates to them are found in the fifth house. Also, romance, love affairs (the type that will not lead to
commitment or marriage), pleasures, enjoyment, fun, amusement parks, playgrounds, sports of all kinds, games, arts, leisure
activities, creativity, entertainment, concerts, holidays, games of chance such as, gambling, speculation, financial risks, stocks
and investments are found in the 5th house. This is the house of self-expression through creativity

f.ஆறாவது இடம் : சுகாதாரத் துறை (நோய், கடன், …) மறைவுஸ்தானம் என்றும் அழைக்கப்படும்.

The sixth house of your horoscope is the house of health and service. General well-being and illness are found here. Proactive
measures you take for your health such as diet and exercise are also found in the sixth house. Hygiene, work (not career, as that
is a tenth house matter), service, employees, relations with employer, anyone who provides a service to you in whatever
capacity, domestic pets and your daily routine are related to the 6th house

g.ஏழாவது இடம் : ஹிஹி.. வாழ்க்கைத் துணை

Serious committed relationships are found in the seventh house. Traditionally, this was the house of marriage as marriage is a
contract you have with another person. Your spouse, contractual partnerships, one-on-one relationships, business partnerships
including verbal commitments, rivals, justice, law, opponents (adversaries) are included in this house. Whereas the 5th house
governs romance and love affairs, the seventh house is about the deep commitment of love. It also shows what you need in a
relationship and partner

h.எட்டாவது இடம் : ஆட்சியின் பலம் மற்றும் எப்போ கவிழும்
என்று சொல்லுவது (ஆயுளைத் தீர்மானிப்பது)

Traditionally known as the house of rebirth and regeneration, this house is symbolized by the Phoenix rising up from the ashes.
The eight house covers birth, death, decay, surgery, healing, wills, gifts, inheritance, credit, legacies, other people's money, your
partner's money, child support, taxes, investments, the clearing away in order to make room for the new, reincarnation, sex and
attitudes towards sex. As sex is a gift of giving one's self to another, so sex is found in the 8th house.

i. ஒன்பதாவது இடம் : பாக்கிய ஸ்தானம் மற்றும் தொலைதூரப் பயணங்கள், தந்தையார் துறை
ஒன்பதாவது ஸ்தானம் லக்கினத்தை விட வலுவாக இருந்தால் ஜாதகரின் தந்தை ஜாதகரைக் காட்டிலும் செல்வாக்கோடு இருப்பார். அல்லது ஜாதகரின் தந்தையைக் காட்டிலும் ஜாதகர் நல்ல செல்வாக்கோடு இருப்பார்.

Traditionally the ninth house is known as the house of long distance travel. Travel of distances greater than 500 miles would be
found in this house. Voyages, foreigners, foreign countries, journeys into the unknown both physical and mental, church, religion,
theology, philosophy, beliefs, divination, languages, higher learning, college education, literature, books, publishing, media, law,
lawyers, truth, justice, prophecy, expansion and broadening of one's horizons in all ways are covered by the 9th house.

j.பத்தாவது இடம் : தொழில் ஸ்தானம்

The tenth house is the house of career and status. Ambitions, aspirations, attainments, success, occupation, recognition,
reputation, prestige, identity within the community, public image, duty, responsibility, superiors, authority and the father within a family are found in the 10th house. Since the tenth house focuses on ambition and career, it makes sense that it would be the
house that appropriately symbolizes the father

k. பதினோராவது இடம் : லாப ஸ்தானம்,

Traditionally known as the house of hopes and wishes, the eleventh house is where dreams do come true. If you don't think your
dreams can come true, just wait until you have a significant planet transit this house. They do! Friends, group activities, your role
in your community, social life, acquaintances, associates, societies, volunteering, leagues, clubs, other cultures and how we relate
to them, humanitarian causes and charity are 11th house issues

l.பன்னிரெண்டாவது இடம் : விரைய ஸ்தானம்

Things that are hidden are found in this house. Seclusion, secrets, occult activities, psychic matters, escapism, drugs, alcohol,
sorrow, confinement, imprisonment, prisons, restraint, institutions, hospitals, anywhere that you might be detained for whatever
reason, exile, the unconscious self, dreams, hidden fears, paranoia, self-undoing, something behind the scenes, the subconscious
mind, spirituality, faith and psychological problems are covered by the 12th house. This is the last house of the horoscope and the
end of a complete cycle

++++++++++++++++++++++++++++

வாழ்க வளமுடன்!